பெண்கள் முன்னேறுவதைத் தடுக்க சமூகத்தில் வன்முறை பயன்படுத்தப்படுகிறது
80 சதவீதம் பெண்கள் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புனே, ஆக.23- நாட்டின் மிகப்பெரிய சொத்தான பெண்கள் முன்னேறுவதைத் தடுக்க சமூகத்தில் வன்முறை பயன்படுத்தப்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சசாட்டியுள்ளார். இந்திய பெண்களில் 80 சதவீதம் பேர் துன்புறுத்தலை எதிர்கொள்வதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராக மாநிலம் புனேவில் ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தொடர்பு நிகழ்ச்சியான 'சத்ரோன் கி கூஞ்ச்' இல் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது, பெண்கள் தமக்காகத் தாங்களே குரல் கொடுக்க வேண்டும் என்றும், தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
வன்முறையின் மூன்று வடிவங்கள் :
பெண்களுக்கு எதிரான வன்முறையின் மூன்று வடிவங்கள், உடல் ரீதியான வன்முறை, வாய்ப்புகள் மறுக்கப்படுவதன் மூலம் இழைக்கப்படும் வன்முறை மற்றும் பொருளாதார ரீதியான வன்முறை ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பெண் சிசுக்கொலைகள் நடைபெறுகின்றன. 80 சதவீத பெண்கள் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர், 29 சதவீதம் பேர் உடல் ரீதியான வன்முறையை அனுபவிக்கின்றனர். 6 சதவீதம் பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்று ராகுல் காந்தி கூறினார்; மேலும் சமூக அவப்பெயர் குறித்த அச்சம் காரணமாக 99 சதவீத பாலியல் வன்முறை சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
---------------------------------
"பெண்கள் பல வழிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். ஆண்கள் எந்தத் தேர்வையும் பலமுறை எழுதலாம், ஆனால் பெண்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படுகிறது. இது திருமணம் செய்துகொள்ள வேண்டிய வயது, எனவே தேர்வெழுதச் செல்லத் தேவையில்லை என்று கூறப்படுகிறது"
---------------------------------
பாதுகாப்பு என்ற பெயரில் சுமார் 50 சதவீத பெண்களுக்குக் கல்வி அல்லது வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பாதுகாப்பான பயணத்திற்காகப் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ. 17 ஆயிரத்து 500 செலவிட வேண்டியுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.
பல வழிகளில் கட்டுப்பாடுகள் :
பெண்கள் பல வழிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர் என்று கூறிய அவர், அவர்களில் 60 சதவீதம் பேரால் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவதில்லை என்றும் தெரிவித்தார். ஆண் குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் வெளியே சென்று தாமதமாகத் திரும்பலாம். ஆனால், பெண் குழந்தைகள் இரவு 8 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். ஆண்கள் எந்தத் தேர்வையும் பலமுறை எழுதலாம், ஆனால் பெண்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படுகிறது. இது திருமணம் செய்துகொள்ள வேண்டிய வயது, எனவே தேர்வெழுதச் செல்லத் தேவையில்லை'என்று அவர்களிடம் கூறப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறினார். திருமணம் அல்லது குடும்பப் பொறுப்புகள் காரணமாக 45 சதவீதப் பெண்கள் கல்வியையோ அல்லது வேலையையோ கைவிட வேண்டிய சூழல் உள்ள நிலையில், வெறும் 8 சதவீதப் பெண்கள் மட்டுமே நிலம் வைத்திருப்பதாக மக்களவைத் தலைவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய மாணவ மாணவியர்கள், பாலியல் துன்புறுத்தல், தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகள், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமை மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகியவை பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரத்தைப் பெறுவதில் எவ்வாறு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினர்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment