Thursday, August 6, 2026

அதிக இறைச்சி கொண்ட உணவுமுறை.....?

 " அதிக இறைச்சி கொண்ட உணவுமுறை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது "

உலகம் முழுவதும் இறைச்சி உணவுகளை அதிகளவு விரும்பி உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. திருமணம் உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்குச்  சொல்லும் பெரும்பாலோர் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை விரும்பி உண்ணுகிறார்கள். பிரியாணியுடன் இறைச்சி உணவு வகைகளையும் ஒரு பிடி பிடிப்பதை விரும்புகிறார்கள். இதனால், இறைச்சி உணவு வகைகளின் தேவை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இறைச்சி வகைகளும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

சரி, இறைச்சி உணவுமுறை உடல்நலத்திற்கு ஆரோக்கியமானதா ?, அல்லது கேடுதலா? என்ற கேள்வி பொதுவாக இருந்து வருகிறது. இறைச்சி உணவுமுறை உடல்நலத்திற்கு மிகவும் தேவையான ஒன்றுதான். ஆனால் அதிக இறைச்சி கொண்ட உணவுமுறை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். 

"அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து" என்பது "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற முதுமொழியின் சுருக்கமாகும். எந்த ஒரு நல்ல காரியமும், பொருளும் அல்லது உணவும் அளவை மீறிப் போகும் போது அது தீங்காகவே முடியும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது. சாவாமை தரும் அமுதமே ஆனாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது உடலுக்கு நச்சுப் போல ஆபத்தாகும். உணவு, உறக்கம், வேலை, ஆசை என எங்கு எல்லை மீறினாலும் அங்கே இழப்பும் துன்பமும் உண்டாகும்.  வாழ்வின் அனைத்துச் செயல்களிலும் ஒரு சரியான அளவைக் கடைப்பிடிப்பது நன்மைகளைத் தரும். உடலுக்கு நல்லது என்று எதை எடுத்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும். மீறினால் செரிமானக் கோளாறு ஏற்படும். ஓய்வின்றி வேலை செய்தாலும் அல்லது அதிக நேரம் சோம்பலாக இருந்தாலும் உடல் நலம் கெடும்.

சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை :

அதேபோன்று, ஆரோக்கியமான உணவுமுறையில் இறைச்சியின் அளவைக் குறைவாகவே வைத்திருக்க வேண்டும் என்று சர்வதேச நிபுணர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.  உணவுத் துறையினரால் கடுமையாக நிராகரிக்கப்பட்ட முந்தைய முடிவுகளையே அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

'தி லான்செட்' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஆரோக்கியமான உணவுமுறை என்பது "முக்கியமாகத் தாவர அடிப்படையிலானதாகவும், விலங்கு சார்ந்த உணவுகளை மிதமான அளவில் கொண்டதாகவும், அதேவேளையில் சேர்க்கப்பட்ட சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் உப்பை மிகக் குறைந்த அளவில் கொண்டதாகவும்" இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இறைச்சி நுகர்வை மிகச் சிறிய அளவாகக் குறைக்கப் பரிந்துரைத்தபோது எதிர்ப்பைச் சந்தித்த 2019-ஆம் ஆண்டு ஆய்வின் அடிப்படையிலேயே இந்த புதிய அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள வேளாண் உணவுச் சங்கங்கள் அந்த ஆய்வின் முடிவுகளை மிகைப்படுத்தப்பட்டவை, ஆபத்தானவை அல்லது உள்ளூர் உணவுப் பழக்கவழக்கங்களுக்குப் பொருந்தாதவை என்று கூறி நிராகரித்திருந்தன. இருப்பினும், சமூக ஏற்றத்தாழ்வுகள் உணவு கிடைப்பதில் எவ்வாறு தடையாக அமைகின்றன என்பது போன்ற சில யதார்த்தமான சூழல்களைக் கணக்கில் கொள்ளத் தவறியதைச் சுட்டிக்காட்டிய போதிலும், அறிவியல் சமூகம் இந்தப் பரிந்துரைகளை வரவேற்றது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஆரோக்கியமான உணவு மூலங்களில் இந்தக் குழு கவனம் செலுத்தியது. ஆனால், புதுப்பிக்கப்பட்ட "கோள் சார்ந்த ஆரோக்கிய உணவுமுறை" என்பதே இந்த ஆய்வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமாக இருந்தது.

முக்கிய பரிந்துரைகள் :

பரிந்துரைகளை வடிவமைக்கும்போது மிகச் சமீபத்திய ஆய்வுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இறுதியில், இந்தப் பரிந்துரைகள் 2019-இல் வெளியிடப்பட்டவற்றிலிருந்து பெரிய அளவில் மாறுபடவில்லை. மாட்டிறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் பிற இறைச்சிகளின் ஆகியவற்றின் நுகர்வு ஒரு நாளைக்கு 15 கிராமுக்கு (0.5 அவுன்ஸ்) மிகாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.  இது கடந்த முறை பரிந்துரைக்கப்பட்ட 14 கிராம் அளவோடு ஒப்பிடத்தக்கது.

====================

"ஆரோக்கியமான உணவுமுறை என்பது தாவர அடிப்படையிலானதாகவும், விலங்கு சார்ந்த உணவுகளை மிதமான அளவில் கொண்டதாக இருக்க வேண்டும். அதேவேளையில் சேர்க்கப்பட்ட சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் உப்பை மிகக் குறைந்த அளவில் கொண்டதாகவும் இருக்க வேண்டும்"

====================

அதேவேளையில், தனிநபர்கள் ஒரு நாளைக்கு முறையே 200 கிராம் காய்கறிகள், 300 கிராம் பழங்கள் மற்றும் 210 கிராம் தானியங்களை உட்கொள்ள வேண்டும். பால் பொருட்கள் 250 கிராமும், மீன் அல்லது கடல் உணவுகள் மற்றும் கோழி இறைச்சி போன்ற 'வெள்ளை இறைச்சி' வகைகள் 30 கிராமும் இருக்க வேண்டும். இந்த அளவுகளும் பெரும்பாலும் 2019-இல் பரிந்துரைக்கப்பட்டவற்றையே ஒத்துள்ளன.

இந்த உணவுமுறை "மேம்பட்ட ஆரோக்கிய விளைவுகள், அனைத்துக் காரணங்களாலும் ஏற்படும் இறப்பு விகிதத்தில் பெரும் குறைவு மற்றும் உணவு தொடர்பான முக்கிய நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதில் கணிசமான சரிவு" ஆகியவற்றுடன் வலுவாகத் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கவனத்தில் கொள்ள வேண்டும் :

சர்வதேச அளவில் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு, வெளியிட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை அதிக இறைச்சி உணவு வகைகளை உண்ணும் உணவுப் பிரியர்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணம் உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, போதுமான அளவுக்கு மட்டுமே இறைச்சி உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி, போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டு மன திருப்தியோடு உண்டு மகிழ்ந்தால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும். வாழ்க்கையும் அமைதியாக பயணித்துக் கொண்டே செல்லும் என்று உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: