Tuesday, May 5, 2026

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இ.யூ.முஸ்லிம் லீக் வெற்றி....!

கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது

ஐக்கிய முற்போக்கு கூட்டணி....! 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை..!

தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி உள்ளிட்டோர் வெற்றி.!

தமிழ சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி...!

 - தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து -

சென்னை, மே.05- நடந்துமுடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளது. 

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 100 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 27 தொகுதிகளில் 22 தொகுதிகளை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 

இ.யூ.முஸ்லிம் லீக் வெற்றிபெற்ற தொகுதிகளின் விவரம் :

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக், 22 இடங்களை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது. அதன்படி, மஞ்சேஷ்வர்  தொகுதியில் ஏ.கே.எம். அஷ்ரப், காசர்கோடு தொகுதியில் ல்லட்ரா மஹின், குட்டியாடி தொகுதியில் பாறக்கல் அப்துல்கலாமசேரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோன்று, பெரம்ப்ரா தொகுதியில் வழக்கறிஞர்  பாத்திமா தாஹிலியா, கோழிக்கோடு தெற்கு தொகுதியில் வழக்கறிஞர் ஃபைசல் பாபு

குன்னமங்கலம் தொகுதியில்,எம்.ஏ. ரசாக் மாஸ்டர், கொடுவள்ளி தொகுதியில், பி கே ஃபிரோஸ், திருவம்பாடி தொகுதியில் சி கே காசிம், கொண்டோட்டி தொகுதியில் டி.பி. அஷ்ரபாலி,ஈரநாடு பி.கே. பஷீர், மஞ்சேரி தொகுதியில், வழக்கறிஞர்  எம். ரஹ்மதுல்லா, பேரிந்தல்மன்னா தொகுதியில் எல் நஜீப் காந்தபுரம் ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர். 

மேலும், மாங்காடா தொகுதியில் மஞ்சளாம்குழி அலி, மலப்புரம்  தொகுதியில், பி.கே.குஞ்ஞாசலி குட்டி,வென்காரா தொகுதியில் கே.எம்.சாஜி, வள்ளிக்குன்னூ தொகுதியில், டி.வி.இப்ராஹிம்,  திருரங்கடி தொகுதியில் பி.எம்.ஏ சமீர், தனுர் தொகுதியில் பி கே நவாஸ், திரூர் தொகுதியில், குருக்கோலி மொய்தீன், கோட்டக்கல் தொகுதியில், பேராசிரியர் ஆபித் ஹுசைன் தங்ஙள், மன்னார்காடு தொகுதியில்,  வழக்கறிஞர் என். சம்சுதீன், களமச்சேரி தொகுதியில் வழக்கறிஞர்  வி இ அப்துல் கஃபூர் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். 

தமிழகத்தில் 100 சதவீத வெற்றி :

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற இ.யூ.முஸ்லிம் லீக்,வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மொத்தம் 73 ஆயிரத்து 181 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க.வேட்பாளர் சையத் புர்ஹானுதீனை 2 ஆயிரத்து 982 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இதேபோன்று பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லீம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான் மொத்தம் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க.வேட்பாளர் அசாருத்தீன் உஸ்மான் அலியை ஆயிரத்து 65 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். 

தேசிய தலைவர் வாழ்த்து :

கேரளா மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அனைவருக்கும், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்  தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கேரளாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக், போட்டியிட்ட 27 தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது, இயக்கத்திற்கு பெருமை அளிக்கிறது. கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி உள்ளிட்ட 22 பேருக்கும் ஏக இறைவனின் அருள் கிடைக்க துஆ செய்வதாகவும், கேரள மாடலை பின்பற்றி நாடு முழுவதும் இ.யூ.முஸ்லிம் லீக் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்று வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோர் வெற்றி பெற்று, 100 சதவீத வெற்றியை ஈட்டி இருப்பது, இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு அமைப்புக்கு கிடைத்த பெருமை என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 17வது சட்டப்பேரவையில் இனி இ.யூ.முஸ்லிம் லீகின் குரல் ஒலிக்கும். சமுதாய பிரச்சினைகள் குறித்து, சமூக நலன்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இ.யூ.முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு பேரும் சிறப்பான முறையில் குரல் எழுப்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றிபெற துணையாக இருந்த திமுக தலைவர் மு.கஸ்டாலின், தோழமை கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள அனைவரது பணிகளும் சிறக்க ஏக இறைவனின் அருள் கிடைக்க துஆ செய்வதாகவும் தம்முடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Monday, May 4, 2026

இந்தோனேஷிய ஹஜ் பயணியின் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை....!

 பல ஆண்டு கனவுகளுக்குப் பிறகு நிறைவேறிய புனித ஹஜ் பயணம்..!

இந்தோனேஷிய ஹஜ் பயணியின் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை....!!

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாக ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. இதற்காக அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். நாள்தோறும் துஆ கேட்கிறார்கள். தற்போது 2026ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் காலம் தொடங்கியுள்ளதால், புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்தாண்டு சுமார் 30 லட்சம் பேர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் பல ஆண்டு கனவுகளுக்குப் பிறகு இந்தோனேஷியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் புனித ஹஜ் கனவு இந்தாண்டு நிறைவேறயுள்ளது. அந்த ஹஜ் பயணியின் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதையை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம், நம்மிடமும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். அந்த ஆவல் மூலம் புதிய வழிகள் திறக்கும்.  

ஹஜ் யாத்திரை செய்ய வேண்டும் என கனவு :

இந்தோனேஷியாவின் மக்காசர் பகுதியைச் சேர்ந்தவர் கைரியா பின்ட் முஹம்மது பக்ரி. இவருக்கு தம்முடைய வாழ்நாளில் புனித ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்து, பிறகு அது கனவாக மாறியது. எனவே, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஹஜ் யாத்திரை செய்ய வேண்டும் என்ற ஒரே, அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தார். வடக்கு மலுக்குவைச் சேர்ந்த இந்த இந்தோனேசிய யாத்ரீகர், 2013-ல் முதன்முதலில் இந்தக் கனவை வளர்த்தெடுத்தார். பல ஆண்டுகளாக அவர் இதை ஒரு சுமையாகக் கருதாமல், பொறுமை, பிரார்த்தனை மற்றும் தெய்வீக நேரத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு ஆன்மீகப் பயணமாகவே கொண்டிருந்தார்.

இப்போது அந்த கனவு நிறைவேறி, ​​அவர் இந்தாண்டு புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகும்போது, ​​அந்த நீண்ட காத்திருப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார். சவூதி அரேபியாவின் மக்கா வழித்தட முன்னெடுப்பின் கீழ் நெறிப்படுத்தப்பட்ட நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட ஓர் அனுபவம் இந்தோனேஷிய பயணிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஹஜ் பயணத் திட்டம் :

சவூதிஅரேபியாவின் இந்தத் திட்டம் ஹஜ் பயணத்தை மாற்றியமைத்துள்ளது என்றும், இது யாத்ரீகர்கள் புறப்படுவதற்கு முன்பே முக்கிய நடைமுறைகளை முடிக்கவும், சவூதி அரேபியாவிற்கு வந்தவுடன் ஏற்படும் நீண்ட செயல்முறைகளைத் தவிர்க்கவும் அனுமதிக்கிறது என்றும் கைரியா மகிழ்ச்சியுடன் கூறுகிறார். "இந்த பயணத் திட்டம் மன அமைதியுடன் எங்கள் சடங்குகளைத் தொடங்க அனுமதிக்கிறது. மேலும், இது, ஹஜ்ஜின் ஆன்மீக நோக்கத்தின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் சோர்வைப் போக்கும் ஒரு செயல்முறை திட்டம்" என்று அவர் மேலும் விவரித்து மகிழ்ச்சி அடைகிறார்.

இந்தோனேசியாவில் உள்ள சுல்தான் ஹசனுதீன் சர்வதேச விமான நிலையத்தில், அவர் புறப்படத் தயாராக இருந்தபோது, யாத்ரீகர்களின் பயணம் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய சவூதி குழுக்கள் அங்கு பணியாற்றி வந்தன. யாத்ரீகர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே கடவுச்சீட்டு கட்டுப்பாடு, சுங்கம் மற்றும் பயணப் பெட்டிகளைக் கையாளுதல் உள்ளிட்ட நுழைவு நடைமுறைகளை முடித்துவிடுகின்றனர். இது, அவர்கள் வந்தவுடன் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள தங்கள் தங்குமிடங்களுக்கு நேரடியாகச் செல்ல வழிவகுக்கிறது.

                                                                 =====================

"சவூதிஅரேபியாவின் ஹஜ் பயணத் திட்டம் ஹஜ் பயணத்தை மாற்றியமைத்துள்ளது. இது யாத்ரீகர்கள் புறப்படுவதற்கு முன்பே முக்கிய நடைமுறைகளை முடிக்கவும், சவூதி அரேபியாவிற்கு வந்தவுடன் ஏற்படும் நீண்ட செயல்முறைகளைத் தவிர்க்கவும் அனுமதிக்கிறது. இந்த பயணத் திட்டம் மன அமைதியுடன் ஹஜ் சடங்குகளைத் தொடங்க அனுமதிக்கிறது. மேலும் இது, ஹஜ்ஜின் ஆன்மீக நோக்கத்தின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் சோர்வைப் போக்கும் ஒரு செயல்முறை திட்டமாகும்"

=====================

இந்த அமைப்பு, சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் முதுகெலும்பைச் சார்ந்துள்ளது. இது, செயல்முறை முழுவதும் துல்லியத்தையும் செயல்திறனையும் பராமரிக்க செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளையும் மேம்பட்ட சாதனங்களையும் பயன்படுத்துகிறது. புறப்படும் அரங்குகளில் இருந்து புனித நகரங்களுக்கு யாத்ரீகர்கள் தடையின்றி செல்வதை உறுதிசெய்ய, தொழில்நுட்பக் குழுக்கள் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகின்றன.

ஹஜ் பயணிகள் மகிழ்ச்சி :

இந்தோனேஷியாவின் மக்காசரிலிருந்து புறப்படும் இந்தோனேசிய யாத்ரீகர்கள் இந்த முன்னெடுப்பைப் பாராட்டி பெரிதும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைத்து, பயணத்தின் உடல் சிரமத்தைத் தணிப்பதால், அவர்கள் தங்கள் ஹஜ் கடமைகளில் கவனம் செலுத்த முடிகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தால் பல முகமைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த முன்னெடுப்பு, இந்த ஆண்டு 10 நாடுகளில் உள்ள 17 சர்வதேச துறைமுகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2017-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, இது 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான யாத்ரீகர்களுக்குச் சேவை செய்துள்ளது. இது, சவூதி அரேபியாவின் 'விஷன் 2030' சீர்திருத்தத் திட்டத்திற்கு இணங்க, ஹஜ் செயல்பாடுகளை நவீனமயமாக்குவதற்கான அதன் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஹஜ் ஒரு ஆழமான ஆன்மீக சந்திப்பு :

இருப்பினும், கைரியா பின்ட் முஹம்மது பக்ரியாவைப் பொறுத்தவரை, இந்தப் பயணம், பிற பயண ஏற்பாடுகளைத் தாண்டியது. அவர் ஹஜ்ஜை வெறும் பயணமாக மட்டும் விவரிக்காமல், அது ஒரு சங்கமத் தருணம் என்று வர்ணிக்கிறார். இதில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்கள், நம்பிக்கையாலும் நோக்கத்தாலும் பிணைக்கப்பட்டு, பொதுவான பக்தியுடன் ஒன்று கூடுகிறார்கள். "ஹஜ் ஒரு ஆழமான ஆன்மீக சந்திப்பு" என்று அவர் விவரிக்கிறார். இது உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்களால் எதிரொலிக்கப்படும் ஒரு உணர்வைப் பிரதிபலிக்கிறது.

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான புனித ஹஜ் கடமை, புனிதப் பயணமாக மாறி, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான விசுவாசிகளை சவூதி அரேபியாவிற்கு ஈர்க்கிறது, இது உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான பயண ஏற்பாடுகளில் ஒன்றாக அமைகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர்.  அவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

இந்தோனேசியா யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் நிலையில்,  அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன. இது ஒவ்வொரு பருவத்திலும் சவூதி அதிகாரிகள் நிர்வகிக்க வேண்டிய உலகளாவிய இயக்கத்தின் அளவையும் பன்முகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

அந்தப் பின்னணியில், மக்கா பாதை போன்ற முன்னெடுப்புகள், பல ஆண்டுகால நம்பிக்கையாலும் பக்தியாலும் வடிவமைக்கப்பட்ட கைரியா பின்ட் முஹம்மது பக்ரியாவின் பயணம் போன்ற பயணங்கள், வரிசைகள் மற்றும் தாமதங்களுடன் தொடங்காமல், கண்ணியம், செயல்திறன் மற்றும் அமைதி உணர்வுடன் தொடங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன்மூலம் புனித ஹஜ் பயணத்தின்போது புதிய அனுபவங்கள் ஹஜ் பயணிகளுக்கு கிடைக்கின்றன.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Positive...!

Stay positive. 

The only difference 

between a good day 

and a bad day is 

your attitude.



பொறுமை...!

பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை.

 பொறாமை ஒருபோதும் ஜெயிப்பதில்லை.

 வாழ்க்கையில் தோல்வி ஏற்படும்

 நேரங்களில் பொறுமை மிகமிக அவசியம்.



சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு வரலாற்று வெற்றிகள்...!

" தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு வரலாற்று வெற்றிகள் "

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்,  அமைதியாக நடந்துமுடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து 16வது சட்டப்பேரவையின் (2021 - 2026) பதவிக்காலம் மே 10ஆம் தேதி முடிந்து, 17வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் தொடங்கியுள்ளது. 17வது சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள், தமிழக மக்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்து அதிர்ச்சியை அளித்துவிட்டன என்றே கூற வேண்டும். 

எனினும், இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நூறு சதவீத வெற்றியை பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் திமுக அணிக்கு சாதகமாக அமையவில்லை. அதேநேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு வரலாற்று வெற்றிகளை குவித்துள்ளது. இ.யூ.முஸ்லிம் லீகின் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் கடையநல்லூர் தொகுதியில் வெற்றிபெற்று, கடந்த 15வது சட்டப்பேரவையில் உறுப்பினராக திறம்பட செயல்பட்டார். சமுதாயத்தின் பிரச்சினைகளை அதிமுக அரசு முன்பு வைத்து அதற்கு தீர்வுகளை காண முயற்சிகளை செய்தார். எனினும், மீண்டும் அவர் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டபோது வெற்றிவாய்ப்பு கிட்டவில்லை. இதனால் 16வது சட்டப்பேரவையில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதன் காரணமாக சமுதாயத்தின் குரல் பேரவையில் ஒலிக்கவில்லை. 

இரண்டு தொகுதிகளில் வாய்ப்பு :

இத்தகைய சூழ்நிலையில் 17வது சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாரம்பரியமான வாணியம்பாடி தொகுதியும், புகழ்பெற்ற பாபநாசம் தொகுதியும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டு, அங்கு முறையே எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் மற்றும் ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் தனிச் சின்னமாக ஏணி சின்னத்தில் இரண்டு பேரும் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர். 

பிரபலம் அடையாத தனிச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது பொதுத் தேர்தலில் சாதாரண விஷயம் கிடையாது. எனினும், இ.யூ.முஸ்லிம் லீகிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட, தனிச் சின்னமான ஏணி சின்னத்தில், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் ஏ.எம்.ஷாஜஹான் முழு நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இறங்கி, தீவிரமாக பிரச்சாரம் செய்து ஏணி சின்னத்தை வாக்காளர்களின் உள்ளங்களில் கொண்டு சேர்த்தனர். 

வாணியம்பாடியின் வரலாற்று வெற்றி :

இப்படி, இ.யூ.முஸ்லிம் லீகின் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்ட இரண்டு பேருக்கும் மிகப்பெரிய வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது. ஆம், உண்மையில் அது வரலாற்று வெற்றி தான். பாரம்பரியம் மிக்க வாணியம்பாடி தொகுதியில் கடந்த மூன்று சட்டப்பேரவை பொது தேர்தல்களில் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடாலும், தொடர்ந்து வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை. வாணியம்பாடி தொகுதியின் இ.யூ.முஸ்லிம் லீகின் கடைசி சட்டப்பேரவை உறுப்பினராக எச்.அப்துல் பாசித் மட்டுமே இருந்தார்.  அதன்பின்னர் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாணியம்பாடி தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிட்டது. ஆனால், தொடர்ந்து மூன்று முறையும் வெற்றிவாய்ப்பு இழந்தது. எச்.அப்துல் பாசித், எஸ்.எஸ்.பி. சையத் பாரூக், நரி முஹம்மது நயீம் ஆகிய மூன்று பேரும் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பு இழந்தனர். 

தொடர்ந்து மூன்று முறை இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிவாய்ப்பு இழந்ததால், வாணியம்பாடி தொகுதி குறித்து முஸ்லிம் லீகர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட தொடங்கியது. இனி வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடக் கூடாது என்ற பேச்சும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மத்தியில் உருவானது. ஏன் வாணியம்பாடி தொகுதி ராசி இல்லாத தொகுதி என்ற எண்ணமும் உருவானது. இத்தகைய சூழ்நிலையில் தான் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், வாணியம்பாடி தொகுதி மீண்டும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. 

தொடர்ந்து மூன்று முறை தோல்வியை சந்தித்தாலும், இந்த முறை இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நம்பிக்கையை இழக்கவில்லை. திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் உதவியுடன், தீவிரமாக தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு, ஒரு வரலாற்று வெற்றியை ஈட்டியுள்ளது. வாணியம்பாடி தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மீண்டும் போட்டியிட்ட எஸ்.எஸ்.பி.சையத் பாரூக், மொத்தம் 73 ஆயிரத்து 181 வாக்குகள் பெற்று, தம்மை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர்  சையத் புர்ஹானுதீனை 2 ஆயிரத்து 982 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார். கடந்த மூன்று பொது தேர்தல்களில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்த இ.யூ.முஸ்லிம் லீக் இந்தமுறை, வாணியம்பாடி தொகுதியில் வெற்றிபெற்று புதிய வரலாற்று சாதனையை புரிந்துள்ளது. உண்மையில் இது வரலாற்று வெற்றியாகும். வரலாறு பேசும் வெற்றியாகும். 

50 ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசத்தில் வெற்றி :

இப்படி, வாணியம்பாடி தொகுதியில் புதிய வரலாறு படைத்து வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக், பாபநாசம் தொகுதியில் கூட மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசம் தொகுதியில் இந்தமுறை இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஏ.எம்.ஷாஜஹான், போட்டியிட்டார். கடைசியாக, கடந்த 1977 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டது. அதன்பிறகு, மிகப்பெரிய அளவுக்கு பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் தம்முடைய கவனதை செலுத்தவில்லை. அதற்கு பல அரசியல் நிலைப்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் போட்டியிட்டார். இந்த தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீகின் தனிச் சின்னமான ஏணி சின்னத்தை வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது மிகவும் சவால் நிறைந்த பணியாக இருந்து வந்தது. எனினும், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து, ஏணி சின்னத்தை பாபநாசம் தொகுதி முழுவதும், கொண்டு சேர்க்க இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்புக்கு தற்போது நல்ல பலன் கிடைத்தது. 

அதன் காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான், மொத்தம் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று, தம்மை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் அசாருத்தீன் உஸ்மான் அலியை ஆயிரத்து 65 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார். உண்மையில் பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் பெற்ற இந்த வெற்றியானது ஒரு வரலாற்று வெற்றி என்றே கூற வேண்டும். 

இரண்டு வரலாற்று வெற்றிகள் :

பாரம்பரியமான வாணியம்பாடி  மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் பெற்றுள்ள இந்த வெற்றியானது, மிகப்பெரிய வரலாற்று வெற்றிகள் ஆகும். இதன்மூலம் 17வது சட்டப்பேரவையில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோர் இடம்பெற்று சமுதாயத்தின் குரலாக இருப்பார்கள். சமுதாய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்புவார்கள். 

கடந்த 16வது சட்டப்பேரவையில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் உறுப்பினர்கள் யாரும் இடம்பெறாத நிலையில், தற்போது 17வது சட்டப்பேரவையில் இரண்டு உறுப்பினர்கள் இடம்பெற்று திறம்பட தங்களது பணியை ஆற்றுவார்கள். சமுதாயத்தின் நலனின் அக்கறை செலுத்தி, சமுதாயத்தின் குரலாக ஒலிப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். 

=============================


Stupid People...!

"Never underestimate 

the power of stupid people 

in large groups."

- George Carlin



Sunday, May 3, 2026

நூல்கள் அறிமுகம்...!

 இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, ஆற்காடு தோழர் காசீம் ஷெரீப் (எ) பாபா ஹஜ்ரத் மற்றும் ஹஜ்ரத் நவாஸ் ஷெரீப் ஜமாலி ஆகியோருக்கு  வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.