Monday, August 31, 2026

இஸ்லாமிய நாடுகள் திரும்புமா...?

 அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் திரும்புமா...?

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

உலக நாட்டாமையாக தம்மை தாமே அடையாளப்படுத்திக் கொண்டு, அமெரிக்கா  இஸ்ரேலுடன் இணைந்து இஸ்லாமிய நாடுகள் மீது நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணமே உள்ளன. குறிப்பாக பாலஸ்தீனம் மீது குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் அநியாய மற்றும் கொடுமையான தாக்குதல்கள் இன்னும் நின்றுவிடவில்லை. உலக நாடுகள் அனைத்தும் எச்சரித்தும், சர்வதேச சட்ட நெறிகளையும் மீறி இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை அவ்வவ்போது நடத்திக் கொண்டே இருக்கிறது. லெபனான், சிரியா ஆகிய நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கொடூரங்களுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு பேரணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. எனினும் நாட்டாமை அமெரிக்கா மற்றும் சாத்தான் இஸ்ரேல் அடங்கவில்லை. 

தற்போது ஈரான் மீது குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடிக்கடி தமது தோல்விகளை மறைக்க, ஈரானை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஈரான் தோல்வி அடைந்துவிட்டது என்று ஒருநாள் சொல்லும் அவர், மறுநாளே, ஈரான் மீதான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தமது தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார். எந்தவித மிரட்டல்களுக்கும் அஞ்சாமல், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நீண்ட நெடிய வரலாறு மற்றும் பாரம்பரியம் கொண்ட ஈரானை யாரும் தோற்கடிக்க முடியாது என்பது தான் உண்மையான வரலாறாகும். பல நாடுகள் முயற்சி செய்தும் தோல்வியை தழுவியுள்ளன. சுமார் 200 ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்டு அமெரிக்காவால், எப்படி ஈரானை வீழ்த்த முடியும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கமேனியின் தந்தை மற்றும் பிற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்ட அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும், ஈரானின் அதிபர் கமேனி இன்னும் பொதுவெளியில் காணப்படவில்லை.  அண்டை வளைகுடா அரபு நாடுகளில் உள்ள இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாலும், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியதாலும், முஸ்லிம் உலகில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பை தெஹ்ரான் எதிர்த்து வருகிறது. ஈரான் மீது வரையறுக்கப்பட்ட, துல்லியமான நடவடிக்கை' மேற்கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரில் நிலவிய தற்காலிக அமைதி நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், மீண்டும் அமெரிக்கப் படைகள் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்த ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களைத் தாக்கின. முன்னதாகப் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்திருந்த ஈரான், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவித்தது.

அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படும் காட்சிகளை ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மத்திய கிழக்கில் உள்ள தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் ஆயுதப் படைகள் தெரிவித்தன.

ஈரான் அதிபர் அழைப்பு :

இத்தகைய சூழ்நிலையில், “அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைவது அவசியம்”  என்று ஈரான் உச்ச தலைவர்  மொஜ்தபா காமேனி  அழைப்பு விடுத்துள்ளார். “இஸ்லாமிய நாடுகள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து மொஜ்தபா காமேனி வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில்,  “இஸ்லாத்தின் எதிரியாக இருப்பவர்கள் இன, கலாச்சார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தவும், அவர்களின் வலிமையைக் குறைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், "எந்தவொரு பதவியில் இருப்பவரும், தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றே அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது இஸ்லாமிய சமூகத்திற்குள் மோதலை உருவாக்கும் செயலைச் செய்தால், அவர் இஸ்லாம் எதிர்ப்பு நோக்கங்களையே முன்னெடுத்துச் செல்கிறார் என்று அர்த்தம். இஸ்லாமியர்கள் உறுதியான மனவுறுதியுடன் கையை இறுக்கிப் பிடித்திருக்கும் ஒரே அணியாக இருந்திருந்தால், பாலஸ்தீன தேசம் இவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்டிருக்குமா?. மேலும் ஆக்கிரமிப்பாளர்களின் ஒடுக்குமுறைக்கும் குற்றங்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்குமா?. பாரசீக வளைகுடா பகுதிகளில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்துகொண்டு ஊழல்வாதிகளும், கொள்கையற்ற அயோக்கியர்களும் நமது நிலங்களையும் செல்வத்தையும் அபகரிக்கத் துணிந்திருப்பார்களா?. இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக மேற்கு ஆசியப் பகுதி மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவது இதுதான்: உங்களின் உண்மையான எதிரி யார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர்களின் சதித்திட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்"  என்று ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய நாடுகளின் எதிரிகள் :

"இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கும், நட்புக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் எதிரிகள். அமெரிக்காவின் ஆட்சியாளர்களும், இஸ்ரேலும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீதும் பகைமை கொண்டுள்ளன. உலகளாவிய ஆணவ சக்திகளின்’ தலைவர்கள் இஸ்லாமிய நாடுகளின் சில தலைவர்களை நோக்கி வெளிப்படுத்திய அப்பட்டமான அவமரியாதை மற்றும் இழிவான கருத்துகள் எங்கள் நினைவில் இன்னும் உள்ளது” என்றும் ஈரான் அதிபர் குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் நாட்டின் பொருளாதார உத்தியை விளக்கியுள்ள மொஜ்தபா காமேனி, “உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதும், முக்கிய பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலர் மீதான சார்பைக் குறைப்பதும், சுயசார்பு கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமானவை. பொருளாதார மீள்திறனை வெறும் கொள்கை முடிவாக மட்டும் பார்க்காமல், வெளிப்புற நிதி அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் அவசியமான ஒரு தேசிய கட்டமைப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய நாடுகள் செவி சாய்க்குமா ?

'உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வளைகுடா நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் வேண்டுகோளை, அழைப்பை இஸ்லாமிய நாடுகள் கவனத்தில் கொள்வது மிகமிக அவசியமாகும்.  முஸ்லிம்களுக்கு இடையேயான பிளவு, எதிரிகளின் நலன்களுக்கே சாதகமாக அமையும். வளைகுடா பிராந்திய அரசுகளும், மக்களும் இஸ்லாமிய கோட்பாட்டின் கீழ் ஒன்றிணைந்திருந்தால், நம் உடமைகளையும், நிலங்களையும் எதிரிகளால் அபகரிக்க முடியாது என்பதை இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே மேற்காசியா மற்றும் வளைகுடா இஸ்லாமிய ஆட்சியாளர்கள், உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அவர்களின் திட்டத்தை முறிடியக்க வர வேண்டும். 

=====================

"எந்தவொரு பதவியில் இருப்பவரும், தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றே அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது இஸ்லாமிய சமூகத்திற்குள் மோதலை உருவாக்கும் செயலைச் செய்தால், அவர் இஸ்லாம் எதிர்ப்பு நோக்கங்களையே முன்னெடுத்துச் செல்கிறார் என்று அர்த்தம்"

=====================

ஓமன், பாகிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற முஸ்லிம் நாடுகளுடன் பிராந்திய பேச்சை ஈரானிய துாதரக அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வேளையில் கமேனியின் அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வேண்டுகோளாக இருந்து வருகிறது.  ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள  ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  ஈரான், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவியது. இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமியர்களின் உண்மையான எதிரியை அறிந்துகொண்டு, அதன் திட்டங்களைப் புரிந்துகொண்டு   அதை எதிர்த்து இஸ்லாமிய நாடுகள் நிற்க வேண்டும். இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமை என்ற கயிற்றை உறுதியாக பிடித்துகொண்டால் மட்டுமே, இஸ்லாமிய நாடுகளில் அமைதி திரும்பும். எதிரிகள் இஸ்லாமிய நாடுகளின் பலத்தை கண்டு அஞ்சுவார்கள். ஈரானின் அழைப்புக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

===============================


No comments: