அரபு மொழியை மேம்படுத்த புதிய முயற்சி :
கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமி, முஸ்லிம் உலக லீக் இடையே ஒப்பந்தம்....!
உலகம் முழுவதும் அரபு மொழியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த சவூதி அரேபியாவின் கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அரபு மொழியை உலக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம், திருக்குர்ஆனை அரபி மொழியில் எளிமையாக படித்து புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் கிடைக்கும். எனவே, கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமி , அரபு மொழியை பிரபலப்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
அந்த பணிகளில் ஒன்றாக தற்போது கல்வி, கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியை வலுப்படுத்துவதற்காக, கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமியும், முஸ்லிம் உலக லீக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில், அகாடமியின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் இப்ராஹிம் பின் முகமது அபான்மியும், லீக்கின் சார்பில் உதவிப் பொதுச்செயலாளர் அப்துல்வஹாப் பின் முகமது அல்-ஷெஹ்ரியும் கையெழுத்திட்டனர்.
உலகெங்கிலும் அரபு மொழிக்கு சேவை :
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முஸ்லிம் உலக லீக்கின் பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா, இந்த கூட்டாண்மையில் பெருமிதம் தெரிவித்ததோடு, உலகெங்கிலும் அரபு மொழிக்கு சேவை செய்வதில் அகாடமியின் பரந்த அளவிலான பணிகளைப் பாராட்டினார்.
இதேபோன்று, கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழிஅகாடமியின் பொதுச்செயலாளர் டாக்டர் அப்துல்லா பின் சலே அல்-வாஷ்மியும் புதிய ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முஸ்லிம் உலக லீக்குடனான இந்த ஒத்துழைப்பு, கூட்டுப் பணிகளை விரிவுபடுத்தவும், அரபு மொழிக் கற்பித்தலை ஆதரிக்கும் மற்றும் கல்வி மற்றும் தொழில்நுட்பச் சூழல்களில் அதன் பயன்பாட்டை எளிதாக்கும் தாக்கமிக்க மொழியியல் முயற்சிகளை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாகும் என்று அவர் பெருமைப்பட குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரமான திட்டங்கள் முன்னெடுப்பு :
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நிபுணத்துவப் பரிமாற்றத்தை ஆதரித்து, உயர்தரமான திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் கூட்டுப் பணிக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட சட்டகத்தை நிறுவுவதன் மூலம், அரபு மொழிக்கான சேவையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும், கல்வி மற்றும் அறிவியல் சூழல்களில் அதன் இருப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
==================
"கல்வி, கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியை வலுப்படுத்துவதற்காக, கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமி. முஸ்லிம் உலக லீக் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மொழியியல் உள்ளடக்கத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதோடு, பல்வேறு துறைகளில் அரபு மொழியின் நிலையை வலுப்படுத்துகிறது"
==================
ஒத்துழைப்புக்கான பகுதிகள் பல முக்கியத் துறைகளை உள்ளடக்கியுள்ளன. குறிப்பாக, அரபு மொழியைக் கணினிமயமாக்குதல், எண்ணிம அகராதிகள் மற்றும் மொழியியல் தொகுப்புகளை உருவாக்குதல், தாய்மொழி அல்லாதவர்களுக்கு அரபு மொழியைக் கற்பித்தல், மொழித் திறனறித் தேர்வுகளை நடத்துதல், மற்றும் மொழியியல் சேவைகள் மற்றும் ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்விக்கழகம் தனது சர்வதேச இருப்பை வலுப்படுத்தவும், அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனக் கூட்டாண்மைகளைச் செயல்படுத்தவும் மேற்கொள்ளும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இது மொழியியல் உள்ளடக்கத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதோடு, பல்வேறு துறைகளில் அரபு மொழியின் நிலையை வலுப்படுத்துகிறது.
மகிழ்ச்சியான தருணம் :
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிகழ்வின்போது, ஷேக் டாக்டர் அல்-இஸ்ஸா, டாக்டர் அல்-வாஷ்மியைச் சந்தித்தார். அப்போது இருவரும் தங்களுக்குள் பரஸ்பர ஆர்வம் கொண்ட பல விடயங்கள் குறித்து விவாதித்தனர். அகாடமியின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் இப்ராஹிம் பின் முகமது அபான்மியும், லீக்கின் சார்பில் உதவிப் பொதுச்செயலாளர் அப்துல்வஹாப் பின் முகமது அல்-ஷெஹ்ரியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது முஸ்லிம் உலக லீக்கின் பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா, இந்தக் கூட்டாண்மை குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்











