" கத்தார் பழைய அரண்மனையின் கட்டடக்கலை அழகியல் "
- ஆராய்ச்சியை தொடங்கிய அருங்காட்சியகங்கள் -
இஸ்லாமிய கட்டடக்கலையின் அழகு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த கட்டடக்கலையின் நுணுக்கங்களை பார்க்கும்போது உண்மையில் மிகப்பெரிய அளவுக்கு வியப்பு ஏற்படும். எந்தவித நவீன தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லாமல், அந்த காலத்தில், மிகச் சிறந்த கட்டடக்கலையை இஸ்லாம் உலகத்திற்கு அறிமுகம் செய்தது என்ற கேள்வி பிறக்கும். உண்மையில், இஸ்லாமிய கட்டடக்கலை, மனத்திற்கு ஆனந்தம் தரும் ஒரு அழகான கட்டடக்கலை அழகு என்றே கூற வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில், இஸ்லாமிய கட்டடக்கலை குறித்து உலகின் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய அரண்மனைகள், மஸ்ஜித்துகள், கோட்டைகள் என பழமையான கட்டடங்கள் அனைத்தும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு, இஸ்லாமிய கட்டடக்கலையின் நுணுக்கங்ளை அறிந்துகொள்ளும் ஆர்வம் கட்டடக்கலை நிபுணர்கள் மத்தியில் பிறந்துள்ளது. எனவே, இஸ்லாமிய கட்டடக்கலையின் அழகியல் குறித்து தொடர்ந்து வியப்பு அளிக்கும் வகையில் தகவல்கள் உலகத்தின் முன் தற்போது வந்துக் கொண்டு இருக்கிறது.
கத்தார் அருங்காட்சியகங்களின் புதிய முயற்சி :
அந்த வகையில், கத்தார் அருங்காட்சியகங்கள், 'பழைய அரண்மனையில் கட்டடக்கலை' எனும் கருத்தரங்கை மே 10 அன்று கத்தார் தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள தர்விஷ் அல்-ஃபார் அரங்கில் நடத்தியது. இக்கருத்தரங்கில், கத்தார் கட்டடக்கலை மற்றும் பாரம்பரிய வரலாற்றில் ஆர்வமுள்ள நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு பங்கேற்றது.
கத்தாரின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான 'பழைய அரண்மனையை' மீண்டும் முன்னிலைப்படுத்த அருங்காட்சியகம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இக்கருத்தரங்கம் அமைந்தது. இது அரண்மனையின் வரலாற்று மற்றும் கட்டடக்கலை வளர்ச்சி குறித்தும், நாட்டின் வரலாற்றில் அதன் அரசியல் மற்றும் சமூகப் பங்கு குறித்தும், பின்னர் நவீன தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அது உருமாறிய விதம் குறித்தும் ஆழமான ஒரு பார்வையை வழங்கும்.
====================
"கத்தாரின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான பழைய அரண்மனையை மீண்டும் முன்னிலைப்படுத்த அருங்காட்சியகம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் அரண்மனையின் வரலாற்று மற்றும் கட்டடக்கலை வளர்ச்சி குறித்தும், நாட்டின் வரலாற்றில் அதன் அரசியல், சமூகப் பங்கு குறித்தும், நவீன தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அது உருமாறிய விதம் குறித்தும் ஆழமான ஒரு பார்வை கிடைக்கும்"
====================
பழைய அரண்மனையின் கட்டடக்கலைச் சிறப்பியல்புகள், பாரம்பரிய கத்தார் கட்டடக்கலையின் பிரதிபலிப்புகள், அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான நுட்பங்கள் எனப் பல்வேறு சிறப்புத் தலைப்புகளை இக்கருத்தரங்கம் விவாதித்தது. மேலும், நாட்டின் வரலாற்றின் முக்கிய கட்டங்களுக்கும், அதன் அரசியல் மற்றும் கலாச்சார மாற்றங்களுக்கும் ஒரு சாட்சியாகத் திகழும் அந்த அரண்மனையின் குறியீட்டு முக்கியத்துவத்தையும் இந்த கருத்தரங்கம் எடுத்துரைத்தது.
பழைய அரண்மனையின் பெருமை :
தேசிய அருங்காட்சியகத்திற்குள் அமைந்த ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரியச் சின்னமாக உருமாறும் முன்பு, நாட்டின் நிர்வாக விவகாரங்களுடன் தொடர்புடைய ஒரு வரலாற்றுத் தலைமையிடமாகப் பழைய அரண்மனை திகழ்ந்தது. கத்தாரின் பொது வாழ்வில் அந்த அரண்மனை வகித்த பங்கு குறித்தும் பங்கேற்பாளர்கள் இக்கருத்தரங்கில் விவாதித்தனர். இந்த உருமாற்றம், தேசிய நினைவுகளைப் பாதுகாப்பதிலும், கத்தாரின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அருங்காட்சியகம் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையுடன் முழுமையாக ஒத்துப்போகிறது.
இக்கருத்தரங்கம் அரபு மொழியில் நடத்தப்பட்டது. அதேநேரத்தில், பங்கேற்பாளர்களின் வசதிக்காக மொழிபெயர்ப்பு வசதியும் வழங்கப்பட்டது. இது பல்வேறு தேசங்களையும் கலாச்சாரப் பின்னணிகளையும் சார்ந்தவர்கள் பரவலாகப் பங்கேற்கவும், அரண்மனையின் வரலாறு மற்றும் அதன் கட்டடக்கலை, பாரம்பரிய முக்கியத்துவம் குறித்த அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் வழிவகுக்கும் வகையில் அமைந்து இருந்தது.
பழைய அரண்மனையின் வரலாறு, கட்டடக்கலை மற்றும் கத்தார் வரலாறு ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் கட்டடக்கலைப் பாரம்பரியம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் எனப் பலதரப்பட்ட பார்வையாளர்களை இக்கருத்தரங்கம் இலக்காகக் கொண்டு கவர்ந்தது. சமூகத்தின் தேசிய அடையாளம் மற்றும் கலாச்சார நினைவுகளின் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உரையாடுவதற்கும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இது ஒரு தளத்தை அமைத்துத் தந்தது.
கத்தாரின் கலாச்சாரப் பின்னணி குறித்து ஆய்வு :
இக்கருத்தரங்கின் கருப்பொருள்கள் மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் வாயிலாக, பழைய அரண்மனையின் வரலாற்றைப் பதிவு செய்து, அதனை வருங்காலத் தலைமுறையினருக்குக் கடத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் வளர்ச்சி மற்றும் கத்தாரின் கலாச்சாரப் பின்னணியுடன் பின்னிப்பிணைந்துள்ள அந்த அரண்மனையின் வரலாற்று மற்றும் கட்டடக்கலை சார்ந்த மதிப்பின் காரணமாகவே இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்படுகிறது.
கத்தார் தேசிய அருங்காட்சியகம் குறித்த கருத்தாக்கம் அமைந்திருந்த முக்கியக் கூறுகளில் ஒன்றாக 'பழைய அரண்மனை' திகழ்கிறது. நாட்டின் வரலாற்றிற்கு ஒரு 'உயிர்த்துடிப்புள்ள சாட்சியாக'த் திகழும் வகையிலும், காலப்போக்கில் கத்தாரிய அடையாளத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஒரு கலாச்சார அனுபவத்தின் ஊடாக, கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படும் வகையிலும், இந்த அரண்மனை அருங்காட்சியகத்தின் நவீனக் கட்டடக்கலை வடிவமைப்போடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
கத்தார் அருங்காட்சியகங்கள் மட்டுமல்லாமல், ஈரான் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் கூட, அங்குள்ள அருங்காட்சியகங்கள், இஸ்லாமியக் கட்டடக்கலையின் நுணுக்கங்களை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்முலம், இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் உலகத்தின் முன் வைக்கப்பட்டு, இஸ்லாமிய கட்டடக்கலையின் அறிவு அனைத்து சமுதாய மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது என்றே கூற வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






No comments:
Post a Comment