Wednesday, May 6, 2026

ஹாஜிகள் டிஜிட்டல் முறையில் மார்க்க அறிஞர்களுடன் தொடர்பு கொள்ள சிறப்பு ஏற்பாடு....!

2026 ஹஜ் திருவிழா : 

"ஹாஜிகள் டிஜிட்டல் முறையில் மார்க்க அறிஞர்களுடன் தொடர்பு கொள்ள சிறப்பு ஏற்பாடு"

இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், தற்போது சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதனால், 2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் திருவிழா, தற்போது பெருவிழாவாக களைகட்டத் தொடங்கியுள்ளது. ஹஜ் காலத்தில் ஆன்மீக அமைதியை பெறும் உன்னத நோக்க நிலையில் ஹஜ் பயணிகள் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்று வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், ஹஜ் பயணிகள் பாதுகாப்புடன் தங்களது இறுதிக்கடமையை நிறைவேற்ற சவூதி அரேபிய அரசு மிகவும் சிறப்பான பணிகளை செய்துள்ளது. பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல், ஹஜ் பயணிகள் தங்களது கடமையை சிறப்பான முறையில் நிறைவேற்ற முடியும். மக்கா, மதீனா புனித நகரங்களுக்கு வரும் ஹஜ் பயணிகள் மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் மஸ்ஜித் மற்றும் மதீனாவில் உள்ள  மஸ்ஜித்துன் நபவி ஆகிய இரண்டு மிகப்பெரிய மஸ்ஜித்துகளின்  மார்க்க விவகாரங்களுக்கான தலைமைப் பொறுப்பின் தலைவரான ஷேக் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களை தொடர்பு கொண்டு பேச புதிய வசதி ஒன்றை சவூதி அரேபிய அரசு செய்துள்ளது. இந்த இரண்டு புனித மஸ்ஜித்துக்கு வரும் ஹஜ் பயணிகளின் விசாரணைகளுக்குப் பதிலளிப்பதற்காக கிளவுட் அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்பை ஒன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மேம்படுத்தப்பட்ட மார்க்க சேவைகளின் தரம் :

இந்தத் திட்டம், டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதற்கும், இரண்டு புனித மஸ்ஜித்துகளுக்கு வரும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மார்க்க சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கும் தலைமைப் பொறுப்பு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அழைப்புகளை நெகிழ்வாகவும் திறமையாகவும் கையாள்வதை மேம்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்பக் கட்டமைப்புதான் இந்த அமைப்பு என்று மார்க்க அறிஞர் ஷேக் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் தெரிவித்துள்ளார். 

இந்த அமைப்பு அழைப்புகளை ஷேக்குகளின் தனிப்பட்ட தொலைபேசிகளுக்கு வழிநடத்துகிறது. இதனால், அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் இருக்க வேண்டிய தேவை குறைகிறது. மேலும் மக்காவில் உள்ள புனித மஸ்ஜித்துக்குள் ஏற்படும் நெரிசல் குறைகிறது. அத்துடன் வழிபாட்டாளர்களின் அனுபவமும் மேம்படுகிறது.

                                                ====================

"ஹாஜிகள் டிஜிட்டல் முறையில் மார்க்க அறிஞர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய  திட்டம், டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதற்கும், இரண்டு புனித மஸ்ஜித்துகளுக்கு வரும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மார்க்க சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கும் தலைமைப் பொறுப்பு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அழைப்புகளை நெகிழ்வாகவும் திறமையாகவும் கையாள்வதை மேம்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்பக் கட்டமைப்புதான் இந்த அமைப்பு "

                                                   ====================

அழைப்புகளை நிர்வகிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் இந்த அமைப்பு ஒரு துல்லியமான வழிமுறையைப் பயன்படுத்துகிறது என்றும், இது விரைவான பதிலையும் துல்லியமான வழிப்படுத்தலையும் உறுதி செய்கிறது. மேலும், விசாரணைகளைக் கையாளும் புனித மஸ்ஜித்திற்குள்  உள்ள அலுவலகங்களுக்கு அழைப்புகளை மாற்றுவதற்கும் இது உதவுகிறது. இது சேவையின் தரத்தை மேம்படுத்துவதோடு, செயல்பாட்டுத் திறனையும் அதிகரிக்கிறது.

இந்த அமைப்பு, உயர் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் பல்வேறு பணிச்சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், செயல்திறனைக் கண்காணித்து மேம்படுத்துவதற்காக விரிவான காலமுறை அறிக்கைகளை வழங்குவதன் மூலம், தரமான தரநிலைகளுக்கு இது உறுதிபூண்டுள்ளது. தரத்தை உறுதி செய்வதற்கும், எதிர்காலப் பயன்பாட்டிற்காகவும் இது அழைப்புகளைப் பதிவு செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.

மார்க்க அறிஞர்களை அணுகுவது எளிது :

இந்த அமைப்பு, உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களையும், மஸ்ஜிதுல் ஹராமுக்கு வருகை தரும் பார்வையாளர்களையும் இலக்காகக் கொண்டு, மதிப்புமிக்க அறிஞர்களை அணுகுவதை எளிதாக்குகிறது. அத்துடன் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும் விரைவான அணுகல் மற்றும் துல்லியமான பதில் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துகிறது.  இந்த சேவை இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வை வலுப்படுத்துவதோடு, பார்வையாளர்களின் ஆன்மீக அனுபவத்தையும் வளப்படுத்துகிறது.

கிளவுட் அடிப்படையிலான அழைப்பு மையத்தின் ஒருங்கிணைந்த எண் 8001222100 என்றும், இது 24 மணி நேரமும் செயல்படும் என்றும் மார்க்க அறிஞர் ஷேக் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் கூறியுள்ளார். இந்த சேவை அழைப்புகளை நெகிழ்வாகப் பிரித்து, அழைப்பவர்களை அருகிலுள்ள அறிஞரிடம் தானாகவே வழிநடத்துகிறது. இதன் மூலம் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, சேவைத் திறனை மேம்படுத்துகிறது.

விசாரணைகளுக்குப் பதிலளிப்பதற்கான பாரம்பரிய இலவசத் தொலைபேசி அமைப்புடன் இணைந்து இந்த அமைப்பு செயல்படுவதாகவும், இதன்மூலம் சாதனை நேரத்தில் முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் சென்றடைவதை உறுதிசெய்து, இரு புனித மஸ்ஜித்துகளின் மிதமான செய்தியை உலகிற்கு வலுப்படுத்தும் நம்பகமான சேவைகளை வழங்குவதாகவும் ஷேக் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

ஹஜ் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு :

டிஜிட்டல் முறையில் மார்க்க அறிஞர்களுடன் தொடர்பு கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்த சேவையை 2026 ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ளும் புனித ஹஜ் பயணிகள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பலன் அடைய வேண்டும் என்றும் சவூதி அரேபிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஹஜ் காலத்தில் மட்டுமல்லாமல் உம்ரா புனித பயணம் மேற்கொள்ளும்போதும் இந்த டிஜிட்டல் முறையில் மார்க்க அறிஞர்களுடன் தொடர்பு கொள்ளும் சேவையை இஸ்லாமியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த சேவையை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், சிறப்பான ஆன்மீக அனுபவத்தை இஸ்லாமியர்கள் நிச்சயம் பெற முடியும். அத்துடன் புனித ஹஜ் மற்றம் உம்ரா பயணத்தை நிறைவு செய்துவிட்டு, தங்களது சொந்த நாடுகளுக்கு சென்றபிறகும்,  இந்த சேவையின் அனுபவத்தை நினைத்து எப்போதும் மகிழ்ச்சி அடைய முடியும். இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் உண்மையான அனுபவத்தை பெற முடிந்ததை நினைத்து ஆனந்தம் கொள்ள முடியும் என்றும் உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: