Thursday, May 7, 2026

கேரளாவில் புதிய முதலமைச்சரை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்....!

கேரளாவில் புதிய முதலமைச்சரை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்....!

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்....!!

திருவனந்தபுரம், மே.7- கேரள மாநிலத்தின் புதிய காங்கிரஸ் முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு வழங்குவது என சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நடந்த முடிந்த கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றிபெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளையும், இ.யூ.முஸ்லிம் லீக் 22 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் :

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் புதிதான தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் 07.05.2026 வியாழன்கிழமை அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அப்போது காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் தேர்வு குறித்து ஒவ்வொரு எம்.எல்.ஏக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. 

இறுதியாக கேரள முதல்வர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

 சாண்டி ஊம்மன் நம்பிக்கை :

இதனிடையே, கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சர் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சாண்டி உம்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கேரள மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றும் தெரிவித்தார். புதிய முதலமைச்சர் தேர்வு குறித்து தமது கருத்துகளை உயர்மட்டக் குழுவிடம் தாம் தெரிவித்து விட்டதாகவும், சாண்டி உம்மன கூறினார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நிறைவேற்றிய தீர்னாத்தைத் தொடர்ந்து விரைவில் காங்கிரஸ் தலைமை முக்கிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, புதிய முதலமைச்சர் தேர்வு தொடர்பாக இ.யூ.முஸ்லிம் லீகின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் காங்கிரஸ் தலைமை பெற்று முடிவு எடுக்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: