Friday, August 7, 2026

உர்தூ பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர் சேர்க்கை....!

 " உர்தூ பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர் சேர்க்கை "

- ஆய்வில் அதிர்ச்சி தகவல் -

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் முக்கிய மொழியாக உர்தூ மொழியும் ஒன்றாக இருந்து வருகிறது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உர்தூ மொழி மிகப்பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உர்தூ மொழி முஸ்லிம்களுக்கான மொழி மட்டும் அல்ல என்பதால், பஞ்சாபி, காஷ்மீரி  உள்ளிட்ட அனைத்து சமூக மக்களும் உர்தூ மொழியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். எனவே தான், உலக அளவில் நடைபெறும் உர்தூ கவியரங்குகள், மொழி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. 

இத்தகைய சூழ்நிலையில், ஒன்றிய பாஜக அரசு உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால், நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உர்தூ கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. வட மாநிலங்களில் மட்டுமல்லாமல், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கூட, உர்தூ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. 

ஆய்வில் அதிர்ச்சி தகவல் :

கர்நாடகாவில் அரசு நடத்தும் உர்தூ பள்ளிகளின் நிலை குறித்த  கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கல்வியாளர்கள் அனைவரும், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள், மாணவர்களின் அதிகப்படியான இடைநிற்றல் விகிதம் மற்றும் உர்தூ வழி மாணவர்களுக்கு உயர் கல்வி அல்லது வேலைவாய்ப்பிற்கான அடுத்தகட்ட வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை குறித்து சுட்டிக்காட்டினர். 

'இந்துஸ்தானி உர்தூ மன்ச்' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். கலந்துரையாடலின் பின்னணியை விளக்கிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அடோனி சையத் சலீம், கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களில் உள்ள 70 உர்தூ வழிப் பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டில் உர்தூ வழி கல்வியின் நிலை குறித்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும், 100 பள்ளி மேம்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுக்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் 547 குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலை குறித்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி, அக்குடும்பங்களின் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாக இருந்ததும், 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் வசிப்பதும் தெரியவந்தது. குடும்பத் தலைவர்களில் 86 சதவீதம் ஆண்கள் திறன்மிக்க அல்லது பகுதி திறன்மிக்க தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.  83 சதவீதம் பெண் குடும்பத் தலைவர்கள் இல்லத்தரசிகளாக மட்டுமே இருந்து வருகின்றனர். உர்தூ வழியில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் இல்லாததால், இப்பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் தங்கள் குழந்தைகள் சேர்க்க விரும்புவதாக 90 சதவீத குடும்பத் தலைவர்கள் தெரிவித்தனர்.

மோசமான கட்டமைப்பு வசதிகள் :

மேலும், இக்குடும்பங்களில் 70 சதவீதம் பேர் கடன் சுமையில் சிக்கியிருப்பதையும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 65 சதவீத உர்தூ பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் இருந்தன.  72 சதவீத பள்ளிகளில் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தலுக்கான வசதிகள் இல்லை. ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றவர்களில் 90 சதவீதம் பேர் தாய்மார்கள் ஆவர். சுமார் 15 சதவீதம் மாணவர்கள் தரையில் அமர்ந்து வகுப்புகளில் பங்கேற்றனர். பல பள்ளிகள் மஸ்ஜித்துகள்  அல்லது வக்ப் வாரியக் கட்டடங்களுடன் இணைந்த கூடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் உர்தூ வழிப் பள்ளிகள் இருமொழிப் பள்ளிகளாக (உர்தூ மற்றும் ஆங்கில வழி) மாற்றப்பட்ட இடங்களில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதும் வருகை மேம்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.

=====================

"மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள், மாணவர்களின் அதிகப்படியான இடைநிற்றல் விகிதம் மற்றும் உர்தூ வழி மாணவர்களுக்கு உயர் கல்வி அல்லது வேலைவாய்ப்பிற்கான அடுத்தகட்ட வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை உர்தூ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவுக்கு முக்கிய காரணமாகும்"

=====================

கர்நாடகாவில் அதிகளவு கன்னட வழிப் பள்ளிகள் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள் உள்ள நிலையில், 4 ஆயிரத்து 526 அரசு உர்தூ வழிப் பள்ளிகள் மட்டுமே இருந்து வருகின்றன.  மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 526 அரசு உர்தூ  வழிப் பள்ளிகளில், 4ஆயிரத்து 51 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும் 470 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் உள்ளன.  11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குக் கல்வி வழங்கும் மேல்நிலைப் பள்ளிகள் 5 மட்டுமே உள்ளன.

உர்தூ மொழி மாணவர் சேர்க்கை சரிவு :

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களில், உர்தூ வழிப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 2 புள்ளி 92 சதவீதம் மட்டுமே என்றும், அதே சமயம் கன்னட மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் முறையே 49 புள்ளி 75 சதவீதம் மற்றும் 46 புள்ளி 39 சதவீதம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், அரசு பாடப்புத்தகங்களின் உர்தூ மொழிபெயர்ப்பில் ஏராளமான பிழைகள் உள்ளன. அத்துடன்  உர்தூவை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் நடுத்தர மற்றும் வசதி படைத்த பிரிவினரை உர்தூ பள்ளிகள் ஈர்க்கத் தவறிவிட்டன. 

இதுஒருபுறம் இருக்க,  முஸ்லிம் தலைமைக்குச் சமூகத்துடன் இயல்பான பிணைப்பு இல்லை. அவர்களிடம் வளர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வை இல்லை.  உர்தூ ஆசிரியர்களுக்கு அந்த மொழியின் மீதோ அல்லது மாணவர்களின் மீதோ பற்று இல்லை. பணி நிரந்தரம் செய்யப்பட்டவுடன் அவர்கள் சுயதிருப்தியில் ஆழ்ந்துவிடுகிறார்கள். பெரும்பாலான அரசு உர்தூ ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். உர்தூ பேசும் மக்களிடையே அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. அவர்கள் அங்கன்வாடிகளை  நாடுவதில்லை போன்றவை உர்தூ மொழி மாணவர்களின் சேர்க்கை சரிவுக்கு காரணங்களாக இருந்து வருகின்றன. 

அரசு உர்தூ வழிப் பள்ளிகளில், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. பல்வேறு பயிற்று மொழிகளைக் கொண்ட பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும்போது, ​​அந்த மொழியால் கிடைக்கக்கூடிய பொருளாதார நன்மைகளே பெற்றோர்களின் முக்கியக் கருத்தாக உள்ளன. உர்தூ மொழி பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார மொழியாக மட்டுமே சுருங்கிவிட்டது. இம்மொழியில் உயர்கல்வி கற்பதால் பொருளாதார ரீதியான பலன் ஏதுமில்லை என்று அவர்கள் கருதுவதாலேயே ஆங்கில வழிக் கல்வியை விரும்புகிறார்கள். 

கல்வி முறையில் திருத்தங்கள் : 

கல்வி முறையில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அரசு உர்தூ வழிப் பள்ளிகள் இந்தச் சவாலைச் சமாளிக்க முடியும். குறிப்பாக, 5 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான காலகட்டத்தில் உர்தூ வழி மாணவர்கள் குறைந்தது 5 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளையும், சுமார் 2 ஆயிரம் எளிய ஆங்கில வாக்கியங்களையும் கற்கும் வகையில் பாடத்திட்டத்தை அமைப்பதன் மூலம், அடுத்தகட்டக் கல்விக்கு மாறுவது எளிதாகும். உர்தூ மொழிப் பள்ளிகள் மீதான அதிகாரப்பூர்வக் கண்காணிப்பு பலவீனமாக உள்ளது.  பல கிராமப்புறங்களில் நல்ல ஊதியம் பெறும் உர்தூ ஆசிரியர்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கத் தங்களுக்குப் பதிலாகப் பிறரை  அனுப்பி விடுகிறார்கள்.  மேலும்,  உர்தூ வழிப் பள்ளிகளில் கற்றல் திறன் குறைவாக இருப்பதே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளுக்கு அனுப்ப மறுப்பதற்கு முக்கியக் காரணமாகும்.  கல்வி தொடர்பான விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவை என்பதை சமுதாயம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

கர்நாடகாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட, உர்தூ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உர்தூ மொழிப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்., உர்தூ மொழியின் சிறப்பு குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், உர்தூ மொழியில் கல்வி பயிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்., இப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே, உர்தூ மொழி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவை தடுக்க முடியும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: