உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவையில்லை.
முகவரியும் தேவையில்லை.
நம்மை நினைக்கும் உண்மையான,
அழகான நினைவுகள்
மட்டுமே போதும்.
அன்பு அழகானது. அற்புதமானது.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவையில்லை.
முகவரியும் தேவையில்லை.
நம்மை நினைக்கும் உண்மையான,
அழகான நினைவுகள்
மட்டுமே போதும்.
அன்பு அழகானது. அற்புதமானது.
Freshly grilled, perfectly seasoned, and served hot— this is the taste of China's street snacks...
" சர்வதேசப் பயணிகளை ஈர்க்கும் மக்கா, மதீனா
"
உலகின் முன்னணி நகரங்களின் பட்டியலில்
இடம்பிடிப்பு
உலக முஸ்லிம்களின் புனித நகரங்களான மக்கா, மதீனா நகரங்களுக்கு தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்று ஒவ்வொரு இஸ்லாமியர்கள் விரும்பி, கனவுக் கண்டு, அதை நிறைவேற்ற ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்து அதை நிறைவேற்றியும் வருகிறார்கள். இதன் காரணமாக மக்கா, மதீனா நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்துசெல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், 2025-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து 19 புள்ளி 5 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகை தந்தனர். இதில் 18 புள்ளி 03 மில்லியன் உம்ரா யாத்ரீகர்களும், 1 புள்ளி 5 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்களும் அடங்குவர். 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உம்ரா யாத்ரீகர்களின் எண்ணிக்கையில் இது 114 சதவீத வளர்ச்சியாகும்.
சர்வதேச தரவரிசைகளிலும் சவூதி அரேபியா குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்தது. அதிக எண்ணிக்கையிலான சர்வதேசப் பயணிகளை வரவேற்கும் நகரங்களின் பட்டியலில் மக்கா உலகளவில் ஐந்தாவது இடத்தையும், சுற்றுலாச் செயல் திறன் குறியீட்டில் மதீனா ஏழாவது இடத்தையும் பெற்றன.
இறைவனின் விருந்தினர்கள் சேவைத் திட்டம் :
'சவூதி விஷன் 2030' (Saudi Vision 2030) இலக்குகளை அடைவதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான 'தோயுஃப் அல்-ரஹ்மான்' (Doyof Al-Rahman - இறைவனின் விருந்தினர்கள்) சேவைத் திட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. "கௌரவம் மற்றும் தாக்கம்" (Honor and Impact) என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கை, இந்த மைல்கல் சாதனை, அமைப்பின் தயார்நிலை மற்றும் வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனைப் பிரதிபலிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியது.
யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த போதிலும், திருப்தி நிலைகள் மிக உயர்ந்த அளவிலேயே இருந்தன. ஹஜ் பயணத்திற்கான திருப்தி அளவு 91 சதவீதமாகவும், உம்ரா பயணத்திற்கான திருப்தி அளவு 94 சதவீதமாகவும் பதிவாகின. இவ்விரு குறியீடுகளிலும் 'சவூதி விஷன் 2030' நிர்ணயித்த இலக்குகளை இப்புள்ளிவிவரங்கள் முறியடித்தன.
====================
"சர்வதேச தரவரிசைகளில் சவூதி அரேபியா குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான
சர்வதேசப் பயணிகளை வரவேற்கும் நகரங்களின் பட்டியலில் மக்கா, உலகளவில் ஐந்தாவது இடத்தையும்,
சுற்றுலாச் செயல் திறன் குறியீட்டில் மதீனா ஏழாவது இடத்தையும் பெற்றன"
====================
ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களின் முடிவுகள் மற்றும் 'இறைவனின் விருந்தினர்கள் சேவைத் திட்டத்தின்' முக்கிய சாதனைகளை இந்த வருடாந்திர அறிக்கை விவரித்தது. இத்தகைய முயற்சிகள் பயணத்தின் தரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளன. பயணத்தைத் திட்டமிடும் கட்டம் முதல் சொந்த நாடுகளுக்குப் பாதுகாப்பாகத் திரும்பும் வரை அவர்களின் அனுபவத்தை இவை செழுமைப்படுத்தியுள்ளன.
மஸ்ஜித்-அன்-நபவிக்கு வரும் பார்வையாளர்கள் :
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் மஸ்ஜித்தான மஸ்ஜித்-அன்-நபவியில் உள்ள 'ரவ்தா அல்-ஷரீஃப்' பகுதி 2025-ஆம் ஆண்டில் 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றது. இங்கு பார்வையாளர்களின் திருப்தி அளவு 2022-ல் 57 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் அது 88 சதவீதமாக உயர்ந்தது. சேவைகளை மேம்படுத்துவதற்கும், மிக உயர்ந்த தரம் மற்றும் செயல்திறன் தரநிலைகளுக்கு ஏற்ப வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொள்வதை எளிதாக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் தாக்கத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும், 60-க்கும் மேற்பட்ட செயல்படுத்தும் அமைப்புகளுடன் இணைந்து 2025-ஆம் ஆண்டில் இத்திட்டம் 87 முன்முயற்சிகளைச் செயல்படுத்தியதாகவும், முன்முயற்சிகளைச் செயல்படுத்துவதில் 100 சதவீத இணக்க விகிதத்தை எட்டியதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. இது புனிதப் பயணிகளுக்குச் சேவையாற்றுவதிலும், குறிப்பாக அவர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் 'சவூதி விஷன் 2030' (Saudi Vision 2030) திட்டத்தின் நோக்கங்களை முன்னெடுப்பதிலும் அந்த நாட்டின் நீடித்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் :
மேலும், மக்கா மற்றும் மதீனாவில் தகுதிவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் கலாச்சாரத் தலங்களின் எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளதாகவும், இவை 55 மில்லியனுக்கும் அதிகமான வருகையாளர்களை ஈர்த்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த மைல்கல் புனிதப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தியதோடு, நாட்டின் செழுமையான இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியத்துடனான அவர்களின் பிணைப்பையும் வலுப்படுத்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டில் புனிதப் பயணிகளுக்குச் சேவையாற்றுவதில் ஒரு லட்சத்து ,84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தன்னார்வலர்கள் பங்கேற்றதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. இது அந்நாட்டு மக்களிடையே வளர்ந்து வரும் தன்னார்வப் பணியின் கலாச்சாரத்தையும், சேவைகளின் தரத்தை உயர்த்துவதில் அதன் முக்கியப் பங்களிப்பையும் வெளிப்படுத்துகிறது.
மேலும், டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்த ஆண்டில் உம்ரா, வருகை மற்றும் பிற நோக்கங்களுக்காக மொத்தம் 15 புள்ளி 03 மில்லியன் விசாக்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் உம்ரா விசாக்கள் 83 சதவீதத்தைப் பெற்றுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது. அதிக எண்ணிக்கையிலான உம்ரா விசாக்களைப் பெற்ற நாடுகளில் பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகியவை முன்னணியில் உள்ளன. இது புனிதப் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்கும், அவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் அந்நாடு மேற்கொண்டு வரும் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
உள்ளே தள்ளும் உணவு ருசியாக
இருக்க வேண்டும் என நினைக்கும்
நாக்கு வெளியே தள்ளும்
வார்த்தையில் மட்டும் எதையும்
நினைப்பதில்லை. வாழ்க்கையில்
வார்த்தைகள் மிகமிக முக்கியம்.
" பேரீச்சம்பழத்திற்கான ஜகாத் - ஐக்கிய அரபு அமீரக கவுன்சில் ஃபத்வா "
வளைகுடா நாடுகளில் தற்போது பேரீச்சை அறுவடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சர்வதேச அளவில் பேரீச்சம் பழங்களின் புகழை பரப்பும் வகையில் சவூதியில் சர்வதேச பேரீச்சம் பழங்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தற்போது பேரீச்சை அறுவடைக்காலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பயிர்கள் மற்றும் பழங்களுக்கான ஜகாத் என்பது ஒரு மதக் கடமை என்று அந்நாட்டின் ஃபத்வா கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. அறுவடைக்குப் பிறகு காயவைக்கப்பட்ட மொத்த விளைச்சல் 'ஐந்து அவ்ஸாக்' அதாவது 541 கிலோகிராம் என்ற அளவை எட்டும்போது இந்த ஜகாத் செலுத்தப்பட வேண்டும்.
கவுன்சில் வெளியிட்ட பொது ஃபத்வா எண் 11-இன் மூலம் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பண்ணைகளில் விளையும் மிகவும் பிரபலமான பேரீச்சை வகைகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் இந்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, கவுன்சிலைச் சேர்ந்த குழுவினர், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து அளவீட்டு முறை'க்கு இணையான அளவுகோலையும், தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரநிலைகள் மற்றும் சட்டப் பிரிவு அங்கீகரித்த அளவீட்டுக் கருவியையும் பயன்படுத்தி பேரீச்சம்பழங்களை அளந்தனர்.
ஃபத்வாவின் முக்கிய அம்சங்கள் :
ஒருவருக்குச் சொந்தமான பண்ணை, வீடு அல்லது அவருக்குச் சொந்தமான எந்தவொரு நிலத்திலும் உள்ள பேரீச்சை மரங்களின் மொத்த விளைச்சலுக்கும் ஜகாத் கட்டாயம் என்று அந்த ஃபத்வா விளக்குகிறது. அந்த விளைச்சல் வணிகம், சேமிப்பு, நுகர்வு, பரிசு அல்லது தர்மம் என எந்த நோக்கத்திற்காக இருந்தாலும் இது பொருந்தும். மரங்களின் மொத்த விளைச்சல் நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டினால், உரிமையாளர் ஜகாத் செலுத்த வேண்டும்.
=========================
"ஒருவருக்குச் சொந்தமான பேரீச்சை மரங்களில் கிடைக்கும் மொத்த விளைச்சலுக்கும் ஜகாத் செலுத்துவது கட்டாயமாகும். இதனைப் பேரீச்சம்பழங்களாகவோ அல்லது அவற்றின் பணமதிப்பிற்கு இணையான தொகையாகவோ செலுத்தலாம். பேரீச்சம்பழங்கள் மீதான ஜகாத் செலுத்துதல் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க கவுன்சில் அறிவுறுத்தல்"
=========================
நீர்ப்பாசனக் கால்வாய்கள் அல்லது மழைநீர் மூலம் (உரிமையாளருக்குச் செலவின்றி) நீர் பாய்ச்சப்பட்டால், மொத்த அறுவடையில் 10 சதவீதத்தை ஜகாத்தாகச் செலுத்த வேண்டும் என்று ஃபத்வா தெளிவுபடுத்தியுள்ளது. அதேசமயம், கிணறுகள் அல்லது செலவு தேவைப்படும் நீர்ப்பாசன முறைகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டால், மொத்த அறுவடையில் 5 சதவீதத்தை ஜகாத்தாகச் செலுத்த வேண்டும்.
ஜகாத் தொகையை பேரீச்சம்பழங்களாகவோ அல்லது அவற்றின் பணமதிப்பிற்கு இணையான தொகையாகவோ செலுத்தலாம். பேரீச்சம்பழங்கள் பழுப்பதற்கு முன், அவை இன்னும் பச்சையாகவோ அல்லது புதியதாகவோ இருக்கும் நிலையில் ஜகாத் செலுத்தப்படக்கூடாது. இருப்பினும், மரத்தின் உரிமையாளர் தனது விளைச்சலை அது புதியதாக இருக்கும்போதே விற்றுவிட்டால், அதன் பணமதிப்பிலிருந்து ஜகாத் செலுத்துவது அனுமதிக்கப்படுகிறது என்று ஃபத்வா கூறுகிறது.
எவ்வளவு ஜகாத் செலுத்த வேண்டும்?
இந்த ஃபத்வா இரண்டு சூழல்களுக்கு இடையே வேறுபாட்டைக் காட்டுகிறது. முதல் சூழல், பேரீச்சைத் தோட்டங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் அல்லது பழங்கள் பழுப்பதற்கு முன்பே மரத்திலுள்ள பழங்களை விலைக்கு வாங்கும் நிறுவனத்தைப் பற்றியது. இத்தகைய சூழலில், நீர்ப்பாசன முறை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் அப்பழங்களுக்கு ஜகாத் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அந்நிறுவனம் அப்பயிரை விற்பனை செய்தால், அதன் விற்பனைத் தொகையைத் தன்னிடம் உள்ள ரொக்கம் மற்றும் பிற வணிகப் பொருட்களுடன் சேர்த்து, வழக்கமான ஜகாத் செலுத்தும் தேதி வரும்போது அனைத்திற்கும் சேர்த்து ஜகாத் செலுத்த வேண்டும்.
இரண்டாவது சூழல், பேரீச்சைத் தோட்டங்களைச் சொந்தமாக வைத்திருக்காமல், பழங்கள் பழுத்த பின்னரோ அல்லது அறுவடை செய்யப்பட்ட பின்னரோ அவற்றை விலைக்கு வாங்கும் நிறுவனத்தைப் பற்றியது. இந்நிறுவனம் அப்பழங்களுக்கு ஜகாத் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், பயிர் அதன் உரிமையாளரின் வசம் இருக்கும்போது மட்டுமே அதற்கான ஜகாத் கடமை பொருந்தும். இத்தகைய சூழலில், அப்பேரீச்சம்பழங்கள் வணிகப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. அவை சந்தை விலையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, ரொக்கம் மற்றும் பிற வணிகப் பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. மேலும், ஒரு வருடம் பூர்த்தியாகி, ஜகாத் கடமைக்கான குறைந்தபட்ச அளவு எட்டப்படும்போது, அவற்றின் மீது 2 புள்ளி 5 சதவீத விகிதத்தில் ஜகாத் செலுத்தப்படுகிறது.
கவுன்சில் அறிவுறுத்தல் :
பேரீச்சம்பழங்கள் மீதான ஜகாத் செலுத்துதல் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை பின்பற்றுமாறும் தோட்ட உரிமையாளர்களையும் ஜகாத் செலுத்தக் கடமைப்பட்டவர்களையும் ஐக்கிய அரபு அமீரக கவுன்சில் கேட்டுக்கொண்டது. நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகள் வாயிலாக ஜகாத் செலுத்துவதன் முக்கியத்துவத்தை கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. மேலும், 'இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம்' (General Authority for Islamic Affairs, Endowments and Zakat) வழங்கும் சேவைகளைப் பயன்படுத்துமாறும், அதன் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் ஜகாத்தைக் கணக்கிட்டுச் செலுத்துமாறும் இச்சபை ஊக்குவித்துள்ளது.
பேரீச்சம்பழங்கள் மீதான ஜகாத் தொடர்பான ஷரியத் சட்டத் தீர்ப்புகள் குறித்து அறிய விரும்புவோர், இச்சபையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். சபையிலுள்ள ஷரியத் நிபுணர்களிடமிருந்து நம்பகமான பதில்களைப் பெற, இணையதளம் மற்றும் ஸ்மார்ட் செயலி மூலம் 24 மணி நேரமும் வழங்கப்படும் ஃபத்வா சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்