Saturday, May 16, 2026

இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை :

அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற பெருமைக்குரிய நிகழ்வு.....!

- ஓர் விரிவான, சுவையான செய்தித்தொகுப்பு -

2026ஆம் ஆண்டு.....மே 12 செவ்வாய்க்கிழமை.....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸில்  அமைந்துள்ள மண்ணடி பகுதியில் அதிகாலை முதல் பெரும் பரப்பு தொற்றிக் கொண்டது. காரணம், தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் வாழ்த்து பெற, காயிதே மில்லத் மன்ஸிலுக்கு வருகை தர இருக்கிறார் என்ற செய்தி காட்டுத் தீயை போன்று வேகமாக பரவியது. இதனால், மண்ணடி பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் கூட தொடங்கியது. குறிப்பாக, மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள், பெண்கள் அதிகளவு  படையெடுக்கத் தொடங்கினர்.  முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவர்களிடம் மிகுந்து இருந்தது. 

அபூபக்கர் தலைமையில் ஏற்பாடுகள் :

இத்தகைய சூழ்நிலையில், முதலமைச்சர் அவர்களை வரவேற்க   காயிதே மில்லத் மன்ஜிலில் செய்ய வேண்டிய, தேவையான விரிவான ஏற்பாடுகள் மற்றும் தயாரிப்புகள் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் தலைமையில், 11.05.2026 அன்று திங்கட்கிழமை முதல் தொடங்கியது.  இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற தொடங்கின. அலுவலகத்தில் உள்ள கூத்தாநல்லூர் மாயின் அபூபக்கர் நினைவு அரங்கமான பரகத் அரங்கம், வேகமாக வேகமாக மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்றன. அலுவலகத்தின் முன் பகுதி மட்டுமல்லாமல், அனைத்துப் பகுதிகளிலும், அழகிய வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன.  

இந்த பணிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எச்.முஹம்மது இஸ்மாயில், செயலாளர் கே.கோதர் ஷா, துணைத் தலைவர் சையத் அக்பர் அலி சேட் உள்ளிட்ட லீக் நிர்வாகிகள் பம்பரமாக இரவு முழுவதும் பணிபுரிந்து, பரகத் அரங்கம் ஒளிவீசும் அரங்கமாக மாற்றினர். இந்த பணிகளை எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் நேரில் பார்வையிட்டு, அடிக்கடி தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். இதேபோன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் ஏ.எம்.ஷாஜஹான், முதலமைச்சரை வரவேற்க காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்று வந்த பணிகளை தமது குழுவினருடன் வந்து ஆய்வு செய்தது மட்டுமல்லாமல், உரிய யோசனையும் வழங்கினார். 

காயிதே மில்லத் மன்ஸிலின் முன்பகுதியும் வர்ணம் பூசப்பட்டு, அழகிய திரைகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கத் தொடங்கியது. இந்த பணிகளின் அழகு கலை நிபுணர்கள் பலர் பங்கேற்று, காயிதே மில்லத் மன்ஸிலின் அழகை மேலும் மெருகுட்டினர். இப்படி இரவு முழுவதும் பணிகள் நடைபெற்று காயிதே மில்லத் மன்ஸில் முதலமைச்சர் வரவேற்க தயார் நிலையில் இருந்தது. 

காவல்துறை அதிகாரிகள் வருகை :

மே 12, செவ்வாய்க்கிழமை காலை முதல், காயிதே மில்லத் மன்ஸிலுக்கு தமிழக காவல்துறை அதிகாரிகள் வரத் தொடங்கினர். அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அவர்கள் தீவிரமாக ஆலோசனை செய்து, அலுவலகம் முழுவதும் ஆய்வு செய்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறை குழுவும் மோப்ப நாயுடன் அலுவலகம் வந்து, தீவிரமாக சோதனை செய்தது. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும், மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தின் செய்திக்குழு பணியாளர்கள் ஆகியவற்றின் விவரங்களை காவல்துறை அதிகாரிகள் கேட்டு அறிந்துகொண்டனர். 

மண்ணடி பகுதி மிகவும் குறுகலான சிறிய பகுதி என்பதால், அதிலும், காயிதே மில்லத் மன்ஸில் உள்ள மரைக்காயர் லெப்பை தெரு, மிகமிக சிறிய தெரு என்பதால், முதலமைச்சரின் வாகனம் எப்படி வந்து செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அத்துடன், முதலமைச்சர் ஜோசப் விஜயை, பார்க்க கூடும் மக்கள் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவதும் என்பது குறித்து அவர்கள் தீவிரமாக ஆலோசனை செய்து காவலர்களுக்கு தேவையான யோசனைகளையும் வழங்கினர். 

                                                        ================

"இந்த விஜய் எப்போதும் உங்கள் கூடவே இருப்பான். அதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் மீண்டும் உறுதியாக கூறிக் கொள்கிறேன். சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இப்போம். எங்களுக்கு கடைசி நேரத்தில் நீங்கள் ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். அதற்காக மீண்டும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"

                                                        ================

முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் பரகத் அரங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற காவல்துறை அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்துவிட்டனர். அதனால், அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே பரகத் அரங்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரும் இ.யூ.முஸ்லிம் லீக் குறித்த விவரங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டு, அவர்களின் பெயர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.  இப்படி அனைத்துப் பணிகளும், மிகச் சிறந்த முறையில் நடைபெற்று, மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வரவேற்க காயிதே மில்லத் மன்ஸில் தயார் நிலையில் இருந்து, பிரகாசத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தது. 

முதலமைச்சருக்கு அலுவலக வாசலில் வரவேற்பு :


காயிதே மில்லத் மன்ஸில் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், முதலமைச்சர் வருகைத்தரும் நேரம் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டே இருந்தது. இதனால், மரைக்காயர் லெப்பை தெருவின் இருபகுதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தங்களது திறமையை முழுவதும் வெளிப்படுத்தி சிறப்பான பணிகளை வழங்கிக் கொண்டிருந்தனர். 

சரியாக பிற்பகல் 3 மணி அளவில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய், காயிதே மில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார்கள். மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் வந்து இறங்கிய முதலமைச்சரை, காயிதே மில்லத் மன்ஸில் வாசலில் நின்று மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி., தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஷாஜஹான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

பின்னர், அங்கு கூடியிருந்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு கைகளை அசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சரை, நிகழ்ச்சி நடைபெறும் பரகத் அரங்கத்திற்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் தலைமையிலான வரவேற்பு குழுவினர் அழைத்துச் சென்றனர். பரக்த் அரங்கத்திற்குள் முதலமைச்சர் நுழைந்தபோது, அங்கு அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்தை எழுப்பி, அவரை வரவேற்றனர். 

நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு சென்றபோது மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தலைமை நிலையம் சார்பில் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வரவேற்றார். அப்போது முதலமைச்சர் அவர்கள் தேசிய தலைவருக்கு பொன்னாடை அணிவித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது, பன்னூலாசிரியர் ஏ.கே.ரிபாய் சாஹிப் எழுதிய 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்' நினைவு மலர், மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் எழுதிய, 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும் 'இந்திய முஸ்லிம்கள் பாகம் -1 ' ஆகிய இரண்டு நூல்கள், சிங்கப்பூர் செம்மொழி இதழ் ஆசிரியர் எம்.இலியாஸ் எழுதிய 'உலக அரங்கல் சிராஜுல் மில்லத்' எனும் நூல் ஆகியவை முதலமைச்சர் ஜோப் விஜய்க்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

வரவேற்பு உரை :

இதைத் தொடர்ந்து இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாண்புமிகு முதலமைச்சரை வரவேற்று பேசினார். அப்போது, இ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வந்து பெருமை சேர்த்து இருப்பதாக குறிப்பிட்ட அபூபக்கர், இயக்கத்தின் மூத்த நிர்வாகிகள், பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ் கனி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்ஷாஜஹான், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித், உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சருக்கு அறிமுகம் செய்துவைத்தார். 

தேசிய தலைவர் வாழ்த்துரை :


பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களை வாழ்த்தி, இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். அப்போது, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு வந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக, எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் வருவது கிடையாது. நாங்களும் அதை விரும்புவதில்லை. அதற்கு முக்கிய காரணம், இந்த பகுதி மிகவும் குறுகலான சிறிய பகுதியாகும். இதனால் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக, முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ளவர்களை நாங்களே நேரில் சென்று சந்தித்துவிட்டு வருவது வழக்கம். ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், எங்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று உறுதியாக கூறி, இங்கு வந்திருக்கிறார்கள். அதற்காக எங்களுடைய பாராட்டுதல்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். 

நடந்தமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய எழுச்சி மூலம், குறிப்பாக, பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இதுபோன்ற ஒரு எழுச்சியை நாங்கள் இதுவரை கண்டதில்லை. இதன்மூலம் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு என்பது உறுதியாக தெரிகிறது. நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், முந்தைய திராவிட மாடல் திமுக அரசு மேற்கொள்ள அனைத்து நல்ல திட்டங்களையும் நீங்கள் தொடர வேண்டும். அத்துடன், சமூக நீதி, சமய நல்லிணக்கத்தை பேணும் வகையில் மிகச் சிறந்த ஆட்சியை நீங்கள் தர வேண்டும். அத்தகைய நல்லாட்சியை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக உள்ளது. மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதிலுரை :

பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்  பதிலுரை ஆற்றினார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு வந்து அனைவரையும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பேராசிரியர் அய்யா அவர்கள் பேசும்போது, மிகுந்த கஷ்டப்பட்டு, நான் இங்கு வந்து இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், அது எனது கடமையாகும். இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகம் வந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

நான் ஏற்கனவே சொன்னதுபோன்று, இந்த விஜய் எப்போதும் உங்கள் கூடவே இருப்பான். அதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் மீண்டும் உறுதியாக கூறிக் கொள்கிறேன். சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இப்போம். எங்களுக்கு கடைசி நேரத்தில் நீங்கள் ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். அதற்காக மீண்டும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் பேசியபோது, தேசிய தலைவர் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் லீகர்களும் அவருக்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். 

முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்கள் கே.டி.கிஸர் முஹம்மது, சேமுமு முஹம்மது அலி, ஆர்.டி.பி.தாவூது பாஷா, தேசிய துணைத் செயலாளர் பாத்திமா முஸப்பர், மாநில தலைமை நிலையச் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன்,  மாநில செயலாளர்கள் அப்துல் காலித், வழக்கறிஞர் வி.ஜீவகிரிதரன், கே.எம்.நிஜாம்,மாநில துணைச்  செயலாளர்கள் ஆப்பனூர் ஜப்பருல்லாஹ், எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி, அப்துல் காதர் ஷெரீப் மற்றும் அணிகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வடக்கு தெற்கு, ஆகிய மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் முக்கிய லீகினர் திரளாக பங்கேற்றனர். 

மணிச்சுடர் குழுவினர் சந்திப்பு :

காயிதே மில்லத் மன்ஸிலுக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை மணிச்சுடர் செய்திக்குழுவினர் சந்தித்து தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். மணிச்சுடர் செய்தியாசிரியர் ஏ.கே.முஹம்மது காசிம் தலைமையில், கணினி பிரிவு ஊழியர்கள் சார்லஸ், பிரமிளா மற்றும் அச்சப்பிரிவு ஊழியர்கள் அனைவரும் முதலமைச்சரை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலமைச்சர் ஜோசப் விஜயை பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து காத்திருந்த அலுவலக தூய்மைப் பணியாளர் லட்சுமி அம்மாள், முதலமைச்சரை சந்தித்து தமது மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினார். அப்போது, தூய்மை பணியாளர் லட்சுமி அம்மாளிடம் முதலமைச்சர் கைகுலுக்கி வாழ்த்து பெற்றார். 

இறுதியாக நிகழ்ச்சி முடிந்து காயிதே மில்லத் மஸ்ஜிலில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கிளம்பியபோது, மண்ணடி பகுதியில் திரண்டு இருந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு அவருக்கு வாழ்த்துகளை கூறிபோது, அதனை மகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக் கொண்டார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில், தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர், தலைமை அலுவலகம் வந்து சிறப்பித்தது இதுவே முதல் முறையாகும். இதனால், இந்த நிகழ்ச்சி, வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவமாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: