Saturday, May 23, 2026

சரியான முடிவு....!

 நம்முடைய வாழ்க்கை 

நன்றாக இருப்பதற்கு 

எந்த அதிசயமும் நடக்கத் தேவையில்லை. 

நாம் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருந்தால் மட்டும் போதுமானது. 

தவறான முடிவுகள் எடுத்தாலும் 

அதன்மூலம் படிப்பினை பெற்று 

சரியான பாதையில் பயணிக்க 

தொடங்கிவிட வேண்டும்.



மாணவிக்கு பரிசு...!

 மகிழ்ச்சியான தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த, முஸ்லிம் மாணவி ஆயிஷா தஸ்னீம் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.



Your Message....!

 Your life is your message to the world. 

Make sure it's inspiring.




Friday, May 22, 2026

பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை....!

" பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை "

 உயர்கல்வியில் சாதிக்க விரும்பும் இளம் முஸ்லிம் மாணவி ஆயிஷா தஸ்னீம்....! 

- ஓர் சிறப்பு நேர்காணல் -

பல்வேறு நெருக்கடிகள், சவால்களுக்கு மத்தியில் இந்திய முஸ்லிம் மாணவ மாணவியர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்தி, அதில் சாதித்தும் வருகிறார்கள். கல்வி என்ற ஆயுதம் மூலம் வாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், துணிச்சலுடன் அவர்கள் கல்வியில் தங்களது கவனத்தை செலுத்தி, அதில் வெற்றிகரமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். 

பள்ளிக்கல்வியை தொடர்ந்து உயர்கல்வியிலும் அவர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. அதன் காரணமாக பாசிச அமைப்புகள் கொடுக்கும் சவால்களுக்கு மத்தியில் கூட, முஸ்லிம் மாணவ மாணவியர், கல்வியை ஒரு மிகப்பெரிய ஆயுதமாக கருதி, அதில் தங்களது கவனத்தை செலுத்தி, சாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் அண்மையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், ஏராளமான முஸ்லிம் மாணவ மாணவியர் அதிகளவு மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். 

இப்படி, பலர் சாதித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு முஸ்லிம் மேனிலைப்பள்ளியில் படித்த மாணவி ஆயிஷா தஸ்னீம், 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். சாதாரண ஒரு தையற்கலைஞரின் மகளான இவர், கல்வியில் மிகப்பெரிய அளவுக்கு பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர். எனினும், கல்வியின் மூலம் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இளம் மாணவி ஆயிஷா தஸ்னீமுக்கு ஏற்பட்டதால், அதில் முழு கவனம் செலுத்தி 10வது வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று, தம்முடைய குடும்பத்தை மட்டுமல்லாமல், முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஆயிஷா தஸ்னீம் பெருமை சேர்த்துள்ளார். 

சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீமை மணிச்சுடர் நாளிதழ் நிர்வாகம் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது சிறப்பு நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்பியது. அதன்படி, சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீமை நேரில் சந்தித்து அவரது கல்வி ஆர்வம் குறித்து விவரங்களை சேகரித்தார். அந்த சிறப்பு நேர்காணலின் முழு விவரம் இதோ :

தையற் கலைஞரின் மகள் :

என்னுடைய தந்தை காஜா மொய்தீன் ஒரு சாதாரண தையற் கலைஞர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த சாலையூர் எங்களது பூர்வீகம். ஆனால், நாங்கள் சென்னை வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது நாங்கள் சென்னைவாசிகளாக வாழ்ந்து வருகிறோம். என்னுடைய தாய் டியூஷன் சென்டர் நடத்தி மாணவ மாணவியர்களுக்கு டியூஷன் கற்றுத் தருகிறார். என்னுடைய மூத்த சகோதரர் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.பி. படிப்பு படித்து வருகிறார். 

எனக்கு எப்போதும் கல்வியில் அதிக ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், என்னுடைய தாய் டியூஷன் சென்டர் நடத்தி, மாணவ மாணவியருக்கு கல்வி சொல்லி தந்து வருவது என்னுள் ஒரு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நான் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினேன். 

முறையான பயிற்சியின் மூலம் வெற்றி :

சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால், ஒரு மனிதன் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று சொல்வார்கள். அந்த வகையில் நானும் தொடர்ந்து முறையான பயிற்சியில் ஈடுபட்டேன். 10ஆம் வகுப்பு தேர்வுக்காக சரியான திட்டமிடல் செய்து பாடங்களை படித்து வந்தேன். பாடங்களில் ஏதாவது சந்தேகம் வந்தால், என்னுடைய தாயிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்வேன். காலை பஜர் தொழுகைக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு மணி நேரம் பாடங்களை படிப்பதை வழக்கமாக கொண்டேன். இதேபோன்று, இரவு 10 மணி வரை பாடங்களில் கவனம் செலுத்தினேன். 

சமூக வலைத்தளங்கள் பக்கம் என்னுடைய கவனம் செல்லவில்லை. அப்படி செல்வதை நானும் விரும்பவில்லை. என்னுடைய பெற்றோரும் அதை ஊக்கவிக்கவில்லை. இதன் காரணமாக என்னுடைய முழு கவனமும் படிப்பில் மேல் மட்டுமே இருந்தது. அதனால், நான் படித்த அனைத்தும் என்னுடைய நினைவில் அசைப்போட்டுக் கொண்டே இருந்தது. இதனால் 10ஆம் வகுப்பு தேர்வின்போது, நான் அனைத்து பாடங்களிலும் நன்றாக தேர்வு எழுதினேன். 10ஆம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றாலும், தமிழ் பாடத்தில் 100க்கு நூறு மதிப்பெண்கள் கிடைக்காமல், 98 மதிப்பெண்கள் மட்டுமே எனக்கு கிடைத்தது. அதனால் எனக்கு கொஞ்சம் மன வருத்தம் இருக்கவே செய்கிறது. எனினும், பிற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று அதன்மூலம் என்னுடைய குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரோல் மாடலாக அப்துல் கலாம்  :

எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது. என்னுடைய ரோல் மாடலாக மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை எடுத்துக் கொண்டு, அவரது வழியை பின்பற்றி நான் கல்வியில் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறேன்.  கலாம் அய்யா அவர்களின் அறிவியல் ஞானம், அவரது திறமை மற்றும் பேச்சாற்றால் ஆகியவற்றை கண்டு நான் வியந்து இருக்கிறேன். என்னுடைய கல்வி ஆர்வத்தை அறிந்துகொண்ட என்னுடைய பள்ளி தலைமை ஆசிரியை கண்மணிபிரியா மற்றும் பிற ஆசிரியைகள் அனைவரும் எனக்கு நன்கு ஊக்கப்படுத்தி, கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை தொடர்ந்து ஏற்படுத்தினர். இதனால் எனக்கு கல்வியில் தேசிய அளவில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. 

                                                ==================

"காலை பஜர் தொழுகைக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு மணி நேரம் பாடங்களை படிப்பதை வழக்கமாக கொண்டேன். இதேபோன்று, இரவு 10 மணி வரை பாடங்களில் கவனம் செலுத்தினேன். சமூக வலைத்தளங்கள் பக்கம் என்னுடைய கவனம் செல்லவில்லை. அப்படி செல்வதை நானும் விரும்பவில்லை. என்னுடைய பெற்றோரும் அதை ஊக்கவிக்கவில்லை"

                                                ==================

10வது வகுப்பு தேர்வுக்கு நான் தயாராகும்போது, ஒவ்வொரு தேர்வின்போது, நான் மற்றும் பிற மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை ஆசிரியைகள் திருத்தி, அதில் நம்முடைய பிழைகள் குறித்தும், அதிக மதிப்பெண்கள் பெற எந்தவகையில் விடைகளை எழுத வேண்டும் என்றும் நமக்கு விளக்கம் அளிப்பார்கள். இந்த விளக்கங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் இருந்தது. ஒவ்வொரு பாடத்திலும் மாணவிகள் எப்படி கவனம் செலுத்தி தேர்வு எழுத வேண்டும் என்று ஆசிரியைகள் நமக்கு சொல்லி தந்தார்கள். உண்மையில் இவை அனைத்தும் நான் அதிகளவு மதிப்பெண்கள் பெற ஒரு காரணம் என்று உறுதியாக கூறவேன். 

நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் :

எனக்கு மருத்துவராக வர வேண்டும் என்ற விருப்பம் மற்றும் கனவு இருப்பதால், நீட் தேர்வில் நான் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் காரணமாக, தற்போதே அதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன். இந்த முயற்சியில் என்னுடைய தாய் மற்றும் தந்தை எனக்கு துணையாக இருந்து வருகிறார்கள். அத்துடன் நான் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பிற ஆசிரியைகள் கூட, என்னுடைய மருத்துவர் கனவுக்கு தீனி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நல்ல ஆலோசனைகள் தந்துகொண்டிருக்கிறார்கள். இதனால், நான் நிச்சயம் நீட் தேர்வில் தேசிய அளவில் சாதனை புரிவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

என்னுடைய இந்த வெற்றிக்கும் அதிகளவு மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்ததற்கும், ஏக இறைவனின் அருள் மட்டுமே காரணமாகும். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் நாம் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியை தரும் என்பதற்கு என்னுடைய வெற்றி ஒரு காரணம் என்றே கூறுவேன். தொடர் முயற்சிகள், தொடர் பயிற்சிகள், தொடர்ந்து சிந்தனைகள், தொடர் படிப்பு என தொடர்ச்சியாக நாம் முயற்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்துவிட்டு, முயற்சிகள் செய்யாமல் இருந்தால், நிச்சயம் பலன் கிடைக்காது. நம்பிக்கையுடன் முயற்சிகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அப்படி நான் தொடர்ந்து முயற்சி செய்ததால், தற்போது நல்ல மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. நிச்சயம் நீட் தேர்விலும் நான் சாதனை புரியும் அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும் என்று ஏக இறைவன் மீது நம்பிக்கை வைத்து கூறிக் கொள்கிறேன். 

மாணவிக்கு வழங்கப்பட்ட கவுரவம் :

சென்னை அரசு மேனிலைப்பள்ளியில் படித்து 10வது வகுப்பில் தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்து மாணவி ஆயிஷா தஸ்னீமுக்கு சென்னையில் உள்ள  ஆர்மோனி ரெஸிடென்ட்ஸ் அஸோஸிஸன் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமூக ஆர்வலர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள், ஊடகத் தோழர்கள், மகளிர் அமைப்பினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீமுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஊக்கத் தொகை, பரிசுப் பொருட்கள் என ஆயிஷா தஸ்னீமுக்கு வழங்கப்பட்டது. மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், தாம் எழுதிய, உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி மற்றும் இந்திய முஸ்லிம்கள் பாகம் - 1, ஆகிய இரண்டு நூல்களை வழங்கி தம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீமுக்கும் அளிக்கப்பட்ட இந்த கவுரவம் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்காக ஆர்மோனி ரெஸிடென்ட்ஸ் அஸோஸிஸன் தலைவர் முஹம்மது சிராஜுத்தீன், செயலாளர் சையத் சாதிக் மொய்தீன் மற்றும் பிற நிர்வாகிகள்  மேலும் விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஒத்துழைப்பு மற்றும் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்ட வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி ஆகிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். கல்வியில் சாதிக்கும் மாணவ மாணவியருக்கும் இதுபோன்ற அமைப்புகள் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்க வேண்டும். அப்போது தான் மாணவ மாணவியருக்கு புதிய ஆர்வம் பிறக்கும். 

அந்த வகையில் தமக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழா மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீம் மகிழ்ச்சி தெரிவித்தார். 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்து மாணவி ஆயிஷா தஸ்னீமை வாழ்த்தியதுடன், அவரது மருத்துவர் கனவு நிறைவே ஏக இறைவனிடம் துஆ செய்துவிட்டு நாம் விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

உங்கள் மதிப்பு...!

உங்கள் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான். உங்களை சுற்றி இருப்பவர்கள் அல்ல. யாரிடம் வேண்டுமானாலும் இறங்கி போங்கள். ஆனால் உங்களை வேண்டாம் என ஒதுக்குபவர்களிடம் ஒரு துளியேனும் இறங்கி போகாதீர்கள்.



அறிமுகமான நூல்கள்...!

மகிழ்ச்சியான தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை ஊடகத் தோழர் ANI திவ்ய விக்னேஷ் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.



Thursday, May 21, 2026

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம்....!

தமிழ்நாடு அமைச்சரவையில் ஏ.எம்.ஷாஜஹான் பொறுப்பு ஏற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம்....!

சிராஜுல் மில்லத்தின் மூத்த மகன் ஏ.எஸ்.அப்துல் ஹமீது பாகவி வாழ்த்து....!

சிங்கப்பூர், மே 22- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று இருப்பது, லீகின் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் என்று சிராஜுல் மில்லத்தின் மூத்த மகன் ஏ.எஸ்.அப்துல் ஹமீது பாகவி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பிடித்து, அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் என்ற பொறுப்பை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஷாஜஹான் ஏற்றுக் கொண்டுள்ளார். 

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகித்துள்ளது குறித்து, மணிச்சுடர் நிறுவனர் மர்ஹும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்களின் மூத்த மகன் ஏ.எஸ்.அப்துல் ஹமீது பாகவி எழுதியுள்ள பாராட்டு மற்றும் வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு :

கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் :

நமது சகோதரர் ஷாஜஹான், மாண்புமிகு ஆளுநரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, "அஸ்ஸான்ஷா ஷாஜஹான் எனும் நான்..." என்று கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான உறுதிமொழியை ஏற்கத் தொடங்கியபோது, ​​என் கண்களிலிருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

அல்ஹம்துலில்லாஹ்! எத்துணை பெருமைமிக்க ஒரு தருணம் இது! சுதந்திர இந்தியாவின் முஸ்லிம் லீக்கை நிறுவிய காயிதே மில்லத் அவர்களும், அவரைத் தொடர்ந்து வந்த சிராஜுல் மில்லத் அவர்களும் ஒரு கனவு கண்டிருந்தார்கள். முஸ்லிம் லீக் ஆட்சி அதிகாரத்தின் ஒரு அங்கமாகத் திகழ வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மக்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டு, அவர்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட முடியும் என்பதே அந்தக் கனவாகும். 

முனிருல் மில்லத் தலைமையில் கிடைத்த பெருமை :

எல்லாம் வல்ல அல்லாஹ், முனிருல் மில்லத் அவர்களின் தலைமையின் கீழ் அந்த அரிய வாய்ப்பை நமக்கு இப்பொழுது வழங்கியுள்ளான். எல்லாம் வல்ல அல்லாஹ் சில சமயங்களில், நாம் கேட்காமலேயே தனது அருட்கொடைகளை வாரி வழங்குகிறான். சில மாதங்களுக்கு முன்பு முனிருல் மில்லத் அவர்கள் ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்தபோது, ​​அதன் ஒரே நோக்கம் நமது வேட்பாளர்கள் இருவரும் வெற்றிபெற வேண்டும் என்பதை உறுதி செய்வதாக மட்டுமே இருந்தது. அது ஒவ்வொரு முஸ்லிம் லீக் தொண்டரின் இதயத்திலும் கோடிக்கணக்கான பிரார்த்தனைகளைச் சுமந்துகொண்டு எழுந்த, மிகவும் எளிமையானதும், உளப்பூர்வமானதுமான ஒரு முயற்சியாக அமைந்திருந்தது. அந்தப் பிரார்த்தனைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, முனிருல் மில்லத் அவர்களின் தலைமையின் கீழ் நமக்கு ஒரு 'மூன்று மடங்கு போனஸை' (Triple Bonus) பரிசாக அளித்துள்ளான். 

துணிச்சலான முடிவால் அமைச்சரவையில் இடம் :

நமது வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கேரளாவிலும் வெற்றி வாகை சூடியுள்ளனர். கேரளாவில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம், பத்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு முஸ்லிம் லீக் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்குத் திரும்பியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, வெறும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக வெளியே ஒதுங்கி நிற்காமல், முனிருல் மில்லத் அவர்கள் எடுத்த துணிச்சலான மற்றும் யதார்த்தமான முடிவின் விளைவாக, நமது உறுப்பினர் ஷாஜஹான் அவர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறும் பெருமையைப் பெற்றுள்ளார். 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே! நாங்கள் பணிவுடன் எங்கள் கரங்களை உயர்த்தி, உனது வழிகாட்டுதலை வேண்டுகிறோம். ஷாஜஹான் அவர்கள் வரலாற்றைப் படைத்துள்ளார்.  நமது அன்பிற்குரிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்று, மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர் நமக்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் ஏ.எஸ்.அப்துல் ஹமீது பாகவி தெரிவித்துள்ளார். 

சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்