வார்த்தைகளால்
சொல்லும் பதில்களை விட,
வாழ்க்கையால்
சொல்லும் பதில்களே மிகவும்
வலிமை வாய்ந்தவை.
அந்த வலிமை வாய்ந்த
பதில்கள் மூலம் உலகை
அமைதியான வழியில் வெல்ல
முயற்சி செய்யுங்கள்...
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
வார்த்தைகளால்
சொல்லும் பதில்களை விட,
வாழ்க்கையால்
சொல்லும் பதில்களே மிகவும்
வலிமை வாய்ந்தவை.
அந்த வலிமை வாய்ந்த
பதில்கள் மூலம் உலகை
அமைதியான வழியில் வெல்ல
முயற்சி செய்யுங்கள்...
ஷிரீன் சுகன் இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெறும் அகில இந்திய முஷைரா....!
புகழ்பெற்ற உர்தூ கவிஞர்கள், தமிழக அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.....!!
- நிறுவனர் நுஸ்ரத் அலி கான் சிறப்பு நேர்காணல் -
ஷிரீ''ன் சுகன் (Shiree'n Sukhan) என்ற அமைப்பு, உர்தூ மொழியின் மறுமலர்ச்சிக்கும் நமது புனிதமான கங்கா ஜமுனி தெஹ்ஸீப் கொண்டாட்டத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மொழி, கலாச்சாரம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு இயக்கமாகும். இதன் மாபெரும் தொடக்க விழா சென்னையில் வரும் 7ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஜிஆர்டி நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
ஷிரீ'ன் சுகன் என்பது "இனிய பேச்சு," "இனிய உரையாடல்," அல்லது "சொல்வளம்" எனப் பொருள்படும் ஒரு உர்தூ மற்றும் பாரசீகச் சொற்றொடராகும். இது இனிமையாகப் பேசும் ஒருவரையோ, அல்லது நேர்த்தியாகவும் வசீகரமாகவும் தங்குதடையின்றிப் பாயும் வார்த்தைகளையோ விவரிக்கிறது. இத்தகைய அழகான பொருள் கொண்ட இந்த அமைப்பின் மூலம் நடைபெறும் அகில இந்திய முஷைரா (உர்தூ கவியரங்கம்), உர்தூ மொழி ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல், உர்தூ கவியின் மேல் காதல் கொள்ளும் அனைத்து கவிப்பிரியர்களின் உள்ளத்தையும் நிச்சயம் கொள்ளை கொள்ளும் என உறுதியாக கூறலாம்.
உர்தூ மொழியின் வளர்ச்சி, மத நல்லிணக்கத்தின் மீது அக்கறை, கஜல், நஸம், ஷேர் ஆகியவற்றுக்கு புத்துயிர் அளித்தல், அத்துடன் இந்தியாவின் கலப்பு ஆன்மாவைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஷிரீ''ன் சுகன் அமைப்பின் நிறுவன செயலாளர் உர்தூ தோஸ்த் என்று அன்பாக அழைக்கப்படும் நுஸ்ரத் அலி கானை, மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்,நேரில் சந்தித்து சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினார். அப்போது, உர்தூ மொழியின் முக்கியத்துவம், கஜல், நஸம், ஷேர், தெஹ்ஸீப் ஆகியவை குறித்து நுஸ்ரத் அலி கான் சிறப்பான விளக்கம் அளித்தார். அந்த நேர்காணலின் முழு விவரம் இதோ உங்கள் பார்வைக்கு :
பிரமாண்ட உர்தூ கவியரங்கம் :
ஷிரீ''ன் சுகன் (Shiree'n Sukhan) என்ற அமைப்பின் மூலம் நாங்கள் அகில இந்திய அளவில் உர்தூ கவியரங்கங்களை நடத்தி வருகிறோம். குறிப்பாக, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரூ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அகில இந்திய உர்தூ முஷைரா நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சென்னையில் மிகச் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, வரும் 7ஆம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கஜல் என்பது7 ஆம் நூற்றாண்டில் அரேபியாவில் தோன்றிய , எதுகை மோனையுடன் கூடிய ஈரடிச் செய்யுள்களையும் ஒரு பல்லவியையும் கொண்ட ஒரு பண்டைய கவிதை வடிவமாகும். இது பொதுவாக ஆன்மீக பக்தி, காதல் மற்றும் பிரிவின் வலி போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறது. இன்று, கஜல்கள் உர்தூ, பாரசீகம் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமாக எழுதப்படுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் இசையமைக்கப்படுகின்றன
இதேபோன்று, நஸ்ம் என்பது உர்தூ, ஹிந்தி மற்றும் சிந்தி கவிதைகளின் ஒரு முக்கிய இலக்கிய வகையாகும். இது பொதுவாக எதுகை நயத்துடன் கூடிய செய்யுள் வடிவிலோ அல்லது நவீன உரைநடைப் பாணிக் கவிதைகளாகவோ எழுதப்படுகிறது. கஜலைப்போலல்லாமல், ஒரு நஸ்ம் ஒரே ஒரு மையக் கருத்தைச் சுற்றி அமைந்து, தொடக்கத்திலிருந்து இறுதிவரை சிந்தனையின் தர்க்கரீதியான பரிணாம வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
"ஷேர்" என்பது ஒரு இந்திய மற்றும் உர்தூ வார்த்தையாகும். இது பொதுவாக "சிங்கம்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. சூழலைப் பொறுத்து, இது உர்தூ கவிதையில் (ஷயாரி) உள்ள ஒரு ஈரடியையோ கூட குறிக்கலாம். "தெஹ்ஸீப்" என்பதற்கு நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பண்பட்ட நன்னடத்தை என்று பொருள். அது சமூகத்தின் நளினம், மரியாதை மற்றும் ஆழமாக வேரூன்றிய மரபுகளைப் பிரதிபலிக்கிறது.
====================
"அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, உர்தூ மொழியின் மேன்மையை வளப்படுத்த எடுத்துள்ள முயற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. சென்னையில் நடைபெறும் இந்த அகில இந்திய உர்தூ கவிதைகளின் மாலை, பாரம்பரியமும் ஒற்றுமையும் உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கிறது"
====================
இப்படி பல்வேறு அழகிய வடிவங்கள் கொண்ட கஜல், நஸ்ம், ஷேர், தெஹ்ஸீப் ஆகியவற்றின் உன்னதமான ஒளி வெள்ளத்தை அனைவரும் அறிந்துகொண்டு இன்பம் பெறுவதுடன், உர்தூ மொழியின் வளர்ச்சிக்கு தங்களை அர்பணித்துக் கொண்டு, சமூகத்தில் அனைத்து மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ முன்வர வேண்டும் என்ற நோக்கம் கொண்ட அமைப்பு தான் 'ஷிரீன் சுகன்' இயக்கமாகும். இந்த அமைப்பின் மூலம் அகில இந்திய அளவில் முஷைரா (உர்தூ கவியரங்கம்) நடத்தப்படுவது உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
புகழ்பெற்ற கவிஞர்கள், அமைச்சர்கள் பங்கேற்பு :
அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, உர்தூ மொழியின் மேன்மையை வளப்படுத்த நாம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. சென்னையில் நடைபெறும் அகில இந்திய உர்தூ கவியரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முஷைராவிற்கு தலைமை ஏற்று விழாவை சிறப்பிக்க உள்ளார்.
விழாவில் ஆற்காடு இளவரசர் அல்-ஹாஜ் நவாப் முகம்மது அப்துல் அலி, தமிழ்நாடு அரசின் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான், கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
அத்துடன், இந்திய அளவில் புகழ்பெற்ற உர்தூ கவிஞர்கள் மன்ஸர் போபாலி, இக்பால் அஷார், ஆகா சரோஷ், ஷமீம் இலாஹபாதி மற்றும் காஸிம் ஜர்சவி ஆகியோர் முஷைராவில் கலந்துகொண்டு, தங்களது ஆக்கங்களை அழகிய கவிதை வடிவத்தில் பாடி, உர்தூ மொழி ஆர்வலர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ள இருக்கிறார்கள். மேலும், இந்த கவிதைகளின் மாலை, பாரம்பரியமும் ஒற்றுமையும் உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கிறது. அத்துடன், மொழி, கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக, தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் புகழ்பெற்ற பிரமுகர்களையும் இந்த நிகழ்வு கௌரவிக்கும்.
தமிழக அரசு முன்வர வேண்டும் :
தமிழகத்தில் உர்தூ மொழியின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உர்தூ அகாடமி மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், உர்தூ மொழியின் அழகிய கலை வடிவம், கலாச்சாரம், பாரம்பரியம் இன்னும் அதிகமான மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவில்லை. உர்தூ மொழி, முஸ்லிம்களின் மொழி என்ற தப்பான எண்ணம் இருந்து வருகிறது. உண்மையில் உர்தூ மொழி முஸ்லிம்களுக்கான மொழி மட்டுமே கிடையாது. அந்த அழகிய மொழி அனைத்து மக்களையும் கவரும் ஒரு உன்னதமான மொழியாகும்.
எனவே, உர்தூ மொழியை அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உர்தூ கவியரங்கங்கள், கலந்துரையாடல்கள், உர்தூ மொழியின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு முயற்சிகள் அனைத்தும் தமிழக அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும். அதன்மூலம், உர்தூ மொழியின் அழகிய கலாச்சாரம் தமிழகத்தில் பரவி, அதன் இன்பத்தை இளைய சமுதாயம் அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும். அதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு, ஷிரீ''ன் சுகன் அமைப்பின் நிறுவன செயலாளர் உர்தூ தோஸ்த் நுஸ்ரத் அலி கான் தெரிவித்தார். அவரது எண்ணங்கள், ஆசைகள் மற்றும் உர்தூ மொழியின் வளர்ச்சிக்காக ஷிரீ''ன் சுகன் அமைப்பு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்தி விடைப்பெற்றோம்.
- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
================================
" பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்”
- முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையில் நியாயம் உள்ளதா? -
- ஜாவீத் -
இந்திய திருநாட்டில் பசுவை வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், அப்பாவி ஏழை முஸ்லிம்கள் மீது வட மாநிலங்களில் நடைபெறும் கொடூரத் தாக்குதல்களை தடுக்க அரசுகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அண்மையில் நடைபெற்ற தியாகத் திருநாள் அன்று, பசு மாட்டை குர்பானி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் எச்சரித்தன. அத்துடன், மேற்கு வங்கத்தில் புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட பாஜக அரசு, பசு மாடுகளை குர்பானி கொடுக்க பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.
மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாமல், தலைநகர் டெல்லியில் கூட மாடுகளை குர்பானி கொடுக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் கலாச்சாரம், விவசாயம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக பசு கருதப்படுகிறது. எனவே, பசுவின் பேரில் ஏழை முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், தியாகத் திருநாளின்போது பசு மாட்டை குர்பானி கொடுப்பதை தடுக்கும் பாசிச அமைப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் பசுவை தேசிய விலங்காக அறிவித்துவிட்டால், பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
தேசிய விலங்காக பசுவை அறிவிப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் பலமுறை விளக்கம் அளித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், ஒட்டுமொத்த தேசிய விலங்காக அறிவிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. பொருளாதார இழப்புகள், பால் உற்பத்தி பாதிப்பு மற்றும் இறைச்சி ஏற்றுமதி போன்ற காரணங்களை முன்வைத்து இதற்கு எதிர் கருத்துக்களும் நிலவுகின்றன.அனைத்து தரப்பு மக்களிடையே ஒருமித்த கருத்து மற்றும் பல்வேறு அரசியல், பொருளாதார காரணிகள் இதற்கு தடையாக உள்ளன.
முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையில் உள்ள நியாயம் :
இத்தகைய சூழ்நிலையில் தான், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையின்போது இந்த கோரிக்கை மேலும் வலுவடைந்தது. இது போன்ற கோரிக்கைகள் இதுவரை இந்து அமைப்புகளிடமிருந்தே வந்துள்ள நிலையில், முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கும் இக்கோரிக்கை தனித்துவமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
அகில இந்திய முஸ்லிம் ஜமாத்' அமைப்பின் தேசியத் தலைவரான மவுலானா ஷஹாபுதீன் ரிஸ்வி, பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க வேண்டும் என்ற மதானியின் கோரிக்கைக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளார். “இக்கோரிக்கை தொடர்பாகப் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே முதன்மையான நோக்கம். அந்த நோக்கத்தை முன்னிறுத்தி, முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய ஒரு கூட்டு மனு தயாரிக்கப்பட்டு, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இக்கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று மவுலானா ஷஹாபுதீன் ரிஸ்வி வலியுறுத்தி உள்ளார்.
ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய ஷியா தனிச் சட்ட வாரியத்தின் தேசியப் பொதுச்செயலாளர் மவுலானா யாசூப் அப்பாசும் இந்த கோரிக்கையை வரவேற்றுள்ளார். “பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. அக்கோரிக்கையின் மீது முழு மனதுடன் செயல்படுவது அரசின் பொறுப்பு. சில மாநிலங்களில் பசுக்கள் மீதான தடைகள் எதுவும் இன்றி உண்ணப்படுகிறது. அதேவேளையில், வேறு சில மாநிலங்களில் பசுவின் பெயரால் உயிர்கள் பறிக்கப்படும் முரண்பாடான சூழல் நிலவுகிறது. இதை தடுக்க, பசுக்கள் குறித்த அரசின் நோக்கம், அதன் கொள்கைகளில் தெளிவாகப் பிரதிபலிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு சீரான அணுகுமுறை உறுதி செய்யப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் துணைத்தலைவர் கவுசர் ஹயாத் கானும் ஆதரவு தெரிவித்துள்ளார். “இக்கோரிக்கை தொழில்நுட்ப ரீதியாகச் சரியானதே. அதனை அரசு முழுமையான நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்த வேண்டி முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் ஒரே மேடையில் திரண்டால் மட்டுமே பலன் கிடைக்கும். கோவா, அசாம் மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி இன்றும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உண்ணப்படுகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பசுவதை அரசியல்மயமாக்கப்படுகிறது. இத்தனைக்கும் இம்மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியில் உள்ளது” என்றும் கவுசர் ஹயாத் கான் விமர்சித்துள்ளார்.
சன்னி பிரிவு முஸ்லிம்களின் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் மூத்த நிர்வாக உறுப்பினரான மவுலானா காலித் ரஷீத் பிரங்கி மெஹாலி, “நமது இந்து சகோதரர்கள் பசு மீது மதரீதியான உணர்வுகளைக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பசுவதை தொடர்பான சட்டங்களில் ஒருமைப்பாடு இருக்க வேண்டும். இதற்காக, பசுவதைக்கு எதிரான ஒரே சீரான சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். .
இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் 'குரேஷி' சமூகத்தினரின் முக்கிய அமைப்பான 'அகில இந்திய குரேஷி ஜமாத்' தலைவர் சிராஜ் குரேஷி, “மேற்கு வங்கத்தில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகளே இதற்கு காரணமாகி விட்டது. பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க தேவைப்படும் பட்சத்தில், பிரதமரைச் சந்தித்துப் பேச எனது அமைப்பு முயற்சிக்கும். ஏனெனில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வலுக்கும் கோரிக்கைகள் :
இதுஒருபுறம் இருக்க, பசு வதை தொடர்பாக நடைபெறும் அரசியல் ஆதாய முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலும், கும்பல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலும் இத்தகைய முயற்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த முஸ்லிம் அமைப்புகள் தம் சமூகத்தினர் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. இத்தகைய பரபரப்பான சூழலில், ஆக்ராவில் தியாகத் திருநாள் அன்று ஈத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, 'உத்தரப் பிரதேச முஸ்லிம் மகாபஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி பதாகைகளை ஏந்தி நின்றனர். அந்தப் பதாகைகளில், கோமாதாவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் பசு என்பது நாட்டின் கலாச்சாரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் சின்னமாகும். எனவே, அதற்கு தேசிய விலங்கு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர். நாட்டில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்தி, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி சீலம்பூா் பகுதியில் பக்ரீத் தொழுகைக்குப் பின்னா் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. பொதுவாக இந்த வகையான கோரிக்கைகள் இந்து அமைப்புகளுடன் தொடா்புடையதாக கருதப்பட்ட நிலையில், முஸ்லிம் அமைப்புகள் இதனை முன்வைத்திருப்பது நாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்திய முஸ்லிம் சமூகத்தினா் புதிய சீலம்பூரின் குறுகிய தெருக்களில் ஊா்வலமாகச் சென்றனா். ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் அஷ்ரத் மதானி முன்வைத்து வரும் இந்த கோரிக்கைக்கு உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், தில்லியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
உயர்நீதிமன்றம் கருத்து :
பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும், எனவே இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பசு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் என்பவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு, பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், பசு பாதுகாப்பு பணி ஒரு மதத்தின் பணி மட்டுமல்ல, பசு இந்தியாவின் கலாச்சாரமாகும், மதத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் கலாச்சாரத்தையும் காப்பாற்றும் பணி இதுவாகும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களில், அரசு கோசாலைகளை கட்டுகிறது. ஆனால் பசுவை பராமரிக்க வேண்டிய மக்கள் மாடுகளை கவனிப்பதில்லை. அதுபோலவே, தனியார் கோசாலைகளும் இன்று வெறும் போலித்தனமாக மாறிவிட்டன. இவர்கள் பொதுமக்களிடம் நன்கொடை பெற்று அரசாங்கத்தின் உதவியுடன் பசு ஊக்குவிப்பு என்ற பெயரில் செய்கிறார்கள், ஆனால் அதை தங்கள் சொந்த நலனுக்காக செலவிடுகிறார்கள் மற்றும் பசுவை கவனித்துக்கொள்வதில்லை என தெரிவித்திருக்கிறது.
மத்திய அமைச்சர் விளக்கம் :
அதேநேரத்தில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை குறித்து கருத்து கூறியுள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், 'இது இரட்டை நிலைப்பாடு. ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்கும் இடையிலான உறவை வரையறுக்க, முறையான அறிவிப்பு எதுவும் தேவையில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தேசிய விலங்காக பசு அறிவிப்பது குறித்து கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது. பல்வேறு அமைப்புகள் மற்றும் எம்.பி.க்களிடம் இருந்து இந்த கோரிக்கை வந்து இருந்தாலும், இந்த கோரிக்கைகள் எதுவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,பசுவதை தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டங்கள் மாறுபட்டவை என்றும், தேவைக்கேற்ப அங்கு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மேக்வால் விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் பசு மாடுகளை பலியிடம் விவகாரத்தில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக விரும்பவில்லை என்பது மிகத் தெளிவாக தெரியவருகிறது. பாஜகவின் அரசியல் விளையாட்டுகள் மூலம் பாதிப்பு அடைவது ஏழை கிராமத்து இந்து மக்களே என்பதையும் அண்மையில் நாடு நன்கு உணர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
=========================
" இஹ்ராம் ஆடைகள் மூலம் அழகிய பைகள், தலையணைகள்,
நினைவுப் பொருட்கள் தயாரிப்பு "
- சவூதி அரேபியாவின் புதிய முயற்சி -‘
புனித ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட இஹ்ராம் ஆடைகளைப் பைகள், தலையணைகள் மற்றும் நினைவுப் பொருட்களாக மாற்றும் முயற்சியில் சவூதி அரேபியா வெற்றி கண்டுள்ளது.
இஹ்ராம் ஆடைகள் என்பது இஸ்லாமிய புனித யாத்திரைகளான ஹஜ் மற்றும் உம்ராவின் போது முஸ்லிம்கள் அணியும் தூய்மையான மற்றும் எளிமையான பிரத்யேக ஆடைகளாகும். இதன் முக்கிய நோக்கம் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதாகும். ஆண்கள் கண்டிப்பாக தையல் இல்லாத வெள்ளை நிற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். இஸார் என்பது இடுப்பிலிருந்து கணுக்கால் வரை உடலின் கீழ் பகுதியைச் சுற்றிக் கட்டப்படும் துணி. ரிடா என்பது உடலின் மேல் பகுதியில் போர்த்தப்பட்டு, இடது தோள் வழியாகச் சென்று வலது தோளுக்குக் கீழே முடிச்சுப் போடப்படும் துணி. அத்துடன் தைக்கப்படாத மற்றும் கணுக்காலை மறைக்காத செருப்புகளை மட்டுமே அணிய வேண்டும். தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை அணியக் கூடாது. பெண்களுக்கு இஹ்ராம் என்று தனியாக எந்த ஆடையும் கிடையாது. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அணியும் முழு உடலையும் மறைக்கக் கூடிய இஸ்லாமிய முறையிலான ஆடைகளை அணியலாம். ஆண்கள் போலல்லாமல் பெண்கள் தைக்கப்பட்ட ஆடைகளையும் அணியலாம்.
இஹ்ராம் மூலம் அழகிய பொருட்கள் தயாரிப்பு :
இத்தகைய சூழ்நிலையில், பயன்படுத்தப்பட்ட இஹ்ராம் ஆடைகள் மூலம் அழகியப் பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் சவூதி அரேபியா தற்போது ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது. சவூதி அரேபியாவின் தேசிய கழிவு மேலாண்மை மையம், புனிதத் தலங்களில் ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட இஹ்ராம்களைச் சேகரித்து, அவற்றைச் சுத்தம் செய்து, புதிய பொருட்களாக மாற்றி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஹஜ் பருவத்திலும் டன் கணக்கான துணிக் கழிவுகள் குப்பைக் கிடங்குகளுக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த நிலையான இஹ்ராம் முயற்சியின் மூலம் 211 டன்களுக்கும் அதிகமான இஹ்ராம் துணிகள் குப்பைக் கிடங்குகளுக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 30 பருவகால வேலைவாய்ப்புகளை உருவாக்கியதுடன், உற்பத்தி செய்யும் குடும்பங்களைச் சேர்ந்த 25 தையல் கலைஞர்களுக்கு பொருளாதார வாழ்வாதார அதிகாரம் அளித்துள்ளது.
==================
"இஹ்ராம் முயற்சியின் மூலம் 211 டன்களுக்கும் அதிகமான இஹ்ராம் துணிகள் குப்பைக் கிடங்குகளுக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 30 பருவகால வேலைவாய்ப்புகளை உருவாக்கியதுடன் பல தையல் கலைஞர்களுக்கு பொருளாதார அதிகாரம் அளித்துள்ளது"
==================
இந்த அழகிய புதிய முயற்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள சவூதி அரேபியாவின் தேசிய கழிவு மேலாண்மை மையத்தின் செய்தித் தொடர்பாளர் சுல்தான் அல்-ஹர்த்தி, நிலையான இஹ்ராம் முயற்சி கடந்த ஆண்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட பொருட்களை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார். இவற்றில் பைகள், தலையணைகள், உறைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் அடங்கும். இவை அனைத்தும் யாத்ரீகர்கள் தங்கள் சடங்குகளை முடித்த பிறகு விட்டுச்செல்லும் ஆடைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது ?:
பயன்படுத்தப்பட்ட இஹ்ராம்கள் புனித தலங்கள் முழுவதும் உள்ள நியமிக்கப்பட்ட சேகரிப்பு மையங்களிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. அங்கிருந்து, அவை கடுமையான சுகாதாரத் தரங்களின் கீழ் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, ஒரு வகைப்படுத்தும் செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கிருமி நீக்க செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடக்கும் வரை எந்தப் பொருட்களும் உற்பத்திக்குள் நுழையாது. அரசு, தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளைச் சேர்ந்த 22 நிறுவனங்களுடனான கூட்டாண்மைகளின் அடிப்படையில் இந்த மையம் இந்த முயற்சியை உருவாக்கியுள்ளது. இது செயல்பாட்டைத் தொடர்ந்து நடத்துவதில் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பலன்கள் :
இந்த முயற்சியின் மூலம் 211 டன்களுக்கும் அதிகமான துணி வகைகள் குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளன. இது ஹஜ் பருவத்தில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க பங்களித்துள்ளது என்று சவூதி அரேபியாவின் தேசிய கழிவு மேலாண்மை மையம் கூறுகிறது. பொருட்களை மறுசுழற்சி செய்வது, போக்குவரத்து மற்றும் குப்பைக் கிடங்கு செலவுகளைக் குறைப்பதோடு, மீட்கப்பட்ட துணியிலிருந்து மதிப்பையும் உருவாக்கியுள்ளது.
வேலைவாய்ப்பு மட்டத்தில், இந்த முயற்சி 30 பருவகால வேலைகளை உருவாக்கியுள்ளது. அத்துடன், உற்பத்தி குடும்பங்களைச் சேர்ந்த 25 தையல் கலைஞர்களுக்கு ஆதரவளித்தது. இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உற்பத்திச் செயல்பாட்டில் நேரடிப் பங்கு கிடைத்தது.
ஹஜ் யாத்ரீகர்களிடையே விழிப்புணர்வு :
ஒவ்வொரு பருவத்திலும் ஹஜ் யாத்ரீகர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் இஹ்ராம்களை நன்கொடையாக வழங்கும் விகிதம் அதிகரித்து வருவதாக சவூதி அரேபியாவின் தேசிய கழிவு மேலாண்மை மையம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் அறிகுறியாகும். இந்த முன்னெடுப்புடன் தொடர்புடைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர்.
