Monday, August 10, 2026

Always....!

Always give without remembering 

and always receive without forgetting.



சும்மா....!

 பிசியான ஊடகப் பணியின்போது தோழர் மாரியப்பன் தனது செல்பேசியில் கிளிக் செய்தது...!



Rain....rain....!

 Uttarakhand, today. Heavy Rain flood...!



திறமை இருந்தா....!

 திறமை இருந்தா இங்க யாரும் யாரையும் அமுக்க முடியாது. 

சும்மா அமுக்கராங்க, ஒதுக்கிறாங்க என்று புலம்பிக்கிட்டு இருந்தா சாதிக்க முடியாது. 

நல்லா படிச்சு, திறமையை வளர்த்து சாதித்து மேல வரணும். 

கீழே இருக்குறவங்களுக்கு கை கொடுத்து தூக்கி விடனும். 

அப்போ தா மகிழ்ச்சி கிடைக்கும்.



18ஆம் நூற்றாண்டு குர்ஆன் கையெழுத்துப் பிரதி....!

 

" புனித குர்ஆன் அருங்காட்சியகத்தில்

 18ஆம் நூற்றாண்டு குர்ஆன் கையெழுத்துப் பிரதி "

 

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் இஸ்லாமிய வரலாறு, கலாச்சாரம் மற்றும் கஅபாவின் பாரம்பரியத்தை விளக்கும் பல முக்கிய அருங்காட்சியகங்கள் உள்ளன. அதன்படி, மக்கா அருங்காட்சியகம், மக்கா மணிக்கூண்டு அருங்காட்சியகம் மற்றும் ஹிரா பண்பாட்டு மாவட்டத்தில் உள்ள திருக்குர்ஆன் அருங்காட்சியகம் ஆகியவை மக்காவில் உள்ள பிரதான அருங்காட்சியகங்கள் ஆகும்.

மக்கா அருங்காட்சியகம், மக்கா மற்றும் இஸ்லாத்தின் வரலாற்றுச் சின்னங்கள், பழங்காலக் கைப்பிரதிகள், கஅபாவின் கட்டடக்கலை மற்றும் ஹஜ் யாத்திரை குறித்த பல முக்கிய தொல்பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது.

மணிக்கூண்டு அருங்காட்சியகம், அப்ராஜ் அல்-பைது வளாகத்தின் மிக உயரமான கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ளது. இது பிரபஞ்சம் நேரம் அளவிடும் முறைகள் மற்றும் பிரமாண்டமான மக்கா கடிகாரத்தின் பொறியில் வரலாற்றைக் காட்டுகிறது.

திருக்குர்ஆன் அருங்காட்சியகம், ஹிரா பண்பாட்டுப் பகுதியில் இருந்துள்ளது. இது, அரிய குர்ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமியக் கலை வடிவங்களை உள்ளடக்கியது. 

புனித குர்ஆன் கையெழுத்துப் பிரதி :

மக்காவில் உள்ள ஹிரா கலாச்சார மாவட்டத்தில் அமைந்துள்ள புனித குர்ஆன் அருங்காட்சியகம், 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புனித குர்ஆன் கையெழுத்துப் பிரதியைக் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்தக் கையெழுத்துப் பிரதியானது, புனித குர்ஆனின் எழுத்து மற்றும் அலங்காரத்தில் காட்டப்பட்ட நுணுக்கமான கவனத்தைப் பிரதிபலிப்பதோடு, அக்காலத்திய இஸ்லாமிய எழுத்துக்கலை மற்றும் அலங்காரங்களின் அழகையும் துல்லியத்தையும் வெளிப்படுத்துகிறது.

கருப்பு மையில் எழுதப்பட்ட இந்தக் கையெழுத்துப் பிரதியானது, பல இஸ்லாமிய எழுத்துக்கலைப் பள்ளிகளின் பண்புகளை ஒருங்கிணைத்து, அவற்றின் தனித்துவமான அம்சங்களைப் பயன்படுத்துவதில் எழுத்தரின் திறமையை வெளிப்படுத்துகிறது.

துல்லியமான எழுத்துக்கலை :

அதன் துல்லியமான உச்சரிப்புக் குறிகளும் உயிரெழுத்துக் குறியீடுகளும் கையால் எழுதப்பட்ட குர்ஆன்களில் துல்லியத்திற்கு அளிக்கப்பட்ட கவனத்தைப் பிரதிபலிக்கின்றன. அதே சமயம், அதன் தொடக்கப் பக்கங்களில் உள்ள மலர் வடிவங்களும் சிக்கலான அலங்காரங்களும் குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளின் கலை மரபுகளை எடுத்துக்காட்டுகின்றன.

இந்தக் கையெழுத்துப் பிரதியானது, கையால் எழுதப்பட்ட குர்ஆன்களின் வரலாறு, அரபு எழுத்துக்கலையின் பரிணாம வளர்ச்சி, மற்றும் வெவ்வேறு வரலாற்று காலங்களில் குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்ட அலங்கார மற்றும் தங்க முலாம் பூசும் நுட்பங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்கு ஒரு கண்ணோட்டமாக வழங்குகிறது.

பார்வையாளர்களுக்கு வியப்பு :

புனித குர்ஆன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புனித குர்ஆன் கையெழுத்துப் பிரதியைக் காணும் பார்வையாளர்கள் வியப்பு அடைந்து வருகிறார்கள். இந்தக் கையெழுத்துப் பிரதி, கையால் எழுதப்பட்ட குர்ஆன்களின் வரலாறு, அரபு எழுத்துக்கலையின் பரிணாம வளர்ச்சி, மற்றும் வெவ்வேறு வரலாற்று காலங்களில் குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்ட அலங்கார மற்றும் தங்க முலாம் பூசும் நுட்பங்கள் ஆகியவற்றை வழங்குவதால், திருக்குர்ஆன் குறித்த பல்வேறு அரிய தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் பார்வையாளர்களுக்கு கிடைத்து வருகிறது.

புனித மக்கா நகருக்குச் செல்லும் இஸ்லாமியர்கள், அவசியம், புனித குர்ஆன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித குர்ஆன் கையெழுத்துப் பிரதியைக் கண்டு ரசிக்க வேண்டும். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் தொடர்பான அரிய பொருட்களையும், தகவல்களையும்  கண்டு,  ஏக இறைவனால், திருக்குர்ஆன் எந்தளவுக்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து வியப்பு அடைவதுடன், ஏக இறைவனுக்கு இருகரம் ஏந்தி நன்றி செலுத்த வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, August 9, 2026

எப்சிஆர்ஏ மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு....!

 வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு  காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 

2023-ஆம் ஆண்டின் 'கூட்டு இடைநீக்கம்' சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை

புதுடெல்லி, ஆக.10- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில், எந்த எதிர்ப்பும் இன்றி வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்றிவிட முடியும் என்று ஒன்றிய பாஜக அரசு கருதக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.

வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்​துள்ளன. தற்போது சட்​டத்தில் மேலும் 3 திருத்​தங்​கள் செய்​யப்பட்டு, வெளிநாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா 2026 (எப்​சிஆர்ஏ) வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் தாக்​கல் செய்யப்பட்டு நிலுவை​யில் உள்​ளது.

வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் எந்த மாநிலத்​தில் என்னென்ன தொண்டுப் பணி​கள் மேற்​கொள்ளப்பட உள்ளன என்பதை தொண்டு நிறுவனங்​கள் (என்​ஜிஓக்​கள்) உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்ய வேண்​டும். வெளிநாட்டு நன்கொடைகளை ஒரு​போதும் மதமாற்​றத்​துக்கு பயன்​படுத்தக்​ கூடாது. என்​ஜிஓக்​களின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளி​நாட்டு நன்​கொடைகளால் உருவாக்கப்பட்ட என்​ஜிஓக்​களின் சொத்துகளை அரசு நிர்வாகமே கையாளும் என்று மசோதாவில் தெரிவிக்​கப்பட்டு உள்ளது. வரும் 13-ம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்​டத் தொடர் நிறைவடைகிறது. அதற்குள்ளாக எப்​சிஆர்ஏ மசோ​தாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை :

இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே,.சி.வேணுகோபால்,  வரும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை உருவாக்கி அறிமுகப்படுத்திவிட முடியும் என்று மத்திய அரசு நினைத்தால், அந்த விருப்பத்தை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் எச்சரித்தார்.  

முன்மொழியப்பட்ட எஃப்.சி.ஆர். மாற்றங்கள் சிறுபான்மையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதாக வேணுகோபால் குற்றம் சாட்டினார். மேலும், இந்தச் சட்டம் நிறைவேற எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய அமைப்புகள் வெளிநாட்டு நிதியுதவி பெறுவதாகக் கூறப்படுவதையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார். அரசுக்கு தைரியம் இருந்தால், ஆர்.எஸ்.எஸ்-ஐக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், மாறாக எஃப்.சி.ஆர்.-இன் கீழ் சட்டப்பூர்வமாகச் செயல்படும் அமைப்புகளே குறிவைக்கப்படும் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்றத்தைத் தவிர்த்து வருவதாக கே,.வி.வேணுகோபால் குற்றம் சாட்டினார்.

தங்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள், தடியடிகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார் என்ற முக்கியமான கேள்வியை இந்தியாவில் உள்ள மாணவர்கள் எழுப்பினால், அமித்ஷா முன்வந்து அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று வேணுகோபால் கூறினார்.

முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறைச் சட்டம், தென்னிந்தியா மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களைத் தண்டிக்கும் சட்டம் என்று அவர் கூறினார். இந்த மசோதா, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களின் கழுத்தை நெரிக்கிறது என்றும் வேணுகோபால்  குறிப்பிட்டார்.

ஜெயராம் ரமேஷ் பதிவு :

இதேபோன்று, 2023-ல் முக்கிய சட்டங்களை நிறைவேற்றுவதற்காக, எதிர்க்கட்சிகளின் பெரும்பகுதி இல்லாததை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் நினைவூட்டிள்ளார்.  வரலாறு மீண்டும் திரும்பக்கூடாது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரமேஷ், 2023 டிசம்பர் 14 முதல் 21 வரை மக்களவையில் 100 பேரும், மாநிலங்களவையில் 46 பேரும் என மொத்தம் 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார். 

எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்சப் பிரதிநிதித்துவத்துடன், நாடாளுமன்றம் அதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் அவசியம் இருக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்