இந்து மத நூல்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கும்மும்பை அஞ்சுமன்-இ-இஸ்லாம் கரிமி நூலகம்
டிஜிட்டல் முறையில் நூல்கள் புதுப்பிக்கும் பணித் தொடக்கம்
மகாராஷ்டிராக மாநிலம் தெற்கு மும்பையின் பரபரப்பான வீதிகளை நோக்கியவாறு அமைந்துள்ள ஒரு நூற்றாண்டு பழமையான கட்டடத்திற்குள், இந்திய மத நூல்களின் அரிய பாரசீக மற்றும் உர்தூ மொழிபெயர்ப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைதியான முயற்சி ஒன்று நடைபெற்று வருகிறது. நாட்டின் பன்முக கலாச்சாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கடந்த காலத்தின் எஞ்சிய சான்றுகளாக இவை திகழ்கின்றன.
இந்து நூல்களை மீட்டெடுக்கும் பணி :
152 ஆண்டுகள் பழமையான 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' (Anjuman-I-Islam) நிறுவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள 'கரிமி நூலகம்' (Karimi Library), 1867 மற்றும் 1896-க்கு இடைப்பட்ட காலத்தில் அச்சிடப்பட்ட மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை மற்றும் சிவ புராணம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட புனித இந்து நூல்களை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
புகழ்பெற்ற சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திற்கு (CSMT) அருகில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தில், சமஸ்கிருதம், ஆங்கிலம், உர்தூ, பாரசீகம், மராத்தி, பஷ்தூ மற்றும் அரபு மொழிகளில் உள்ள புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. வரலாறு, தத்துவம், இறையியல், இலக்கியம், புவியியல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் உள்ள இப்புத்தகங்களில் சில 150 ஆண்டுகளுக்கு முன்பே அச்சிடப்பட்டவை ஆகும்.
கரிமி நூலகத்தின் சுவையான வரலாறு :
வர்த்தகர் காசி அப்துல் கரிமி போர்பந்தரி 4 ஆயிரத்து 500 மதிப்புமிக்க நூல்களை நன்கொடையாக வழங்கியதைத் தொடர்ந்து 1898-ல் இந்த நூலகம் நிறுவப்பட்டு, அவரது பெயரே நூலகத்திற்கு, சூட்டப்பட்டதாக 1874-ல் பத்ருதீன் தியாப்ஜியால் நிறுவப்பட்ட 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவரான பத்மஸ்ரீ டாக்டர் ஜாஹிர் காசி தெரிவித்தார்.
மத நூல்கள் மற்றும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் அரச ஆணைகள் தவிர, 1875-ஆம் ஆண்டைச் சேர்ந்த அரிய செய்தித்தாள்களும் (எ.கா: ஜெய்ப்பூர் கெஜட், அம்பாலா கெஜட் மற்றும் கெய்ரோவின் 'அல் கைரா') இங்கு உள்ளன. இவை இந்தியாவின் ஆரம்பகால சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பார்வையை வழங்குகின்றன.
டிஜிட்டல் மயமாக்கல் பணி :
"புத்தகங்கள் பழமையானவையாகிவிட்டன. அவற்றின் பக்கங்கள் எளிதில் உடையக்கூடிய நிலையில் உள்ளன. பூஞ்சை மற்றும் பூச்சிகளை அகற்ற சிறப்பு ரசாயனங்கள் மூலம் அவை சுத்திகரிக்கப்பட வேண்டும். நல்ல நிலையில் இல்லாத புத்தகங்கள் பாதுகாப்பிற்காக சிறப்புத் தாள்கள் கொண்டு ஒட்டப்பட்டு சரிசெய்யப்படுகின்றன" என்று அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவர் ஜாஹிர் காசி தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மயமாக்கல் பணிக்காக நிபுணர்கள் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. புத்தகப் பக்கங்கள் 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் 'கிளவுட்' (cloud) கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. "இப்புத்தகங்கள் மிகுந்த சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. நாட்டின் பாரம்பரியம் இந்த நூலகத்தில் பெருமளவில் பொதிந்துள்ளது என்பது இந்தியர்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயமாகும்," என்றும் ஜாஹிர் காசி கூறினார்.
====================
"152 ஆண்டுகள் பழமையான மும்பை அஞ்சுமன்-இ-இஸ்லாம் நிறுவனத்திற்குள் அமைந்துள்ள கரிமி நூலகம், 32-க்கும் மேற்பட்ட இந்து மத நூல்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் வகையில் ஒரு புதுப்பிப்புப் பணியைத் தொடங்கியுள்ளது. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்வதும் பணியாற்றுவதுமே இந்தியாவின் பாரம்பரியம் என்பதை இந்த பணி உறுதி செய்கிறது"
====================
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகப் பக்கங்களும், 70 ஆயிரம் செய்தித்தாள் மற்றும் இதழ் பக்கங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், ஆவணப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க இன்னும் 2 ஆயிரத்து 250 பக்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் நூலகப் பொறுப்பாளர் முகமது காலிப் முல்லா உறுதிப்படுத்தினார்.
"இந்தச் செய்தித்தாள்கள் சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக்கால நிகழ்வுகள், அக்காலகட்டத்தின் சமூக மற்றும் அரசியல் சூழல், அத்துடன் பிரிட்டிஷ் ஆதரவு மற்றும் எதிர்ப்பு எனப் பத்திரிகைத்துறை எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த விவரங்களை வழங்குகின்றன," என்று முகமது காலிப் முல்லா கூறினார்.
இச்செய்தித்தாள்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது பெரும்பாலும் தெரியவில்லை. இருப்பினும், 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' (Anjuman-I-Islam) நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழ்ந்து வருவதாலும், அது அத்தகைய வெளியீடுகளுக்குச் சந்தா செலுத்தியிருக்கக்கூடும் என்பதாலும், இந்தச் செய்தித்தாள்களும் இதழ்களும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவையாகவே இருக்க வேண்டும் என்று முகமது காலிப் முல்லா குறிப்பிட்டார்.
கரிமி நூலகம் புதுப்பிக்கும் பணி :
'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' நிறுவனத்தின் பாரம்பரியக் கட்டிடத்தின் ஒரு பகுதியாகத் திகழும் கரிமி நூலகம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது; அதேவேளையில், அதன் பழமையான தோற்றமும் தனித்துவமான சூழலும் மாறாமல் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' நிர்வாகத்தில் அங்கம் வகித்ததாகவும், அவர்களின் பல முக்கியக் கூட்டங்களுக்கு இந்த நூலகம் சான்றாகத் திகழ்ந்ததாகவும் அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவர் ஜாஹிர் காசி சுட்டிக்காட்டினார். "பணிகள் நிறைவடைவதைப் பொறுத்து, புதுப்பிக்கப்பட்ட இந்த நூலகத்தை அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த நூலகத்தில் பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்று ஜாஹிர் காசி தெரிவித்தார்.
நாட்டில் மத ரீதியாக மக்களை பிரித்து அதன்மூலம் அரசியல் லாபம் அடைய ஒரு கூட்டம் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கும் நிலையில், ஒரு இஸ்லாமிய நூலகம், இந்து மத நூல்களின் அரிய உர்தூ மொழிபெயர்ப்புகளைப் புதுப்பிக்கிறது என்பது எவ்வளவு போற்றத்தக்க விஷயமாகும். நாட்டில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறார்கள் என்பதற்கு மும்பை கரிமி நூலகத்தின் பணியே ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறலாம். மேலும், இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்வதும் பணியாற்றுவதுமே இந்தியாவின் பாரம்பரியம் என்பதை இந்த பணி உறுதி செய்கிறது என்பதை மறுக்க முடியாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment