"இயற்கையை ஆராய்வதற்கான புதிய எல்லைகளைத் திறக்கும் தாயிஃப் மலைகள்"
இஸ்லாமிய வரலாற்றில் தாயிஃப் நகருக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் இருந்து வருகிறது. ஏக இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் கடுமையான துயரங்களைச் சந்தித்த துக்க ஆண்டில் (நபித்துவத்தின் 10-ஆம் ஆண்டு, கி.பி. 619), இஸ்லாமியப் பிரசாரத்திற்காக மக்காவிலிருந்து சுமார் 60 முதல் 70 மைல் தொலைவில் உள்ள தாயிஃப் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். தாயிஃப் நகரின் தலைவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் அதனை மறுத்ததுடன், கேலி செய்து ஊரை விட்டுத் துரத்தினர். நகரின் சிறுவர்களையும் குண்டர்களையும் ஏவிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கல் எறிந்து விரட்டினர். இதில் நபிகளாரின் உடல் காயமடைந்து இரத்தம் கசிந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயங்களுடன் ஒரு திராட்சைத் தோட்டத்திற்குள் தஞ்சம் புகுந்தார். அங்கே இறைவனிடம் மிகவும் உருக்கமாகப் பிரார்த்தனை செய்தார்.
அப்போது, மலைகளுக்குப் பொறுப்பான மலக்கு (வானவர்), தாயிஃப் நகரை இரண்டு மலைகளுக்கு இடையில் நசுக்கி அழித்துவிடுவதாகக் அனுமதி கேட்டார். அதனை மறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "வேண்டாம். இவர்களின் சந்ததியிலிருந்து ஏக இறைவனை வணங்குபவர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறிப் பொறுமையைக் கடைப்பிடித்தார். அந்தத் தோட்டத்தின் உரிமையாளர்கள் அனுப்பிய 'அத்தாஸ்' என்ற கிறிஸ்தவ ஊழியர் நபிகளாருக்குத் திராட்சைப் பழம் வழங்கினார். நபிகளார் "பிஸ்மில்லாஹ்" என்று கூறியதைக் கேட்டு வியந்த அத்தாஸ், நபிகளாருடன் உரையாடி இஸ்லாத்தைத் தழுவினார்.இந்தப் பயணம் கடுமையான சோதனைகளைக் கொண்டிருந்தாலும், நபியவர்களின் எல்லையற்ற பொறுமை, மன்னிக்கும் குணம் மற்றும் இறைநம்பிக்கையை உலகிற்குப் பறைசாற்றிய வரலாற்று நிகழ்வாக அமைந்தது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க தாயிஃப் நகரம் தற்போது உலக சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அங்க ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களம் :
உள்ளூர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள், தாயிஃப் மலைகளுக்கு அப்பகுதியின் இதமான வானிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுக்காக மட்டும் வருவதில்லை. சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் முதல் காடுகள் மற்றும் பாறை அமைப்புகள் வரை பரந்து விரிந்த நிலப்பரப்பின் காரணமாக, இந்த மலைகள் சாகசம் மற்றும் ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களமாக மாறியுள்ளன. உள்நாட்டு சுற்றுலாவின் வளர்ச்சி மற்றும் வெளிப்புற அனுபவங்களில் அதிகரித்து வரும் ஆர்வத்தால், இந்த ஆளுநரகம் சாகசம், இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு இடமாக உருவெடுத்து வருகிறது.
தாயிஃப் இராச்சியத்தின் மிக முக்கியமான சாகச இடங்களில் ஒன்றாகத் திகழச் செய்யும் அசாதாரணமான குணங்களைக் கொண்டுள்ளதாக ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப் கூறி மகிழ்ச்சி அடைகிறார். அதன் இயற்கை பன்முகத்தன்மை, பல்வேறு நிலைகளில் உள்ள பார்வையாளர்களுக்கு ஏற்ற அனுபவங்களை வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அல்-ஷஃபா அதன் உயர்நிலங்கள், இயற்கைக் காடுகள் மற்றும் பரந்த காட்சிகளால் தனித்து நிற்கிறது என்றும், அதே சமயம் அல்-ஹதா மலைப்பாங்கான நிலப்பரப்பு, சரிவுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகளை ஒருங்கிணைக்கிறது என்றும் அல்-ஷரீஃப் வியப்பு அடைகிறார்.
தனித்துவமான அனுபவம் :
பாறை அமைப்புகள், தாவரப் பன்வகைமை மற்றும் அமைதியுடன் கூடிய அல்-மகாதா பள்ளத்தாக்கு, அர்தா பள்ளத்தாக்கு மற்றும் தி கசல் பள்ளத்தாக்குடன் சேர்ந்து, ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது. மேலும், டாக்கா மலை அதன் உயரம், குளிர்ச்சியான காலநிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுடன் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இதன் காரணமாக இந்த ஆளுநரகம், சாகசம், இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு சுற்றுலாத் தலமாக உருவாகி வருகிறது.
==================
"சுற்றுலாப் பயணிகள் தாயிஃப் மலைகளுக்கு அப்பகுதியின் இதமான வானிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுக்காக மட்டும் வருவதில்லை. சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் முதல் காடுகள் மற்றும் பாறை அமைப்புகள் வரை பரந்து விரிந்த நிலப்பரப்பின் காரணமாக, இந்த மலைகள் சாகசம் மற்றும் ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களமாக மாறியுள்ளன"
==================
சாகசம் என்பது மிகவும் கடினமான பாதைகளில் செல்வது அல்ல. மாறாக ஒருவரின் உடல் திறன்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தைத் தேர்ந்தெடுத்து, நன்கு தயாராக இருப்பதே ஆகும். சவூதி விஷன் 2030-இன் இலக்குகளுடன், உள்நாட்டு சுற்றுலாவில் அதிகரித்து வரும் ஆர்வமும் வெளிப்புறச் செயல்பாட்டுக் கலாச்சாரத்தின் பரவலுக்குப் பங்களித்துள்ளது. எனவே தான், சாகச விளையாட்டுகளின் ஆர்வலரான சவூத் மக்ராபி, தாயிஃப் சாகசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுற்றுலாத் தயாரிப்பை உருவாக்க ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது என்று உறுதியாக நம்புகிறார். குறிப்பாக, பல சுற்றுலாப் பயணிகள் இப்போது வெறுமனே சுற்றிப் பார்ப்பதை விட, அனுபவங்களைத் தேடுகிறார்கள்.
எனவே, பாதைகளை மேம்படுத்துதல், அவற்றின் சிரம நிலைகள் குறித்த தெளிவான தகவல்களைக் காட்சிப்படுத்துதல், வழிகாட்டிகளைத் தகுதிப்படுத்துதல், மற்றும் அந்த இடங்களுக்கு அருகில் போக்குவரத்து, உபகரண வாடகை, விருந்தோம்பல், சிற்றுண்டிச்சாலைகள் போன்ற துணைச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் உள்ளூர் சுற்றுலா வழங்குநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என மக்ராபி ஆலோசனை தெரிவிக்கிறார்.
சாகசச் சுற்றுலா மூலம் அனுபவம் :
சாகசச் சுற்றுலா என்பது கட்டாயம் அதிக ஆபத்து நிறைந்த செயல்பாடுகளைக் குறிப்பதல்ல. குடும்பங்கள், இளைஞர்கள், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் அனுபவங்களை வடிவமைக்க முடியும். இது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, உள்ளூர் முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் பெருக்குகிறது.
எந்தவொரு சாகச அனுபவத்திற்கும் பாதுகாப்பே அடிப்படை. இதற்காக, சுற்றுலாப் பயணிகள் தங்கள் திறனுக்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுப்பது, வழிகாட்டி அல்லது அனுபவம் வாய்ந்த குழுவின் உதவியை நாடுவது, பொருத்தமான காலணிகள் மற்றும் ஆடைகளை அணிவது, தண்ணீர், சிற்றுண்டி மற்றும் முதலுதவிப் பெட்டியை எடுத்துச் செல்வது, வானிலை நிலவரத்தைக் கவனிப்பது, தாங்கள் செல்லும் பாதையை மற்றவர்களுக்குத் தெரிவிப்பது மற்றும் கைபேசியில் போதுமான அளவு சார்ஜ் இருப்பதை உறுதி செய்வது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
குறிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே பயணிப்பது, குப்பைகளை விட்டுச் செல்லாமல் இருப்பது மற்றும் தாவரங்கள் அல்லது வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அனுபவசாலிகள் வலியுறுத்துகிறார்கள். இப்பகுதியில் குப்பைகளை வீசுதல், அதிகப்படியான மரங்களை வெட்டுதல், அனுமதியற்ற இடங்களில் தீ மூட்டுதல் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுதல் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. அதேவேளையில், "நீங்கள் வந்தபோது இருந்ததை விட அந்த இடத்தை இன்னும் சிறப்பாக விட்டுச் செல்லுங்கள்" என்ற கலாச்சாரத்தைப் பரப்புவதன் மூலமும், இடங்களைச் சுத்தம் செய்வதற்கான தன்னார்வ முயற்சிகளில் பங்கேற்பதன் மூலமும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இந்தப் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் ஆலோசனை தருகிறார்கள்.
சாகசச் செயல்பாடுகளால் ஏற்படும் வளர்ந்து வரும் பொருளாதாரத் தாக்கத்தையும் ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப் சுட்டிக்காட்டினார். உள்ளூர் கைவினைஞர்களுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுலா வழிகாட்டுதல், விருந்தோம்பல், கிராமப்புற தங்கும் விடுதிகள், போக்குவரத்து மற்றும் உபகரணங்கள் வாடகைக்கு விடுதல் போன்ற துறைகளையும் இவை ஆதரிக்கின்றன. உடல் செயல்பாடுகளுடன் நாட்டின் சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கும் முயற்சியை இணைக்கவும், ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான முறையில் அந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சமூகத்தை ஊக்குவிக்கவும் 'ஃபஜ்ர் ஹைகிங் குழு' இந்தச் சுற்றுலா மற்றும் மலையேற்ற முன்னெடுப்பைத் தொடங்கியதாக ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப் கூறி மகிழ்ச்சி அடைகிறார். இத்துறையில் 'தாயிஃப்' நகரின் வெற்றியானது, அப்பகுதியின் இயற்கை அழகிற்குப் பொருத்தமான வகையில் "முறையான மற்றும் நிலையான அனுபவங்களை" உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது என்று மலையேற்றக்குழுவினர் நம்புகின்றனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment