உலக புகழ்பெற்ற தாயிஃப் ரோஜா:
100 ஆண்டுகால பாரம்பரிய தொழிலின் ஒரு சுவையான கதை...!
சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரம், அதன் புகழ்பெற்ற வாசனையுள்ள ரோஜாக்களுக்கு உலகப் புகழ்பெற்றது. ஆண்டுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான ரோஜாக்கள், குறிப்பாக டமாஸ்க் வகை ரோஜாக்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரோஜாக்கள் விலைமதிப்பற்ற நறுமண எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகின்றன. அதன் காரணமாக, அழகு மற்றும் நளினத்தின் சின்னமான தாயிஃப் ரோஜா, சவூதி அரேபியாவின் வரலாற்றிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன் துடிப்பான இளஞ்சிவப்பு நிறங்களும் இனிமையான நறுமணமும் சர்வதேசப் பயணிகளைக் கவர்கின்றன. இந்த புகழ்பெற்ற மலர், தாயிஃப் மாகாணத்தில் முதல் ரோஜா தொழிற்சாலையை நிறுவ உதவ ஒரு இந்திய யாத்ரீகருக்கு உத்வேகம் அளித்தது என்பது ஆச்சரியம் அளிக்கும் சுவையான தகவலாகும்.
தாயிஃப் ரோஜாக்கள், ரோசா டமாசெனா மற்றும் ரோசா சென்டிஃபோலியாவகைகளைச் சேர்ந்தவை. ரோஜா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இங்கிருந்து ரோஜா நீர் மற்றும் வாசனை திரவியங்கள் முக்கியமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக, சவூதி அரேபியாவின் தாயிஃப் பகுதியில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. சவூதி அரேபியாவில், ஆண்டுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான ரோஜாக்கள், குறிப்பாக தாயிஃப் பகுதியில் விளைகின்றன. உலகளாவிய தேவை அதிகரிப்பு காரணமாக, இந்த பகுதியில் ரோஜா உற்பத்தி ஆண்டுக்கு 15 சதவீதத்கும் மேலாக உயர்ந்துள்ளது. தாயிஃப் ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மிகவும் சுத்தமானதாகவும், வாசனையானதாகவும் கருதப்படுகிறது.
பழமையான ரோஜா தொழிற்சாலை :
தாயிஃபின் நூற்றாண்டு பழமையான ரோஜா தொழிற்சாலை மற்றும் அதன் ரோஜா வடித்தல் முறைகளின் கதை, இந்த பாரம்பரியப் பொருளின் அடையாளத்தை வடிவமைத்த இரகசியங்களைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது.
தாயிஃபைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல்ரஹ்மான் பின் ஹுமைத் அல்-குராஷி, இந்தக் கதை தனது தாத்தாவிடமிருந்து தொடங்கியது என்று விவரிக்கிறார். அவர் யாத்ரீகர்களுக்கு தாயிஃப் ரோஜாக்களை விற்று வந்தார். அப்போது, இந்தியாவிலிருந்து வந்த யாத்ரீகர்களில் ஒருவரின் கவனத்தை அதன் தரம் ஈர்த்தது. அவர், அடுத்த பருவத்தில் ரோஜாக்களை வடிப்பதற்காக ஒரு சிறப்பு செப்புப் பானையைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.
====================
"அழகு மற்றும் நளினத்தின் சின்னமான தாயிஃப் ரோஜா, சவூதி அரேபியாவின் வரலாற்றிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன் துடிப்பான இளஞ்சிவப்பு நிறங்களும் இனிமையான நறுமணமும் சர்வதேசப் பயணிகளைக் கவர்கின்றன"
====================
“அந்த இந்திய யாத்ரீகர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, அந்தச் செப்புப் பானையைக் கொண்டு வந்தார். அது இன்றும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடம் உள்ளது,” என்று குறிப்பிட்ட அல்-குராஷி, தனது தாத்தா முதலில் அதைப் பயன்படுத்தி ரோஜாக்களைக் காய்ச்சி ரோஜா நீரை மட்டும் எடுக்கத் தொடங்கினார் என்றும், பின்னர் ஒரு கண்டுபிடிப்பு அந்த வேலையின் போக்கையே மாற்றியது என்றும், அதன் மூலம் அவர் முதன்முறையாக ரோஜா எண்ணெயைப் பிரித்தெடுக்க முடிந்தது என்றும் குறிப்பிடுகிறார்.
சில பருவங்களில் தனது தாத்தா பயிர் சேதத்தால் அவதிப்பட்டதாகவும், ஆனால் செப்புப் பானையின் பயன்பாடு ரோஜாப் பொருட்களின் வளர்ச்சிக்கு பங்களித்ததாகவும் அவர் மேலும் கூறுகிறார். இது ரோஜா நீருடன் தொடங்கி, பின்னர் அதிக விலையுள்ள ரோஜா எண்ணெயை உற்பத்தி செய்யும் அளவுக்கு பரிணமித்தது. அல்-ஹதா மலைகளுக்கு இடையேயான பசுமைப் பள்ளத்தாக்கில் தனது தாத்தா அப்துல்லா அவ்வாறு செய்த முதல் நபர்களில் ஒருவராக இருந்ததால், ரோஜாக்களை சமைக்கும் பழக்கத்தை மேற்கொண்ட முதல் குடும்பமாக தங்கள் குடும்பம் கருதப்படுகிறது என்று அல்-குராஷி குறிப்பிட்டார்.
பொருளாதார மதிப்பு அதிகரிப்பு :
அக்காலத்தில் ரோஜா நீரின் விலை சுமார் 1 புள்ளி 5 ரியால்களாக இருந்தது என்று அல்-குராஷி சுட்டிக்காட்டினார். இந்தத் தொழில் வளர வளர, அது அதிக பொருளாதார மதிப்பைப் பெற்றது. மேலும் அதன் அரிதான தன்மை மற்றும் உயர் தரம் காரணமாக முதல் தோலா ரோஜா எண்ணெய் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
இந்தத் தொழிலின் விவரங்கள் குறித்து விளக்கும் அல்-குராஷி, இது விடியற்காலையின் முதல் ஒளியில் தொடங்குகிறது என்றும், அப்போது ரோஜாக்கள் அவற்றின் நறுமண எண்ணெய்களைப் பாதுகாப்பதற்காக கவனமாகப் பறிக்கப்பட்டு, பின்னர் பாரம்பரிய பட்டறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வரலாற்றின் வாசனையை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் செப்புப் "பானைகளுக்குள்" வைக்கப்படுகின்றன என்றும் கூறுகிறார். .
உலகளவில் புகழ்பெற்ற ரோஜாப் பண்ணைகள் :
விவசாயிகளின் அனுபவங்களின்படி, உயர்தர ரோஜாக்களை உற்பத்தி செய்வதற்கு உகந்த சூழல்களை வழங்குவதால், அல்-ஹதா மற்றும் அல்-ஷஃபாவில் உள்ள ரோஜாப் பண்ணைகள் உலகளவில் மிகவும் புகழ்பெற்றவை என்றும் அவர் பெருமையுடன் மகிழ்ச்சி அடைகிறார்.
மேலும், பல தசாப்தங்களாக தாயிஃப் ரோஜாக்களைத் தனித்துவப்படுத்திய பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே, விவசாயிகள் தங்கள் முறைகளைத் தொடர்ந்து செம்மைப்படுத்தி, அவற்றை பல்வேறு உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் விற்கப்படும் ஒரு பொருளாக மாற்றி வருவதாகவும் அல்-குராஷி குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், அங்கு நடந்த இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, மகிழ்ச்சியும் பரவசமும் அடையும் அதேவேளையில், உலக அளவில் புகழ்பெற்ற தாயிஃப் ரோஜாக்களின் அழகையும் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள். அத்துடன், இயற்கையின் அற்புதங்களை பார்த்து வியப்பு அடைந்து ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்















