மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் நிராகரிப்பு.....!
மாநிலத்தில் சமூகப் பிளவுகளை உருவாக்க எந்தவொரு தரப்பையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு,அனுமதிக்காது..!!
கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் திட்டவட்டம்....!!!
திருவனந்தபுரம், மே.19- இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் இயக்கம் என வர்ணித்துள்ள கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், லீகிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்துள்ளார்.
கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், அம்மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி.சதீசன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் குறித்து, சில மதவாத சக்திகள் வெறுப்பு பிரச்சாத்தை தொடங்கியுள்ளன. இ.யூ.முஸ்லிம் லீக், மதவாத கட்சி என்று அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சதீசன் கண்டனம் :
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள வி.டி.சதீசன், இ.யூ.முஸ்லிம் லீக் ஒரு மதச்சார்பற்ற இயக்கம் என வர்ணித்து, அதற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கியக் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை குறிவைத்து நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சாரம் முறியடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இ.யூ.முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பனக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் மற்றும் தேசியப் பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி உள்ளிட்ட லீகின் உயர்மட்டத் தலைவர்களுடன் இணைந்து, சதீசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இ.யூ.முஸ்லிம் லீக் ஒரு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான அமைப்பாகச் சித்தரிக்க நடக்கும் முயற்சிகளுக்கு, உடனடியான, வலுவான மற்றும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சதீசன் திட்டவட்டமாக கூறினார். ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, மாநிலத்தில் சமூகப் பிளவுகளை உருவாக்க எந்தவொரு தரப்பையும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
கேரளத்தின் மதச்சார்பற்ற அரசியல் சூழலைப் பிளவுபடுத்தும் வகையிலான இத்தகைய சதி முயற்சிகள், எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும், அவை கடுமையாக எதிர்கொள்ளப்படும். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரங்களை நாங்கள் திறம்பட முறியடித்தோம். பிளவுபடுத்தும் அத்தகைய பிரச்சாரங்களைக் கேரள மக்கள் நிராகரித்துவிட்டு, ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பரிசளித்துள்ளனர். கேரளத்தை மதரீதியாகப் பிளவுபடுத்த நடக்கும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் அதைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை, இந்த அரசாங்கம் உறுதியாகக் காத்து நிற்கும் என்று சதீசன் கூறினார்.
இ.யூ.முஸ்லிம் லீகின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கு :
இ.யூ.முஸ்லிம் லீகை கடுமையாக விமர்சிப்பவர்கள், ஒரு மதச்சார்பற்ற மற்றும் நிலைப்படுத்தும் சக்தியாக லீக் ஆற்றிவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் தங்ஙள் குடும்பத்தினர் ஆற்றிய பங்குதான், 1992-ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட சமூகப் பின்விளைவுகளின் தீவிரத்தைக் குறைத்து, ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். முனம்பம் மற்றும் பள்ளுருத்தி விவகாரங்களில்" மதச்சார்பின்மையைக் காப்பதிலும், பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் இ.யூ.முஸ்லிம் லீக் உறுதியுடன் செயல்பட்டதாக சதீசன் பாராட்டு தெரிவித்தார். இ.யூ.முஸ்லிம் லீகை மதச்சார்பின்மைக்கு எதிரானதாகச் சித்தரிக்க முயல்பவர்கள், லீகின் தலைமை மட்டும் இல்லாவிட்டால், எத்தகைய அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கியிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் சதீசன் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சருக்கு பாராட்டு :
இ.யூ.முஸ்லிம் லீக் குறித்து சதீசனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கேரள மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், முதலமைச்சருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், இறுதியாக, கேரள மாநிலத்திற்கு அது தகுதியான ஒரு தலைவர் கிடைத்துள்ளார் என்று பாராட்டு தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment