Wednesday, May 6, 2026

ஹிஜ்ரி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வெட்டு...!

" ஹிஜ்ரி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வெட்டு "

- ஆவணப்படுத்திய சவூதி பாரம்பரிய ஆணையம் -

இஸ்லாமிய வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை குறித்து தொடர்ந்து ஆவணப்படுத்தும் முயற்சிகளில் சவூதி அரேபிய அரசு ஈடுபட்டுள்ளது. இதேபோன்று, உலகின் பல்வேறு நாடுகளில், இஸ்லாமிய வாழ்க்கை நெறி எப்படி வளர்ச்சி அடைந்தது என்பது குறித்தும் அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு கடும் உழைப்புக்குப் பிறகு ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்லாம் குறித்தும், திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவை குறித்தும் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, அவை ஒவ்வொன்றும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் உண்மை தன்மை, இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்பிறகே, இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு ஆகியவை குறித்த உண்மை தகவல்கள் ஆவணங்களாக  தயாரிக்கப்படுகின்றன. 

மேலும், பழமையான இஸ்லாமிய ஆவணங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, அவை பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், இஸ்லாமிய நெறி உலகில் எப்படி வேகமாக பரவியது என்பது குறித்தும், இஸ்லாமிய நெறியின் மூலம் மக்கள் அடைந்த பலன்கள், வாழ்க்கையில் கிடைத்த மகிழ்ச்சி, அமைதி  ஆகியவை குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டு, உலகின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. 

ஹிஜ்ரி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வெட்டு :

அந்த வகையில், சவூதி அரேபிய அரசின் சவூதி பாரம்பரிய ஆணையம், ஹைல் பிராந்தியத்தில் உள்ள சமீரா மாகாணத்தின் தெற்கே அமைந்துள்ள தாலி அல்-நிஸ் என்ற இடத்தில் ஒரு பழமையான இஸ்லாமியக் கல்வெட்டை கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளது.

ஹிஜ்ரி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, கூஃபான் ஹஜ் பாதையின் வழிகளில் ஒன்றான தர்ப் ஸுபைதா (ஸுபைதா பாதை) மீது அமைந்துள்ளது. தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்கவும், சவூதி அரேபியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தவும் ஆணையம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் போது இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

சமீராவிற்கு தெற்கே உள்ள ஒரு சிறிய மலையின் உச்சியில், கூஃபான் ஹஜ் பாதையுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இது, வரலாறு முழுவதும் யாத்ரீகர்கள் கடந்து செல்லும் இடமாக இந்தத் தளம் கொண்டிருந்த முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதோடு, பண்டைய யாத்திரைப் பாதைகளின் புவியியல் பரப்பளவிற்கான சான்றுகளையும் வழங்குகிறது.

 மன்னிப்புக் கோரும் ஒரு பிரார்த்தனை :

இந்தக் கல்வெட்டில், இப்ராஹீம் இப்னு ஸியாத் என்பவருக்கான மன்னிப்புக் கோரும் ஒரு பிரார்த்தனையும், சூரத்துல் பகராவின் ஒரு வசனத்தின் இறுதி மேற்கோளும் இடம்பெற்றுள்ளன. இது, தொடக்ககால இஸ்லாமியக் கல்வெட்டுகளின் நம்பிக்கை சார்ந்த தன்மையையும், அவை வெளிப்படுத்திய ஆன்மீக மற்றும் மனிதாபிமானச் செய்திகளையும் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த உரை, குவார்ட்ஸ் நரம்புகள் இடையிடையே காணப்படும் ஒரு தட்டையான கிரானைட் பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இது, அந்த இடத்தின் புவியியல் அமைப்பையும், இந்தக் கலைப்பொருட்களை ஆவணப்படுத்த அக்காலத்தில் கிடைத்த பொருட்களைப் பயன்படுத்திய விதத்தையும் பிரதிபலிக்கிறது.

                                                ===================

" ஹிஜ்ரி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டில், இப்ராஹீம் இப்னு ஸியாத் என்பவருக்கான மன்னிப்புக் கோரும் ஒரு பிரார்த்தனையும், சூரத்துல் பகராவின் ஒரு வசனத்தின் இறுதி மேற்கோளும் இடம்பெற்றுள்ளன. இது, தொடக்ககால இஸ்லாமியக் கல்வெட்டுகளின் நம்பிக்கை சார்ந்த தன்மையையும், அவை வெளிப்படுத்திய ஆன்மீக மற்றும் மனிதாபிமானச் செய்திகளையும் தெளிவாகக் காட்டுகிறது"

                                                ===================

சவூதி அரேபிய இராஜ்யத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொல்பொருள் தளங்களைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தும் பாரம்பரிய ஆணையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்தது. மனித வரலாற்றையும், காலங்காலமாக அதன் பயணப் பாதைகளையும் பிரதிபலிக்கும் ஒரு உயிருள்ள பதிவாக, இந்தத் தளங்களைப் பாதுகாக்கவும் அவற்றின் கலாச்சார இருப்பை மேம்படுத்தவும் அந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி :

ஹிஜ்ரி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வெட்டை சவூதி அரேபியாவின் பாரம்பரிய ஆணையம் ஆவணப்படுத்தியுள்ளது, உண்மையில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய செய்தியாகும். இந்த இஸ்லாமியக் கல்வெட்டு மூலம், இஸ்லாமிய வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த ஆய்வுகள் மூலம், இஸ்லாமிய வாழ்க்கை நெறி, உலக மக்களுக்கு எந்தவகையில் பலன் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது என்பதையும் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 

இத்தகைய பல இஸ்லாமியக் கல்வெட்டுகள் மூலம், இஸ்லாம் குறித்து சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஆய்வுகள் மேற்கொண்டு, உண்மை நிலையை அறிந்துகொள்ளவும் தற்போது வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், உலகில் இஸ்லாமிய நெறி மேலும் வேகமாக பரவும் என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இஸ்லாம் குறித்து ஆவணங்களை நாம் பாதுகாப்பதுடன் அதுகுறித்து விரியான ஆய்வுகளை மேற்கொண்டு, நமது சமுதாய இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய நெறி எந்தளவுக்கு வாழ்க்கைக்கு ஏற்ற நெறி என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: