திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறவு என்பது கொள்கை ரீதியாக வலிமையானது....!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடன், நேற்றும் இருந்தோம் !இன்றும் இருக்கிறோம் ! இனி நாளையும் இருப்போம் !!!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவிற்கு இ.யூ.முஸ்லிம் லீக் கட்டுப்பட்டு நடக்கும்...!!!
- தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை -
சென்னை, மே.6- திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொண்டுள்ள உறவு என்பது சாதாரண உறவு கிடையாது. அது கொள்கை ரீதியான வலிமையான கூட்டணி உறவாகும். திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடன் நேற்றும் இருந்தோம்., இன்றும் இருக்கிறோம்., நாளையும் இருப்போம் என்றும் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு இ.யூ.முஸ்லிம் கட்டுப்பட்டு நடக்கும் என்றும் பேராசிரியர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நடந்த முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் ஏ.எம்ஷாஜஹான் ஆகியோருக்கு சென்னை மண்ணடியில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் 05.05.2026 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இறுதியாக பேராசிரியர் நிறைவுரையாற்றினார். அந்த உரையின் முழு விவரம் வருமாறு :
கடமையை நிறைவேற்றிய மேலிட பொறுப்பாளர்கள் :
இ.யூ.முஸ்லிம் லீகின் அருமை தலைவர்களே, அன்பு சகோதரிகளே, இங்கு சிறப்பாக வருகை தந்து, நமக்கு பெருமை சேர்த்துள்ள சிங்கபூர் ராயல் கிங்ஸ் சிராஜுத்தீன் சையத் முகமது சாஹிப் அவர்களே, மற்றும் உள்ள அருகை சகோதரர்களே, இந்த சிறப்புக் கூட்டம், நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வழக்கமாக இ.யூ.முஸ்லிம் லீகின் தலைமை நிலையத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், யார் வெற்றிபெற்றாலும் அவர்களை அழைத்து, அவர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யக் கூடிய கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தான் இந்த ஏற்பாட்டையும் நமது பொதுச் செயலாளர் அவர்கள் மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் 7வது சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து, மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பங்கேற்ற திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற இ.யூ.முஸ்லிம் லீகிற்கு வழங்கப்பட்ட பாபநாசம் மற்றும் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகளில் சகோதரர் ஷாஜஹான் மற்றும் சகோதரர் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் ஆகியோரை நமது சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்தோம். இந்த பொறுப்புகளை திறம்பட நடத்தி, வெற்றி வாகை சூடி, நமக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் கொண்டு வந்து தர வேண்டும் என்ற நமது வேண்டுகோளை ஏற்று, சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களையும் சகோதரர் நவாஸ் கனி அவர்களையும் நாம் மேலிடப் பொறுப்பாளர்களாக நியமித்தோம். அந்த பொறுப்புகளை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டு, எப்படி சொல்லிவிட்டு சென்றார்களோ, அப்படி, இரண்டு தொகுதிகளில் இருந்தும் இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொண்டு வந்து, தலைமை நிலையத்தில் ஒப்படைப்போம் என்று சொன்னது போன்று, நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
சொல்லுவது என்பது மிகமிக எளிது. சொல்லுவது போல்,செய்வது மிகமிக கடினம். அப்படி சொன்ன அந்த வார்த்தையை மிகவும் நுட்பமாக செயல்பட்டு, அவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி, இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொண்டு வந்து நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். ஆகவே எம்.எம்.ஏ.க்களை தேர்வு செய்த தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதோடு, அவர்களை எம்.எல்.ஏ.க்களாக கொண்டு வந்து சேர்த்த நமது அருமை சகோதரர்கள் இருவருக்கும் நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். முதல் நன்றி அவர்களுக்கு தான். அப்துர் ரஹ்மான் அவர்களுக்கும், நவாஸ் கனி அவர்களுக்கும் முதலில் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் இரண்டு பேரும் செய்த பணிகள் குறித்து இரண்டு எம்.எல்.ஏ.க்களும் மிகச் சிறப்பாக இங்கே சொல்லி இருக்கிறார்கள். தேர்தலின்போது அவர்கள் இருவரும் ஆற்றிப் பணிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் நம்மிடம் சொல்லி, மிகச் சிறந்த முறையில் வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார்கள். அதனால், இரண்டு தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிறுத்தப்பட்ட நமது வேட்பாளர்களை இரண்டு பேரையும் எம்.எல்.ஏ.க்களாக கொண்டு வந்து சேர்ந்த இரண்டு பேருக்கும் நாம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
ஐந்து ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்த திமுக :
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி கடந்த ஐந்து ஆண்டு காலமாக திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், மிக அற்புதமான ஒரு ஆட்சியை நடத்தி, மற்ற மாநிலங்கள் எல்லாம், பாராட்டக்கூடிய அளவுக்கு மட்டுமல்லாமல், அயல்நாடுகளில் பாராட்டக் கூடிய ஒரு நல்ல ஆட்சியை தமிழகத்திற்கு தந்து இருக்கிறார். அந்த அடிப்படையில் அவர் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்று நாம் விரும்பினோம். அதற்காக இரவு பகலாக நாம் பாடுபட்டோம். ஆனால், இறைவனின் நாட்டம் வேறாக இருக்கிறது. ஆட்சியை கொடுப்பவனும் அவன் தான்., ஆட்சியை பறிப்பவனும் அவன் தான். அதுதான் இறைவன் நமக்கு சொல்லிய பாடமாக இருக்கிறது. எது நடந்தாலும் அது நல்லதாகவே நடக்கும். நேற்றைய விட இன்று நல்லதாகவே நடக்கும். இன்றைய நாளைவிட நாளை வரும் காலம் மிகவும் நல்லதாகவே இருக்கும் என்று தான் மார்க்கம் நமக்கு சொல்லி இருக்கிறது. அந்த நம்பிக்கையை நேற்றைய விட இன்று நல்ல நாள் தான். இன்றைய நாளை விட நாளை வரும் நாள் மிகவும் நல்லதாகவே இருக்கும். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்பித்த வாழ்க்கை நெறியின்படி நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த வாழ்க்கை நெறியை முழுமையாக கடைப்பிடித்து வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு சக்தியை கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். சிராஜுத்தீன், அப்துல் காதர் உள்ளிட்ட சகோதரர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நமக்கும் தாளாரமாக உதவி செய்து இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நாம் நன்றி சொல்லிக் கடமையப்பட்டுள்ளோம். ஆண்டவன் கொடுத்தை நீங்கள், நன்மையாக காரியங்களுக்கு கொடுத்து உதவி செய்து இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏக இறைவன் பன்மடங்கு கொடுக்க நாங்கள் துஆ செய்துக் கொண்டே இருப்போம்.
திமுகவுடன் கொள்கை ரீதியான உறவு :
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், வெற்றிபெற முடியாத ஒரு நிலை ஏற்பட்டது, நமக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் துக்கத்தையும் தந்து இருக்கிறது. அவருக்கு நாம் ஆறுதல் சொல்வதோடு, வருங்காலத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் எல்லா நிலைகளிலும் துணையாக நிற்போம் என்று இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவோடு நாம் கொண்டிருக்கின்ற அரசியல் உறவு, ஒரு கொள்கை ரீதியான உறவு. தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க அடிப்படையில், குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், உலமாக்கள் சொல்லிக் கொடுத்த வழிமுறைகளின் அடிப்படையில், அதனை ஏற்று பின்பற்றும் முஸ்லிம் சமுதாயமாக இருக்கும் நாம், தமிழகத்தில் ஒரு நல்லாட்சிக்கு நாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தோம். அதற்கு முக்கிய காரணம், திமுக பின்பற்றும் கொள்கையும், நாம் பின்பற்றும் கொள்கையும், ஒரே மாதிரியாக முன்பும் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அதனால் தான் அவர்களோடு கூட்டணியில் நேற்றும் இருந்தோம். இன்றும் இருக்கிறோம். அவர்களோடு நாளையும் இருப்போம். இதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடம் இல்லை.
திமுகவிற்கு இ.யூ.முஸ்லிம் லீக் துணையாக இருக்கும் :
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கூட்டணி கட்சித் தலைவர்களும், திமுக தலைவர் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாமும் மே 6ஆம் தேதி அன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை நமது சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு சென்று சந்திக்க இருக்கிறோம். அவரது வாழ்த்துகளை பெற இருக்கிறோம். இந்த சந்திப்பின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் இருவரின் வெற்றிக்காக அவர் செய்த பணிகளுக்காக நாம் நன்றி சொல்வோம். மேலும் திமுக அரசு செய்த நன்மைகள் குறித்து பாராட்டும் நன்றியைம் நாம் அவரிடம் நேரில் சொல்வோம். இத்தகைய நல்ல அரசை பின்பற்றி தான் இனி வரக்கூடியவர்கள் நடக்க முடியும் என்பதையும் நாம் எடுத்துச் சொல்வோம். தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டோமே என்று கவலைப்பட வேண்டியதில்லை. கவலையை விட்டுத் தள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் துணையாக மட்டுமல்லாமல், உங்களை தூக்கிப்பிடிக்கு தூணாக இருப்போம் என்றும் கூறுவோம்.
தங்க தமிழகத்தில் பொங்கு புகழ்பெற்று வரும்,நீடித்து நல்லாட்சியை தொடருவார் என்று ம்க்கள் அனைவரும் விரும்பினார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்துவிட்டன. ஆனால், முடிவுகள் எப்படி இருந்தாலும் நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். கேரளாவில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீக் ஆட்சி அமைக்கிறது. இதேபோன்ற நிலை, தமிழகத்தில் வந்துவிடுமோ என்று சிலர் நினைக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசியல் நிலை வேறு. கேரளாவில் உள்ள அரசியல் வேறு. அங்குள்ள அரசியலைப் பின்பற்றி முஸ்லிம்கள் நடப்பார்கள். இங்குள்ள அரசியல் நிலையைப் பின்பற்றி நாம் நடப்போம்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைமை எடுக்கும் முடிவு :
தமிழகத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாம் தொடர்ந்து இருப்போம். நாம் எந்த முடிவு எடுத்தாலும் கூட்டணியின் தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதன்படி நமது அரசியல் நடவடிக்கைகள் இருக்கும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சில குழப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் இ.யூ.முஸ்லிம் லீகர்களுக்கு குழப்பம் வந்துவிடக் கூடாது. எனவே யாரும் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அந்த கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து இருக்கும். ஆகவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எடுக்கும் முடிவின் அடிப்படையில் இ.யூ.முஸ்லிம் லீக் தமது பயணத்தை தொடரும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம்.
இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றக் குழு தலைவர் தேர்வு :
சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் விரைவில் பதவி ஏற்க இருக்கிறார்கள். கடந்த காலத்தில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், கலிலுர் ரஹ்மான் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற தலைவராகவும், தம்பி அப்துல் பாசித் செயலாளராகவும் செயல்பட்டார்கள். பின்னர், ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டபோது, இ.யூ.முஸ்லிம் லீகின் சட்டமன்றத் தலைவர் முஹம்மது அபூபக்கர் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார். அதுதொடர்பான கடித்தைத் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அளித்தபோது, அவர் நமக்கு சட்டமன்ற அறை ஒன்றை ஒதுக்கி தந்தார். தற்போது இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இருவரின் ஒருவர் தலைவராகவும், ஒரு செயலாளராகவும் இருப்பார்கள். செயலாளருக்கு பெயர் கொறடா என்று சொல்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றபிறகு, சையத் பாரூக் மற்றும் ஷாஜஹான் ஆகிய இருவரும் கலந்து ஆலோசித்து யார் தலைவராகவும், செயலாளராகவும் இருக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து எங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஜனநாயகத்தில் நாம் யாரையும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இருவரும் பேசி எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதன் அடிப்படையில் சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு நாம் கடிதம் எழுதுவோம். இ.யூ.முஸ்லிம் லீகிற்காக ஒரு அலுவல் அறையை ஒதுக்க வேண்டும் என்று அந்த கடித்தில் நாம் வலியுறுத்துவோம்.
பஞ்சாயத்து தேர்தலில் கவனம் அவசியம் :
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் இருக்கின்றன. ஆக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் ஒரு உறுப்பினர் கட்டாயம் இடம்பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், ஒரு வார்டு உறுப்பினராக முஸ்லிம் லீகர் வர வேண்டும். அதற்கு நாம் அனைவரும் பாடு பட வேண்டும். ஏணி சின்னத்தில் நின்று நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே நாம் தொடங்க வேண்டும். அது நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். அதிமுக ஆட்சி காலத்தில் சில வார்டுகளை பிரிக்கும்போது, அந்த வார்டுகளில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து பிரித்தார்கள். இதனால் பல்வேறு குழப்பங்கள் வந்தன. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இப்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நிச்சயமாக நடக்கும். தேர்த்ல் அறிவிப்பு வெளியாகும் முன்பு, முன் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நாம் தீர்வு காண வேண்டும். வார்டுகளை சரியான முறையில் மாற்றி அமைக்க நாம் கோரிக்கை வைப்பதுடன் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். தேவைப்பட்டால் சாலை மறியலில் கூட ஈடுபடலாம். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பேரவையில் எடுத்துச் சொல்லி தீர்வு காண வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து நமது பொதுச் செயலாளர் அவர்களிடம் தொடர்பு கொண்டு இரண்டு உறுப்பினர்களும் நல்ல ஆலோசனைப் பெற்று அதன்படி நடக்க வேண்டும். மேலும் அப்துர் ரஹ்மான், நவாஸ் கனி ஆகியோரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். மேலும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள், முஸ்லிம் அமைப்புகள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு அவர்கள் சொல்லும் கருத்துகளை உள்வாங்கி, சட்டமன்றத்தில் நீங்கள் இருவரும் உரையாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். வரும் சட்டமன்றம் சாதாரண சட்டமன்றமாக இருக்காது. ஒரு போர்க்களமாக கூட மாறக்கூடும். அப்படிப்பட்ட நேரங்களில், மிகுந்த எச்சரிக்கையுடன் நீங்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இரண்டு எம்.பி.க்கள், 20 எம்.எல்.ஏக்கள் தேர்வு :
மேலும் 2029 நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது, தமிழ்நாட்டில் தற்போது ஒரு இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி. இருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் இரண்டு எம்.பி.க்களை நாம் உருவாக்க வேண்டும். அப்படி இரண்டுதொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டால், தமிழ்நாட்டிலும் ஏணி சின்னம் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக மாறிவிடும். அதற்கான முயற்சியை இன்றில் இருந்து நாம் தொடங்க வேண்டும்.
தற்போது சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் நாம் வெற்றிபெற்றது அல்லாஹ் நமக்கு கொடுத் அருட்கொடை. வருங்காலத்தில் 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் போட்டியிடும் வகையில் நாம் பாடுபட வேண்டும். இருபது தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற உருவாக்கும் முயற்சியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். அப்படி தொடர்ச்சியாக பணியாற்றி வந்தால், தேர்தல் வரும் நேரத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் நிச்சயமாக நின்று வெற்றிவாகை சூடுவார்கள். அல்லாஹ் தற்போது நமக்கு கொடுத்த இரண்டு தொகுதிகள், இனி இரண்டாக மட்டுமே நிற்காது. அது 20ஆக மாறும் என்று உறுதியாக நம்பிக்கை கொள்வோம்.
இவ்வாறு பேராசியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்









No comments:
Post a Comment