" தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு வரலாற்று வெற்றிகள் "
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், அமைதியாக நடந்துமுடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து 16வது சட்டப்பேரவையின் (2021 - 2026) பதவிக்காலம் மே 10ஆம் தேதி முடிந்து, 17வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் தொடங்கியுள்ளது. 17வது சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள், தமிழக மக்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்து அதிர்ச்சியை அளித்துவிட்டன என்றே கூற வேண்டும்.
எனினும், இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நூறு சதவீத வெற்றியை பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் திமுக அணிக்கு சாதகமாக அமையவில்லை. அதேநேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு வரலாற்று வெற்றிகளை குவித்துள்ளது. இ.யூ.முஸ்லிம் லீகின் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் கடையநல்லூர் தொகுதியில் வெற்றிபெற்று, கடந்த 15வது சட்டப்பேரவையில் உறுப்பினராக திறம்பட செயல்பட்டார். சமுதாயத்தின் பிரச்சினைகளை அதிமுக அரசு முன்பு வைத்து அதற்கு தீர்வுகளை காண முயற்சிகளை செய்தார். எனினும், மீண்டும் அவர் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டபோது வெற்றிவாய்ப்பு கிட்டவில்லை. இதனால் 16வது சட்டப்பேரவையில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதன் காரணமாக சமுதாயத்தின் குரல் பேரவையில் ஒலிக்கவில்லை.
இரண்டு தொகுதிகளில் வாய்ப்பு :
இத்தகைய சூழ்நிலையில் 17வது சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாரம்பரியமான வாணியம்பாடி தொகுதியும், புகழ்பெற்ற பாபநாசம் தொகுதியும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டு, அங்கு முறையே எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் மற்றும் ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் தனிச் சின்னமாக ஏணி சின்னத்தில் இரண்டு பேரும் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.
பிரபலம் அடையாத தனிச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது பொதுத் தேர்தலில் சாதாரண விஷயம் கிடையாது. எனினும், இ.யூ.முஸ்லிம் லீகிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட, தனிச் சின்னமான ஏணி சின்னத்தில், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் ஏ.எம்.ஷாஜஹான் முழு நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இறங்கி, தீவிரமாக பிரச்சாரம் செய்து ஏணி சின்னத்தை வாக்காளர்களின் உள்ளங்களில் கொண்டு சேர்த்தனர்.
வாணியம்பாடியின் வரலாற்று வெற்றி :
இப்படி, இ.யூ.முஸ்லிம் லீகின் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்ட இரண்டு பேருக்கும் மிகப்பெரிய வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது. ஆம், உண்மையில் அது வரலாற்று வெற்றி தான். பாரம்பரியம் மிக்க வாணியம்பாடி தொகுதியில் கடந்த மூன்று சட்டப்பேரவை பொது தேர்தல்களில் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடாலும், தொடர்ந்து வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை. வாணியம்பாடி தொகுதியின் இ.யூ.முஸ்லிம் லீகின் கடைசி சட்டப்பேரவை உறுப்பினராக எச்.அப்துல் பாசித் மட்டுமே இருந்தார். அதன்பின்னர் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாணியம்பாடி தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிட்டது. ஆனால், தொடர்ந்து மூன்று முறையும் வெற்றிவாய்ப்பு இழந்தது. எச்.அப்துல் பாசித், எஸ்.எஸ்.பி. சையத் பாரூக், நரி முஹம்மது நயீம் ஆகிய மூன்று பேரும் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பு இழந்தனர்.
தொடர்ந்து மூன்று முறை இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிவாய்ப்பு இழந்ததால், வாணியம்பாடி தொகுதி குறித்து முஸ்லிம் லீகர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட தொடங்கியது. இனி வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடக் கூடாது என்ற பேச்சும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மத்தியில் உருவானது. ஏன் வாணியம்பாடி தொகுதி ராசி இல்லாத தொகுதி என்ற எண்ணமும் உருவானது. இத்தகைய சூழ்நிலையில் தான் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், வாணியம்பாடி தொகுதி மீண்டும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று முறை தோல்வியை சந்தித்தாலும், இந்த முறை இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நம்பிக்கையை இழக்கவில்லை. திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் உதவியுடன், தீவிரமாக தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு, ஒரு வரலாற்று வெற்றியை ஈட்டியுள்ளது. வாணியம்பாடி தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மீண்டும் போட்டியிட்ட எஸ்.எஸ்.பி.சையத் பாரூக், மொத்தம் 73 ஆயிரத்து 181 வாக்குகள் பெற்று, தம்மை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் சையத் புர்ஹானுதீனை 2 ஆயிரத்து 982 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார். கடந்த மூன்று பொது தேர்தல்களில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்த இ.யூ.முஸ்லிம் லீக் இந்தமுறை, வாணியம்பாடி தொகுதியில் வெற்றிபெற்று புதிய வரலாற்று சாதனையை புரிந்துள்ளது. உண்மையில் இது வரலாற்று வெற்றியாகும். வரலாறு பேசும் வெற்றியாகும்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசத்தில் வெற்றி :
இப்படி, வாணியம்பாடி தொகுதியில் புதிய வரலாறு படைத்து வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக், பாபநாசம் தொகுதியில் கூட மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசம் தொகுதியில் இந்தமுறை இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஏ.எம்.ஷாஜஹான், போட்டியிட்டார். கடைசியாக, கடந்த 1977 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டது. அதன்பிறகு, மிகப்பெரிய அளவுக்கு பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் தம்முடைய கவனதை செலுத்தவில்லை. அதற்கு பல அரசியல் நிலைப்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் போட்டியிட்டார். இந்த தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீகின் தனிச் சின்னமான ஏணி சின்னத்தை வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது மிகவும் சவால் நிறைந்த பணியாக இருந்து வந்தது. எனினும், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து, ஏணி சின்னத்தை பாபநாசம் தொகுதி முழுவதும், கொண்டு சேர்க்க இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்புக்கு தற்போது நல்ல பலன் கிடைத்தது.
அதன் காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான், மொத்தம் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று, தம்மை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் அசாருத்தீன் உஸ்மான் அலியை ஆயிரத்து 65 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார். உண்மையில் பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் பெற்ற இந்த வெற்றியானது ஒரு வரலாற்று வெற்றி என்றே கூற வேண்டும்.
இரண்டு வரலாற்று வெற்றிகள் :
பாரம்பரியமான வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் பெற்றுள்ள இந்த வெற்றியானது, மிகப்பெரிய வரலாற்று வெற்றிகள் ஆகும். இதன்மூலம் 17வது சட்டப்பேரவையில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோர் இடம்பெற்று சமுதாயத்தின் குரலாக இருப்பார்கள். சமுதாய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்புவார்கள்.
கடந்த 16வது சட்டப்பேரவையில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் உறுப்பினர்கள் யாரும் இடம்பெறாத நிலையில், தற்போது 17வது சட்டப்பேரவையில் இரண்டு உறுப்பினர்கள் இடம்பெற்று திறம்பட தங்களது பணியை ஆற்றுவார்கள். சமுதாயத்தின் நலனின் அக்கறை செலுத்தி, சமுதாயத்தின் குரலாக ஒலிப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
=============================





No comments:
Post a Comment