Monday, June 30, 2025

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக பாட்னாவில் நடந்த மாபெரும் பேரணி....!

 “அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், வக்ஃப்பைக் காப்பாற்றுங்கள்” இயக்கம்...!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக பாட்னாவில் நடந்த மாபெரும் பேரணி....!

பாட்னா, ஜுன்.30- ஒன்றிய அரசின் ட வக்ஃப் சட்டத்திற்கு எதிராக பீகார் தலைநகர் பாட்னாவில் 29.06.2025 அன்று மாபெரும் பேரணியில் நடைபெற்றது. பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டக் கூட்டங்களுக்குப் பிறகு, இந்தியாவின் மிக முக்கியமான முஸ்லிம் சமூக-மத அமைப்புகளில் ஒன்றான இமாரத் ஷரியா, சமீபத்தில் இயற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 ஐ எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை பாட்னாவின் காந்தி மைதானத்தில் ஒரு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்தது. இந்தப் பேரணி முன்னோடியில்லாத வகையில் கூட்டத்தை ஈர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முழு மைதானத்தையும் தலைக்கனமாகக் மாற்றி, தலைநகரின் அன்றாட வாழ்க்கையை கிட்டத்தட்ட ஸ்தம்பிக்க வைத்தது.

இமாரத் ஷரியா தலைமையில் நடைபெற்ற “அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், வக்ஃப்பைக் காப்பாற்றுங்கள்” மாநாடு, முஸ்லிம் சமூகம் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் வலிமை மற்றும் ஒற்றுமையின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக அமைந்தது. அரசியலமைப்பு உரிமைகள், மத சுதந்திரங்கள் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தில் திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தின் தாக்கங்கள் குறித்து வளர்ந்து வரும் கவலைகளை வெளிப்படுத்தியது.

மௌலானா பைசல் வாலி ரஹ்மானி உரை :

பேரணியில் பேசிய இமாரத் ஷரியாவின் தலைவரான மௌலானா பைசல் வாலி ரஹ்மானி, “ஆரம்பத்திலிருந்தே, வக்ஃப் திருத்த மசோதாவை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இன்று, எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, மக்களின் குரலை எழுப்புகிறோம். இந்தச் சட்டம் அரசியலமைப்பின் பல பிரிவுகளை மீறுகிறது. முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணிக்கிறது. மேலும் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ வழி வகுக்கிறது. இது மதச்சார்பின்மை உணர்வு மற்றும் மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தின் மீதான நேரடித் தாக்குதல். “இந்த மசோதாவை எதிர்த்து நாங்கள் சமர்ப்பித்த 300க்கும் மேற்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது. நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை விட ஒரு கருத்தியல் நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படும் இந்த பாரபட்சமான மற்றும் பகுத்தறிவற்ற சட்டத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்” என்றார். 

"நாளை யாராவது அசோகன் தூண்கள் அல்லது பண்டைய நினைவுச்சின்னங்களில் மத சின்னங்கள் அல்லது வரலாற்றின் தொல்பொருள் ஆதாரத்தை கோரினால், அதைப் பாதுகாப்பதற்கான அளவுகோல்கள் என்னவாக இருக்கும்? இந்தச் சட்டம் சீர்திருத்தத்தைப் பற்றியது அல்ல. இது சமூகங்களிடையே அவநம்பிக்கை மற்றும் பிரிவினையை உருவாக்குவது பற்றியது. இது இந்திய முஸ்லிம்களுடன் இணைக்கப்பட்ட வரலாற்று பங்களிப்புகள் மற்றும் மத பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியாகும். ஒரு காலத்தில் மக்கள் தேசிய ஜனநாயக் கூட்டணி  தலைமையிலான ஒன்றிய அரசை ஜனநாயக அழுத்தம் மூலம் பாட்னா சட்டத்தை திரும்பப் பெற கட்டாயப்படுத்தினர். இன்று, பொதுமக்கள் மீண்டும் அதன் அரசியலமைப்பு உரிமைகளை வலியுறுத்துகின்றனர். திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம், மேலும் அமைதியான, ஜனநாயக வழிமுறைகள் மூலம் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்" என்று தெரிவித்தார். 

தேஜஸ்வி யாதவ் உறுதி :

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அதன் வெளியேறும் பாதையில் இருப்பதாகவும், மகாகத்பந்தன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சைக்குரிய சட்டத்தை ரத்து செய்வதாகவும் உறுதியளித்தார். கூட்டத்தில் உரையாற்றிய எம்.பி. ராஜீவ் ரஞ்சன் யாதவ்,  இந்த நாட்டில் வெறுப்புக்கு இடமில்லை. அன்பு மட்டுமே வெல்லும் என்றார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் மத அறிஞர்கள், சமூகத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், இளைஞர் ஆர்வலர்கள் என பலர் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு ரயில்கள், பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் இரவு முழுவதும் பயணித்த ஆயிரக்கணக்கான பொது குடிமக்கள். ஏராளமான தன்னார்வலர்கள் கூட்டத்தை நிர்வகித்தனர், தண்ணீர் விநியோகித்தனர், மேலும் நிகழ்வு முழுவதும் ஒழுங்கைப் பராமரிக்க உதவினார்கள். போக்குவரத்து மாற்றம், இடம் அருகே மூடப்பட்ட சந்தைகள் மற்றும் நெரிசலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றால் பாட்னாவின் இயல்பான அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக பார்வையாளர்கள் குறிப்பிட்டனர். இருப்பினும், பேரணி அமைதியாகவும் ஒழுக்கமாகவும் இருந்தது, இது இமாரத் ஷரியாவின் நிறுவன வலிமையையும் பங்கேற்பாளர்களின் உறுதியையும் பிரதிபலிக்கிறது.

தீர்மானங்கள் நிறைவேற்றம் :

மெகா பேரணியில்,  வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.,  தற்போதுள்ள வக்ஃப் சொத்துக்கள் மற்றும் மத நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும்., சிறுபான்மை பிரதிநிதித்துவத்துடன் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும்.,  மதத்தினருக்கான அரசியலமைப்பு பாதுகாப்புகளை மேலும் நீர்த்துப்போகச் செய்யாது என்று அரசாங்கத்திடமிருந்து உறுதி அளிக்க வேண்டும்., உள்ளிட்ட தீர்மானங்கள்  ஒருமனதான நிறைவேற்றப்பட்டன.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, June 29, 2025

இவர்....!

 உரை....!

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆற்றிய அற்புதமான உரை...!



Saturday, June 28, 2025

அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்த ஈரான்....!

 

”இஸ்ரேல், அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்த ஈரான்” 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஜுன் 13ஆம் தேதி தொடங்கிய போர் 12 நாட்கள் நடைபெற்றது. தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணிகள் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நாடும் அத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ஈரானும், தங்களுடைய பாதுகாப்பிற்காக எடுக்கும் நடவடிக்கைகளை கண்டு அச்சம் கொண்ட, பீதி அடைந்த இஸ்ரேல், அமெரிக்காவின் துணைவுடன் ஈரான் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியது.

ஜுன் 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்க, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும், மிகமிக தீவிரமாக இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது. ஈரானின் ஆயுதப் பலத்தை குறைத்து மதிப்பிட்ட இஸ்ரேல், தன்னுடைய ரௌடித்தனம் மூலம் ஈரானை வீழ்த்திவிடலாம் என நினைத்தது. ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளே சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள், இஸ்ரேலை புரட்டி போட்டுவிட்டன. வரலாறு காணாத வகையில் இஸ்ரேலில் சேதங்கள் ஏற்பட்டன.

ஈரானின் வீரியமான தாக்குதல் காரணமாக, டெல் அவீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை விட்டு யூத மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓட வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டதால், அந்த நகரங்கள் தற்போது காசாவை போன்று மாறிவிட்டன. காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்கள் மூலம் அந்த அற்புதமான நகரம் எப்படி சின்னாபின்னமாக மாறிவிட்டதோ, அப்படி இஸ்ரேலிய நகரங்களும் தற்போது மாறிவிட்டன. மிகவும் சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட இஸ்ரேலிய யூதர்கள், தாங்கள் ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்த பாலஸ்தீன மண்ணை விட்டு ஓட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் அச்சம் அடைந்த இஸ்ரேலிய பிரதமர் உலக பயங்கரவாதி பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கெஞ்சி, அமெரிக்காவையும் போரில் இணைத்துவிட்டார். இதன்மூலம், தங்கள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அமெரிக்கா, ஈரானை தாக்க தொடங்கிய அன்றே, ஈரான் மீண்டும் ஆக்ரோஷ பலத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கி நடத்தியது. மிரட்டும் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வலிமையான ஆயுத பலம் :

ஈரானின் ஆயுத பலம் என்பது அந்நாட்டின் இராணுவ வலிமையைக் குறிக்கிறது. இதில் ஏவுகணைகள், போர் விமானங்கள், மற்றும் பிற இராணுவத் தொழில்நுட்பங்கள் அடங்கும். ஈரான் தன் பிராந்திய மற்றும் உலகளாவிய செல்வாக்கை நிலைநிறுத்த இந்த ஆயுத பலத்தைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, பிராந்தியத்தில் உள்ள தனது எதிரிகளுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் ஈரான் தனது ஆயுத பலத்தை நம்பியுள்ளது.  ஈரான், நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகையான ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. இவை பிராந்தியத்தில் உள்ள இலக்குகளை தாக்க வல்லவை. ஈரானிடம் போர் விமானங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் உள்ளன. இவை வான்வழித் தாக்குதல்களை நடத்தப் பயன்படுகின்றன. ஈரான் தனது ஆயுத பலத்தை தற்காப்புக்காகவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காகவும் பயன்படுத்துகிறது. ஈரானின் ஆயுத பலம் சர்வதேச அளவில் கவலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான கவலைகள் உள்ளன.

ஈரான் - ஈராக் போருக்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில், ஈரான் தனது இராணுவ வலிமையை உலக நாடுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகமிக வலிமைப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை மிரட்டி, பணிய வைத்தது போன்று ஈரானையும் பணிய வைத்துவிடலாம் என்று எதிர்பார்த்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரான் நடத்திய நவீன ஏவுகணை தாக்குதல்களைக் கண்டு மிரட்டுவிட்டன. அதனால் செய்வது அறியாமல் திகைத்த அந்த இரு ரௌடி நாடுகள், தங்களுடைய அச்சத்தையும் பயத்தையும் வெளியே தெரிந்துவிடக் கூடாது, அப்படி தெரிந்துவிட்டால்,  தங்களுடைய உலக ரௌடி பட்டம் பறிக்கப்பட்டுவிடும், உலக நாடுகள் இனி தங்களை கண்டு அஞ்சாது என நினைத்த அமெரிக்கா, இஸ்ரேல் மீண்டும் மீண்டும் உதார்விட்டுக் கொண்டு தங்களிடம் மிகப்பெரிய ஆயுத பலம் உள்ளதாக கூறிக் கொண்டே இருந்தன. இதனால், ஈரான் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகள் அஞ்சி சரண் அடைந்துவிடும் என்ற ஆசை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இருந்தது.  இந்த மிரட்டல்களைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையாமல், ஈரானின் வரலாறு தெரியாமல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிரட்டி வருவதாகவும், ஈரான் யாரிடமும் சரண் அடையாது என்றும் எந்தவொரு சவாலையும் மிரட்டிலையும் துணிவுடன் சந்திக்கும் என்றும் ஈரானின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி ஹெசைனி கமெனி உறுதிப்பட தெரிவித்துவிட்டு, இரண்டு பயங்கரவாத நாடுகளை எதிர்த்து பதில் தாக்குதல்களை நடத்தினார்.

நவீன ஆயுத தொழில்நுட்பங்கள், நவீன ஏவுகணைகள் என அனைத்தும் நவீனமயமாக்கி, ஈரான் தனது இராணுவ பலத்தை வலிமைப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆயுதங்கள் எப்படி தயாரிக்கப்பட்டன? என்ற கேள்விகள் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே எழுந்து அந்த நாடுகள் குழப்பத்தில் இருந்து வருகின்றன. பொருளாதார தடைகள் என பல்வேறு சவால்களை சந்தித்த ஈரான் எப்படி இராணுவ வலிமை பெற்றது ? என்று கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கின்றன.

ஈரானுக்கு உலக மக்களின் ஆதரவு :

இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் இடையே நடந்த இந்த 12 நாள் போரில், உலக மக்களின் ஆதரவு ஈரானின் பக்கமே இருந்தது.  உலக மக்கள்  நீதியின் பக்கம் நின்றுக் கொண்டு ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தார். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரங்களைக் கண்டு வேதனை அடைந்த உலக மக்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியதும், மகிழ்ச்சி அடைந்தனர். உலக ரௌடிகளை அடக்க சரியான வீரியம் மற்றும் துணிச்சல் உள்ள ஒரு நாடு இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

சமூக வலைத்தளங்களை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்தால், இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கியது முதல், மக்கள் வெளியிய்டட கருத்துகள், மீம்ஸ்கள் ஆகியவற்றின் மூலம், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை உலக மக்கள் வரவேற்றுகொண்டே இருந்தார்கள் என்பதையும், தற்போது கூட வரவேற்றுக் கொண்டே இருக்கிறார்கள்  என்பதையும் காணலாம். காசா மக்களை குறிப்பாக, அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் மீது அநியாயமாக தாக்குதல்களை நடத்திய, இன்னும் நடத்திக் கொண்டே இருக்கும் இஸ்ரேல், சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் உலக மக்களின் எண்ணங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலக மக்களின் வரவேற்பை பெற்றன.

போர் மிகவும் கொடூரமானது. அதன் பாதிப்புகள் மிகமிக அதிகம். எங்கும் போர் நடக்கக் கூடாது. உலகம் அமையாக இருக்க வேண்டும். போர் இல்லாத உலகம் இருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் ஆசை, எண்ணங்களாகும். ஆனால் பாலஸ்தீன காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய இன்னும் நடத்திக் கொண்டு இருக்கிற கொலை தாக்குதல்களை கண்டு, மிகவும் கோபம் அடைந்த உலக மக்கள், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை பெரிதும் வரவேற்றார்கள்.  

சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், உலக அமைதி விரும்பிகள் அனைவரும் இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் மிகமிக கடுப்புடன் இருந்து வருகிறார்கள். உலக மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பும் இந்த இரு பயங்கரவாத நாடுகளின், கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது உலக மக்களின் பார்வையாக இருந்து வருகிறது. அதற்கு ஈரான் மூலம் ஒரு புதிய வழி பிறந்து இருப்பதைக் கண்டு அவர்கள் ஆனந்தம் அடைந்தார்கள்.

ஈரான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றும், தங்களுடைய நாட்டின் இறையாண்மையை  பாதுகாக்க நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றும் உலக மக்கள் உறுதியாக நினைத்ததால், ஈரானின் பக்கம், அதாவது நீதியின் பக்கம் உலக மக்கள் நின்றுக் கொண்டு முழு ஆதரவு அளித்தார்கள். போர் நடந்துக் கொண்டு இருந்தபோது, உலகின் பல நாடுகளில் இஸ்ரேல், மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக  கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றன.. இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.  

அமெரிக்கா, இஸ்ரேல் அச்சம் :

இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ஈரானின் வலிமையை கண்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்கள், என்ன செய்து என்று புரியாமல் திகைத்து நின்றனர். எனவே ஈரானை மீண்டும் அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில், அந்த நாட்டின் அணு உலைகள் மீது அமெரிக்கா விமானங்கள் குண்டுகளை வீசின. ஆனால், இந்த மூன்று குண்டுகள் மூலம் ஈரானின் அணு உலைகள் எந்தவிதத்திலும் சேதம் அடையவில்லை. ஈரான் முன்னெச்சரிக்கையாகவே அனைத்தையும் வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று அதனை பாதுகாத்துவிட்டது. அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தினால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் என எச்சரித்த ஈரான், அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதன்படி, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தார், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் கத்தார், ஈராக் நாட்டு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக, அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் அடைந்தன.  இதனால் போர் பதற்றம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், போர் நிறுத்தப்படவில்லை என்றும், இஸ்ரேலின் அட்டகாசத்தை அழிக்கும் வரை தாங்கள் ஓயபோவதில்லை என்றும் உறுதிப்பட அறிவித்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தியது.

மிரட்டினால் ஈரான் அஞ்சிவிடும், பணிந்துவிடும் என நினைத்த இஸ்ரேல், அமெரிக்கா நாட்டின் தலைவர்கள், எந்தவித சவால்களையும் எதிர்கொண்டு சமாளிக்க ஈரான் தயாராக இருப்பதைக் கண்டு பீதி அடைந்தனர். எனவே மறைமுக நடவடிக்கைகள் மூலம், ஈரானை சமாதானம் செய்து, போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர். எனினும், தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தங்களுக்கு உரிமை உண்டு என அறிவித்த ஈரான், மீண்டும் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தினால், மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்தது.

அமெரிக்கா, இஸ்ரேலின் முகத்தில் ஓங்கி அறை :

ஈரான் மீது அத்துமீறி தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், ஈரானின் பதிலடி தாக்குதல்கள் மூலம் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் பல நகரங்கள் ஈரானின் தாக்குதல்கள் காரணமாக சின்னாபின்னமாகி விட்டன. அவற்றை சீரமைக்க பத்து ஆண்டுகள் ஆகும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஈரானின் தாக்குதலுக்கு அஞ்சி, இஸ்ரேலை விட்டு ஓடிவிட்ட யூதர்கள், மீண்டும் நாடு திரும்பினாலும், இனி நிம்மதியுடன் வாழ முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது. தங்களை யாரும் தாக்க முடியாது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு இஸ்ரேல் என்று கூறிக் கொண்டு இருந்தவர்கள், தற்போது ஈரானின் தாக்குதல்கள் மூலம் அந்த பிம்பத்தை அவர்களே உடைத்துவிட்டார்கள்.

உலக ரௌடிகள் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடன் நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றிக்குப்  பிறகு, ஈரான் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய அந்நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி ஹெசைனி கமெனி, இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை. ஈரான் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நகர்ப்புறம் மற்றும் ராணுவ இடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் பல முனை பாதுகாப்பைபுயம் ஈரான் ராணுவப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும், அந்நாடு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடிக்க வேண்டியிருந்தது.

அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை உணர்ந்ததால் தான் அமரிக்கா இந்த போரில் தலையிட்டது. ஈரானின் கடுமையான தாக்குதல் காரணமாக கடுமையாக நசுக்கப்பட்டதால் இஸ்ரேல் சரியும் நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக நடக்கும் எந்த அத்துமீறலுக்கும், மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கியது மிகப்பெரிய விஷயமாகும். எதிர்காலத்தில் அத்துமீறல்கள் தொடர்ந்தால், இஸ்ரேல், அமெரிக்கா மீதான தாக்குதல்கள் தொடரும் என உறுதிப்பட தெரிவித்தார்.

மேலும், ஈரானின் அணு உலைகளை ஆய்வு செய்ய இனி சர்வதேச அணுசக்தி முகமை அனுமதிக்கப்படாது என்றும் ஈரான் திட்டவிட்டமாக தெரிவித்துவிட்டது. அது தொடர்பான ஒப்பந்தத்தை திரும்ப பெறுவதாகவும் ஈரான் கூறிவிட்டது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போர், உண்மையில் ஈரானுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம். ஈரானுக்கு மட்டுமல்ல, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரண்டு ரௌடி நாடுகளை எதிர்க்கும் அனைத்து மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். இஸ்ரேல், அமெரிக்காவுடன் நடந்த போரில் மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, ஈரான் நாட்டு மக்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, பேரணியாக சென்று வெற்றி முழக்கங்களை எழுப்பினார்கள். அது உலகம் முழுவதும் எதிரொலித்தது. அநீதி செய்யும் மனிதன் நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடைவான். மிகப்பெரிய தோல்வியை அடைவான் என்பது உலக வரலாறு. தற்போது அந்த வரலாறு ஈரான் மூலம் மீண்டும் எழுதப்பட்டுள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மிகவும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

======================================

இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?

 நூல் மதிப்புரை


நூல் : இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது                                                என்ன?

நூலாசிரியர் : டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது

வெளியீடு : இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்,

          138, பெரம்பூர் நெடுஞ்சாலை, 

        சென்னை - 600 012.

       தமிழ்நாடு, இந்தியா

      செல்பேசி: 86680 57596 

     தொலைபேசி: 044 2662 4401

விலை : ரூ.175/- 

தமிழ் உலகம் நன்கு அறிந்த சிறந்த பேச்சாளர், கல்வியாளர், அழைப்பு பணியில் பன்னெடுங்காலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள், "இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன? என்ற இந்த நூலை எழுதியுள்ளார். மனித குலம் முழு பயன் அடைவதற்குத் தேவையான அனைத்தையும் இஸ்லாம் உலகிற்கு கொடுத்துள்ள நிலையில், இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கிய அருட்கொடைகள் என்ன? என்பதை உலகில் வாழும் அனைத்துச் சமுதாய மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 

172 பக்கங்கள் கொண்ட இந்த நூலில், 'ஆறாம் நூற்றாண்டில் அன்றைய உலகம்' என்று தொடங்கும் முதல் கட்டுரை முதல், 'வரலாற்றில் இஸ்லாத்தின் பங்களிப்பு ஓர் பறவைப் பார்வை' என்ற கடைசி கட்டுரை வரை மொத்தம் 13 தலைப்புகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆறாம் நூற்றாண்டில் அன்றைய உலகம் எப்படி இருந்தது? மக்களின் வணக்க முறைகள் எப்படி இருந்தன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு முதல் கட்டுரையில், பல்வேறு அருமையான தகவல்களை டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது கொடுத்து இருக்கிறார். குறிப்பாக, ஆறாவது நூற்றாண்டில் இந்துக்கள் ஒரு கோடி கடவுள்களை வழிபட்டனர் என்பதை வரலாற்றாசியர் சி.வி.வைத்யா நூலை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இதேபோன்று அரபு மொழியில் சிலை என்ற வார்த்தைக்கு ஈடாக புத்தர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற வரலாற்று குறிப்பும் இடம்பெற்றுள்ளது. (தற்போது இந்த வார்த்தை புத் கானா என்று அழைக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது) மேலும், கஅபாவில் 360 சிலைகள் இருந்தன. இவை தவிர கற்களையும் நட்சத்திரங்களையும் வழிபட்ட அரபிகள், வானவர்கள் கடவுளின் பெண்மக்கள் என்றும், ஜின்களுக்கு கடவுளின் தெய்வத் தன்மையில் பங்கு உள்ளது என்றும் நம்பினர் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறாம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்தது என்பதை அருமையாக விளக்கம் அளித்து, இத்தகைய கொடுமையான, பண்பாடற்ற, அநீதிகள் நிறைந்த சமூகத்தை ஒரு வலிமையான சித்தாந்தத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என குறிப்பிட்டு, அரபுப் பாலைவனத்தில் கி.பி.571ஆம் ஆண்டில் பிறந்து 611 இல் பரப்புரையைத் தொடங்கிய இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், அப்பணியைச் செய்து மனித இனத்தை அழிவிலிருந்து காக்கும் பணியை மேற்கொண்டார் என்றும் மிகச் சிறப்பாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார். 

சிந்தனைப் புரட்சி, ஒழுக்கப் புரட்சி, செயல் புரட்சி என்ற மூன்று வழிகளில் இஸ்லாம் மனித சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தது என்பதை திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள்காட்டி, அற்புதமான முறையில் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அவருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகிய அனைத்தையும் படிக்கும்போது உண்மையிலேயே நமக்கு வியப்பு ஏற்படுகிறது. 

இஸ்லாம் குறித்தும், இஸ்லாத்தில் நிலவும் சமத்துவம் குறித்தும், அது எப்படி மக்களால் கவரப்பட்டது என்பது குறித்தும், அறிஞர் பெருமக்கள் அளித்த அழகிய வாக்குமூலங்களை நூலின் பல்வேறு பகுதிகளில் சுட்டிக்காட்டி, மிகச் சிறப்புடன் நூலுக்கு நூலாசிரியர் அழகு சேர்க்கிறார்.  

நல்லிணக்கத்திற்கு இஸ்லாம் வகுத்தக் கோட்பாடுகள், பிறமத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாத்தல், பிற மதங்களை மதிக்க வேண்டும், சிறுபான்மையினர் உறவுகள், உரிமைகள், அனைவருடன் இணைந்து பணியாற்றுக, இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினரின் நிலை என பல்வேறு தலைப்புகளில், இஸ்லாம் மனிதகுலத்திற்கு எப்படி அருட்கொடைகளை வழங்கியது என்பதை மிகமிக தெளிவாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. 

இயற்கை மார்க்கம், அரசியல் கோட்பாடுகள், மாதர்களின் மாண்பு, அறிவுக்கும், அறிவியலுக்கும் ஊக்கம் தந்த இஸ்லாம், போர் தர்மங்கள், வரலாற்றில் இஸ்லாத்தின் பங்களிப்பு என ஒவ்வொரு தலைப்பிலும் தரப்பட்டுள்ள தகவல்கள், விளக்கங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் என்றே கூறலாம். 

இஸ்லாமியக் கோட்பாடுகள் வெறும் வறட்டுத் தத்துவங்கள் அல்ல. செயல்படுத்தத் தகுந்தவை, செயல்படுத்திக் காட்டப்பட்டவை. இஸ்லாம் ஒரு மதமல்ல. ஒரு வாழ்க்கை நெறி என்பதை அழகுடன் எடுத்துரைத்து, சில முஸ்லிம்கள், முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் இயக்கங்கள் செய்யும் செயல்களை வைத்து இஸ்லாத்தை எடைபோடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, "இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?" என்ற தமது நூலை படித்தால் அதனை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும் தனது நிறைவுரையில் உறுதிப்பட தெரிவிக்கிறார். 

மிகவும் சிறப்பான, அற்புதமான முறையில் எழுதப்பட்டுள்ள "இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?" என்ற இந்த நூலை, முஸ்லிம்கள் படிப்பதுடன் மற்றவர்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்தால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். குறிப்பாக, சகோதர சமுதாய மக்களுக்கு இந்த நூலை அன்பளிப்பாக வழங்கினால், இஸ்லாம் குறித்து அவர்கள் மத்தியில் நிலவிவரும் குழப்பங்கள், சந்தேகங்கள், போலி பிம்பங்கள் அனைத்தும் களைய நல்ல வாய்ப்பு உருவாகும். அத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து மதரஸா, அரசு மற்றும் தனியார் நூலகங்களில் இந்த நூல் நிச்சயம் இடம்பெற்றால், அனைத்து தரப்பு வாசகர்களும், நூலை படித்து தெளிவுபெற வாய்ப்பு கிடைக்கும். 

- ஜாவீத்