சவூதியில் நடைபெற்ற 46வது கிங் அப்துல்அஜீஸ்
சர்வதேச குர்ஆன் போட்டி
வெற்றிபெற்ற 50 பேருக்கு சுமார் 27 கோடி ரூபாய் பரிசளிப்பு
ஜித்தா, ஆக.17- சவூதி அரேபியாவின் மக்காவில் நடைபெற்ற 46-வது கிங் அப்துல்அஜீஸ் சர்வதேச புனித குர்ஆன் மனப்பாடம் செய்தல், ஓதுதல் மற்றும் விளக்கம் அளித்தல் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சகம், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய் பரிசுகளை வழங்கியது. போட்டியில் பங்கேற்றவர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கும், புனித குர்ஆன் மீதான அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை ஊக்குவிப்பதற்கும், தலா 5 ஆயிரம் சவூதி ரியால் (இந்திய ரூபாய் மதிப்பில் 1,27,600) வீதம் மொத்தம் 1 புள்ளி 5 மில்லியன் சவூதி ரியாலுக்கும் (இந்திய ரூபாய் மதிப்பில் 3,80,80,000) அதிகமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
133 நாடுகள் பங்கேற்பு :
மக்காவில் மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கான இரண்டு நடுவர் குழுக்கள், 133 நாடுகளைச் சேர்ந்த 334 பங்கேற்பாளர்களின் குர்ஆன் ஓதுதலைக் கேட்டறிந்தன. இறுதித் தகுதிச் சுற்றுக்குப் பிறகு மதீனாவுக்கு வந்தடைந்த கிங் அப்துல்அஜீஸ் குர்ஆன் போட்டிப் பங்கேற்பாளர்கள் பலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இறுதிச் சுற்றுகளில் குர்ஆனை மனப்பாடம் செய்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இதில் மனப்பாடம் செய்யும் திறன், தேர்ச்சி, ஓதுதலின் தரம் மற்றும் செயல்பாடு ஆகியவை மிக உயர்ந்த நிலையில் இருந்தன.
====================
மக்கா சர்வதேச குர்ஆன் போட்டியில், மதிப்பீட்டு நடைமுறைகளின் செயல்திறன், மதிப்பெண் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் மின்னணு நடுவர் அமைப்பு மேம்படுத்தப்பட்டது. மேலும், அமைப்பு ரீதியான அம்சங்கள் மற்றும் ஓதுதலைக் கேட்டறிதல் மற்றும் மதிப்பிடுதல் வழிமுறைகளிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டன.
====================
இப்போட்டியின் இப்பதிப்பில் வழங்கப்பட்ட மொத்தப் பரிசுகளின் மதிப்பு 10 புள்ளி 26 மில்லியன் சவூதி ரியால்களை (இந்திய ரூபாய் மதிப்பில் 26,18,35,200) எட்டியது. இதில் 50 வெற்றியாளர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இடம்பெற்றனர். அதாவது போட்டியின் ஐந்து பிரிவுகளிலும் தலா ஐந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லத்தீஃப் அல்-ஷேக், இப்போட்டிக்கான சவூதி தலைமையின் ஆதரவையும், புனித குர்ஆன் மற்றும் அதை மனப்பாடம் செய்தவர்கள் மீதான அவர்களின் தொடர்ச்சியான அக்கறையையும் பாராட்டினார். இப்போட்டியின் வரலாற்றிலேயே முதன்முறையாக பெண் போட்டியாளர்கள் பங்கேற்றது உள்ளிட்ட பல முக்கிய மாற்றங்கள் இந்த சமீபத்திய பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேம்படுத்தப்பட்ட நடுவர் அமைப்பு :
இந்த சர்வதேச குர்ஆன் போட்டியில், மதிப்பீட்டு நடைமுறைகளின் செயல்திறன், மதிப்பெண் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் மின்னணு நடுவர் அமைப்பு மேம்படுத்தப்பட்டது. மேலும், அமைப்பு ரீதியான அம்சங்கள் மற்றும் ஓதுதலைக் கேட்டறிதல் மற்றும் மதிப்பிடுதல் வழிமுறைகளிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டன.
போட்டிக்குப் பிறகு, மக்காவின் முக்கிய இடங்களை பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 'கிளாக் டவர் அருங்காட்சியகத்திற்கு' ஒரு கலாச்சாரச் சுற்றுலாவை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. இந்தப் பயணத்தின்போது, பங்கேற்பாளர்கள் அருங்காட்சியகத்தின் காட்சிக்கூடங்களைச் சுற்றிப் பார்த்ததுடன், வானியல் மற்றும் கால அளவீடு தொடர்பான அறிவியல் மற்றும் கல்விசார் கண்காட்சிகளையும் பார்வையிட்டனர். மக்கா கடிகாரத்தின் கலாச்சார மற்றும் பொறியியல் முக்கியத்துவம் குறித்த விளக்கத்துடன் இப்பயணம் நிறைவடைந்தது.
சவூதி தலைமைக்கு பாராட்டு :
பின்னர், மக்காவில் போட்டியின் இறுதித் தகுதிச் சுற்றை நிறைவு செய்துவிட்டு மதீனாவிற்கு வந்தடைந்ததில் பல பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போர்த்துகீசிய நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் சாரா சயானி, புனித குர்ஆனில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சவூதித் தலைமைக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தப் பயணம் வெறும் போட்டியில் பங்கேற்பது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்குத் தனது நினைவில் நிலைத்திருக்கக்கூடிய ஒரு ஆன்மீக அனுபவமாகவும் அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ரியூனியன் தீவைச் சேர்ந்த போட்டியாளர் அமன் படேல், மக்கா மற்றும் மதீனாவில் தான் உணர்ந்த ஆன்மீகச் சூழலைச் சுட்டிக்காட்டியதுடன், பங்கேற்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட கவனிப்பிற்காக சவூதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார். மாலத்தீவைச் சேர்ந்த போட்டியாளர் மூசா அஷ்ரஃப், இப்போட்டியில் பங்கேற்றது தனது வாழ்வின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும், ஒரு தனித்துவமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சூழலில் புனித குர்ஆனை மீள்பார்வை செய்ய இது தனக்கு வாய்ப்பளித்ததாகவும் கூறினார். மக்காவிற்கு வந்தடைந்தது முதல் மதீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது வரை, பங்கேற்பாளர்களுக்குச் செய்யப்பட்ட சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் கவனிப்பிற்காக அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






No comments:
Post a Comment