காசை சேர்த்து வைத்து
பொருளை வாங்கிடலாம்.
ஆனா,
பொருளை வாங்கிட்டு
கடனை சேர்த்து
வைக்க கூடாது.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
" ரியாத்தின் அல்-தவாத்மியில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருள் தளங்கள் "
சவூதி அரேபியாவின் பாரம்பரிய ஆணையம், ரியாத்தின் அல்-தவாத்மி மாகாணத்தில், உயர் நஜ்த் திட்டத்தின் முதல் பருவத்தில், கல்வெட்டுகள் மற்றும் கல் கட்டமைப்புகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தொல்பொருள் தளங்களை ஆவணப்படுத்தியுள்ளது.
பண்டைய காலத்தில் ஆழமாக வேரூன்றிய வாழ்க்கையை வெளிப்படுத்துவதோடு, அப்பகுதியின் நீண்டகால மனித குடியேற்ற வரலாறு குறித்த புதிய பார்வைகளையும் வழங்கும் கல்வெட்டுகளையும் கல் கட்டமைப்புகளையும் தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகள், திட்டத்தின் முதல் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் பருவத்தில் செய்யப்பட்டன. இப்பருவத்தில், பண்டைய சமூகங்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தொல்பொருள் எச்சங்கள் மூலம் அல்-தவாத்மியில் மனிதர்கள் இருந்ததற்கான சான்றுகளை இத்திட்டம் கண்டறிகிறது.
அரிய இஸ்லாமியக் கல்வெட்டுகள் :
பாறை மேற்பரப்புகளில் பொறிக்கப்பட்ட 187 விலங்குச் சித்திரங்கள், 36 மனித உருவங்கள், 31 தமுடிக் மற்றும் ஆரம்பகால இஸ்லாமியக் கல்வெட்டுகள், மற்றும் 36 சின்னங்கள் மற்றும் பழங்குடி அடையாளங்கள் (வுசும்) ஆகியவற்றை பாரம்பரிய ஆணையம், ஆவணப்படுத்தியுள்ளது. பாரம்பரிய ஆணையத்தின்படி, இந்தக் கண்டுபிடிப்புகள் இயற்கைச் சூழலின் செழுமையையும், தொடக்ககால மனிதர்களின் வேட்டையாடும் திறன்களையும், பாறை ஓவியங்களில் வண்ண நிறமிகளின் பயன்பாட்டையும் பிரதிபலிக்கின்றன.
மேலும், இத்திட்டம் கல் வட்டங்கள், வட்ட வடிவ கற்குவியல் கல்லறைகள் மற்றும் கற்குவியல்கள் உள்ளிட்ட பல கல் கட்டமைப்புகளை ஆவணப்படுத்தியுள்ளது. இது இப்பகுதியின் தொல்பொருள் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
==================
"தேசியத் தொல்பொருள் பதிவேட்டில் ஆயிரத்து 173 புதிய தொல்லியல் தளங்களை பாரம்பரிய ஆணையம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சவூதி அரேபியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட தளங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 164-ஆக உயர்ந்துள்ளது"
==================
சவூதி அரேபியா முழுவதும் பண்டைய மனித செயல்பாடுகள் குறித்த அறிவை விரிவுபடுத்தும் அதே வேளையில், இராச்சியத்தின் தொல்பொருள் பாரம்பரியத்தை ஆய்வு செய்யவும், ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் பாரம்பரிய ஆணையம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக உயர் நஜ்த் திட்டம் அமைந்துள்ளது.
புதிய தொல்லியல் தளங்கள் :
மேலும், தேசியத் தொல்பொருள் பதிவேட்டில் (National Antiquities Register) ஆயிரத்து 173 புதிய தொல்லியல் தளங்களை பாரம்பரிய ஆணையம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சவூதி அரேபியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட தளங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 164-ஆக உயர்ந்துள்ளது.
தொல்லியல் தளங்களைப் பதிவு செய்வது நாட்டின் கலாச்சார பாரம்பரிய மேலாண்மை அமைப்பின் முக்கியப் பகுதியாகும் என்று ஆணையம் கூறியது. தேசியத் தொல்பொருள் பதிவேட்டில் தளங்களைச் சேர்ப்பது அவற்றுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது. ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகளை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. தொல்பொருள் தளங்கள் அல்லது அவற்றின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயல்பாடுகளைப் பற்றி, சவூதி இராச்சியம் முழுவதும் உள்ள அதன் கிளைகளுக்கு நேரில் சென்றோ, அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தொடர்பு கொண்டோ, அல்லது ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை 911 என்ற எண்ணில் அழைத்தோ புகாரளிக்குமாறு ஆணையம் குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் வலியுறுத்தியது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் :
சவூதி அரேபியாவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல தொல்பொருள் தளங்கள் உள்ளன. அவற்றில், 2008-ல் இராச்சியத்தின் முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாறிய அல்-உலாவில் உள்ள ஹெக்ராவும் அடங்கும்.
திரியாவில் உள்ள அத்-துரைஃப் மாவட்டம் 2010-லும், வரலாற்று சிறப்புமிக்க ஜித்தா 2014-லும், ஹெய்ல் பிராந்தியத்தில் உள்ள பாறை ஓவியங்கள் 2015-லும், அல்-அஹ்ஸா பாலைவனச் சோலை 2018-லும், நஜ்ரானில் உள்ள ஹிமா கலாச்சாரப் பகுதி 2021-லும் சேர்க்கப்பட்டன.
ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மேலும் தொடர்ந்துகொண்டே இருப்பதால், பல அரிய தகவல்களுடன் கூடிய தொல்பொருள் தளங்கள் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளதாக சவூதி அரேபிய பாரம்பரிய ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் - ஓர் பார்வை
- எஸ்.ஏ.ஏ. -
தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேதவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு, சட்டப்பேரவையில் தனது முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தாக்கல் செய்தது. 2026-27 நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட பொது பட்ஜெட்டை, மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில், 2036க்குள் 1 புள்ளி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நிதிச்சுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது., திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் குறைவாக உள்ளது., நிதி நெருக்கடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது போன்ற முக்கிய அம்சங்களும் இந்த த.வெ.க.வின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் குறித்து சில முக்கிய தகவல்களை நாம் அறிந்துகொள்வோம்.
மாணவர்களின் நலனில் அக்கறை :
மாணாக்கர்களுக்கு பள்ளி நேரத்திற்கு பிறகு தினம் ஒரு மணி நேரம் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்., ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி வழங்கப்படும்., ஏஐ பாடத்திட்டம் உருவாக்க சிறப்பு நிபுணர்கள் குழு உருவாக்கப்படும்., 90 கோடி ரூபாயில் 5 தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்., பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்., 3 ஆயிரத்து 734 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த 2 ஆயிர்து 132 கோடி ரூபாய் ஒதுக்கீடு., மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 32 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கப்படும்., கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் வெற்றி மடிக்கணினி திட்டம் என பெயர் மாற்றி அமைக்கப்படும்., 300 மாணவர் சேர்க்கையுடன் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் உள்ளிட்ட தமிழக மாணவ மாணவியர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளததை நிச்சயம் வரவேற்க வேண்டும்.
ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு :
தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் நிதியும், உயர்கல்வித் துறைக்கு 8 ஆயிரத்து 393 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2 ஆயிரத்து 22 கோடி ரூபாய் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு 17 ஆயிரத்து 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஆயிரத்து 51 கோடி ரூபாயும், சமூகநீதித் துறைக்கு 3 ஆயிரத்து 937 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ஆயிரத்து 485 கோடி ரூபாய், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கு 9 ஆயிரத்து 818 கோடி ரூபாய், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 23 ஆயிரத்து 357 கோடி ரூபாய், வேளாண் மற்றும் உழவர் நலன் துறைக்கு 14 ஆயிரத்து 984 கோடி ரூபாய், தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கு 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21 ஆயிரத்து 524 கோடி ரூபாய், ஓய்வூதியம் மற்றும் ஏனிய ஓய்வூ கால நன்மைக்கு 47 ஆயிரத்து 240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலனுக்கான அறிவிப்புகள் :
இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரில் விருது ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளன்று விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. காயிதே மில்லத் அவர்களின் வரலாற்றுப் பெருமை, தமிழ்மொழி மீதான பற்றை அரசு கௌரவிக்கும் இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினராலும் வரவேற்கத்தக்கதாகும். மேலும் இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான மானியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு 105 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு மொத்தம் ஆயிரத்து 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு :
வேலைவாய்ப்பை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்படுத்த "வெற்றி திறன் பயிற்சி திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ஆயிரத்து 51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதை இல்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் மறுவாழ்வு நிதிக்காக 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. 10581 என்ற உதவி எண் மற்றும் "DrugsFreeTamilNadu" செயலி மூலமாக பொதுமக்கள் ரகசியமாக தகவல் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
"வெற்றி வீடு" திட்டத்தின் மூலம் கூரையில்லா தமிழ்நாடு அனைவருக்கும் உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டும் நோக்கில், வீட்டு அலகுத் தொகை 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் ஆண்டிலேயே 70 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலும், ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலும், திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
வருவாய் ஆதாரங்களை பெருக்க நடவடிக்கை :
பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், வீண்செலவுகளை குறைத்தும், வருவாய் ஆதாரங்களை பெருக்கி மாநிலத்தின் கடன் சுமையை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றார். இந்த நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மூலதன செலவு 56 ஆயிரத்து 985 கோடியாக இருக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 9 புள்ளி ஏழு எட்டு சதவீத வளர்ச்சியை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நிதிநிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும் என்றும், அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும், 2026-27 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 57 ஆயிரத்து 275 கோடி ரூபாய் இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும், 2026-27 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 27 கோடி ரூபாயாக மதிப்பீடப்பட்டுள்ளது. இது முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளைவிட, 5 ஆயிரத்து 452 கோடி ரூபாய் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் குறித்த விமர்சனங்கள் :
த.வெ.க. கூட்டணி அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டுக்கு வரவேற்பும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கை, எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிடும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வரவேற்றுள்ளார். த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கும், அரசின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் பட்ஜெட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் த.வெ.க.வின் முதல் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இதேபோன்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த பட்ஜெட், முந்தைய அதிமுக, திமுக அரசுகள் செயல்படுத்திய திட்டங்களின் பெயர்களை மாற்றிவிட்டு, மாற்றம் கொண்டு வந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் த.வெ.க.வின் பட்ஜெட்டில் எந்த முக்கிய அம்சங்களும் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் த.வெ.க.வின் முதல் பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என்று விமர்சனம் செய்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறவில்லை :
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தாலும், தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த, குறிப்பாக பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் மகளிர் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை. ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆறு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை 3 ஆயிரம் ரூபயாக உயர்த்தப்படும்,, 000 வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்,. மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்,டீசல் மானியம் 3 ஆயிரத்து 600 லிட்டராக உயர்த்தப்படும், விவசாயிகளுக்கு, ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்., ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் போன்ற த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதல் பட்ஜெட்டில் எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
மேலும், அனைத்து குடும்பங்களுக்கும் 25 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதியும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மொத்தத்தில், தேர்தல் வாக்குறுதிகளும் இல்லை; புதிய திட்டங்களும் இல்லை. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அறிவித்திருப்பதைத்தான் இந்த நிதிநிலை அறிக்கையில் பார்க்க முடிகிறது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ள விமர்சனங்களை நாம் மறைக்கவும் மறுக்கவும் முடியாது.
==============================
The greatest mistake we humans make in our relationships.
We listen half, understand the quarter,
think zero and react double.
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவையில்லை.
முகவரியும் தேவையில்லை.
நம்மை நினைக்கும் உண்மையான,
அழகான நினைவுகள்
மட்டுமே போதும்.
அன்பு அழகானது. அற்புதமானது.