புனிதத் தலங்களிலிருந்து கிடைக்கும் உபரி உணவை இயற்கை உரமாக்கும் தனித்துவமான முயற்சியிலும் இம்மையம் ஈடுபட்டு வருகிறது. ஹஜ் காலக்கட்டம் முழுவதும் 'வட்டப் பொருளாதாரக்' கோட்பாடுகளைப் பரவலாகச் செயல்படுத்தும் விரிவான முன்னெடுப்பின் ஒரு பகுதியாகவே இது அமைகிறது.
தெளிவான செயல்முறைகளும் வலுவான கூட்டாண்மைகளும் நிலவும்போது, கழிவுகளைப் பயனுள்ள வளங்களாக மாற்ற இயலும் என்பதை இத்திட்டம் நிரூபிக்கிறது. மேலும், இம்மாதிரியை சவூதி இராச்சியம் முழுவதிலும் உள்ள பிற துறைகளிலும் செயல்படுத்த முடியும் என்று நம்பிக்கையும் சவூதி அரேபியாவின் தேசிய கழிவு மேலாண்மை மையத்திற்கு ஏற்பட்டுள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
Life is a circle of happiness, sadness, hard times and good times.
If you are going through hard times have faith that good times are on the way.
பாதைகளை மட்டும் சரியாக தேர்ந்தெடுங்கள்.
இன்று இல்லையென்றாலும் நாளையாவது உங்கள் இலக்கை அடைந்து விடலாம்.
பாதைகள் கொஞ்சம் கரடு முரடாக இருந்தாலும்,
நேரான, நேர்மையான பாதைகளாக இருக்க வேண்டும்.
அதுதான் வெற்றி இலக்கான வழி.
2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் பெருவிழா மகத்தான வெற்றி....!
வருங்கால ஹஜ் பருவங்களை மேம்படுத்த சவூதி அரேபியா திட்டம்...!!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் பெருவிழாவை, சவூதி அரேபியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நவீன வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட யாத்திரைகளில் ஒன்றாகத் திகழ்ந்த இந்த ஹஜ் பெருவிழாவின்போது, சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான ஹஜ் பயணிகள் மிகவும் பாதுகாப்புடன் தங்களது வாழ்நாளின் முக்கிய கடமையான ஹஜ்யை நிறைவேற்றினர்.
சவூதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் கீழ் ஹஜ் சேவைகள் தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்டு வருவதைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆண்டின் புனித ஹஜ் யாத்திரையானது கூட்ட மேலாண்மை, பொது சுகாதாரத் தயார்நிலை மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்திருந்தது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் விரிவான சுகாதாரச் சேவைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, புனிதத் தலங்கள் முழுவதும் ஹஜ் யாத்திரீகர்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற நடமாட்டத்தை உறுதி செய்தது.
உலகளாவிய பொது சுகாதாரக் கவலைகள் இருந்தபோதிலும், எந்தவொரு தொற்றுநோய்ப் பரவலும் இன்றி ஹஜ் யாத்திரைக் காலத்தை நிறைவுசெய்து, சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறை ஒரு பெரும் சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்த யாத்திரையின் போது மருத்துவக் குழுக்கள் 25 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார சேவைகளை வழங்கின. சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு உதவுவதற்காக மருத்துவ ரோபோக்களையும், மருந்துகளை விநியோகிக்க ட்ரோன்களையும், நாள்பட்ட நோய்கள் மற்றும் பிற உடல்நல அபாயங்களைக் கொண்ட யாத்ரீகர்களைக் கண்காணிக்க அணியக்கூடிய ஸ்மார்ட் கருவிகளையும் அதிகாரிகள் பயன்படுத்தினர். இந்த யாத்திரைக் காலத்தில், 33 திறந்த இதய அறுவை சிகிச்சைகள் உட்பட, 410 சிக்கலான அறுவை சிகிச்சைகளை சுகாதார மையங்கள் மேற்கொண்டன.
அத்துடன், 20 லட்சத்திற்கும் அதிகமான ஹஜ் யாத்ரீகர்களின் நடமாட்டத்தை நிர்வகிக்க, செயற்கை நுண்ணறிவின் ஆதரவுடன் கூடிய ஒரு அதிநவீன பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வலையமைப்பு தேவைப்பட்டது. புனிதத் தலங்கள் முழுவதும் பாதுகாப்பான நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக, ஆயிரக்கணக்கான கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் பல முன்கணிப்பு வழிமுறைகள் மூலம் கூட்டத்தின் போக்கைப் பகுப்பாய்வு செய்த, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சவாஹர் தளத்தை சவூதி அரேபியா பயன்படுத்தியது. ஹஜ் பருவம் முழுவதும் யாத்ரீகர்களுக்கு ஆதரவளிக்க சவூதி அதிகாரிகள் விரிவான தளவாட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மக்கா மற்றும் புனிதத் தலங்கள் முழுவதும் 712 மில்லியனுக்கும் அதிகமான உணவு மற்றும் பானப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. அதேநேரத்தில் சுமார் 22 ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட துப்புரவுக் குழுக்கள் 2 லட்சத்து 66 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான கழிவுகளை அகற்றின. சுற்றுச்சூழல் முயற்சிகளில், வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக புனிதத் தலங்கள் முழுவதும் 60 ஆயிரம் மரங்கள் நடுதல் மற்றும் 20 ஆயிரம் விளக்குகள் பொருத்துதல் ஆகியவை அடங்கும்.
சவூதி அரேபியாவிற்கு குவியும் பாராட்டுகள் :
2026 ஆம் ஆண்டு ஹஜ் பெருவிழாவை மாபெரும் வெற்றி பெறச் செய்ததில் பெரும் பங்காற்றிய அல்-மஸ்ஜித் அல்-ஹரம் மற்றும் மஸ்ஜித்துன் நபவி ஆகிய இரு புனித மஸ்ஜித்துகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் ஆகியோருக்குப் பல அரபு மற்றும் வளைகுடாத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அரபு லீக்கின் பொதுச் செயலாளர் அகமது அபுல் கெய்த், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் மாபெரும் வெற்றியைப் பாராட்டினார். யாத்ரீகர்கள் ஹஜ் சடங்குகளை முழு எளிமையுடனும், அமைதியான ஆன்மீகச் சூழலிலும் நிறைவேற்றுவதற்கு வழிவகுத்த, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய உயர் மட்ட ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்த சேவைகளையும் அவர் பாராட்டினார். மேலும், சவூதி அரேபியாவுக்கும், அதன் தலைமைக்கும், அதன் மக்களுக்கும் தொடர்ச்சியான பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஏற்பட வாழ்த்து தெரிவித்தார்.
சவூதி தலைமைக்கு வாழ்த்து தெரிவித்து, அரபு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது அல்-யமாஹி, புனித தலங்கள் முழுவதும் காணப்பட்ட ஒருங்கிணைந்த சேவை கட்டமைப்பு, மிகவும் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கான கூட்ட நெரிசல் ஆகியவை, இஸ்லாமிய சமூகத்திற்கு சேவை செய்வதில் சவூதி அரேபியாவின் முன்னணி உலகளாவிய அந்தஸ்தையும், யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன என்று கூறினார். இரு புனித மஸ்ஜித்துகளுக்கு சவூதி அரேபியா வழங்கிய அயராத, பல்துறை பங்களிப்புகளை அரபு நாடாளுமன்றம் மிகுந்த பெருமையுடனும் நன்றியுடனும் கருதுவதாகவும், அதன் அறிவார்ந்த தலைமையின் கீழ் தேசத்தின் நீடித்த பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்வதாகவும் அல்-யமாஹி உறுதிப்படுத்தினார்.
இதேபோன்று, வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜாசிம் அல்பூதைவி, ஹஜ்ஜின் வெற்றிக்காக மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சவூதி அரசாங்கத்தின் மிகச்சிறந்த சேவைகளையும், ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழங்கப்பட்ட தாராளமான கவனிப்பையும் அவர் பாராட்டினார். அரசின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டவும், அதன் அறிவார்ந்த தலைமைக்குத் தொடர்ச்சியான வெற்றியை வழங்கவும், யாத்ரீகர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு அவர்கள் தங்கள் தாயகங்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதிசெய்யவும் எல்லாம் வல்ல இறைவனிடம் அல்பூதைவி பிரார்த்தனை செய்தார்.
ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக், இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரை வெற்றிகரமாக அமைந்ததற்காக மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஹஜ் காலத்தில் யாத்திரீகர்கள் தங்கள் சடங்குகளை எளிதாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், அனைத்து வளங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலமும் ஆண்டுதோறும் காணக்கூடிய உறுதியான வளர்ச்சியை அவர் வெகுவாகப் புகழ்ந்தார். இந்த புனிதமான வருடாந்திர சடங்கை ஏற்பாடு செய்வதிலும், இரு புனித மஸ்ஜித்துகள் மற்றும் புனிதத் தலங்களைப் பராமரிப்பதிலும் சவூதி அரசாங்கத்திற்குத் தொடர் வெற்றியை அருளுமாறு அவர் இறைவனைப் பிரார்த்தித்தார்.
குவைத் அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா, ஹஜ் யாத்திரையின் வெற்றிக்காக சவூதி தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், யாத்திரீகர்களுக்குத் தடையற்ற மற்றும் சிறப்பான சேவைகளை வழங்குவதற்காகவும், தடைகளை அகற்றுவதற்காகவும் சவூதி அரசாங்கத் துறைகள் இரவும் பகலும் அயராது உழைத்ததாக அவர் குறிப்பிட்டார். புனித ஹரம் மஸ்ஜித்தியில் நடைபெற்று வரும் விரிவாக்க மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும், யாத்திரீகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்கள் ஹஜ் சடங்குகளை எளிதாக நிறைவேற்றவும் உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைகள் மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களையும் அவர் மேலும் பாராட்டினார். இதேபோன்று, பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா, இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரை மகத்தான வெற்றியைப் பெற்றதற்கும், அது மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததற்கும் மன்னர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் வலியுறுத்தல் :
2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் பெருவிழா வெற்றிகரமாக நிறைவு அடைந்ததையடுத்து, வருங்கால ஹஜ் பருவங்களை மேம்படுத்த, ஹஜ் யாத்ரீகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா அழைப்பு விடுத்துள்ளார். 2026 ஆண்டு ஹஜ் செய்த யாத்ரீகர்கள், வருங்கால ஹஜ் பருவங்களில் சேவைகளை மேம்படுத்த உதவும் வகையில் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹஜ் யாத்ரீகர்களின் அனுபவங்களைக் கேட்பதும், அவர்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்துவதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர் எடுத்துரைத்தார். இத்தகைய கருத்துக்கள் சேவையின் தரத்தை உயர்த்துவதிலும், ஹஜ் யாத்ரீகர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை வளப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று ஹஜ் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா சூழலமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியின் மையமாக யாத்ரீகர்களின் அனுபவமே உள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார். யாத்ரீகர்களின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், கள அடிப்படையிலான ஆலோசனைகள் மற்றும் யோசனைகள் சேவையின் செயல்திறனை அதிகரிப்பதற்கும், செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் கணிசமாகப் பங்களிக்கின்றன என்று அமைச்சர் விளக்கினார்.
இந்த முன்னெடுப்பானது, ஹஜ் யாத்ரீகர்கள் தங்கள் சடங்குகளை நிறைவு செய்த பிறகு பெறும் நேரடி அனுபவங்களையும் கருத்துக்களையும் பயன்படுத்திக்கொண்டு, சேவைகளின் மதிப்பீடு மற்றும் மேம்பாட்டில் பயனாளிகளின் ஈடுபாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பரந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். 2026 ஆம் ஆண்டு ஹஜ் பெருவிழாவைத் தொடர்ந்து அமைச்சரின் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்தப் பருவத்தில், யாத்ரீகர்கள் சவூதி இராச்சியத்திற்கு வந்தடைவது முதல் சடங்குகளை நிறைவு செய்வது வரையிலான பயணத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான தொழில்நுட்ப, அமைப்புசார் மற்றும் சேவை முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டன. கூட்ட மேலாண்மை மற்றும் சேவை வழங்குதலுக்காக டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் இந்த முயற்சிகள் வழங்கப்பட்டன.
சவூதி அரேபியா விஷன் 2030-இன் நோக்கங்களுக்கு இணங்க, இந்தப் பருவத்தில் விழிப்புணர்வு, வழிகாட்டுதல் மற்றும் போக்குவரத்து முன்னெடுப்புகளுடன், டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஸ்மார்ட் செயலிகளின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமும் காணப்பட்டது. இந்தத் தொலைநோக்குப் பார்வையானது, ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்துவதையும், மேலும் தடையற்ற, வசதியான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சேவை மதிப்பீட்டில் யாத்ரீகர்களை ஈடுபடுத்துவது, நீடித்த வளர்ச்சிக்கான மிகவும் பயனுள்ள வழிமுறைகளில் ஒன்றாகும் என்பது கவனிக்கப்படுகிறது. பயனாளிகளின் உண்மையான அனுபவங்களின் அடிப்படையில் சவால்களையும் வாய்ப்புகளையும் கண்டறியவும், அவதானிப்புகளையும் பரிந்துரைகளையும் சேவைத் தரத்தையும் செயல்பாட்டுத் திறனையும் வலுப்படுத்தும் மேம்பாட்டு முயற்சிகளாக மாற்றவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், தரவுகள், செயல்பாட்டுக் குறியீடுகள் மற்றும் யாத்திரீகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, சேவைத் தரத்தை மேலும் மேம்படுத்தவும், எதிர்வரும் பருவங்களில் எதிர்பார்க்கப்படும் பெருகிவரும் யாத்திரீகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஹஜ் அமைப்பை ஆண்டுதோறும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது
2027 ஹஜ் பருவத்திற்கான ஏற்பாடுகள் :
இதனிடையே, ஹஜ் மற்றும் உம்ரா துறை அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ராபியா, 2027 ஹஜ் பருவத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஹஜ் விவகார அலுவலகங்களுக்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை விவரிக்கும் ஆவணத்தை வெளியிட்டார். மக்காவில் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர நிறைவு விழாவில் உரையாற்றிய அமைச்சர், பல புதிய முன்னெடுப்புகளை அறிவித்தார். புனிதத் தலங்களில் வழங்கப்படும் சேவைகள், மக்கா மற்றும் மதீனாவில் தங்குமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது இதில் ஒன்றாகும். மேலும், யாத்திரீகர்கள் தங்கியிருக்கும் காலம் முழுவதும் போக்குவரத்து மற்றும் உணவுச் சேவைகளை வழங்குவது கட்டாயமாக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
மேலும், ஹிஜ்ரி 1448-ஆம் ஆண்டிற்கான ஹஜ் விவகார அலுவலகங்களின் கால அட்டவணையை அமைச்சர் விளக்கினார். இதன்படி, ஜூன் 30, 2026 முதல், ஹஜ் விவகார அலுவலகங்களுக்கும் வெளிநாட்டு ஹஜ் நிறுவனங்களுக்கும் மக்கா மற்றும் மதீனாவில் முன்னுரிமை அடிப்படையில் தங்குமிடங்களை முன்பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். மேலும், ஆகஸ்ட் 13, 2026-இல் முடிவடையும் காலப்பகுதிக்குள் விரிவான தொகுப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, புனிதத் தலங்களில் தற்போதுள்ள இடங்களையே தக்கவைத்துக்கொள்ள விரும்பும் அலுவலகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
==============================================