" அபுதாபியின் மிகப் பழமையான மரம் "
- அரிய தகவல்களுடன் கூடிய ஓர் ரிப்போர்ட் -
உலகின் பல பகுதிகளில் பழமையான மரங்கள் இன்றும் நிலைத்து காணப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள இந்த பழமையான மரங்கள் குறித்து, ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அபுதாபியில் முத்து எடுப்பவர்கள் ஒரு காலத்தில் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்ப சித்ரா மரத்தை ஓர் அடையாளமாகப் பயன்படுத்தினர். அந்த பழமையான மரம் இன்றும் பாதுகாப்பட்டு வருகிறது.
இத்தகைய பழமையான மரங்கள் குறித்து நாம் அறிந்துகொள்வதன் மூலம், மரங்களின் முக்கியத்துவம் குறித்து நமது சமூகத்திற்கு நல்ல தகவல்களை பரப்ப முடியும். மனித வாழ்க்கையில் மரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறித்து நமக்கு தெரியவரும். அந்த வகையில், அபுதாவியில் உள்ள மிகப் பழமையான மரம் குறித்த அரிய தகவல்களை நாம் இந்த கட்டுரையில் அறிந்துகொள்வோம்.
பழமையான மரங்கள் குறித்த அரிய தகவல்கள் :
உலகின் மிகப் பழமையான, தனித்து வாழும் மரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வெள்ளை மலைகளில் காணப்படும் மெதுசெலா ஆகும். இது ஒரு கிரேட் பேசின் பிரிஸ்டில்கோன் பைன் வகை மரமாகும். இதன் வயது சுமார் 4 ஆயிரத்து 850 ஆண்டுகளுக்கும் மேலானது.உலகின் மெதுசெலாவே அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட உலகின் பழமையான தனி மரம். இதன் பாதுகாப்பிற்காக, இதன் சரியான இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.பாண்டோ என்பது ஒரு தனி மரம் அல்ல. ஒரு 'குளோனல் காலனி'. இது உட்டாவில் உள்ள ஒரு ஆஸ்பென் மரம். இதன் வேர் அமைப்பு 80 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறது. இது உலகின் பழமையான வாழும் உயிரினங்களில் ஒன்றாகும். சிலியில் உள்ள இந்த படகோனியன் சைப்ரஸ் மரம், 5 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதன் வயது கணக்கீடு இன்னும் விவாதத்தில் உள்ளது.இவை தவிர, ஸ்வீடனில் உள்ள ஓல்ட் டிச்கோ (Old Tjikko) என்ற நார்வே ஸ்ப்ரூஸ் மரம் 9 ஆயிரத்து 550 ஆண்டுகள் பழமையானது. ஆனால் இது மரத்தின் தண்டு அல்ல, அதன் வேர் அமைப்பே அவ்வளவு பழையது.
அல் ஜத்தா என்று அழைக்கப்படும் மரம் :
இதேபோன்று அபுதாபியின் மிகப் பழமையான மரம் ஒன்று உலகின் பார்வையை ஈர்த்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, 1882-ல் நடப்பட்ட இந்த மரம், உள்ளூரில் 'அல் ஜத்தா' என்று அழைக்கப்படுகிறது. இது தலைநகரின் இயற்கை பாரம்பரியத்தின் ஒரு உயிருள்ள பகுதியாக நகராட்சியால் பாதுகாக்கப்படுகிறது.
அல் பதீன் பூங்காவிற்குள் அமைதியாக அமைந்துள்ள 143 ஆண்டுகள் பழமையான சித்ரா மரம், அதிகாரப்பூர்வமாக அபுதாபியின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பல்லாண்டு மரமாகும். இது தலைநகரின் இயற்கை பாரம்பரியத்தின் ஒரு உயிருள்ள பகுதியாக நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
====================
"ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, 1882-ல் நடப்பட்ட மரம், உள்ளூரில் 'அல் ஜத்தா' என்று அழைக்கப்படுகிறது. இது தலைநகரின் இயற்கை பாரம்பரியத்தின் ஒரு உயிருள்ள பகுதியாக நகராட்சியால் பாதுகாக்கப்படுகிறது. 143 ஆண்டுகள் பழமையான இந்த சித்ரா மரம் அபுதாபியின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பல்லாண்டு மரமாகும்"
====================
எண்ணெய் பயன்பாட்டிற்கு முன்பும், கூட்டாட்சிக்கு முன்பும், அபுதாபி ஒரு நகரமாக மாறுவதற்கு முன்பும், 1882-ல் நடப்பட்ட இந்த மரம், உள்ளூரில் "அல் ஜத்தா" என்று அழைக்கப்படுகிறது. இது கிங் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் தெருவில் அமைந்துள்ளது.
அபுதாபி நகர நகராட்சி பல ஆண்டுகளாக இந்த மரத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அதைச் சுற்றி ஒரு பாதுகாப்புத் தடுப்பை அமைத்து, அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் அது நடப்பட்ட ஆண்டையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் தகவல் பலகைகளையும் அருகில் நிறுவியுள்ளது.
சிறப்பு நிபுணர் குழு கண்காணிப்பு :
ஒரு சிறப்பு நிபுணர் குழு, இந்த மரத்தின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, அதன் இயற்கையான வடிவத்தைப் பாதுகாப்பதற்காகவும், அதன் வயதான கிளைகள் அவற்றின் சொந்த எடையால் முறிந்துவிடாமல் தடுப்பதற்காகவும் லேசான கத்தரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.
சித்ரா ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் மீள்திறன் கொண்ட பூர்வீக இனங்களில் ஒன்றாகும். இது குறைந்தபட்ச நீரிலேயே உயிர்வாழ்கிறது, உப்புத்தன்மை கொண்ட மண்ணைத் தாங்குகிறது. மேலும் பெரும்பாலான தாவரங்கள் வளரத் தவறும் சூழல்களிலும் நிழலையும் பழங்களையும் தருகிறது. இந்தக் குணங்களே, அபுதாபி ஒரு கடலோர கிராமத்திலிருந்து ஒரு உலகளாவிய தலைநகரமாக உருமாறியதை இந்த குறிப்பிட்ட மரம் காண வழிவகுத்துள்ளன.
அபுதாபியின் கட்டிடங்கள் அதன் தன்மையை உணர்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அதன் மரங்கள் அபுதாபியின் தன்மையை உணர்த்திய ஒரு காலகட்டத்தில், திரும்பி வரும் முத்து மூழ்காளர்கள் தங்கள் வீடுகளுக்கு வழி கண்டுபிடிப்பதற்கு இந்த மரத்தை ஒரு அடையாளமாகப் பயன்படுத்தினர் என்று பாரம்பரிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூர்வீக காட்டுத் தாவர இனங்களின் தாயகம் :
ஐக்கிய அரபு அமீரகம், தலைமுறை தலைமுறையாகப் பாலைவன காலநிலைக்குத் தங்களைத் தகவமைத்துக் கொண்ட பல்வேறு வகையான பூர்வீக காட்டுத் தாவர இனங்களின் தாயகமாக விளங்குகிறது. மேலும், பாரம்பரிய மரங்களைப் பாதுகாப்பது, இந்த இடத்தின் நினைவுகளையும் பசுமையான அடையாளத்தையும் உருவாக்கும் இந்த இயற்கைச் சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது.
பார்வையாளர்களின் அனுபவம் மரத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அல் பதீன் பூங்காவானது, நடைபயிற்சி மற்றும் மிதிவண்டிப் பாதைகள், பசுமையான இடங்கள் மற்றும் நிழல் தரும் இருக்கைகளையும் கொண்டுள்ளது. இதனால் இது தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு வரவேற்கத்தக்க திறந்தவெளி இடமாகத் திகழ்கிறது.
1882-ல் நடப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரம், முத்து மூழ்கிகளுக்கு ஒரு அடையாளச் சின்னமாக விளங்கியதுடன், தலைநகரின் பாரம்பரியத்தின் ஓர் உயிருள்ள சான்றாகத் திகழ்கிறது. மரத்தின் கிளைகளைப் பாதுகாக்கும் சிறப்பு கவனிப்புடன், நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்த மரம் 2020-ஆம் ஆண்டில், 100 ஆண்டுகள் பழமையான அல்-சர் மரம் ஒன்றும் அபுதாபி சுற்றுச்சூழல் முகமையால் அடையாளம் காணப்பட்டது.
வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம் என்ற முழக்கம் அனைத்து நாடுகளில் தொடர்ந்து எழுப்பட்டு வந்தாலும், பழமையான மரங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. பழமையான மரங்களை பாதுகாப்பது, மனித இனத்திற்கு பாதுகாப்பான ஒன்றாகும் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment