Saturday, August 29, 2026

பண்டைய மனிதக் குடியிருப்பை வெளிப்படுத்தும் நஜ்ரான்....!

  " பண்டைய மனிதக் குடியிருப்பை வெளிப்படுத்தும் நஜ்ரான் "

ஏக இறைவன் உருவாக்கிய பிரபஞ்சம் குறித்து முழுமையாக விவரங்களை தேடி மனித இனம் அலைந்துகொண்டே இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. உலகம் எப்படி தோன்றியது? மனித இனம் உலகில் எப்படி தோன்றி வேகமாக பரவியது? இப்படி பல கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் கிடைக்கவில்லை. தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள முடிவுகள் அனைத்தும், சொற்பம் என்றே கூற வேண்டும். 

அந்த வகையில் ஏக இறைவனின் படைப்பு இருந்து வருகிறது. உலகில் உள்ள பல நாடுகள் தங்களது ஆய்வு குழுக்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் மனித நாகரீகம் எப்படி தோன்றியது என்பது குறித்து ஆய்வு செய்துகொண்டே இருக்கின்றன. இதற்கு சவூதி அரேபியாவும் விதிவிலக்கல்ல. அந்த நாடும் மனித பாரம்பரியம், குடியேற்றம் ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கிறது. 

நஜ்ரான் பகுதியில் ஆய்வு :

சவூதி அரசின் பாரம்பரிய ஆணையம், நஜ்ரான் பகுதியில் உள்ள ஷோயப் தஹ்தா தொல்பொருள் தளத்தை ஆய்வு மேற்கெசாண்டு ஒரு முக்கிய தகவலை கண்டுபிடித்துள்ளது.  மேலும், தெற்கு அரேபியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றம் மற்றும் இடம்பெயர்வுக்கான முக்கிய சான்றாக முன்னிலைப்படுத்தியுள்ளது. இங்கு 1 புள்ளி 2 முதல் 1 புள்ளி 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ் பழங்கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பள்ளத்தாக்கை நோக்கிய உயரமான சரளைக் கற்கள் நிறைந்த மேட்டு நிலங்களில் 1980-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தளத்தில், கடினமான, வளைக்கக்கூடிய குவார்ட்சைட் கல்லால் செய்யப்பட்ட 34 ஓல்டோவன் கற்கருவிகளின் முறையான மாதிரி கிடைத்தது.

இந்தக் கலைப்பொருட்களில், இறைச்சியை வெட்டுவதற்கும், எலும்புகளை உடைப்பதற்கும், தோல்களை உரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட கூழாங்கல் வெட்டிகள், பலகோண வடிவக் கருவிகள், சுரண்டிகள், கத்திகள் மற்றும் சுத்தியல்கள் ஆகியவை அடங்கும்.

ஆரம்பகால மனிதர்களின் இருப்பு :

சவூதி பாரம்பரிய ஆணையத்தின் தொல்பொருள் துறையின் தலைமை இயக்குநர் அஜாப் அல்-ஒதைபி, இந்தத் தளம் அரேபிய தீபகற்பத்தில் ஆரம்பகால மனிதர்களின் இருப்பு குறித்த காலவரிசை பற்றிய முக்கியமான அறிவியல் நுண்ணறிவுகளை வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், வரலாற்றுக்கு முந்தைய தளங்களை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், ஆய்வு செய்யவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

====================

"தெற்கு அரேபியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றம் மற்றும் இடம்பெயர்வுக்கான முக்கிய சான்றாக ஆய்வு முன்னிலைப்படுத்தியுள்ளது. இங்கு 1 புள்ளி 2 முதல் 1 புள்ளி 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ் பழங்கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன"

====================

சரவத் மலைகளின் கிழக்குச் சரிவுகளில் உள்ள வாடி நஜ்ரானுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த இடம், ஈரமான, நதியால் ஊட்டப்பட்ட ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தில் நீர், கருவி செய்யும் பொருட்கள் மற்றும் செழிப்பான தாவர, விலங்கினங்களை வழங்கியது. 

இப்படி பல சுவையான மற்றும் ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள் நஜ்ரான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் மேலும் பல அற்புதமான தகவல்களை உலகத்தின் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். அதன்மூலம் ஏக இறைவனின் வியப்பு மிகுந்த படைப்புகள் குறித்து பல அரிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்திற்கு தெரியவரும். எனினும், ஏக இறைவனின் படைப்புகள் குறித்து முழு ஞானமும் அவனுக்கு மட்டுமே தெரியும் என்பதால், மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும், முழுமையாக தகவல்கள், உண்மைகள் அவனால் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மையாகும். அதை யாராலும் மறக்கவும் முடியாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: