Sunday, August 9, 2026

எப்சிஆர்ஏ மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு....!

 வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு  காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 

2023-ஆம் ஆண்டின் 'கூட்டு இடைநீக்கம்' சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை

புதுடெல்லி, ஆக.10- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில், எந்த எதிர்ப்பும் இன்றி வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்றிவிட முடியும் என்று ஒன்றிய பாஜக அரசு கருதக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.

வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்​துள்ளன. தற்போது சட்​டத்தில் மேலும் 3 திருத்​தங்​கள் செய்​யப்பட்டு, வெளிநாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா 2026 (எப்​சிஆர்ஏ) வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் தாக்​கல் செய்யப்பட்டு நிலுவை​யில் உள்​ளது.

வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் எந்த மாநிலத்​தில் என்னென்ன தொண்டுப் பணி​கள் மேற்​கொள்ளப்பட உள்ளன என்பதை தொண்டு நிறுவனங்​கள் (என்​ஜிஓக்​கள்) உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்ய வேண்​டும். வெளிநாட்டு நன்கொடைகளை ஒரு​போதும் மதமாற்​றத்​துக்கு பயன்​படுத்தக்​ கூடாது. என்​ஜிஓக்​களின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளி​நாட்டு நன்​கொடைகளால் உருவாக்கப்பட்ட என்​ஜிஓக்​களின் சொத்துகளை அரசு நிர்வாகமே கையாளும் என்று மசோதாவில் தெரிவிக்​கப்பட்டு உள்ளது. வரும் 13-ம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்​டத் தொடர் நிறைவடைகிறது. அதற்குள்ளாக எப்​சிஆர்ஏ மசோ​தாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை :

இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே,.சி.வேணுகோபால்,  வரும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை உருவாக்கி அறிமுகப்படுத்திவிட முடியும் என்று மத்திய அரசு நினைத்தால், அந்த விருப்பத்தை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் எச்சரித்தார்.  

முன்மொழியப்பட்ட எஃப்.சி.ஆர். மாற்றங்கள் சிறுபான்மையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதாக வேணுகோபால் குற்றம் சாட்டினார். மேலும், இந்தச் சட்டம் நிறைவேற எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய அமைப்புகள் வெளிநாட்டு நிதியுதவி பெறுவதாகக் கூறப்படுவதையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார். அரசுக்கு தைரியம் இருந்தால், ஆர்.எஸ்.எஸ்-ஐக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், மாறாக எஃப்.சி.ஆர்.-இன் கீழ் சட்டப்பூர்வமாகச் செயல்படும் அமைப்புகளே குறிவைக்கப்படும் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்றத்தைத் தவிர்த்து வருவதாக கே,.வி.வேணுகோபால் குற்றம் சாட்டினார்.

தங்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள், தடியடிகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார் என்ற முக்கியமான கேள்வியை இந்தியாவில் உள்ள மாணவர்கள் எழுப்பினால், அமித்ஷா முன்வந்து அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று வேணுகோபால் கூறினார்.

முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறைச் சட்டம், தென்னிந்தியா மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களைத் தண்டிக்கும் சட்டம் என்று அவர் கூறினார். இந்த மசோதா, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களின் கழுத்தை நெரிக்கிறது என்றும் வேணுகோபால்  குறிப்பிட்டார்.

ஜெயராம் ரமேஷ் பதிவு :

இதேபோன்று, 2023-ல் முக்கிய சட்டங்களை நிறைவேற்றுவதற்காக, எதிர்க்கட்சிகளின் பெரும்பகுதி இல்லாததை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் நினைவூட்டிள்ளார்.  வரலாறு மீண்டும் திரும்பக்கூடாது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரமேஷ், 2023 டிசம்பர் 14 முதல் 21 வரை மக்களவையில் 100 பேரும், மாநிலங்களவையில் 46 பேரும் என மொத்தம் 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார். 

எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்சப் பிரதிநிதித்துவத்துடன், நாடாளுமன்றம் அதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் அவசியம் இருக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: