Sunday, August 30, 2026

திருக்குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதி - சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி....!

 புனித திருக்குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை 

உருவாக்குவதற்கான சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி 

உஸ்பெகிஸ்தான்  இஸ்லாமிய நாகரிக மையம் அறிவிப்பு

உஸ்பெகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய நாகரிக மையம், புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதற்கான சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி (calligraphy competition) ஒன்றை ஆகஸ்ட் 26 அன்று அறிவித்துள்ளது. உஸ்பெக் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற "இஸ்லாமிய நாகரிகம்: ஒரு புதிய கண்ணோட்டம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்" என்ற கருப்பொருளைக் கொண்ட சர்வதேச ஊடக மன்றத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதி :

இப்போட்டியானது "குர்ஆனின் உலகம்: அரபு கையெழுத்துக் கலை மரபுகள் முதல் எதிர்காலத்தின் பாரம்பரியம் வரை" என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளின் தனித்துவமான பாணிகளை உள்ளடக்கி, இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் சிறப்பான மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இத்திட்டம் இக்கலையின் செழுமை, அதன் பல்வேறு பாணிகள் மற்றும் அதன் நாகரிகப் பரவல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமையும்.

கையெழுத்துக் கலைஞர்களுக்கு அழைப்பு :

இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் பல்வேறு பாணிகள் மற்றும் மரபுகளை ஒரே கலை மற்றும் கலாச்சாரப் படைப்பாக ஒன்றிணைத்து, புனித குர்ஆனை எழுதுவதில் பங்கேற்குமாறு உலகெங்கிலும் உள்ள கையெழுத்துக் கலைஞர்களுக்கு இத்திட்டம் அழைப்பு விடுக்கிறது. இது அரபு கையெழுத்துக் கலையின் வரலாற்று முக்கியத்துவத்தையும், காலங்காலமாக புனித குர்ஆனை எழுதுவதில் அதற்குள்ள தொடர்பையும் முன்னிலைப்படுத்த உதவும். இஸ்லாமிய நாகரிக மையத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் நவீன வழிகளில் காட்சிப்படுத்துதல் ஆகிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, புனித குர்ஆன், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியம் தொடர்பான பல்வேறு கலாச்சார மற்றும் அறிவியல் திட்டங்களை ஆய்வு செய்த மன்றத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே இப்போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கையெழுத்துக் கலைப் பள்ளிகள் பங்கேற்பு :


இத்திட்டத்தை, இஸ்லாமிய நாகரிக மையத்தின் கையெழுத்துக் கலைப் பள்ளியின் இயக்குநரும் கையெழுத்துக் கலைஞருமான ஹபிபுல்லோ சோலிஹ் முறைப்படி அறிவித்தார். "நூற்றாண்டுகளை இணைக்கும் பாரம்பரியம்: இஸ்லாமிய நாகரிகத்தின் ஆன்மீக அர்த்தங்கள்" என்ற தலைப்பிலான ஊடக மன்றத்தின் முழு அமர்வின் போது இப்போட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் மிகச்சிறந்த மரபுகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்தக் குர்ஆன் பிரதி உருவாக்கப்படவுள்ளது.

=========================

"பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளின் தனித்துவமான பாணிகளை உள்ளடக்கி, இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் சிறப்பான மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் கையெழுத்துக்கலையின் செழுமை, அதன் பல்வேறு பாணிகள் மற்றும் அதன் நாகரிகப் பரவல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமையும்"

=========================

முன்முடிவுகள் (stereotypes) மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வை (Islamophobia) முறியடிப்பதில் ஊடகங்களின் பங்கு குறித்த சர்வதேச விவாதமும் இந்த அமர்வில் இடம்பெற்றது.. இதில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  பிரதிநிதிகள் மற்றும் அல்ஜீரியா, ஓமன், பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈராக், மாலி மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசு நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். குர்ஆன் மற்றும் கையெழுத்துப் பிரதி பாரம்பரியம் சார்ந்த பல திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் அடங்கும். இவற்றில் "செயற்கை நுண்ணறிவு, பண்டைய கையெழுத்துப் பிரதிகளை வாசிப்பதற்கான டிஜிட்டல் திறவுகோல்" ஆகியவை அடங்கும்.

கையெழுத்துக் கலை மரபுகள் மீட்பு : 

உஸ்பெகிஸ்தான் தற்போது தனது கையெழுத்துக் கலை மரபுகளை நிறுவன ரீதியாக மீட்டெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் முயற்சியால் உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய நாகரிக மையத்தில் நிறுவப்பட்ட கையெழுத்துக் கலைப் பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி துலுத்,  நஸ்க், நஸ்தாலிக், ருகா, திவானி மற்றும் கூஃபி போன்ற பாரம்பரிய கையெழுத்துக் கலை வடிவங்களைக் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளது. சமர்கண்ட் பிராந்தியத்தில் உள்ள புதிய இமாம் புகாரி வளாகத்திலும் கையெழுத்துக் கலைக்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது. இத்தொகுப்பின் 'இவான்'  எனப்படும் வளைவு முகப்புகளும் சுவர்களும், "சஹீஹ் புகாரி" நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஹதீஸ்களைக் கொண்ட கல்வெட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இமாம் புகாரி சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹதீஸ் ஆய்வுகளுக்கான பள்ளி ஆகியவையும் இத்தொகுப்பிற்குள்ளேயே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: