பலவீனமானவர்கள்
பழி வாங்குகிறார்கள்.
வலிமையானவர்கள்
மன்னிக்கிறார்கள்.
புத்திசாலிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்.
வலிமையானவர்கள் அல்லது
புத்திசாலிகள் வரிசையில்
நாம் இருப்பதே நமக்கு நல்லது.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
பலவீனமானவர்கள்
பழி வாங்குகிறார்கள்.
வலிமையானவர்கள்
மன்னிக்கிறார்கள்.
புத்திசாலிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்.
வலிமையானவர்கள் அல்லது
புத்திசாலிகள் வரிசையில்
நாம் இருப்பதே நமக்கு நல்லது.
மகிழ்ச்சியான தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை சமூக ஆர்வலர், மூத்த ஊடகவியலாளர் தோழர் முருகேசன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
In the Prophet's Mosque Medina, every Monday and Thursday, Iftars are held for those who are fasting.
" மேற்குப் பாலைவனத்தில் மறைந்திருந்த பைசண்டைன் காலத்து நகரம் "
- எகிப்து அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை -
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அகழாய்வு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகழாய்வு என்பது பண்டைய மனித நாகரிகங்களின் எச்சங்களை மண்ணில் இருந்து கவனமாக தோண்டி எடுத்து, ஆவணப்படுத்தி ஆய்வு செய்யும் முறையாகும். தொல்பொருட்கள், கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் மூலம் மனிதனின் பண்பாடு மற்றும் வரலாறு பற்றிய புதிய உண்மைகளை அறிய இது உதவுகிறது
இந்நிலையில், எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில் மறைந்திருந்த பைசண்டைன் காலத்தை நகரம் ஒன்றை அந்நாட்டு அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த ஜுலை 4ஆம் தேதி சனிக்கிழமையன்று எகிப்து அறிவித்த இரண்டு முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளில், மேற்குப் பாலைவனத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட பைசண்டைன் காலத்து குடியிருப்பு நகரமும் ஒன்றாகும்.
டாக்லா சோலை மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகிலுள்ள மரினா எல்-அலமீன் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள், நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் துறையை (இது தொல்பொருள் சின்னங்களைப் பார்வையிடுவதை பெரிதும் நம்பியுள்ளது) மேம்படுத்தும் என்று எகிப்திய அரசு நம்புகிறது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாயைப் போலவே, நிதி நெருக்கடியில் உள்ள இந்நாட்டிற்குச் சுற்றுலாவும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.
எகிப்து பைசண்டைன் பேரரசு :
எகிப்து பைசண்டைன் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த நான்காம் நூற்றாண்டில், டாக்லா சோலைப்பகுதியில் நிலவிய அன்றாட வாழ்க்கை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்படுத்துவதாக எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கண்டறியப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வடக்கு-தெற்குப் பாதைகளை கிழக்கு-மேற்கு வீதிகள் குறுக்கிட்டுச் செல்லும் அமைப்பு காணப்படுகிறது. இது திறந்தவெளி சதுக்கங்களையும் பொது இடங்களையும் உருவாக்குகிறது என்று தொல்பொருள் சின்னங்களுக்கான உச்ச சபையின் பொதுச் செயலாளர் ஹிஷாம் எல்-லீதி தெரிவித்தார்.
நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த ஒரு 'பசிலிக்கா' தேவாலயம் இந்த குடியிருப்பின் முக்கிய வீதிகளை நோக்கியவாறு அதன் முகப்பில் அமைந்துள்ளது. அத்துடன் புறப்பகுதிகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட இரண்டு கண்காணிப்பு கோபுரங்களின் எச்சங்களும் அங்கு காணப்படுகின்றன என்று தொல்பொருள் ஆய்வுக் குழுவின் தலைவர் மஹ்மூத் மசூத் கூறினார்.
பாலைவனத்தில் ஒரு சோலைப்பகுதி :
எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில் உள்ள 'நியூ வேலி' மாகாணத்தில் அமைந்துள்ள இந்தச் சோலைப்பகுதி, யுனெஸ்கோவின் 'உலக பாரம்பரியப் பட்டியலில்' இணைக்கப்படுவதற்கு முந்தைய நிலையான 'தற்காலிகப் பட்டியலில்' இடம்பெற்றுள்ளது.
தடிமனான பாதுகாப்புச் சுவர்களுடன் கூடிய பலமான கட்டமைப்பு மற்றும் வரவேற்பு அறைகள், வளைவு வடிவ கூரைகள்கொண்ட பல வீடுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டதாக தொல்பொருள் ஆய்வுக் குழுவின் தலைவர் மஹ்மூத் மசூத் தெரிவித்தார்.
அவற்றில் 'டிசஸ்' என்பவரின் வீடும் அடங்கும். இவர் தேவாலயத்தின் திருத்தொண்டராக இருந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இந்த வீடு, நகரின் பசிலிக்கா தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பு ஒரு 'வீட்டுத் தேவாலயமாக' செயல்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ரொட்டி சுடும் அடுப்புகள், சமையலறைகள் மற்றும் கல் அரைக்கும் கருவிகளையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
பைசண்டைன் பேரரசர்களின் உருவங்கள் :
மேலும், பைசண்டைன் பேரரசர்களின் உருவங்கள், லத்தீன் கல்வெட்டுகள் மற்றும் கிறிஸ்தவ சின்னங்கள் பொறிக்கப்பட்ட நன்கு பாதுகாக்கப்பட்ட வெண்கல நாணயங்களும், ரோமானியப் பேரரசர் கான்ஸ்டான்டியஸ் II-ன் (கி.பி. 337 முதல் 361 வரை ஆட்சி செய்தவர்) காலத்தைச் சேர்ந்த தங்க நாணயங்களின் தொகுப்பும் கண்டறியப்பட்டதாக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இஸ்லாமிய, காப்டிக் மற்றும் யூத தொல்பொருள் துறையின் தலைவர் டியா ஜஹ்ரான், எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய சுமார் 200 மட்பாண்டத் துண்டுகளைத் தாங்கள் கண்டெடுத்ததாக தெரிவித்தார்.
'ஓஸ்ட்ராகா' என்று அழைக்கப்படும் இத்துண்டுகளில் வணிகப் பரிவர்த்தனைகள், கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிற விவரங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
======================
"எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில் மறைந்திருந்த பைசண்டைன் காலத்தை நகரம் ஒன்றை அந்நாட்டு அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டாக்லா சோலை மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகிலுள்ள மரினா எல்-அலமீன் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கண்டுபிடிப்புகள், நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்று எகிப்திய அரசு நம்புகிறது"
======================
இதற்கிடையில், மத்திய தரைக்கடல் நகரமான அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள 'மரினா எல்-அலமீன்' தொல்பொருள் தளத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 18 பழங்கால கல்லறைகளைக் கண்டறிந்துள்ளனர். கண்டறியப்பட்டவற்றில் சராசரியாக 8 மீட்டர் ஆழம் கொண்ட பாறையில் செதுக்கப்பட்ட 11 கல்லறைகளும், சுண்ணாம்புக்கல்லால் மேற்பரப்பில் கட்டப்பட்ட ஏழு கல்லறைகளும் அடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த இடத்தில் கண்டறியப்பட்ட மொத்த கல்லறைகளின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.
அரியப் பொருட்கள் கண்டெடுப்பு :
இங்கு மட்பாண்டங்கள், ஆம்போராக்கள் (நீண்ட கழுத்து கொண்ட ஜாடிகள்), விளக்குகள், தட்டுகள், பலிபீடங்கள் மற்றும் சுண்ணாம்புக்கல் தொட்டிகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது. ஆய்வுக் குழுவின் தலைவர் எமான் அப்தெல்-காலிக் கூறுகையில், 2 புள்ளி 5 மீட்டர் நீளமுள்ள கிரானைட் கல் சவப்பெட்டி ஒன்றையும், அதனுள் எலும்புக்கூட்டு எச்சங்களையும் கண்டெடுத்ததாகவும், அவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அந்தச் சவப்பெட்டிக்கு அருகில், பிளாஸ்டரால் செய்யப்பட்ட 'ஸ்பிங்க்ஸ்' சிலையின் எச்சங்களையும் அவர்கள் கண்டறிந்தனர்.
இறந்தவர்களின் வாயில் வைக்கப்பட்டிருந்த 4 தங்கத் துண்டுகளையும் தாங்கள் கண்டெடுத்ததாக அவர்கள் கூறினர். இவை "தங்க நாக்கு" என்று அழைக்கப்படுகின்றன. அக்காலகட்டத்தின் இறுதிச் சடங்கு நம்பிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு வழக்கமாக இது இருந்தது.
'மரினா எல்-அலமீன்' என்பது எகிப்தின் வடக்குக் கடற்கரையில் உள்ள அலமீன் நகருக்கு அருகிலுள்ள ஒரு தொல்பொருள் தளமாகும். 1986-இல் கண்டறியப்பட்ட இத்தளம், மத்திய தரைக்கடலில் அமைந்திருந்த 'லுகாஸ்பிஸ்' என்ற பழங்கால கிரேக்க-ரோமானியத் துறைமுக நகரமாக இருந்திருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, நான்காம் நூற்றாண்டு வரை செழித்து விளங்கியது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எகிப்தின் சுற்றுலாத்துறை :
பல ஆண்டுகால அரசியல் கொந்தளிப்பு, வன்முறை மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப் பிறகு எகிப்தின் சுற்றுலாத்துறை தற்போது மீளத் தொடங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு சாதனை அளவாக 19 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எகிப்தைப் பார்வையிட்டனர். இது முந்தைய ஆண்டை விட 21 சதவீத வளர்ச்சியாகும். 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 5 புள்ளி 7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 6 புள்ளி 1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனால் எகிப்து சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொருளாதார ரீதியாக பலன்கள் கிடைத்து வருகின்றன.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
சர்வதேச புனித குர்ஆன் விருதுக்கான 29வது பதிப்பு அறிவிப்பு
பரிசு தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடி வழங்கப்படும்
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உறுதி
துபாய், ஜுலை.08- சர்வதேச புனித குர்ஆன் விருதுக்கான 3 புள்ளி 3 மில்லியன் டாலர் பரிசுகளை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடி) வழங்கப்படும் என்று துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.
துபாய் அரசாங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க குர்ஆன் போட்டிகளில் ஒன்றாகும். உலகெங்கிலும் உள்ள சிறந்த குர்ஆன் மனப்பாடம் செய்யும் ஹாபிஸ் மற்றும் இனிமையாக ஓதுபவர்களைக் கண்டறிந்து கௌரவிப்பது இந்த போட்டியின் முக்கிய நோக்கமாகும். குர்ஆன் ஓதுதல் பிரிவில் வெற்றி பெறும் ஆண் மற்றும் பெண் வெற்றியாளர்களுக்கு பல கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படுகிறது.
துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு :
இந்நிலையில், திருக்குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களைக் கௌரவிக்கும் உலகின் மிகப்பெரிய விருதான 'துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது'-இன் 29-வது பதிப்பைத் தொடங்குவதாக துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் 07.07.2026 செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார். இவ்விருதுப் போட்டியின் முந்தைய பதிப்பில் 105 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 618 ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு, பரிசுத் தொகையாக 3 புள்ளி 3 மில்லியன் டாலர்கள் (12 மில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகம், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து, 123 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 826 போட்டியாளர்கள் குர்ஆன் விருதுப் போட்டிகளின் 28 பதிப்புகளில் பங்கேற்றுள்ளனர். முதல் பதிப்பிலிருந்து இதுவரை 67 மில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 'உலகளாவிய குர்ஆன் ஆளுமை விருது' (Global Quranic Personality Award) மூலம் 24 தனிநபர்களும் மூன்று நிறுவனங்களும் கௌரவிக்கப்பட்டுள்ளன.
ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உறுதி :
இந்த விருது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மத்தூம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதில், "இறைவனின் வார்த்தைகள் ஒளியாகவும், வழிகாட்டுதலாகவும், அருளாகவும் திகழ்கின்றன. 29 ஆண்டுகளாக நாங்கள் குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களைக் கௌரவித்து வருகிறோம். இறைவனின் அருளால், இந்தப் பாதையிலும் பயணத்திலும் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். மேலும், இந்த ஆண்டுக்கான விருது வென்றவர்கள் 2027-ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் கௌரவிக்கப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "உலகிலேயே மிக அழகான குர்ஆன் ஓதும் குரல்களை நாங்கள் தேடுகிறோம். அவர்களைக் கௌரவிக்கவும். அவர்களுக்குப் பின்னால் நின்று தொழவும் விரும்புகிறோம்" என்றும் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
மூன்று பிரிவுகள் :
சர்வதேச அளவில் பங்கேற்பை விரிவுபடுத்தும் விருதுக்கான உத்தியை மேம்படுத்தும் வகையில், 29-வது பதிப்பில் புதிய தரமான மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டுப் பதிப்பில் விருதுக்கான பிரிவுகள் மற்றும் தகுதி வரம்புகளில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதல் பிரிவு: துபாய் சர்வதேச குர்ஆன் விருது - ஆண்கள் பிரிவு (16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் - வயது வரம்பு இல்லை) இரண்டாம் பிரிவு: துபாய் சர்வதேச குர்ஆன் விருது - ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு (16 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்கள்) மூன்றாம் பிரிவு: உலகளாவிய குர்ஆன் ஆளுமை (Global Quranic Personality)
முதல் பிரிவில் பங்கேற்க குர்ஆன் ஓதுதல் மற்றும் 'தஜ்வீத்' விதிகளுக்கு உட்பட்டு, புனித குர்ஆனை முழுமையாகவும் மிகச்சிறப்பாகவும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். மே 31, 2010 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். போட்டியின் முந்தைய பதிப்புகளில் இறுதிச் சுற்றை எட்டியிருக்கவோ அல்லது கௌரவிக்கப்பட்டிருக்கவோ கூடாது. தங்கள் நாட்டின் பாரம்பரிய உடையை அணிய வேண்டும். நல்ல நடத்தையை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிமுறைகள் மற்றும் பொது ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பரிசுத் தொகை அறிவிப்பு :
போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 1 மில்லியன் டாலரும் இரண்டாமிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் டாலரும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 50 ஆயிரம் டாலரும் பரிசுத் தொகை அளிக்கப்படும். இதேபோன்று இரண்டாம் பிரிவில் பங்கேற்க, பங்கேற்பாளர், ஓதுதல் மற்றும் 'தஜ்வீத்' விதிகளுக்கு உட்பட்டு, புனித குர்ஆனை முழுமையாகவும் மிகச்சிறப்பாகவும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். 16 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; ஜூன் 1, 2010 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். போட்டியின் முந்தைய பதிப்புகளில் இறுதிச் சுற்றை எட்டியிருக்கவோ அல்லது கௌரவிக்கப்பட்டிருக்கவோ கூடாது. தேர்வுக்கான குறிப்பிட்ட நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நல்ல நடத்தையை வெளிப்படுத்த வேண்டும்; அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிமுறைகள் மற்றும் பொது ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 1 மில்லியன் டாலரும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ஒரு லட்சம் டாலரும், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு 50 ஆயிரம் டாலரும் பரிசு வழங்கப்படும்.
இந்த ஆண்டு புதிதாக என்ன இருக்கிறது?
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் ஊக்கமளிக்கும் அம்சங்களில், பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய முயற்சியும் அடங்கும். இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெறும் சிறந்த போட்டியாளர்கள் துபாய்க்கு அழைக்கப்பட்டு, அங்குள்ள முக்கிய மஸ்ஜிதுகளில் 'தராவிஹ்' தொழுகையை வழிநடத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதனைத் தொடர்ந்து, அப்போட்டியாளர்களில் உலகின் மிகச் சிறந்த குர்ஆன் ஓதுதல் திறனாளரைத் தேர்ந்தெடுக்கப் பொதுமக்களின் வாக்குப்பதிவு நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, போட்டியாளரின் சொந்த நாடு அல்லது அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மையம் மூலமான வழக்கமான பரிந்துரை நடைமுறையுடன், தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் இப்போட்டி வழங்குகிறது. இதன் மூலம், உலகம் முழுவதிலும் உள்ள குர்ஆன் திறமையாளர்களுக்கான பங்கேற்பு வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன; இது ஒரு முன்னணி உலகளாவிய தளமாக இப்போட்டி கொண்டுள்ள நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
பங்கேற்பது எப்படி?
போட்டியாளர்கள் www.quran.gov.ae என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு, மின்னணு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தங்கள் கடவுச்சீட்டு மற்றும் தனிப்பட்ட புகைப்படத்தின் நகலைப் பதிவேற்றி, ஒரு காணொளியைச் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
மகிழ்ச்சியான தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை சமூக ஆர்வலர், முனைவர் பேராசிரியர் மற்றும் செய்தி வாசிப்பாளர் தோழர் பரணிதரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.