Thursday, August 20, 2026

46-வது மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச குர்ஆன் போட்டி பரிசளிப்பு விழா....!

 46-வது மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச குர்ஆன் போட்டி

மக்காவில் நடைபெற்ற நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா

மக்கா, ஆக.21— புனித குர்ஆனை மனனம் செய்தல், ஓதுதல் மற்றும் அதன் விளக்கவுரைக்கான 46-வது 'மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச குர்ஆன் போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா மக்காவில் 19.08.2026 புதன்கிழமையன்று நிறைவடைந்தது. இரு புனித மஸ்ஜித்துகளின் பாதுகாவலரான மன்னர் சல்மானின் ஆதரவில் நடைபெற்ற இப்போட்டியை, இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி நிறைவு விழாக்கள் நடைபெற்றன. இதில் மன்னர் சல்மானின் துணைவியார் இளவரசி ஃபஹ்தா பின்ட் ஃபலாஹ் அல்-ஹத்லீன் பெண் வெற்றியாளர்களையும், மக்காவின் துணை ஆளுநர் இளவரசர் சவுத் பின் மிஷால் ஆண் வெற்றியாளர்களையும் கௌரவித்தனர்.

புதிய அத்தியாயம் படைப்பு :

பெண்களுக்கான பிரிவின் நிறைவு விழாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட உரை மூலம் பேசிய இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லத்தீஃப் அல்-ஷேக், நாட்டின் அறிவார்ந்த தலைமையின் தாராளமான ஆதரவு மற்றும் அனுசரணையுடன் நடைபெறும் இப்போட்டியின் 46-வது பதிப்பு ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். சர்வதேச அளவில் பெண்களின் பங்கேற்பு மற்றும் பெண் போட்டியாளர்களுக்கென பிரத்யேக நிறைவு விழா ஆகியவை முதன்முறையாக இதில் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்னெறிகள் மூலம் மக்கள் ஒன்றிணைப்பு :

ஆண் வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் விழா மக்காவில் உள்ள புனித  மஸ்ஜிதுல் ஹராமில்  நடைபெற்றது. அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசிய அமைச்சர் அல்-ஷேக், புனித குர்ஆனுக்குச் சேவை செய்வதிலும், அதை மனனம் செய்தவர்களை ஆதரிப்பதிலும், வழிகாட்டுதல் மற்றும் நன்னெறிகள் மூலம் மக்களை ஒன்றிணைப்பதிலும் சவூதி அரேபியா கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இப்போட்டி ஒரு சான்றாகத் திகழ்கிறது என்று வலியுறுத்தினார்.

=================

"வெற்றியாளர்களின் எண்ணிக்கை 12-லிருந்து 50-ஆக உயர்ந்திருப்பதையும், மொத்தப் பரிசுத் தொகை 1 புள்ளி 1 மில்லியன் சவூதி ரியாலிலிருந்து 10 மில்லியன் ரியாலுக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டிருந்தது"

=================

வெற்றியாளர்களின் எண்ணிக்கை 12-லிருந்து 50-ஆக உயர்ந்திருப்பதையும், மொத்தப் பரிசுத் தொகை 1 புள்ளி 1 மில்லியன் சவூதி ரியாலிலிருந்து 10 மில்லியன் ரியாலுக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய மேம்பாடுகள், சர்வதேச அளவிலான முக்கிய குர்ஆன் நிகழ்வுகளில் மனனம் செய்தவர்களைக் கௌரவிப்பதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. விழாவின் நிறைவில், இளவரசர் சவுத் பின் மிஷால் வெற்றியாளர்களையும் நடுவர் குழு உறுப்பினர்களையும் கௌரவித்தார்.

-  சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: