சில நேரங்களில்
திறமை கடினமாக
உழைக்காதபோது,
கடின உழைப்பு
திறமையை வெல்லும்.
ஆம், கடின உழைப்பு
வெற்றியை தேடித்தரும்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
சில நேரங்களில்
திறமை கடினமாக
உழைக்காதபோது,
கடின உழைப்பு
திறமையை வெல்லும்.
ஆம், கடின உழைப்பு
வெற்றியை தேடித்தரும்.
இனிய தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை தமிழகத்தின் பல்துறை வல்லுநர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்...
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா தாக்குதல்
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு
ஈரான் அதிரடி அறிவிப்பு
தெஹ்ரான், ஜுலை.19— ஈரான், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் மீண்டும் தொடர்வதால், அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டிள்ளது. மேலும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது முக்கிய விதிகளை நிறுத்தி வைத்துள்ளதாக ஈரான் 18.07.2026 சனிக்கிழமை அன்று கூறியுள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், வாஷிங்டன் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறினார்.
அமெரிக்கா மீது குற்றச்சாட்டு :
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் அமெரிக்கா தனது அனைத்து கடமைகளையும் மீறியுள்ளது" என்று கூறினார். "எனவே நாங்களும் எங்கள் கடமைகளை நிறுத்தி வைத்துள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்தவில்லை. மேலும் நாங்கள் நாட்டைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருக்கிறோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் :
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்தி, ஒரு பரந்த மற்றும் நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கான அடித்தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இரு நாடுகளும் பிராந்தியம் முழுவதும் தொடர்ந்து இராணுவத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது, ஒப்பந்தம் திறம்பட முறிந்துவிட்டது என்றும், புதுப்பிக்கப்பட்ட ராஜதந்திரத்திற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்றும் கவலைகளை எழுப்பியுள்ளது. இதனால் மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
=============
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்
வரும் 20ஆம் தேதிதொடக்கம்
டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து
எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு
புதுடெல்லி, ஜுலை.19- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
வரும் திங்கட்கிழமை முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 19.07.2026 ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைத்து முக்கியக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகள் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் உட்பட பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு :
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிருப்தி எம்.பி.க்கள் குழுவின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை கண்டித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, ஜேஎம்எம், ஆம் ஆத்மி கட்சி, நேஷனல் கான்பரன்ஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளன. இதற்குக் காரணம், அங்கீகரிக்கப்படாத என்ற பிரிவின் கீழ், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் பலம் 28 உறுப்பினர்கள் என்று நாடாளுமன்றச் செயலகம் வழங்கிய பட்டியலில் காட்டப்பட்டுள்ளது. 'கிளர்ச்சியாளர்கள்' என்று கூறப்படும் அந்த 20 எம்.பி.க்களின் இணைப்புக்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் 20-ம் இன்னும் நிலுவையில் உள்ளன. 91-வது சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, தனி அணியாகச் செயல்பட இடமில்லை. அப்படியிருக்க, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எந்த அடிப்படையில் இந்த 20 கிளர்ச்சி எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் எப்படி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்? நாங்கள் எங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து, அதன் அடையாளமாக வெளிநடப்பு செய்துள்ளோம். மேலும், எங்கள் எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
=======================
ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களில் மஸ்ஜித்துகள், மதரஸாக்கள், தர்காக்களை இடிக்கும் பாஜக அரசின் முயற்சி
அதிரடி தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
ஜமியத் உலமா இ ஹிந்த தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை
புதுடெல்லி, ஜுலை.19- ராஜஸ்தானின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் மஸ்ஜித்துகள், மதரஸாக்கள், தர்காக்காள் உள்ளிட்ட கட்டுமானங்களை இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் குடியிருப்புகள் மீது கண்வைத்துள்ள ஆட்சியாளர்கள், அங்குள்ள மஸ்ஜித்துகள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்களை இடிக்க முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது. பாஜக அரசின் இந்த முயற்சிக்கு ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த முயற்சிக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனினும் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜமியத் உலமா இ ஹிந்த் வழக்கு :
இந்நிலையில் ராஜஸ்தான் ல்லை மாவட்டங்களில் மஸ்ஜித்துகள், மதரஸாக்கள், தர்காக்கள், வீடுகள் மற்றும் பிற கட்டுமானங்களை இலக்காகக் கொண்டு நடைபெற்று வரும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதித்துக் கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு உட்பட மொத்தம் எட்டு மனுக்கள், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எட்டு மனுதாரர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 'இன்ட்ரா-கோர்ட்' மேல்முறையீட்டை தாக்கல் செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டது.
மஸ்ஜித்துகளை இடிக்க இடைக்காலத் தடை :
எனினும், ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களில் மஸ்ஜித்துகள் இடிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இரண்டு வாரங்களுக்கு எந்தவொரு சொத்தையும் இடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டதுடன், மனுதாரர்களை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை அணுகுமாறும் அறிவுறுத்தியது. மஸ்ஜித்துகள், மதரஸாக்கள், தர்காக்கள், வீடுகள் மற்றும் பிற கட்டுமானங்களை இலக்காகக் கொண்டு நடைபெற்று வரும் இடிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இடைக்கால நிவாரணம் அளிக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு எந்தவித இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"உயர்நீதிமன்றம் ரிட் மனு அல்லது ரிட் மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை, இரண்டு வாரங்களுக்குள் மனுதாரர்களுக்கு எதிராக எதிர்தரப்பினர் எவ்வித கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது. நாங்கள் இந்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்யவில்லை என்பதையும், வழக்கின் தகுதித்தன்மை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். மனுக்களை அவற்றின் தகுதித்தன்மையின் அடிப்படையில் பரிசீலிப்பது உயர்நீதிமன்றத்தின் பொறுப்பாகும்," என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வழக்கு விவரம் :
ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் மஸ்ஜித்துகள், கபர்ஸ்தான்கள் மற்றும் தர்காக்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்களைப் பாதிக்கும் வகையிலான இடிப்பு நடவடிக்கையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு ஜூலை 13 அன்று, தள்ளுபடி செய்திருந்தது. சர்வதேச எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் செயல்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து இந்த இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவிவகாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், மத ரீதியான பாகுபாடு குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இயற்கை நீதியின் கோட்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, பாதிக்கப்பட்ட வேறு சில தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்க மறுத்து, மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதுடன், அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கியது. மனுதாரர்கள் தங்கள் மனுவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் ஹுசேஃபா அஹ்மதி ஆகியோர் ஆஜராகினர். உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மவுலானா மஹமூத் அசாத் மதனி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தங்கள் அமைப்பு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை அணுகி இருப்பதாக தெரிவித்துள்ளார். மஸ்ஜித்துகள் இடிக்கப்படுவதை தடுக்க சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் ஜமியத் உலமா-இ-ஹிந்த் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் மஹமூத் அசாத் மதனி உறுதிப்பட கூறியுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
தொகுதி
மறுவரையறை விவகாரம் ஒரு தேசியப் பிரச்சினை
அரசியலமைப்புச்
சட்ட சமநிலையை மாற்றியமைக்கு பாஜக அரசின்
முயற்சியை
இந்தியா கூட்டணி உறுதியாக எதிர்க்கும்
காங்கிரஸ்
பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டம்
புதுடெல்லி, ஜுலை.19- தொகுதி மறுவரையறை என்பது இந்தியா கூட்டணியின் பிரச்சினை மட்டுமல்ல, அது நமது இந்திய அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்போடு தொடர்புடையது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் 20.07.2026 திங்கட்கிழமையன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதனால் தேசிய அரசியல் சூழல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.சி. வேணுகோபால் உறுதி :
இந்த சூழ்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தொகுதி மறுவரையறை என்பது காங்கிரஸின் பிரச்சினையோ அல்லது இந்தியா கூட்டணியின் பிரச்சினையோ மட்டுமல்ல. இது ஒரு தேசியப் பிரச்சினை. ஏனெனில் இது இந்தியாவின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்போடு தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "கூட்டாட்சித் தத்துவத்தையும் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தையும் பலவீனப்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்ட சமநிலையை மாற்றியமைக்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் அடிப்படையில் எதிர்க்கிறோம்" என்று கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார். அத்துடன், மாநில நலனில் அக்கறை கொண்டு, உறுதியாக செயல்படும் திமுக கூட, தொகுதி மறுவரையறை மசோதாவை உறுதியாக எதிர்க்கும் என்று தாங்கள் நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் அவர் தேரிவித்துள்ளார்.
முக்கிய பிரச்சினைகள் :
இதேபோன்று, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்ட (131-வது திருத்த) மசோதாவை பாஜக முன்னெடுப்பது, எதிர்க்கட்சிகளின் பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகளால் தேர்வுகள் மீதான நம்பிக்கையை மாணவர்கள் இழப்பது, எரிபொருளில் எத்தனால் கலப்பது குறித்து வாகன உரிமையாளர்கள் மத்தியில் நிலவும் கவலைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள கே.சி. வேணுகோபால், மக்கள் நலனுக்கு எதிரான எந்தவொரு முயற்சியையும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக எதிர்க்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
============================