" பேரீச்சம்பழத்திற்கான ஜகாத் - ஐக்கிய அரபு அமீரக கவுன்சில் ஃபத்வா "
வளைகுடா நாடுகளில் தற்போது பேரீச்சை அறுவடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சர்வதேச அளவில் பேரீச்சம் பழங்களின் புகழை பரப்பும் வகையில் சவூதியில் சர்வதேச பேரீச்சம் பழங்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தற்போது பேரீச்சை அறுவடைக்காலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பயிர்கள் மற்றும் பழங்களுக்கான ஜகாத் என்பது ஒரு மதக் கடமை என்று அந்நாட்டின் ஃபத்வா கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. அறுவடைக்குப் பிறகு காயவைக்கப்பட்ட மொத்த விளைச்சல் 'ஐந்து அவ்ஸாக்' அதாவது 541 கிலோகிராம் என்ற அளவை எட்டும்போது இந்த ஜகாத் செலுத்தப்பட வேண்டும்.
கவுன்சில் வெளியிட்ட பொது ஃபத்வா எண் 11-இன் மூலம் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பண்ணைகளில் விளையும் மிகவும் பிரபலமான பேரீச்சை வகைகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் இந்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, கவுன்சிலைச் சேர்ந்த குழுவினர், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து அளவீட்டு முறை'க்கு இணையான அளவுகோலையும், தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரநிலைகள் மற்றும் சட்டப் பிரிவு அங்கீகரித்த அளவீட்டுக் கருவியையும் பயன்படுத்தி பேரீச்சம்பழங்களை அளந்தனர்.
ஃபத்வாவின் முக்கிய அம்சங்கள் :
ஒருவருக்குச் சொந்தமான பண்ணை, வீடு அல்லது அவருக்குச் சொந்தமான எந்தவொரு நிலத்திலும் உள்ள பேரீச்சை மரங்களின் மொத்த விளைச்சலுக்கும் ஜகாத் கட்டாயம் என்று அந்த ஃபத்வா விளக்குகிறது. அந்த விளைச்சல் வணிகம், சேமிப்பு, நுகர்வு, பரிசு அல்லது தர்மம் என எந்த நோக்கத்திற்காக இருந்தாலும் இது பொருந்தும். மரங்களின் மொத்த விளைச்சல் நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டினால், உரிமையாளர் ஜகாத் செலுத்த வேண்டும்.
=========================
"ஒருவருக்குச் சொந்தமான பேரீச்சை மரங்களில் கிடைக்கும் மொத்த விளைச்சலுக்கும் ஜகாத் செலுத்துவது கட்டாயமாகும். இதனைப் பேரீச்சம்பழங்களாகவோ அல்லது அவற்றின் பணமதிப்பிற்கு இணையான தொகையாகவோ செலுத்தலாம். பேரீச்சம்பழங்கள் மீதான ஜகாத் செலுத்துதல் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க கவுன்சில் அறிவுறுத்தல்"
=========================
நீர்ப்பாசனக் கால்வாய்கள் அல்லது மழைநீர் மூலம் (உரிமையாளருக்குச் செலவின்றி) நீர் பாய்ச்சப்பட்டால், மொத்த அறுவடையில் 10 சதவீதத்தை ஜகாத்தாகச் செலுத்த வேண்டும் என்று ஃபத்வா தெளிவுபடுத்தியுள்ளது. அதேசமயம், கிணறுகள் அல்லது செலவு தேவைப்படும் நீர்ப்பாசன முறைகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டால், மொத்த அறுவடையில் 5 சதவீதத்தை ஜகாத்தாகச் செலுத்த வேண்டும்.
ஜகாத் தொகையை பேரீச்சம்பழங்களாகவோ அல்லது அவற்றின் பணமதிப்பிற்கு இணையான தொகையாகவோ செலுத்தலாம். பேரீச்சம்பழங்கள் பழுப்பதற்கு முன், அவை இன்னும் பச்சையாகவோ அல்லது புதியதாகவோ இருக்கும் நிலையில் ஜகாத் செலுத்தப்படக்கூடாது. இருப்பினும், மரத்தின் உரிமையாளர் தனது விளைச்சலை அது புதியதாக இருக்கும்போதே விற்றுவிட்டால், அதன் பணமதிப்பிலிருந்து ஜகாத் செலுத்துவது அனுமதிக்கப்படுகிறது என்று ஃபத்வா கூறுகிறது.
எவ்வளவு ஜகாத் செலுத்த வேண்டும்?
இந்த ஃபத்வா இரண்டு சூழல்களுக்கு இடையே வேறுபாட்டைக் காட்டுகிறது. முதல் சூழல், பேரீச்சைத் தோட்டங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் அல்லது பழங்கள் பழுப்பதற்கு முன்பே மரத்திலுள்ள பழங்களை விலைக்கு வாங்கும் நிறுவனத்தைப் பற்றியது. இத்தகைய சூழலில், நீர்ப்பாசன முறை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் அப்பழங்களுக்கு ஜகாத் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அந்நிறுவனம் அப்பயிரை விற்பனை செய்தால், அதன் விற்பனைத் தொகையைத் தன்னிடம் உள்ள ரொக்கம் மற்றும் பிற வணிகப் பொருட்களுடன் சேர்த்து, வழக்கமான ஜகாத் செலுத்தும் தேதி வரும்போது அனைத்திற்கும் சேர்த்து ஜகாத் செலுத்த வேண்டும்.
இரண்டாவது சூழல், பேரீச்சைத் தோட்டங்களைச் சொந்தமாக வைத்திருக்காமல், பழங்கள் பழுத்த பின்னரோ அல்லது அறுவடை செய்யப்பட்ட பின்னரோ அவற்றை விலைக்கு வாங்கும் நிறுவனத்தைப் பற்றியது. இந்நிறுவனம் அப்பழங்களுக்கு ஜகாத் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், பயிர் அதன் உரிமையாளரின் வசம் இருக்கும்போது மட்டுமே அதற்கான ஜகாத் கடமை பொருந்தும். இத்தகைய சூழலில், அப்பேரீச்சம்பழங்கள் வணிகப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. அவை சந்தை விலையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, ரொக்கம் மற்றும் பிற வணிகப் பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. மேலும், ஒரு வருடம் பூர்த்தியாகி, ஜகாத் கடமைக்கான குறைந்தபட்ச அளவு எட்டப்படும்போது, அவற்றின் மீது 2 புள்ளி 5 சதவீத விகிதத்தில் ஜகாத் செலுத்தப்படுகிறது.
கவுன்சில் அறிவுறுத்தல் :
பேரீச்சம்பழங்கள் மீதான ஜகாத் செலுத்துதல் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை பின்பற்றுமாறும் தோட்ட உரிமையாளர்களையும் ஜகாத் செலுத்தக் கடமைப்பட்டவர்களையும் ஐக்கிய அரபு அமீரக கவுன்சில் கேட்டுக்கொண்டது. நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகள் வாயிலாக ஜகாத் செலுத்துவதன் முக்கியத்துவத்தை கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. மேலும், 'இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம்' (General Authority for Islamic Affairs, Endowments and Zakat) வழங்கும் சேவைகளைப் பயன்படுத்துமாறும், அதன் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் ஜகாத்தைக் கணக்கிட்டுச் செலுத்துமாறும் இச்சபை ஊக்குவித்துள்ளது.
பேரீச்சம்பழங்கள் மீதான ஜகாத் தொடர்பான ஷரியத் சட்டத் தீர்ப்புகள் குறித்து அறிய விரும்புவோர், இச்சபையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். சபையிலுள்ள ஷரியத் நிபுணர்களிடமிருந்து நம்பகமான பதில்களைப் பெற, இணையதளம் மற்றும் ஸ்மார்ட் செயலி மூலம் 24 மணி நேரமும் வழங்கப்படும் ஃபத்வா சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment