Friday, May 8, 2026

த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்கவில்லை - பேராசிரியர் பேட்டி...!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் ஆதரவு அளிக்கவில்லை....!

புதியஅரசு அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நாங்கள் எழுதிய கடிதம் தவறாக புரிந்துக்  கொள்ளப்பட்டுள்ளது...!!

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி...!!!

சென்னை, மே.09- தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்த ஆதரவு கடிதமும் அளிக்கவில்லை என்று தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகதீன் திட்டவட்டமாக உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை 08.05.2026 சனிக்கிழமை இரவு 8 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தலைமையில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். ஷாஜஹான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பி. சையது பாரூக், மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்  கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்கிறது என்று அவர்கள் உறுதி அளித்தார்கள்.

பின்னர் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது 

திமுகவுடன் உறுதியான கூட்டணி :

கேள்வி : த.வெ.க.விற்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஆதரவு வழங்கி கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : த.வெ.க.விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நாங்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கடிதமும் எழுதவில்லை. இந்திய யூனியன்முஸ்லிம் லீகை பொருத்தரவரை ஆரம்பத்தில் இருந்தே  நாங்கள்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்அங்கம் வகித்து வருகிறோம். அதை நாங்கள் தொடர்ந்து என்ன சொல்லி வருகிறோம்.  அது என்னவென்றால், நேற்று, இன்று, நாளை எப்போதும் திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் இடம்பெறும் என்று வலிமையாக நாங்கள் சொல்லி வருகிறோம். 

அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் :

தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றிபெற்று எந்த கட்சி பெரும்பான்மை பலத்துடன் வருகிறதோ, அந்த கட்சியை அழைத்து அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.  அப்படி தான் பாரம்பரியம் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. 

எனவே, அந்த பராம்பரியத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். மாநில ஆளுநர் அந்த கடமையை செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். சட்டத்தை மதித்தும், ஜனநாயகத்தை மதித்தும், இந்திய அரசிலமைப்பு சாசனத்தை மதித்தும் மற்றும் வரம்பு, விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் ஆளுநருக்கு நாங்கள் கடிதமும் எழுதினோம். 

த.வெ.க.விற்கு ஆதரவு இல்லை :

ஆனால் அந்த கடிதத்தை சரியாக படிக்காமல், அல்லது அதை தவறாக புரிந்துகொண்டு, த.வெ.க.விற்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஆதரவு அளிப்பதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தியை சிலர் வெளியிட்டுள்ளார்கள். நாங்கள் மிகமிகத் தெளிவாகவே சொல்லி இருக்கிறோம். எங்களை த.வெ.க. நிர்வாகிகள் பலர் நேரில் சந்தித்து ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.  அவர்கள் அனைவரிடமும் நாங்கள் என்ன சொல்லி இருக்கிறோம் என்றால், நடந்து முடிந்த தேர்தலில் மட்டுமல்லாமல், எல்லா தேர்தலிலும், இ.யூ.முஸ்லிம் லீகை பொருத்தவரை, நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நேற்றும் இருந்தோம். இன்றும் இருக்கிறோம். நாளையும் இருப்போம். 

அரசியலில் எந்த மாற்றம், திருத்தம் வந்தாலும், திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் முடிவை அறிந்து, அதற்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம். இங்கு இ.யூ.முஸ்லிம் லீகின் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் வந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திமுக தலைவர் சந்தித்து, வாழ்த்து பெற்றதுடன், இ.யூ.முஸ்லிம் லீகின் அரசியல் நிலைப்பாட்டை நாங்கள் உறுதியாக தெரிவித்து வந்தோம். எங்கள் அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதியாக கூறிக் கொள்கிறோம். 

இவ்வாறு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இ.யூ.முஸ்லிம் லீகின் அரசியல் நிலைப்பாடு குறித்து மிகத் தெளிவாக செய்தியாளர்களிடம் எடுத்துக்கூறினார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: