நீரில் எறிந்த கல்லும்,
இதயத்தில் பதிந்த சொல்லும்
என்றுமே அழிவதில்லை.
பேசும் சொல்லில் கவனம் தேவை.
இல்லையெனில்
வாழ்க்கையில் அமைதி
சீர்குலைந்துவிடும்...
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
நீரில் எறிந்த கல்லும்,
இதயத்தில் பதிந்த சொல்லும்
என்றுமே அழிவதில்லை.
பேசும் சொல்லில் கவனம் தேவை.
இல்லையெனில்
வாழ்க்கையில் அமைதி
சீர்குலைந்துவிடும்...
ஒரு மனிதனின் உள்ளம் மாறாதவரை.....!
மனிதன் வெறும் சதை, தோல் மற்றும் எலும்புகளின் தொகுப்பு மட்டுமல்ல, அவனுக்குள் ஒரு உள்ளார்ந்த சக்தியும் பதிக்கப்பட்டுள்ளது. அந்த சக்தி ஒவ்வொரு கணமும் சரிக்கும் தவறுக்கும், நன்மைக்கும் தீமைக்கும், நீதிக்கும் அநீதிக்கும் இடையில் வேறுபடுத்தி அறியும் திறனைக் கொண்டுள்ளது. இந்த சக்தி மனசாட்சி என்று அழைக்கப்படுகிறது. மனசாட்சி என்பது ஒரு மனிதனுக்குள் பேசும் ஒரு அமைதியான குரலாகும். அது எந்தவொரு வெளிப்புறச் சட்டம் அல்லது மேற்பார்வைக்கு முன்பாகவே ஒருவன் தன் செயல்களை உணரச் செய்கிறது. இதுவே ஒரு மனிதனை நன்மையின் பக்கம் சாய்த்து, தீமையை வெறுக்கச் செய்யும் உள்ளார்ந்த சமநிலையாகும்.
மனசாட்சி உயிருடனும் விழிப்புடனும் இருக்கும்போது, ஒருவன் சட்டத்தின் மீதான அச்சத்தினால் மட்டுமல்லாமல், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்தியினாலும், தனக்குள் இருக்கும் தார்மீகப் பொறுப்புணர்வினாலும் செயல்படுகிறான். ஆனால் மனசாட்சி உறங்கும்போது, சில சமயங்களில் அறிவு இருந்தும் ஒருவன் வழிதவறிச் செல்கிறான். சில சமயங்களில் அதிகாரம் இருந்தும் அடக்குமுறையாளனாகிறான். சில சமயங்களில் அதிகாரம் இருந்தும் அநீதி இழைக்கிறான்.
மனசாட்சியின் விழிப்பே மனிதகுலத்தின் அடையாளம் :
உண்மையில், மனசாட்சியின் விழிப்பே மனிதகுலத்தின் உண்மையான அடையாளம் மற்றும் நம்பிக்கையின் உண்மையான சின்னமாகும். ஒரு செயல் சமயச் செயலாக இருந்தாலும் சரி, உலகச் செயலாக இருந்தாலும் சரி, அது மனசாட்சியின் விழிப்பு இல்லாமல் செய்யப்பட்டால், அந்தச் செயலின் ஆன்மா நிலைத்திருப்பதில்லை. அதன் வெளித்தோற்றம் மட்டுமே எஞ்சியிருக்கும். வணக்கத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒருவன் தொழுகையை நிறைவேற்றும்போது, அவனது இதயத்தில் பணிவு, நேர்மை மற்றும் அல்லாஹ்வின் மகத்துவம் குறித்த உணர்வு இல்லையென்றால், அந்தத் தொழுகை வெறும் உடலாக மட்டுமே இருக்கும். அதன் ஆன்மா நிலைத்திருக்காது. அதுபோலவே, உலக வாழ்வில் ஒரு மருத்துவர் கட்டணத்திற்காக மட்டுமே ஒரு நோயாளிக்குச் சிகிச்சை அளித்து, அவரது இதயத்தில் மனிதநேயத்தின் வலி இல்லையென்றால், அவர் தனது தொழிலைச் செய்கிறார். ஆனால் மருத்துவத்தின் உண்மையான ஆன்மாவை இழந்தவராக இருக்கிறார்.
அதேபோல், ஒரு ஆசிரியர் சம்பளத்திற்காக மட்டுமே கற்பித்து, மாணவர்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றால், கல்வியின் ஒளி அணைந்துவிடும். உண்மை என்னவென்றால், மனசாட்சி ஒவ்வொரு செயலிலும் நேர்மையையும், பொறுப்புணர்வையும், ஆசீர்வாதத்தையும் உருவாக்குகிறது. அது இல்லாமல், மிகப் பெரிய செயல் கூட உயிரற்றதாகத் தோன்றும்.
================
"மனசாட்சி உயிருடனும் விழிப்புடனும் இருக்கும்போது, ஒருவன் சட்டத்தின் மீதான பயத்தினால் மட்டுமல்லாமல், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்தியினாலும், தனக்குள் இருக்கும் தார்மீகப் பொறுப்புணர்வினாலும் செயல்படுகிறான். ஆனால் மனசாட்சி உறங்கும்போது, அறிவு இருந்தபோதிலும் அவன் வழிதவறியவனாகவும், சக்தி இருந்தபோதிலும் கொடூரமானவனாகவும், அதிகாரம் இருந்தபோதிலும் அநீதியானவனாகவும் ஆகிறான்".
================
புனித திருக்குர்ஆன் மனிதனைத் தன் ஆன்மாவைச் சிந்தித்து, ஆழ்ந்து ஆராய்ந்து, சுயபரிசோதனை செய்யுமாறு மீண்டும் மீண்டும் அழைக்கிறது, ஏனெனில் இதுவே மனசாட்சி விழித்தெழுவதற்கான பாதையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்: "மாறாக, மனிதன் அவனுக்கே எதிராக சாட்சியாக இருப்பான்". (சூரா அல்-கியாமா: 14) இந்த வசனம் ஒரு நபரின் மனசாட்சி அவரது செயல்களுக்குச் சாட்சி பகர்கிறது என்ற உண்மையை தெளிவுபடுத்துகிறது. இதேபோல், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நன்மை என்பது நல்ல குணம், பாவம் என்பது உங்கள் இதயத்தில் இருப்பது, அதை மற்றவர்கள் அறிய நீங்கள் விரும்புவதில்லை.” (முஸ்லிம்)
இந்த ஹதீஸ், சரியையும் தவறையும் வேறுபடுத்துவதற்கான ஒரு முக்கிய அளவுகோலாக மனசாட்சியைக் கருதுகிறது. திருக்குர்ஆன் மனிதனைச் சிந்திக்கவும், பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், தன் செயல்களை மதிப்பிடவும் மீண்டும் மீண்டும் அழைக்கும்போதும், ஹதீஸ் இதயத்தின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதும், மனசாட்சியின் விழிப்புணர்வு இல்லாமல், வழிபாடு அதன் யதார்த்தத்தை அடையாது என்பதும், சமூகம் நீதி மற்றும் நேர்மையின் பாதையைப் பின்பற்ற முடியாது என்பதும் தெளிவாகிறது.
விழித்தெழுந்த மனசாட்சியுடன் :
ஒரு மனிதன் தனது விழித்தெழுந்த மனசாட்சியுடன் ஒரு இலக்கிற்காக நிற்கும்போது, அவனது உறுதியின் முன் மிகப்பெரிய மலைகூட மணல் குவியலாகிவிடும் என்பதற்கு வரலாறு சாட்சி. நம்பிக்கை, நேர்மை மற்றும் மனசாட்சியின் ஒளி ஆகியவை, சிரமங்களுக்கு அஞ்சுவதற்குப் பதிலாக அவற்றை எதிர்கொள்ளும் தைரியத்தை மனிதனுக்கு அளிக்கின்றன. ஆனால் மனசாட்சி செத்துப்போகும்போது, சிறிய பொறுப்புகள்கூட மனிதனுக்குச் சுமையாகிவிடுகின்றன. அவன் உண்மையைப் பேச அஞ்சுகிறான். நீதி செய்வதிலிருந்தும் நற்செயல்கள் செய்வதிலிருந்தும் பின்வாங்குகிறான். எனவே, உண்மையான சக்தி உடலில் இல்லை. விழித்தெழுந்த மனசாட்சியில்தான் உள்ளது. இதுவே முடியாததைச் சாத்தியமாக்கி, கடினமானதை எளிதாக்கும் சக்தியாகும்.
இன்று உலகம் முழுவதும் மனிதகுலம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதிகளின் மூல காரணம், விழிப்புணர்வின்மை மற்றும் மனசாட்சியின் அலட்சியம் ஆகிய பிரச்சனைகளே ஆகும். பாலஸ்தீனத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களாக இருந்தாலும் சரி, உலகின் வேறு எந்தப் பகுதியிலும் அப்பாவி மக்களின் அழுகுரலாக இருந்தாலும் சரி, மனித மனசாட்சி இன்னும் உயிருடன் இருக்கிறதா என்பதே உண்மையான கேள்வி. ஒடுக்குமுறைக்கு முன்னால் சக்திவாய்ந்தவர்கள் மௌனமாக இருக்கும்போதும், நீதியை விட நலன்கள் மேலோங்கும்போதும், ஒருவன் மற்றவர்களின் வலியைத் தன் சொந்த வலியாக உணராதபோதும், இது மனசாட்சியின் மரணத்திற்கான அறிகுறியாகும்.
ஒருவன் உள்ளுக்குள் மாறாதவரை :
சட்டங்கள் அவற்றின் இடத்தில் அவசியமானவை. நிறுவனங்கள் அவற்றின் இடத்தில் முக்கியமானவை, வளங்கள் அவற்றின் இடத்தில் பயனுள்ளவை. ஆனால், ஒருவன் உள்ளுக்குள் மாறாதவரை, வெளிப்புற மாற்றம் நீடித்திருக்க முடியாது. ஏனெனில் மனசாட்சி விழித்தெழாதபோது, பொய் தோன்றத் தொடங்குகிறது. நீதியும் ஒடுக்குமுறையும் தன்னிச்சை என்ற பெயரைப் பெறுகின்றன. அத்தகைய சமூகங்களில், கொள்கைகளுக்குப் பதிலாக நலன்களும், நேர்மைக்குப் பதிலாக பாசாங்குத்தனமும், நீதிக்குப் பதிலாக அதிகாரமும் தீர்மானிக்கத் தொடங்குகின்றன.
இதனால்தான், விசுவாசிகளின் மனசாட்சி உயிர்ப்புடன் இருப்பதற்கும், அவர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் சத்தியத்தின் ஆதரவாளர்களாக மாறுவதற்கும், இறையச்சம், நீதி மற்றும் சத்தியத்தைக் கடைப்பிடிக்குமாறு திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. மனசாட்சியைத் தட்டி எழுப்புதல் எனும் இந்த முக்கியமான பணிக்காக, ஒரு மனிதன் தனக்குள் இருக்கும் மனிதநேயத்தைத் தட்டி எழுப்ப வேண்டும். ஏனெனில் மனிதநேயமே மனசாட்சியின் முதல் உணவாகும். திருக்குர்ஆன் சில இடங்களில் சொர்க்கத்தையும் நரகத்தையும் குறிப்பிட்டும், சில இடங்களில் கடந்த கால தேசங்களின் கதியை விவரித்தும், சில இடங்களில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை நினைவூட்டியும், சில இடங்களில் மரணத்தையும் மறுமையையும் நினைவூட்டியும் மனிதனின் உணர்வுகளைத் தூண்டியுள்ளது.
தனது கூற்றுகளில், அல்லாஹ்வின் தூதர் கருணை, நீதி, நம்பகத்தன்மை, நன்னடத்தை மற்றும் பரோபகாரம் ஆகியவற்றை ஈமானின் ஒரு பகுதியாக அறிவித்துள்ளார். திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸின் இந்தப் பயிற்சி முறையானது, உண்மையில் மனிதனுக்குள் உறங்கிக் கிடக்கும் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதற்கான ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும், இதன் மூலம் மனிதன் கட்டளைகளால் மட்டும் கட்டுண்டு இருக்க மாட்டான்.
- நன்றி : இன்குலாப் உர்தூ நாளிதழ்
- தமிழில் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
மத்தியப் பிரதேச வக்பு வாரியம் மறுசீரமைப்பு
இரண்டு இந்து உறுப்பினர்களை நியமனம் செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அறிவிப்பு
போபால், ஜுலை.07- மத்தியப் பிரதேச வக்ப் வாரியத்தில் இரண்டு இந்து உறுப்பினர்களைச் சேர்த்து மறுசீரமைப்பு செய்தது முறையற்றது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. மேலும், அரசின் இந்த முடிவை உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமையன்று மாநில வக்பு வாரியத்தை மறுசீரமைத்து, அதில் இரண்டு இந்து உறுப்பினர்களைச் சேர்த்தார். வக்பு திருத்தச் சட்டம், 2025-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த புதிய வாரியம், இந்து உறுப்பினர்களை நியமித்த நாட்டின் முதல் மாநில அளவிலான வக்பு வாரியம் ஆகும்.
10 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச வக்புவாரியத்தின் தலைவராக சன்வார் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் மல்பானி மற்றும் அனிமேஷ் பார்கவா ஆகியோர் இந்து உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். படேல் முதன்முதலில் 2023-ல் மத்தியப் பிரதேச வக்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு :
இந்நிலையில், மத்தியப் பிரதேச பாஜக அரசின் அறிவிப்கக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போபாலில் 06.07.2026 திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிஃப் மசூத், வக்பு சட்டம் தொடர்பான விவகாரம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், அது குறித்த இறுதி முடிவு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும் வரை இத்தகைய நியமனங்களைச் செய்திருக்கக் கூடாது என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இத்தகைய சூழலில், மத்தியப் பிரதேச அரசு வக்ப் வாரியத்தை மறுசீரமைத்து, அதில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்த்திருப்பது முறையற்றது. இது பல சட்டரீதியான கேள்விகளை எழுப்புகிறது. நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி, வக்ப் வாரியத்தின் உருவாக்கம் மற்றும் உறுப்பினர்களின் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று ஆரிஃப் மசூத் கூறினார்.
கவனத்தைத் திசைதிருப்பவே நடவடிக்கை :
இதேபோன்று, முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பி.சி. சர்மா, வக்பு வாரியத்தில் இந்து உறுப்பினர்களை நியமித்ததற்காக பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார். ஆளும் கட்சிக்கு "இந்து-முஸ்லிம்" மற்றும் "இந்தியா-பாகிஸ்தான்" விவகாரங்களைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார். அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் மற்றும் முதல்வர் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பி.சி. சர்மா கூறினார்.
மத்தியப் பிரதேச மாநில அரசின் அறிவிப்பின்படி, 10 பேர் கொண்ட இந்த வக்பு வாரியத்தில் சன்வார் படேல், நஜ்மா ஹெப்துல்லா, ஆதிஃப் அகீல், ஃபைசான் கான், ஃபாத்திமா சவுத்ரி, ஷைஸ்தா சுல்தான், ஷபானா கான், மனோஜ் மல்பாணி மற்றும் அனிமேஷ் பார்கவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் ஆணையர் இக்குழுவின் பதவிவழி உறுப்பினராக உள்ளார்.
வக்பு வாரியம் என்பது மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்களை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். வக்ஃபு சொத்துக்களின் பதிவேடுகளைப் பராமரித்தல், அவற்றின் பயன்பாடு மற்றும் வருவாயைக் கண்காணித்தல், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளிலிருந்து அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மத, கல்வி மற்றும் சமூக நல நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை இதன் முக்கிய பணிகளாகும்.
இருப்பினும், ஆளும் பாஜக தலைவர்கள், வக்ப் வாரியம் என்பது மசூதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்பதால், இந்த முடிவை மதக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்று கூறினர். சட்ட விதிகளுக்கு முழுமையாக உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வக்பு வாரியத் தலைவரும் தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்