Sunday, August 30, 2026

Mindset....!

A positive mindset doesn't mean ignoring the bad,

 it means focusing on the good.



நியதி....!

 உலகில் உயர்ந்து விடுகின்ற எந்தப்

 பொருளாயினும் நிச்சயமாக ஒருநாள்

 அதனை கீழே கொண்டு வருவதே

 இறைவனின் நியதியாகும். 

உயரே பறந்தாலும் 

கீழே வந்துதான் 

ஆக வேண்டும். 

இதுதான் நியதி...!



Good information...!

 Make this drink a habit and see the changes in your body....!



Silence....!

A silence is the best answer to all the unnecessary arguments we face every day. You are a fool if you try to convince a fool and involve yourself and waste your energy and time. Behave like a lion who never answers the bark of dogs. 



இந்து மத நூல்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் முஸ்லிம் நூலகம்...!

இந்து மத நூல்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கும்மும்பை அஞ்சுமன்-இ-இஸ்லாம் கரிமி நூலகம்

டிஜிட்டல் முறையில் நூல்கள் புதுப்பிக்கும் பணித் தொடக்கம்

மகாராஷ்டிராக மாநிலம் தெற்கு மும்பையின் பரபரப்பான வீதிகளை நோக்கியவாறு அமைந்துள்ள ஒரு நூற்றாண்டு பழமையான கட்டடத்திற்குள், இந்திய மத நூல்களின் அரிய பாரசீக மற்றும் உர்தூ மொழிபெயர்ப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைதியான முயற்சி ஒன்று நடைபெற்று வருகிறது. நாட்டின் பன்முக கலாச்சாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கடந்த காலத்தின் எஞ்சிய சான்றுகளாக இவை திகழ்கின்றன.

இந்து நூல்களை மீட்டெடுக்கும் பணி :

152 ஆண்டுகள் பழமையான 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' (Anjuman-I-Islam) நிறுவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள 'கரிமி நூலகம்' (Karimi Library), 1867 மற்றும் 1896-க்கு இடைப்பட்ட காலத்தில் அச்சிடப்பட்ட மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை மற்றும் சிவ புராணம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட புனித இந்து நூல்களை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

புகழ்பெற்ற சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திற்கு (CSMT) அருகில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தில், சமஸ்கிருதம், ஆங்கிலம், உர்தூ, பாரசீகம், மராத்தி, பஷ்தூ மற்றும் அரபு மொழிகளில் உள்ள புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. வரலாறு, தத்துவம், இறையியல், இலக்கியம், புவியியல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் உள்ள இப்புத்தகங்களில் சில 150 ஆண்டுகளுக்கு முன்பே அச்சிடப்பட்டவை ஆகும்.

கரிமி நூலகத்தின் சுவையான வரலாறு :

 வர்த்தகர் காசி அப்துல் கரிமி போர்பந்தரி 4 ஆயிரத்து 500 மதிப்புமிக்க நூல்களை நன்கொடையாக வழங்கியதைத் தொடர்ந்து 1898-ல் இந்த நூலகம் நிறுவப்பட்டு, அவரது பெயரே நூலகத்திற்கு, சூட்டப்பட்டதாக 1874-ல் பத்ருதீன் தியாப்ஜியால் நிறுவப்பட்ட 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவரான பத்மஸ்ரீ டாக்டர் ஜாஹிர் காசி தெரிவித்தார்.

மத நூல்கள் மற்றும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் அரச ஆணைகள் தவிர, 1875-ஆம் ஆண்டைச் சேர்ந்த அரிய செய்தித்தாள்களும் (எ.கா: ஜெய்ப்பூர் கெஜட், அம்பாலா கெஜட் மற்றும் கெய்ரோவின் 'அல் கைரா') இங்கு உள்ளன. இவை இந்தியாவின் ஆரம்பகால சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பார்வையை வழங்குகின்றன.

டிஜிட்டல் மயமாக்கல் பணி :

"புத்தகங்கள் பழமையானவையாகிவிட்டன. அவற்றின் பக்கங்கள் எளிதில் உடையக்கூடிய நிலையில் உள்ளன. பூஞ்சை மற்றும் பூச்சிகளை அகற்ற சிறப்பு ரசாயனங்கள் மூலம் அவை சுத்திகரிக்கப்பட வேண்டும். நல்ல நிலையில் இல்லாத புத்தகங்கள் பாதுகாப்பிற்காக சிறப்புத் தாள்கள் கொண்டு ஒட்டப்பட்டு சரிசெய்யப்படுகின்றன" என்று அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவர் ஜாஹிர் காசி தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மயமாக்கல் பணிக்காக நிபுணர்கள் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. புத்தகப் பக்கங்கள் 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் 'கிளவுட்' (cloud) கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. "இப்புத்தகங்கள் மிகுந்த சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. நாட்டின் பாரம்பரியம் இந்த நூலகத்தில் பெருமளவில் பொதிந்துள்ளது என்பது இந்தியர்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயமாகும்," என்றும்  ஜாஹிர் காசி கூறினார்.

====================

"152 ஆண்டுகள் பழமையான மும்பை அஞ்சுமன்-இ-இஸ்லாம் நிறுவனத்திற்குள் அமைந்துள்ள கரிமி நூலகம், 32-க்கும் மேற்பட்ட  இந்து மத நூல்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் வகையில் ஒரு புதுப்பிப்புப் பணியைத் தொடங்கியுள்ளது. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்வதும் பணியாற்றுவதுமே இந்தியாவின் பாரம்பரியம் என்பதை இந்த பணி உறுதி செய்கிறது"

====================

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகப் பக்கங்களும், 70 ஆயிரம் செய்தித்தாள் மற்றும் இதழ் பக்கங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், ஆவணப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க இன்னும் 2 ஆயிரத்து 250 பக்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் நூலகப் பொறுப்பாளர் முகமது காலிப் முல்லா உறுதிப்படுத்தினார்.

"இந்தச் செய்தித்தாள்கள் சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக்கால நிகழ்வுகள், அக்காலகட்டத்தின் சமூக மற்றும் அரசியல் சூழல், அத்துடன் பிரிட்டிஷ் ஆதரவு மற்றும் எதிர்ப்பு எனப் பத்திரிகைத்துறை எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த விவரங்களை வழங்குகின்றன," என்று முகமது காலிப் முல்லா கூறினார்.

இச்செய்தித்தாள்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது பெரும்பாலும் தெரியவில்லை. இருப்பினும், 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' (Anjuman-I-Islam) நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழ்ந்து வருவதாலும், அது அத்தகைய வெளியீடுகளுக்குச் சந்தா செலுத்தியிருக்கக்கூடும் என்பதாலும், இந்தச் செய்தித்தாள்களும் இதழ்களும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவையாகவே இருக்க வேண்டும் என்று முகமது காலிப் முல்லா குறிப்பிட்டார்.

கரிமி நூலகம் புதுப்பிக்கும் பணி :

'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' நிறுவனத்தின் பாரம்பரியக் கட்டிடத்தின் ஒரு பகுதியாகத் திகழும் கரிமி நூலகம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது; அதேவேளையில், அதன் பழமையான தோற்றமும் தனித்துவமான சூழலும் மாறாமல் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' நிர்வாகத்தில் அங்கம் வகித்ததாகவும், அவர்களின் பல முக்கியக் கூட்டங்களுக்கு இந்த நூலகம் சான்றாகத் திகழ்ந்ததாகவும் அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவர் ஜாஹிர் காசி சுட்டிக்காட்டினார். "பணிகள் நிறைவடைவதைப் பொறுத்து, புதுப்பிக்கப்பட்ட இந்த நூலகத்தை அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த நூலகத்தில் பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்று  ஜாஹிர் காசி தெரிவித்தார்.

நாட்டில் மத ரீதியாக மக்களை பிரித்து அதன்மூலம் அரசியல் லாபம் அடைய ஒரு கூட்டம் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கும் நிலையில், ஒரு இஸ்லாமிய நூலகம்,  இந்து மத நூல்களின் அரிய உர்தூ மொழிபெயர்ப்புகளைப் புதுப்பிக்கிறது என்பது எவ்வளவு போற்றத்தக்க விஷயமாகும். நாட்டில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறார்கள் என்பதற்கு மும்பை கரிமி நூலகத்தின் பணியே ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறலாம். மேலும், இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்வதும் பணியாற்றுவதுமே இந்தியாவின் பாரம்பரியம் என்பதை இந்த பணி உறுதி செய்கிறது என்பதை மறுக்க முடியாது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


திருக்குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதி - சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி....!

 புனித திருக்குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை 

உருவாக்குவதற்கான சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி 

உஸ்பெகிஸ்தான்  இஸ்லாமிய நாகரிக மையம் அறிவிப்பு

உஸ்பெகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய நாகரிக மையம், புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதற்கான சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி (calligraphy competition) ஒன்றை ஆகஸ்ட் 26 அன்று அறிவித்துள்ளது. உஸ்பெக் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற "இஸ்லாமிய நாகரிகம்: ஒரு புதிய கண்ணோட்டம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்" என்ற கருப்பொருளைக் கொண்ட சர்வதேச ஊடக மன்றத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதி :

இப்போட்டியானது "குர்ஆனின் உலகம்: அரபு கையெழுத்துக் கலை மரபுகள் முதல் எதிர்காலத்தின் பாரம்பரியம் வரை" என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளின் தனித்துவமான பாணிகளை உள்ளடக்கி, இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் சிறப்பான மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இத்திட்டம் இக்கலையின் செழுமை, அதன் பல்வேறு பாணிகள் மற்றும் அதன் நாகரிகப் பரவல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமையும்.

கையெழுத்துக் கலைஞர்களுக்கு அழைப்பு :

இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் பல்வேறு பாணிகள் மற்றும் மரபுகளை ஒரே கலை மற்றும் கலாச்சாரப் படைப்பாக ஒன்றிணைத்து, புனித குர்ஆனை எழுதுவதில் பங்கேற்குமாறு உலகெங்கிலும் உள்ள கையெழுத்துக் கலைஞர்களுக்கு இத்திட்டம் அழைப்பு விடுக்கிறது. இது அரபு கையெழுத்துக் கலையின் வரலாற்று முக்கியத்துவத்தையும், காலங்காலமாக புனித குர்ஆனை எழுதுவதில் அதற்குள்ள தொடர்பையும் முன்னிலைப்படுத்த உதவும். இஸ்லாமிய நாகரிக மையத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் நவீன வழிகளில் காட்சிப்படுத்துதல் ஆகிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, புனித குர்ஆன், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியம் தொடர்பான பல்வேறு கலாச்சார மற்றும் அறிவியல் திட்டங்களை ஆய்வு செய்த மன்றத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே இப்போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கையெழுத்துக் கலைப் பள்ளிகள் பங்கேற்பு :


இத்திட்டத்தை, இஸ்லாமிய நாகரிக மையத்தின் கையெழுத்துக் கலைப் பள்ளியின் இயக்குநரும் கையெழுத்துக் கலைஞருமான ஹபிபுல்லோ சோலிஹ் முறைப்படி அறிவித்தார். "நூற்றாண்டுகளை இணைக்கும் பாரம்பரியம்: இஸ்லாமிய நாகரிகத்தின் ஆன்மீக அர்த்தங்கள்" என்ற தலைப்பிலான ஊடக மன்றத்தின் முழு அமர்வின் போது இப்போட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் மிகச்சிறந்த மரபுகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்தக் குர்ஆன் பிரதி உருவாக்கப்படவுள்ளது.

=========================

"பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளின் தனித்துவமான பாணிகளை உள்ளடக்கி, இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் சிறப்பான மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் கையெழுத்துக்கலையின் செழுமை, அதன் பல்வேறு பாணிகள் மற்றும் அதன் நாகரிகப் பரவல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமையும்"

=========================

முன்முடிவுகள் (stereotypes) மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வை (Islamophobia) முறியடிப்பதில் ஊடகங்களின் பங்கு குறித்த சர்வதேச விவாதமும் இந்த அமர்வில் இடம்பெற்றது.. இதில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  பிரதிநிதிகள் மற்றும் அல்ஜீரியா, ஓமன், பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈராக், மாலி மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசு நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். குர்ஆன் மற்றும் கையெழுத்துப் பிரதி பாரம்பரியம் சார்ந்த பல திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் அடங்கும். இவற்றில் "செயற்கை நுண்ணறிவு, பண்டைய கையெழுத்துப் பிரதிகளை வாசிப்பதற்கான டிஜிட்டல் திறவுகோல்" ஆகியவை அடங்கும்.

கையெழுத்துக் கலை மரபுகள் மீட்பு : 

உஸ்பெகிஸ்தான் தற்போது தனது கையெழுத்துக் கலை மரபுகளை நிறுவன ரீதியாக மீட்டெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் முயற்சியால் உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய நாகரிக மையத்தில் நிறுவப்பட்ட கையெழுத்துக் கலைப் பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி துலுத்,  நஸ்க், நஸ்தாலிக், ருகா, திவானி மற்றும் கூஃபி போன்ற பாரம்பரிய கையெழுத்துக் கலை வடிவங்களைக் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளது. சமர்கண்ட் பிராந்தியத்தில் உள்ள புதிய இமாம் புகாரி வளாகத்திலும் கையெழுத்துக் கலைக்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது. இத்தொகுப்பின் 'இவான்'  எனப்படும் வளைவு முகப்புகளும் சுவர்களும், "சஹீஹ் புகாரி" நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஹதீஸ்களைக் கொண்ட கல்வெட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இமாம் புகாரி சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹதீஸ் ஆய்வுகளுக்கான பள்ளி ஆகியவையும் இத்தொகுப்பிற்குள்ளேயே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, August 29, 2026

புதிய எல்லைகளைத் திறக்கும் தாயிஃப் மலைகள்....!

 "இயற்கையை ஆராய்வதற்கான புதிய எல்லைகளைத் திறக்கும் தாயிஃப் மலைகள்"

இஸ்லாமிய வரலாற்றில் தாயிஃப் நகருக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் இருந்து வருகிறது.  ஏக இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் கடுமையான துயரங்களைச் சந்தித்த துக்க ஆண்டில் (நபித்துவத்தின் 10-ஆம் ஆண்டு, கி.பி. 619), இஸ்லாமியப் பிரசாரத்திற்காக மக்காவிலிருந்து சுமார் 60 முதல் 70 மைல் தொலைவில் உள்ள தாயிஃப் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். தாயிஃப் நகரின் தலைவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் அதனை மறுத்ததுடன், கேலி செய்து ஊரை விட்டுத் துரத்தினர். நகரின் சிறுவர்களையும் குண்டர்களையும் ஏவிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கல் எறிந்து விரட்டினர். இதில் நபிகளாரின் உடல் காயமடைந்து இரத்தம் கசிந்தது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயங்களுடன் ஒரு திராட்சைத் தோட்டத்திற்குள் தஞ்சம் புகுந்தார். அங்கே இறைவனிடம் மிகவும் உருக்கமாகப் பிரார்த்தனை செய்தார்.  

அப்போது, மலைகளுக்குப் பொறுப்பான மலக்கு (வானவர்), தாயிஃப் நகரை இரண்டு மலைகளுக்கு இடையில் நசுக்கி அழித்துவிடுவதாகக் அனுமதி கேட்டார். அதனை மறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "வேண்டாம். இவர்களின் சந்ததியிலிருந்து ஏக இறைவனை வணங்குபவர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறிப் பொறுமையைக் கடைப்பிடித்தார். அந்தத் தோட்டத்தின் உரிமையாளர்கள் அனுப்பிய 'அத்தாஸ்' என்ற கிறிஸ்தவ ஊழியர் நபிகளாருக்குத் திராட்சைப் பழம் வழங்கினார். நபிகளார் "பிஸ்மில்லாஹ்" என்று கூறியதைக் கேட்டு வியந்த அத்தாஸ், நபிகளாருடன் உரையாடி இஸ்லாத்தைத் தழுவினார்.இந்தப் பயணம் கடுமையான சோதனைகளைக் கொண்டிருந்தாலும், நபியவர்களின் எல்லையற்ற பொறுமை, மன்னிக்கும் குணம் மற்றும் இறைநம்பிக்கையை உலகிற்குப் பறைசாற்றிய வரலாற்று நிகழ்வாக அமைந்தது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க தாயிஃப் நகரம் தற்போது உலக சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அங்க ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களம் :

உள்ளூர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள், தாயிஃப் மலைகளுக்கு அப்பகுதியின் இதமான வானிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுக்காக மட்டும் வருவதில்லை. சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் முதல் காடுகள் மற்றும் பாறை அமைப்புகள் வரை பரந்து விரிந்த நிலப்பரப்பின் காரணமாக, இந்த மலைகள் சாகசம் மற்றும் ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களமாக மாறியுள்ளன. உள்நாட்டு சுற்றுலாவின் வளர்ச்சி மற்றும் வெளிப்புற அனுபவங்களில் அதிகரித்து வரும் ஆர்வத்தால், இந்த ஆளுநரகம் சாகசம், இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு இடமாக உருவெடுத்து வருகிறது.

தாயிஃப் இராச்சியத்தின் மிக முக்கியமான சாகச இடங்களில் ஒன்றாகத் திகழச் செய்யும் அசாதாரணமான குணங்களைக் கொண்டுள்ளதாக ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப் கூறி மகிழ்ச்சி அடைகிறார்.  அதன் இயற்கை பன்முகத்தன்மை, பல்வேறு நிலைகளில் உள்ள பார்வையாளர்களுக்கு ஏற்ற அனுபவங்களை வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.  அல்-ஷஃபா அதன் உயர்நிலங்கள், இயற்கைக் காடுகள் மற்றும் பரந்த காட்சிகளால் தனித்து நிற்கிறது என்றும், அதே சமயம் அல்-ஹதா மலைப்பாங்கான நிலப்பரப்பு, சரிவுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகளை ஒருங்கிணைக்கிறது என்றும் அல்-ஷரீஃப் வியப்பு அடைகிறார். 

தனித்துவமான அனுபவம் :

பாறை அமைப்புகள், தாவரப் பன்வகைமை மற்றும் அமைதியுடன் கூடிய அல்-மகாதா பள்ளத்தாக்கு, அர்தா பள்ளத்தாக்கு மற்றும் தி கசல் பள்ளத்தாக்குடன் சேர்ந்து, ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது. மேலும், டாக்கா மலை அதன் உயரம், குளிர்ச்சியான காலநிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுடன் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இதன் காரணமாக இந்த ஆளுநரகம், சாகசம், இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு சுற்றுலாத் தலமாக உருவாகி வருகிறது.

==================

"சுற்றுலாப் பயணிகள் தாயிஃப் மலைகளுக்கு அப்பகுதியின் இதமான வானிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுக்காக மட்டும் வருவதில்லை. சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் முதல் காடுகள் மற்றும் பாறை அமைப்புகள் வரை பரந்து விரிந்த நிலப்பரப்பின் காரணமாக, இந்த மலைகள் சாகசம் மற்றும் ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களமாக மாறியுள்ளன"

==================

சாகசம் என்பது மிகவும் கடினமான பாதைகளில் செல்வது அல்ல. மாறாக ஒருவரின் உடல் திறன்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தைத் தேர்ந்தெடுத்து, நன்கு தயாராக இருப்பதே ஆகும். சவூதி விஷன் 2030-இன் இலக்குகளுடன், உள்நாட்டு சுற்றுலாவில் அதிகரித்து வரும் ஆர்வமும் வெளிப்புறச் செயல்பாட்டுக் கலாச்சாரத்தின் பரவலுக்குப் பங்களித்துள்ளது. எனவே தான், சாகச விளையாட்டுகளின் ஆர்வலரான சவூத் மக்ராபி, தாயிஃப் சாகசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுற்றுலாத் தயாரிப்பை உருவாக்க ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது என்று உறுதியாக நம்புகிறார். குறிப்பாக, பல சுற்றுலாப் பயணிகள் இப்போது வெறுமனே சுற்றிப் பார்ப்பதை விட, அனுபவங்களைத் தேடுகிறார்கள்.

எனவே, பாதைகளை மேம்படுத்துதல், அவற்றின் சிரம நிலைகள் குறித்த தெளிவான தகவல்களைக் காட்சிப்படுத்துதல், வழிகாட்டிகளைத் தகுதிப்படுத்துதல், மற்றும் அந்த இடங்களுக்கு அருகில் போக்குவரத்து, உபகரண வாடகை, விருந்தோம்பல், சிற்றுண்டிச்சாலைகள் போன்ற துணைச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் உள்ளூர் சுற்றுலா வழங்குநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என மக்ராபி ஆலோசனை தெரிவிக்கிறார். 

சாகசச் சுற்றுலா மூலம் அனுபவம் :

சாகசச் சுற்றுலா என்பது கட்டாயம் அதிக ஆபத்து நிறைந்த செயல்பாடுகளைக் குறிப்பதல்ல. குடும்பங்கள், இளைஞர்கள், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் அனுபவங்களை வடிவமைக்க முடியும். இது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, உள்ளூர் முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் பெருக்குகிறது.

எந்தவொரு சாகச அனுபவத்திற்கும் பாதுகாப்பே அடிப்படை. இதற்காக, சுற்றுலாப் பயணிகள் தங்கள் திறனுக்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுப்பது, வழிகாட்டி அல்லது அனுபவம் வாய்ந்த குழுவின் உதவியை நாடுவது, பொருத்தமான காலணிகள் மற்றும் ஆடைகளை அணிவது, தண்ணீர், சிற்றுண்டி மற்றும் முதலுதவிப் பெட்டியை எடுத்துச் செல்வது, வானிலை நிலவரத்தைக் கவனிப்பது, தாங்கள் செல்லும் பாதையை மற்றவர்களுக்குத் தெரிவிப்பது மற்றும் கைபேசியில் போதுமான அளவு சார்ஜ் இருப்பதை உறுதி செய்வது போன்றவற்றைச் செய்ய  வேண்டும். 

குறிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே பயணிப்பது, குப்பைகளை விட்டுச் செல்லாமல் இருப்பது மற்றும் தாவரங்கள் அல்லது வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அனுபவசாலிகள் வலியுறுத்துகிறார்கள். இப்பகுதியில் குப்பைகளை வீசுதல், அதிகப்படியான மரங்களை வெட்டுதல், அனுமதியற்ற இடங்களில் தீ மூட்டுதல் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுதல் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. அதேவேளையில், "நீங்கள் வந்தபோது இருந்ததை விட அந்த இடத்தை இன்னும் சிறப்பாக விட்டுச் செல்லுங்கள்" என்ற கலாச்சாரத்தைப் பரப்புவதன் மூலமும், இடங்களைச் சுத்தம் செய்வதற்கான தன்னார்வ முயற்சிகளில் பங்கேற்பதன் மூலமும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இந்தப் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

சாகசச் செயல்பாடுகளால் ஏற்படும் வளர்ந்து வரும் பொருளாதாரத் தாக்கத்தையும் ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப் சுட்டிக்காட்டினார். உள்ளூர் கைவினைஞர்களுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுலா வழிகாட்டுதல், விருந்தோம்பல், கிராமப்புற தங்கும் விடுதிகள், போக்குவரத்து மற்றும் உபகரணங்கள் வாடகைக்கு விடுதல் போன்ற துறைகளையும் இவை ஆதரிக்கின்றன.  உடல் செயல்பாடுகளுடன் நாட்டின் சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கும் முயற்சியை இணைக்கவும், ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான முறையில் அந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சமூகத்தை ஊக்குவிக்கவும் 'ஃபஜ்ர் ஹைகிங் குழு' இந்தச் சுற்றுலா மற்றும் மலையேற்ற முன்னெடுப்பைத் தொடங்கியதாக ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப்  கூறி மகிழ்ச்சி அடைகிறார்.  இத்துறையில் 'தாயிஃப்' நகரின் வெற்றியானது, அப்பகுதியின் இயற்கை அழகிற்குப் பொருத்தமான வகையில் "முறையான மற்றும் நிலையான அனுபவங்களை" உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது என்று மலையேற்றக்குழுவினர் நம்புகின்றனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்