Saturday, May 23, 2026

சரியான முடிவு....!

 நம்முடைய வாழ்க்கை 

நன்றாக இருப்பதற்கு 

எந்த அதிசயமும் நடக்கத் தேவையில்லை. 

நாம் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருந்தால் மட்டும் போதுமானது. 

தவறான முடிவுகள் எடுத்தாலும் 

அதன்மூலம் படிப்பினை பெற்று 

சரியான பாதையில் பயணிக்க 

தொடங்கிவிட வேண்டும்.



மாணவிக்கு பரிசு...!

 மகிழ்ச்சியான தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த, முஸ்லிம் மாணவி ஆயிஷா தஸ்னீம் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.



Your Message....!

 Your life is your message to the world. 

Make sure it's inspiring.




Friday, May 22, 2026

பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை....!

" பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை "

 உயர்கல்வியில் சாதிக்க விரும்பும் இளம் முஸ்லிம் மாணவி ஆயிஷா தஸ்னீம்....! 

- ஓர் சிறப்பு நேர்காணல் -

பல்வேறு நெருக்கடிகள், சவால்களுக்கு மத்தியில் இந்திய முஸ்லிம் மாணவ மாணவியர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்தி, அதில் சாதித்தும் வருகிறார்கள். கல்வி என்ற ஆயுதம் மூலம் வாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், துணிச்சலுடன் அவர்கள் கல்வியில் தங்களது கவனத்தை செலுத்தி, அதில் வெற்றிகரமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். 

பள்ளிக்கல்வியை தொடர்ந்து உயர்கல்வியிலும் அவர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. அதன் காரணமாக பாசிச அமைப்புகள் கொடுக்கும் சவால்களுக்கு மத்தியில் கூட, முஸ்லிம் மாணவ மாணவியர், கல்வியை ஒரு மிகப்பெரிய ஆயுதமாக கருதி, அதில் தங்களது கவனத்தை செலுத்தி, சாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் அண்மையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், ஏராளமான முஸ்லிம் மாணவ மாணவியர் அதிகளவு மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். 

இப்படி, பலர் சாதித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு முஸ்லிம் மேனிலைப்பள்ளியில் படித்த மாணவி ஆயிஷா தஸ்னீம், 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். சாதாரண ஒரு தையற்கலைஞரின் மகளான இவர், கல்வியில் மிகப்பெரிய அளவுக்கு பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர். எனினும், கல்வியின் மூலம் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இளம் மாணவி ஆயிஷா தஸ்னீமுக்கு ஏற்பட்டதால், அதில் முழு கவனம் செலுத்தி 10வது வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று, தம்முடைய குடும்பத்தை மட்டுமல்லாமல், முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஆயிஷா தஸ்னீம் பெருமை சேர்த்துள்ளார். 

சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீமை மணிச்சுடர் நாளிதழ் நிர்வாகம் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது சிறப்பு நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்பியது. அதன்படி, சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீமை நேரில் சந்தித்து அவரது கல்வி ஆர்வம் குறித்து விவரங்களை சேகரித்தார். அந்த சிறப்பு நேர்காணலின் முழு விவரம் இதோ :

தையற் கலைஞரின் மகள் :

என்னுடைய தந்தை காஜா மொய்தீன் ஒரு சாதாரண தையற் கலைஞர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த சாலையூர் எங்களது பூர்வீகம். ஆனால், நாங்கள் சென்னை வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது நாங்கள் சென்னைவாசிகளாக வாழ்ந்து வருகிறோம். என்னுடைய தாய் டியூஷன் சென்டர் நடத்தி மாணவ மாணவியர்களுக்கு டியூஷன் கற்றுத் தருகிறார். என்னுடைய மூத்த சகோதரர் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.பி. படிப்பு படித்து வருகிறார். 

எனக்கு எப்போதும் கல்வியில் அதிக ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், என்னுடைய தாய் டியூஷன் சென்டர் நடத்தி, மாணவ மாணவியருக்கு கல்வி சொல்லி தந்து வருவது என்னுள் ஒரு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நான் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினேன். 

முறையான பயிற்சியின் மூலம் வெற்றி :

சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால், ஒரு மனிதன் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று சொல்வார்கள். அந்த வகையில் நானும் தொடர்ந்து முறையான பயிற்சியில் ஈடுபட்டேன். 10ஆம் வகுப்பு தேர்வுக்காக சரியான திட்டமிடல் செய்து பாடங்களை படித்து வந்தேன். பாடங்களில் ஏதாவது சந்தேகம் வந்தால், என்னுடைய தாயிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்வேன். காலை பஜர் தொழுகைக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு மணி நேரம் பாடங்களை படிப்பதை வழக்கமாக கொண்டேன். இதேபோன்று, இரவு 10 மணி வரை பாடங்களில் கவனம் செலுத்தினேன். 

சமூக வலைத்தளங்கள் பக்கம் என்னுடைய கவனம் செல்லவில்லை. அப்படி செல்வதை நானும் விரும்பவில்லை. என்னுடைய பெற்றோரும் அதை ஊக்கவிக்கவில்லை. இதன் காரணமாக என்னுடைய முழு கவனமும் படிப்பில் மேல் மட்டுமே இருந்தது. அதனால், நான் படித்த அனைத்தும் என்னுடைய நினைவில் அசைப்போட்டுக் கொண்டே இருந்தது. இதனால் 10ஆம் வகுப்பு தேர்வின்போது, நான் அனைத்து பாடங்களிலும் நன்றாக தேர்வு எழுதினேன். 10ஆம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றாலும், தமிழ் பாடத்தில் 100க்கு நூறு மதிப்பெண்கள் கிடைக்காமல், 98 மதிப்பெண்கள் மட்டுமே எனக்கு கிடைத்தது. அதனால் எனக்கு கொஞ்சம் மன வருத்தம் இருக்கவே செய்கிறது. எனினும், பிற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று அதன்மூலம் என்னுடைய குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரோல் மாடலாக அப்துல் கலாம்  :

எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது. என்னுடைய ரோல் மாடலாக மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை எடுத்துக் கொண்டு, அவரது வழியை பின்பற்றி நான் கல்வியில் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறேன்.  கலாம் அய்யா அவர்களின் அறிவியல் ஞானம், அவரது திறமை மற்றும் பேச்சாற்றால் ஆகியவற்றை கண்டு நான் வியந்து இருக்கிறேன். என்னுடைய கல்வி ஆர்வத்தை அறிந்துகொண்ட என்னுடைய பள்ளி தலைமை ஆசிரியை கண்மணிபிரியா மற்றும் பிற ஆசிரியைகள் அனைவரும் எனக்கு நன்கு ஊக்கப்படுத்தி, கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை தொடர்ந்து ஏற்படுத்தினர். இதனால் எனக்கு கல்வியில் தேசிய அளவில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. 

                                                ==================

"காலை பஜர் தொழுகைக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு மணி நேரம் பாடங்களை படிப்பதை வழக்கமாக கொண்டேன். இதேபோன்று, இரவு 10 மணி வரை பாடங்களில் கவனம் செலுத்தினேன். சமூக வலைத்தளங்கள் பக்கம் என்னுடைய கவனம் செல்லவில்லை. அப்படி செல்வதை நானும் விரும்பவில்லை. என்னுடைய பெற்றோரும் அதை ஊக்கவிக்கவில்லை"

                                                ==================

10வது வகுப்பு தேர்வுக்கு நான் தயாராகும்போது, ஒவ்வொரு தேர்வின்போது, நான் மற்றும் பிற மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை ஆசிரியைகள் திருத்தி, அதில் நம்முடைய பிழைகள் குறித்தும், அதிக மதிப்பெண்கள் பெற எந்தவகையில் விடைகளை எழுத வேண்டும் என்றும் நமக்கு விளக்கம் அளிப்பார்கள். இந்த விளக்கங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் இருந்தது. ஒவ்வொரு பாடத்திலும் மாணவிகள் எப்படி கவனம் செலுத்தி தேர்வு எழுத வேண்டும் என்று ஆசிரியைகள் நமக்கு சொல்லி தந்தார்கள். உண்மையில் இவை அனைத்தும் நான் அதிகளவு மதிப்பெண்கள் பெற ஒரு காரணம் என்று உறுதியாக கூறவேன். 

நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் :

எனக்கு மருத்துவராக வர வேண்டும் என்ற விருப்பம் மற்றும் கனவு இருப்பதால், நீட் தேர்வில் நான் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் காரணமாக, தற்போதே அதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன். இந்த முயற்சியில் என்னுடைய தாய் மற்றும் தந்தை எனக்கு துணையாக இருந்து வருகிறார்கள். அத்துடன் நான் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பிற ஆசிரியைகள் கூட, என்னுடைய மருத்துவர் கனவுக்கு தீனி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நல்ல ஆலோசனைகள் தந்துகொண்டிருக்கிறார்கள். இதனால், நான் நிச்சயம் நீட் தேர்வில் தேசிய அளவில் சாதனை புரிவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

என்னுடைய இந்த வெற்றிக்கும் அதிகளவு மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்ததற்கும், ஏக இறைவனின் அருள் மட்டுமே காரணமாகும். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் நாம் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியை தரும் என்பதற்கு என்னுடைய வெற்றி ஒரு காரணம் என்றே கூறுவேன். தொடர் முயற்சிகள், தொடர் பயிற்சிகள், தொடர்ந்து சிந்தனைகள், தொடர் படிப்பு என தொடர்ச்சியாக நாம் முயற்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்துவிட்டு, முயற்சிகள் செய்யாமல் இருந்தால், நிச்சயம் பலன் கிடைக்காது. நம்பிக்கையுடன் முயற்சிகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அப்படி நான் தொடர்ந்து முயற்சி செய்ததால், தற்போது நல்ல மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. நிச்சயம் நீட் தேர்விலும் நான் சாதனை புரியும் அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும் என்று ஏக இறைவன் மீது நம்பிக்கை வைத்து கூறிக் கொள்கிறேன். 

மாணவிக்கு வழங்கப்பட்ட கவுரவம் :

சென்னை அரசு மேனிலைப்பள்ளியில் படித்து 10வது வகுப்பில் தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்து மாணவி ஆயிஷா தஸ்னீமுக்கு சென்னையில் உள்ள  ஆர்மோனி ரெஸிடென்ட்ஸ் அஸோஸிஸன் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமூக ஆர்வலர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள், ஊடகத் தோழர்கள், மகளிர் அமைப்பினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீமுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஊக்கத் தொகை, பரிசுப் பொருட்கள் என ஆயிஷா தஸ்னீமுக்கு வழங்கப்பட்டது. மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், தாம் எழுதிய, உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி மற்றும் இந்திய முஸ்லிம்கள் பாகம் - 1, ஆகிய இரண்டு நூல்களை வழங்கி தம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீமுக்கும் அளிக்கப்பட்ட இந்த கவுரவம் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்காக ஆர்மோனி ரெஸிடென்ட்ஸ் அஸோஸிஸன் தலைவர் முஹம்மது சிராஜுத்தீன், செயலாளர் சையத் சாதிக் மொய்தீன் மற்றும் பிற நிர்வாகிகள்  மேலும் விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஒத்துழைப்பு மற்றும் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்ட வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி ஆகிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். கல்வியில் சாதிக்கும் மாணவ மாணவியருக்கும் இதுபோன்ற அமைப்புகள் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்க வேண்டும். அப்போது தான் மாணவ மாணவியருக்கு புதிய ஆர்வம் பிறக்கும். 

அந்த வகையில் தமக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழா மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக சாதனை மாணவி ஆயிஷா தஸ்னீம் மகிழ்ச்சி தெரிவித்தார். 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்து மாணவி ஆயிஷா தஸ்னீமை வாழ்த்தியதுடன், அவரது மருத்துவர் கனவு நிறைவே ஏக இறைவனிடம் துஆ செய்துவிட்டு நாம் விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

உங்கள் மதிப்பு...!

உங்கள் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான். உங்களை சுற்றி இருப்பவர்கள் அல்ல. யாரிடம் வேண்டுமானாலும் இறங்கி போங்கள். ஆனால் உங்களை வேண்டாம் என ஒதுக்குபவர்களிடம் ஒரு துளியேனும் இறங்கி போகாதீர்கள்.



அறிமுகமான நூல்கள்...!

மகிழ்ச்சியான தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை ஊடகத் தோழர் ANI திவ்ய விக்னேஷ் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.



Thursday, May 21, 2026

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம்....!

தமிழ்நாடு அமைச்சரவையில் ஏ.எம்.ஷாஜஹான் பொறுப்பு ஏற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம்....!

சிராஜுல் மில்லத்தின் மூத்த மகன் ஏ.எஸ்.அப்துல் ஹமீது பாகவி வாழ்த்து....!

சிங்கப்பூர், மே 22- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று இருப்பது, லீகின் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் என்று சிராஜுல் மில்லத்தின் மூத்த மகன் ஏ.எஸ்.அப்துல் ஹமீது பாகவி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பிடித்து, அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் என்ற பொறுப்பை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஷாஜஹான் ஏற்றுக் கொண்டுள்ளார். 

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகித்துள்ளது குறித்து, மணிச்சுடர் நிறுவனர் மர்ஹும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்களின் மூத்த மகன் ஏ.எஸ்.அப்துல் ஹமீது பாகவி எழுதியுள்ள பாராட்டு மற்றும் வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு :

கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் :

நமது சகோதரர் ஷாஜஹான், மாண்புமிகு ஆளுநரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, "அஸ்ஸான்ஷா ஷாஜஹான் எனும் நான்..." என்று கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான உறுதிமொழியை ஏற்கத் தொடங்கியபோது, ​​என் கண்களிலிருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

அல்ஹம்துலில்லாஹ்! எத்துணை பெருமைமிக்க ஒரு தருணம் இது! சுதந்திர இந்தியாவின் முஸ்லிம் லீக்கை நிறுவிய காயிதே மில்லத் அவர்களும், அவரைத் தொடர்ந்து வந்த சிராஜுல் மில்லத் அவர்களும் ஒரு கனவு கண்டிருந்தார்கள். முஸ்லிம் லீக் ஆட்சி அதிகாரத்தின் ஒரு அங்கமாகத் திகழ வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மக்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டு, அவர்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட முடியும் என்பதே அந்தக் கனவாகும். 

முனிருல் மில்லத் தலைமையில் கிடைத்த பெருமை :

எல்லாம் வல்ல அல்லாஹ், முனிருல் மில்லத் அவர்களின் தலைமையின் கீழ் அந்த அரிய வாய்ப்பை நமக்கு இப்பொழுது வழங்கியுள்ளான். எல்லாம் வல்ல அல்லாஹ் சில சமயங்களில், நாம் கேட்காமலேயே தனது அருட்கொடைகளை வாரி வழங்குகிறான். சில மாதங்களுக்கு முன்பு முனிருல் மில்லத் அவர்கள் ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்தபோது, ​​அதன் ஒரே நோக்கம் நமது வேட்பாளர்கள் இருவரும் வெற்றிபெற வேண்டும் என்பதை உறுதி செய்வதாக மட்டுமே இருந்தது. அது ஒவ்வொரு முஸ்லிம் லீக் தொண்டரின் இதயத்திலும் கோடிக்கணக்கான பிரார்த்தனைகளைச் சுமந்துகொண்டு எழுந்த, மிகவும் எளிமையானதும், உளப்பூர்வமானதுமான ஒரு முயற்சியாக அமைந்திருந்தது. அந்தப் பிரார்த்தனைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, முனிருல் மில்லத் அவர்களின் தலைமையின் கீழ் நமக்கு ஒரு 'மூன்று மடங்கு போனஸை' (Triple Bonus) பரிசாக அளித்துள்ளான். 

துணிச்சலான முடிவால் அமைச்சரவையில் இடம் :

நமது வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கேரளாவிலும் வெற்றி வாகை சூடியுள்ளனர். கேரளாவில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம், பத்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு முஸ்லிம் லீக் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்குத் திரும்பியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, வெறும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக வெளியே ஒதுங்கி நிற்காமல், முனிருல் மில்லத் அவர்கள் எடுத்த துணிச்சலான மற்றும் யதார்த்தமான முடிவின் விளைவாக, நமது உறுப்பினர் ஷாஜஹான் அவர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறும் பெருமையைப் பெற்றுள்ளார். 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே! நாங்கள் பணிவுடன் எங்கள் கரங்களை உயர்த்தி, உனது வழிகாட்டுதலை வேண்டுகிறோம். ஷாஜஹான் அவர்கள் வரலாற்றைப் படைத்துள்ளார்.  நமது அன்பிற்குரிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்று, மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர் நமக்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் ஏ.எஸ்.அப்துல் ஹமீது பாகவி தெரிவித்துள்ளார். 

சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Best Translator....!

The best translator is the one 

who can translate 

someone's silence 

into a smile.



ஆரோக்கியம், மனநிறைவு,நம்பிக்கை...!

ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து.

 மனநிறைவே மிகப்பெரிய புதையல்.

 நம்பிக்கையே மிகப்பெரிய நண்பன்.

 ஆரோக்கியம், மனநிறைவு, நம்பிக்கை

 ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில்

 மகிழ்ச்சியாக, நிறைவாக வாழ்வோம்.



எமது நூல்கள்...!

 மகிழ்ச்சியான தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை காட்சி ஊடகத் தோழர் சுரேஷ் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.



Wednesday, May 20, 2026

Not a tree....!

If you don't like 

where you are, 

move. 

You are not a tree.




நேர்காணல்...!

பத்திரிகை.காம் சேனலுக்கு இன்றைய அரசியல் நிலை குறித்து நான் அளித்த சிறப்பு நேர்காணல்...!

விரைவில்.....!!




இருக்கும் வரை...!

இருக்கும் வரை 

அன்பாய் இருப்போம். 

ஆறுதல் சொல்வோம். 

இருப்பதை பகிர்ந்து கொள்வோம். 

இன்று நமக்கு நாளை மற்றவர்க்கு 

எதுவும் கடந்து போகும். 

கற்றுக்கொள்ளவும் 

கற்றுக்கொடுக்கத்தான் பிறந்தோம். 

தவறுகளைச் சொல்லிச் சொல்லியே

 காயப்படுத்துதற்கு அல்ல.



நூல்கள் அறிமுகம்...!

 மகிழ்ச்சியான தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை ஊடகத் தோழர் ஜெயராமன் சுவாமிநாதன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.



ஹஜ் சேவைகளை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்பாட்டு மையம்...!

" மக்கா, மதீனாவில் ஹஜ் சேவைகளை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்பாட்டு மையம் "

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உலகம் முழுவதும் மக்கா மற்றும் மதீனாவிற்கு சென்றுள்ள இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு, பல்வேறு வகைகளில், சவூதி அரேபிய அரசு தனது சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பான ஹஜ் கடமை என்ற இலக்கை நோக்கி இந்த அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. புனித ஹஜ் கடமைக்கான காலம் நெருங்கி வந்துகொண்டிருக்கும் நிலையில், புனித பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. 

அந்த வகையில் சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களை நோக்கி, முஸ்லிம்கள் குவிந்து வருகிறார்கள். இப்படி லட்சக்கணக்கில் வரும் புனித ஹஜ் பயணிகளின் வசதிக்காக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் உலக முஸ்லிம்களால் பாராட்டை பெறும் வகையில் இருந்து வருகின்றன. 

ஹஜ் சேவைகளை மேம்படுத்தும் மையம் :

ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சேவைகளை அறிமுகம் செய்யும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இந்தாண்டு புதிய சேவை மையம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மக்கா மற்றும் மதீனாவில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்பாட்டு மையம், இந்த ஆண்டு புனித ஹஜ் யாத்ரீகர்களுக்காகத் தனது சேவைகளை மேம்படுத்தியுள்ளது. 911 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தொடர்புகொள்ளக்கூடிய இந்த மையம், அவசரகாலப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அழைப்புகளைப் பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இரண்டு வினாடிகளில் பதிலளிக்கிறது.

பல்வேறு மொழிகள் பேசக்கூடிய, தகுதியும் பயிற்சியும் பெற்ற பணியாளர்கள் இந்தச் சேவையை இயக்குகின்றனர். அனைத்து அழைப்புகளும் புகார்களும் இரகசியமாகக் கையாளப்பட்டு, அழைப்பவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.இந்த 911 எண் கொண்ட சேவை மையம் உண்மையில் லட்சக்கணக்கான ஹஜ் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. கணிவான மொழி, சிறப்பான சேவை உள்ளிட்ட அம்சங்களுடன் கொண்ட, இந்த சேவை, உண்மையில் ஹஜ் பயணிகள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. 

நவீன குடிநீர் அமைப்பு :

இதுஒருபுறம் இருக்கு மக்கா, மதீனா உள்ளிட்ட புனிதத் தலங்களின் நவீன குடிநீர் அமைப்பு, நிலைத்தன்மையையும் வசதியையும் மேம்படுத்துகிறது. மனிதனை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு ஆகிய அம்சங்கள் புனிதத் தலங்களில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பிரதிபலிக்கின்றன. இத்திட்டம் ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களின் அனுபவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டம், ஒரு புதுமையான பொறியியல் வடிவமைப்பின்படி, பாதசாரிகள் நடக்கும் வழிகளில் 2 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட நவீன நீர் வழங்கும் இடங்களை வழங்குகிறது. இந்த அமைப்பு, ஹஜ் யாத்ரீகர்களுக்குக் குளிரூட்டப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது.

                                                =================

"மக்கா, மதீனாவில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்பாட்டு மையம், இந்தாண்டு புனித ஹஜ் பயணிகளுக்காகத் தனது சேவைகளை மேம்படுத்தியுள்ளது. 911 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தொடர்புகொள்ளக்கூடிய இந்த மையம், அவசரகாலப் பாதுகாப்பு,மனிதாபிமான அழைப்புகளைப் பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இரண்டு வினாடிகளில் பதிலளிக்கிறது"

                                                =================

மக்கா நகரம் மற்றும் மதீனா புனிதத் தலங்களுக்கான சவூதி அரச ஆணையத்தின் நிர்வாகப் பிரிவான கிடானா டெவலப்மென்ட் கோ., இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய நீர் விநியோக இடங்களை ஒருங்கிணைந்த நீரேற்று நிலையங்களாக மாற்றியுள்ளது. உயர்ந்த தரம் மற்றும் சுகாதாரத் தரநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் இது அடையப்பட்டது. இந்த திட்டம், பாதசாரிகளின் தடையற்ற நடமாட்டத்திற்கு ஆதரவளிக்கவும், அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் நெரிசலைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு மூலோபாய விநியோகத் திட்டத்தை உள்ளடக்கியுள்ளது.

ஹஜ் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல் :


இந்த அமைப்பின் தாக்கம் நீர் வழங்குவதையும் தாண்டி விரிவடைகிறது. இது வெப்ப அழுத்தத்தைக் குறைப்பதிலும், புனிதத் தலங்களுக்கு இடையேயான நடமாட்டத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த முயற்சிகள் யாத்ரீகர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான மற்றும் அமைதியான சூழலை உருவாக்க உதவுகின்றன.

மேம்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் சேவை உள்கட்டமைப்பின் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கும் கிடானா கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது. இந்த முயற்சிகள் புனித ஹஜ் பயணிகளின் அனுபவத்தை வளப்படுத்த உதவுவதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் உயர் மட்டப் பராமரிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தாண்டு புனித ஹஜ் பயணிகளின் நலனுக்காக சவூதி அரேபிய அரசு செய்துள்ள  பல்வேறு சேவைகள் உண்மையில் பாராட்டப்பட்டு வருகின்றன. ஒருசில குறைபாடுகள் இருந்தாலும் முறையான வழிகாட்டுதல்களின்படி, புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம், புதிய உற்சாகத்தை ஹஜ் பயணிகளுக்கு நிச்சயம் கொடுக்கும். அதன்மூலம் இலட்சக்கணக்கான ஹஜ் பயணிகள் தங்களது கடமையை பாதுகாப்புடன் மேற்கொண்டு, தாயகம் திரும்ப வழி பிறக்கும் என்று உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Tuesday, May 19, 2026

பஹ்ரிய்யா - நூல் மதிப்புரை....!

 

நூல் மதிப்புரை


நூல்                         : வணிகத்தால் பரவிய இஸ்லாம்

                   பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் -                    வரலாறு - வணிகம் - கலாச்சாரம் -                    அரசியல் நிகழ்வுகள்

நூலாசிரியர்        : புதுமடம் ஹலீம்

வெளியீடு              : சாஜிதா புக் சென்டர்     

                                        நெ.85, அங்கப்ப நாயக்கன் தெரு,

                    (மஸ்ஜிதே மஃமூர் எதிரில்)

                    சென்னை - 600 001.

                                        போன்: 98409 77758 / 72996 94049

விலை                        : ரூ.390/-

அரசியல், எழுத்து, ஊடகம், தன் முனைப்புப் பேச்சு என பன்முகத் தன்மை கொண்ட தமிழகத்தின் புகழ்பெற்ற முஸ்லிம் எழுத்தாளர் புதுமடம் ஹலீம், "வணிகத்தால் பரவிய இஸ்லாம்  பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு - வணிகம் - கலாச்சாரம் - அரசியல் நிகழ்வுகள் " என்ற நூலை கடுமையான உழைப்புடன் எழுதியுள்ளார். இந்த நூலின் மூலம் தமிழகத்தின் சங்ககாலம் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றியடைந்த காலம் வரையிலான தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றின் வரலாற்று நிகழ்வுகளை மிகவும் அழகிய முறையில் எளிமையான எழுத்து நடையில் அவர் வடித்துள்ளார்.

400 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், வரலாறு, கலாச்சாரம், அரசியல் என மூன்று பாகங்கமாக எழுதப்பட்டுள்ளது. வரலாறு என்ற முதல் பாகத்தில், உள் தேடல், இரண்டாம் நூற்றாண்டு முதல் அரேபிய உறவு, இஸ்லாம் பரவலில் வட இந்தியா வேறு - தென்னிந்தியா வேறு, சமணமும் இஸ்லாமும், தென்இந்தியாவின் முதல் பள்ளிவாசல், சேதுபதிகளின் மதநல்லிணக்கம் என மொத்தம் 15 தலைப்புகளில் பல அற்புதமான வரலாற்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோன்று, கலாச்சாரம் என்ற இரண்டாவது பாகத்தில், தமிழகத்தில் சூஃபியிசம், நவாப்களின் அறப்பணியும் மொழி வளர்ச்சியும், கடல் வணிக பரிமாற்ற மரபு உணவுகள், உடை, நடத்தை, மரபுகள், ஊரும் உறவும், தமிழக முஸ்லிம் கட்டிடக் கலை என மொத்தம் 14 தலைப்புகளில் சுவையான செய்திகள் எழுதப்பட்டுள்ளன.

மூன்றாவது பாகமான அரசியல் பாகத்தில், முதல் அரசியல் நகர்வு, நாயக்கர், மராட்டியர், சேதுபதிகளின் ஆட்சியில் முஸ்லிம் அரசியல், முஸ்லிம்களின் வணிக அரசியல், அரசியர் நிர்ணய சபை, விவாதம், அரசியல் என்ற 13 தலைப்புகளில் அற்புத தகவல்களுடன் ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளன.

நூலின் நிறைவு பகுதியான ஆய்வின் முடிவுரையில், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கொடைகளை வழங்கி இருப்பதன் மூலம், அக்காலத்திலேயே மத நல்லிணக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது என்பன உள்ளிட்ட பல அரிய தகவல்களுடன், ஜின்னா, பெரியார், அம்பேத்கர் சந்திப்பு, 1937 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வாக இருந்த துபாஷ் கே.செய்யது இப்ராஹிம் தொடர்பான புகைப்படங்கள், மேலும், முதன் முதலில் தமிழில் குர்ஆன் மொழியாக்கம் செய்து புரட்சி செய்த மவ்லவி அப்துல் ஹமீது பாகவி, 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசல்,. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, கீழக்கரை பழைய ஜும்மா பள்ளிவாசல், பெரியபட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரபு மொழி கல்வெட்டு, ஆர்க்காடு நவாப் கோட்டை பள்ளிவாசல், கி.பி.1710ல் கிழவன் சேதுபதி கட்டிய புதுமடம் சத்திரம், தமிழக கடற்கரை கிராம முஸ்லிம் திருமணங்கள், ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்பு, திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கோயிலின் கோபுரத்தில், அரபு நாடுகளில் இருந்து குதிரைகளை ஏற்றி வரும் கப்பல்களும், குதிரைகளுடன் நிற்கும் வீரர்களும் சித்தரிக்கப்பட்டுள்ள அரிய புகைப்படம் என பல அரிய புகைப்படங்கள், வரலாற்று ஆவணங்கள் இடம்பெற்று இந்த நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

'பஹ்ரிய்யா' நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தகவலும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் என்பதை நூலாசிரியர் பல்வேறு வரலாற்று மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டி இருப்பது நூலுக்கு மேலும் வலுச்சேர்க்கும் ஒன்றாக இருக்கிறது. மிகவும் கடின உழைப்புடன் எழுதப்பட்டுள்ள இந்த "வணிகத்தால் பரவிய இஸ்லாம்  பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு - வணிகம் - கலாச்சாரம் - அரசியல் நிகழ்வுகள் " என்ற நூலை சமுதாயம் வரவேற்று படித்து உண்மை வரலாற்றை அறிந்துகொள்ள முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, தமிழகச் சமூகம் பரவலாக மறந்துகொண்டிருக்கும் வரலாறு நினைப்படுத்தப்பட்டு இளம் தலைமுறையினரும் அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும்.

அருமையான வரலாற்று பொக்கிஷமான "வணிகத்தால் பரவிய இஸ்லாம்  பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு - வணிகம் - கலாச்சாரம் - அரசியல் நிகழ்வுகள்" என்ற இந்த நூல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் மதரஸா நூலகங்களில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இதன்மூலம் மாணவச் சமுதாயம் உண்மையான இஸ்லாமிய வரலாற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு முஸ்லிம் இல்லங்களிலும் இந்த நூல் இடம்பெற்று வாசிக்கப்பட்டால், முஸ்லிம்கள் குறித்து பொய்யாக பரப்பட்டு வரும் பிரச்சாரங்கள், வதந்திகள் ஆகியவை அனைத்தும் பொய்யானவை என்பதை இளம் தளிர்கள் அறிந்துகொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் "வணிகத்தால் பரவிய இஸ்லாம்  பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு - வணிகம் - கலாச்சாரம் - அரசியல் நிகழ்வுகள்" என்ற நூல் இடம்பெறுவது மட்டுமல்லாமல், திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர், தங்களுக்கு அன்பானவர்களுக்கு இந்த நூலை பரிசாக அளிக்க ஆர்வத்துடன் முன்வர வேண்டும். அதன்மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து நாலா பக்கமும் பரவ வாய்ப்பு உருவாகும். 

- ஜாவீத்

Thinking - Voice...!

The quality of your thinking 

determines the quality of your life. 

There is a voice that doesn't use words. 

Listen.




முயற்சி - கோபம்....!

முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள். 

நீங்கள் அதிசயத்தை நிகழ்த்த போகும் தருணம் இதுவாக கூட, 

இப்போது கூட இருக்கலாம். 

கோபம் என்பது வலுவான காற்றைப் போன்றது.

சற்று நேரத்தில் அது தணிந்துவிடும். 

ஆனால் அதற்குள் 

பல மரங்களின் கிளைகளை 

அது முறித்துவிடும்.



துணிச்சலுடன்....!

 சும்மா பாருங்க....

துணிச்சலுடன் எதிர்த்து நில்லுங்கள்...!




மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக்...!

மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் நிராகரிப்பு.....! 

மாநிலத்தில் சமூகப் பிளவுகளை உருவாக்க எந்தவொரு தரப்பையும்  ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு,அனுமதிக்காது..!! 

கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் திட்டவட்டம்....!!!

திருவனந்தபுரம், மே.19- இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் இயக்கம் என வர்ணித்துள்ள கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், லீகிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்துள்ளார். 

கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், அம்மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி.சதீசன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் குறித்து, சில மதவாத சக்திகள் வெறுப்பு பிரச்சாத்தை தொடங்கியுள்ளன. இ.யூ.முஸ்லிம் லீக், மதவாத கட்சி என்று அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

சதீசன் கண்டனம் :

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள வி.டி.சதீசன், இ.யூ.முஸ்லிம் லீக் ஒரு மதச்சார்பற்ற இயக்கம் என வர்ணித்து, அதற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.  ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கியக் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை  குறிவைத்து நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சாரம் முறியடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இ.யூ.முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பனக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் மற்றும் தேசியப் பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி உள்ளிட்ட லீகின் உயர்மட்டத் தலைவர்களுடன் இணைந்து, சதீசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ​​இ.யூ.முஸ்லிம் லீக் ஒரு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான அமைப்பாகச் சித்தரிக்க நடக்கும் முயற்சிகளுக்கு, உடனடியான, வலுவான மற்றும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சதீசன் திட்டவட்டமாக கூறினார். ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, மாநிலத்தில் சமூகப் பிளவுகளை உருவாக்க எந்தவொரு தரப்பையும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

கேரளத்தின் மதச்சார்பற்ற அரசியல் சூழலைப் பிளவுபடுத்தும் வகையிலான இத்தகைய சதி முயற்சிகள், எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும், அவை கடுமையாக எதிர்கொள்ளப்படும். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரங்களை நாங்கள் திறம்பட முறியடித்தோம். பிளவுபடுத்தும் அத்தகைய பிரச்சாரங்களைக் கேரள மக்கள் நிராகரித்துவிட்டு, ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பரிசளித்துள்ளனர். கேரளத்தை மதரீதியாகப் பிளவுபடுத்த நடக்கும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் அதைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை, இந்த அரசாங்கம் உறுதியாகக் காத்து நிற்கும் என்று சதீசன் கூறினார்.

 இ.யூ.முஸ்லிம் லீகின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கு :

இ.யூ.முஸ்லிம் லீகை கடுமையாக விமர்சிப்பவர்கள், ஒரு மதச்சார்பற்ற மற்றும் நிலைப்படுத்தும் சக்தியாக லீக் ஆற்றிவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் தங்ஙள் குடும்பத்தினர் ஆற்றிய பங்குதான், 1992-ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட சமூகப் பின்விளைவுகளின் தீவிரத்தைக் குறைத்து, ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். முனம்பம் மற்றும் பள்ளுருத்தி விவகாரங்களில்" மதச்சார்பின்மையைக் காப்பதிலும், பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் இ.யூ.முஸ்லிம் லீக்  உறுதியுடன் செயல்பட்டதாக  சதீசன் பாராட்டு தெரிவித்தார்.  இ.யூ.முஸ்லிம் லீகை மதச்சார்பின்மைக்கு எதிரானதாகச் சித்தரிக்க முயல்பவர்கள், லீகின் தலைமை மட்டும் இல்லாவிட்டால், எத்தகைய அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கியிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் சதீசன் கேட்டுக் கொண்டார். 

முதலமைச்சருக்கு பாராட்டு :

இ.யூ.முஸ்லிம் லீக் குறித்து சதீசனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கேரள மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், முதலமைச்சருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததுடன்,  இறுதியாக, கேரள மாநிலத்திற்கு அது தகுதியான ஒரு தலைவர் கிடைத்துள்ளார் என்று பாராட்டு தெரிவித்தார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Monday, May 18, 2026

கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்த உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய நாகரிக மையம்...!

" கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்த உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய நாகரிக மையம் "

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் அமைந்துள்ள இஸ்லாமிய நாகரிக மையம், கின்னஸ் உலக சாதனைகளால் "உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகம்" என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 10 ஹெக்டேர் (சுமார் 50,000 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது. 65 மீட்டர் உயரமுள்ள ஒரு பிரம்மாண்டமான மையக் குவிமாடத்தைக் கொண்டுள்ள இந்த மையத்தில், அரிய குர்ஆன்கள் உட்பட ஆயிரக்கணக்கான வரலாற்றுப் பொக்கிஷங்கள் குவிந்துள்ளன. அதேநேரத்தில், இந்த மையம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கல்வி ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைக்கிறது.

கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடிப்பு :

உஸ்பெகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய நாகரிக மையம், இஸ்லாமிய நாகரிகத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக கடந்த ஏப்ரல் 13, 2026 அன்று கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை, கின்னஸ் உலக சாதனைகளின் நடுவர் ஷெய்தா சுபாஷி ஜெமிசி உறுதிப்படுத்தினார். திட்டக் கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மையத்தின் அறிவியல் மன்ற உறுப்பினர்களுடன் அவர் அதற்கான விழாவில் கலந்துகொண்டார். ஒரு விரிவான சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு இந்த அங்கீகார விருது வழங்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் தனது வரலாற்றுப் பதிவை முன்வைப்பதற்கும், அதன் சர்வதேசப் பிம்பத்தை மறுவடிவமைப்பதற்குமான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெரிய அளவிலான கலாச்சார உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

"ஒரு அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனைகளின் நடுவர் என்ற முறையில், அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு காட்சிப் பொருளும் தனக்கே உரிய தனித்துவத்தையும் கலாச்சார மதிப்பையும் கொண்டுள்ளது என்று என்னால் கூற முடியும்," என்று நடுவர் ஷெய்தா சுபாஷி ஜெமிசி கூறியுள்ளார். "மதிப்பீட்டுச் செயல்முறை நிறுவப்பட்ட நடைமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றியது, ஒவ்வொரு காட்சிப் பொருளும் இஸ்லாமியத் தொல்லியல், கலை மற்றும் அறிவியல் வல்லுநர்களால் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது" என்றும் அவர் தெரிவித்துள்ளார். திட்டத்தின் அளவும் ஆழமும் தன்னிடம் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ள நடுவர் ஷெய்தா சுபாஷி ஜெமிசி, அதனை ஒரு மிகச்சிறந்த சாதனை என்றும், கின்னஸ் சொற்களில் கூறுவதானால், “அதிகாரப்பூர்வமாக அற்புதமானது” என்றும் வர்ணித்துள்ளார். 

சில சுவையான தகவல்கள் :

இந்த இஸ்லாமிய நாகரிக மையம் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் தலைமையில் 2017-ல் தொடங்கப்பட்டு, மார்ச் 17, 2026 அன்று கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான அறிவியல், கல்வி மற்றும் அருங்காட்சியக வளாகமாகும். இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாறு மற்றும் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் நோக்கில், ஆராய்ச்சி, கலாச்சார பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக இது வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டம், உஸ்பெகிஸ்தானை இஸ்லாமிய அறிவின் ஒரு வரலாற்று மையமாக மட்டுமல்லாமல், அதன் ஆய்வு மற்றும் விளக்கத்திற்கான ஒரு நவீன தளமாகவும் நிலைநிறுத்தும் அதிபர் மிர்சியோயேவின் பரந்த கொள்கையைப் பிரதிபலிக்கிறது.

                                                    ===================

"இஸ்லாமிய நாகரிக மையம் மார்ச் 17, 2026 அன்று கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான அறிவியல், கல்வி மற்றும் அருங்காட்சியக வளாகமாகும். இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாறு, பங்களிப்புகளை வெளிப்படுத்தும் நோக்கில், ஆராய்ச்சி, கலாச்சார பாரம்பரியம், நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக இது வடிவமைக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தானை இஸ்லாமிய அறிவின் ஒரு வரலாற்று மையமாக மட்டுமல்லாமல், அதன் ஆய்வு மற்றும் விளக்கத்திற்கான ஒரு நவீன தளமாகவும் இந்த மையம் நிலைநிறுத்துகிறது"

                                                        ===================

மையத்தின் தலைமைக் கட்டிடக் கலைஞர் அப்துல்காகோர் துர்டியேவ், இந்தத் திட்டம் உஸ்பெகிஸ்தானின் வரலாற்று மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "இந்த மையத்தின் தனித்துவம், அதன் கட்டிடக்கலை உஸ்பெகிஸ்தானின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதில் உள்ளது" என்றும்  அவர் பெருமைப்பட கூறியுள்ளார்.  மேலும், உலகளாவிய கலாச்சார உரையாடலில் நாடு தன்னை ஒரு தீவிரப் பங்கேற்பாளராக நிலைநிறுத்தி வருவதாகவும் தலைமைக் கட்டிடக் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய ஆசியா முழுவதும், அரசாங்கங்கள் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தவும் சர்வதேச கவனத்தை ஈர்க்கவும் பெரிய கலாச்சாரத் திட்டங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், உஸ்பெகிஸ்தான் பாரம்பரியத்தை கல்விப்புலத்துடனும் உலகளாவிய ஈடுபாட்டுடனும் இணைப்பதில் குறிப்பாக முக்கியத்துவம் அளித்துள்ளது.

அதிகம் பார்வையிடப்படும் கலாச்சார மையம் :

உலக அளவில் இந்த மைய வளாகம் இப்பகுதியில் அதிகம் பார்வையிடப்படும் கலாச்சாரத் தளங்களில் ஒன்றாக விரைவாக மாறியுள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் உட்பட தினமும் 5 ஆயிரம் பார்வையாளர்கள் வரை இங்கு வருகிறார்கள். இந்த அளவு, இந்த மையம் ஒரு அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் இப்பகுதியின் அறிவுசார் மற்றும் கலாச்சார வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தை வடிவமைக்கும் ஒரு முதன்மை நிறுவனமாகவும் கருதப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

இஸ்லாமிய நாகரிக மையத்தின் இயக்குநர் ஃபிர்தாவ்ஸ் அப்துக்கலிகோவ், இந்த கின்னஸ் அங்கீகாரம் நூற்றுக்கணக்கான நிபுணர்களின் பல ஆண்டுகால உழைப்பிற்கான அங்கீகாரம் என்று விவரித்தார். உஸ்பெகிஸ்தானின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் அதேவேளையில், அறிவியல் மற்றும் கல்வித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே இந்த மையத்தின் முதன்மை நோக்கம் என்றும் மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

அதன் சாதனை அளவிலான பிரம்மாண்டத்தைத் தாண்டி, இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் தனது இடத்தை மீட்டெடுத்து, அதற்குப் புதிய விளக்கம் அளிப்பதற்கான உஸ்பெகிஸ்தானின் பரந்த முயற்சியை இந்த மையம் பிரதிபலிக்கிறது. கல்விப்புல ஆய்வு, அரசின் ஆதரவு மற்றும் பொதுமக்களின் அணுகல் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், இது கலாச்சார பாரம்பரியத்தை தேசிய அடையாளத்தின் அடித்தளமாகவும், சர்வதேச ஈடுபாட்டிற்கான ஒரு கருவியாகவும் நிலைநிறுத்துகிறது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்