பாரம்பரியப் பெண்களின் பணிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் பஹா திருவிழா
சவூதி அரேபியாவில் பண்டைய வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அந்த காலத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது? சவூதி அரேபியாவின் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் ? எந்தப் பணிகளை செய்து வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டார்கள்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடும் ஆர்வம் சவூதி மக்களிடையே மத்தில் மட்டுமல்லாமல், உலகில் வாழும் முஸ்லிம்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.
பண்டைய வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலம், தற்போதைய வாழ்க்கையை எப்படி மேம்படுத்தி, ஆரோக்கியமான, அமைதியான வாழ்க்கையை நடத்தலாம் என்பதற்கு உதவியாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. அதன் காரணமாக தான், உலகின் பல்வேறு நாடுகளில், பண்டைய பாரம்பரிய வாழ்க்கை முறை குறித்து ஆய்வுகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள் அவ்வவ்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சவூதி அரேபியாவிலும் அண்மையில் ஒரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த திருவிழா சவூதி மக்களை மட்டுமல்லாமல், உலகின் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.
அல்-அத்தாவிலா பாரம்பரியத் திருவிழா :
சவூதி அரேபியாவின் பஹாவில் நடைபெற்ற ஒன்பதாவது அல்-அத்தாவிலா பாரம்பரியத் திருவிழாவில், முந்தைய தலைமுறைப் பெண்களின் பாரம்பரியப் பணிகள் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தும் ஒரு நிகழ்வு இடம்பெற்றது.
பாரம்பரிய உடை அணிந்த இளம் சிறுமிகள், அந்த காலத்தில் தாய்மார்களால் செய்யப்பட்ட விறகு மற்றும் தண்ணீர் சேகரித்தல், பாரம்பரிய முறைகளில் துணி துவைத்தல், காபி தயாரித்துப் பரிமாறுதல் உள்ளிட்ட பணிகளை மீண்டும் தத்துருவமாகச் செய்து காட்டினர்.
இந்த நிகழ்வுகளில், இச்செயல்பாடுகளில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரியக் கருவிகளும் உள்ளூர் வளங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், கல் வீடுகளும் பழைய சந்துகளும் ஒரு உண்மையான சூழலை மீண்டும் உருவாக்க உதவின.
கடந்த கால வாழ்க்கை முறை :
அல்-அத்தாவிலா பாரம்பரியத் திருவிழாவின் இந்த ஊடாடும் அனுபவம், கடந்த காலத்தில் இப்பகுதியில் வாழ்க்கையை வடிவமைத்த பழக்கவழக்கங்களையும் அன்றாட நடைமுறைகளையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
பாரம்பரியக் கைவினைப்பொருட்கள், கட்டட நுட்பங்கள், விவசாயம் மற்றும் உள்ளூர் உணவு வகைகளைக் காட்சிப்படுத்தும் தினசரி நிகழ்வுகளுடன் இந்தத் திருவிழா குடும்பங்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இது இளைய தலைமுறையினருக்கு கடந்தகால வாழ்க்கை முறைகள் மற்றும் பிராந்தியப் பழக்கவழக்கங்களைப் பற்றிக் கற்பிப்பதற்கான ஒரு ஈர்க்கக்கூடிய சூழலை வழங்குகிறது.
ஆழ்ந்த ஏக்க உணர்வு :
இந்தத் திருவிழா, வயதான பங்கேற்பாளர்களிடையே ஆழ்ந்த ஏக்க உணர்வைத் தூண்டியதாகவும், அவர்கள் கிராம வாழ்க்கை குறித்த தனிப்பட்ட நினைவுகளை அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
================
"அல்-அத்தாவிலா பாரம்பரியத் திருவிழா, கடந்த காலத்தில் வாழ்க்கையை வடிவமைத்த பழக்கவழக்கங்களையும் அன்றாட நடைமுறைகளையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. பாரம்பரியக் கைவினைப்பொருட்கள், விவசாயம், உள்ளூர் உணவு வகைகளைக் காட்சிப்படுத்தும் தினசரி நிகழ்வுகள் குடும்பங்களைத் ஈர்த்தது"
================
மேலும் திருவிழாவில் அமைக்கப்பட்ட பழங்காலக் கலைகள், நாட்டுப்புற விளையாட்டுகள், பாரம்பரிய உடைகள், பாத்திரங்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றின் ஊடாடும் காட்சிகளைக் கொண்ட பிரத்யேக அரங்குகளை குழந்தைகள் கண்டு ரசித்தனர்.
திருவிழாவின் ஊடகக் குழுவின் தலைவராக இருந்த மஹ்தி அல்-கினானி, இந்தக் காட்சிகள் உண்மையான, இயல்பான ஊடாடல்கள் மூலம் கடந்த கால மற்றும் நிகழ்காலத் தலைமுறைகளை இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகின்றன என்று கூறியுள்ளார்.
மறக்க முடியாத அனுபவம் :
அல்-அத்தாவிலா பாரம்பரியத் திருவிழா உண்மையில் ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று பார்வையாளர்களின் கருத்துகள் மூலம் நன்கு உணர முடிகிறது. இதுபோன்ற, பாரம்பரியத் திருவிழாவில், நமது சமுதாயம் கவனம் செலுத்த வேண்டும். வேகமான விஞ்ஞான வளர்ச்சியில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பலன்கள் கிடைத்தாலும், உண்மையான அமைதி கிடைப்பது இல்லை என்பது நிஜமான உண்மையாகும்.
கடந்த கால வாழ்க்கை முறையில் அமைதியும் ஆனந்தமும் கிடைத்துக் கொண்டே இருந்தன. உறவுகள் மேம்படுத்தப்பட்டு, நன்கு புரிதல் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. இஸ்லாமிய வாழ்க்கை முறையின், இஸ்லாமிய நெறியின் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கடந்த கால வாழ்க்கை உலக மக்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அல்-அத்தாவிலா பாரம்பரியத் திருவிழாவும் இருந்தது என்றே கூற வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment