Friday, August 21, 2026

மேற்குக் கரை பகுதியில் குடியேற்ற வீடுகளைக் கட்ட இஸ்ரேல் திட்டம்-இஸ்லாமிய நாடுகள் கண்டனம்....!

 ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் குடியேற்ற வீடுகளைக் கட்ட இஸ்ரேல் திட்டம்

சவூதி அரேபியா, துருக்கி  உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம்

குடியேற்றத் திட்டத்தை உடனே கைவிடக் கோரிக்கை 

ரியாத், ஆக.22- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின்  மிகவும் உணர்திறன் மிக்க பகுதியில் குடியேற்ற வீடுகளைக் கட்டுவதற்கான இஸ்ரேலின் திட்டங்கள், பாலஸ்தீன அரசின் சாத்தியக்கூறுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்று சவூதி அரேபியா, பிற அரபு மற்றும்  இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

ஜெருசலேமுக்குக் கிழக்கே உள்ள இ1 என்ற பகுதியில் ஆயிரத்து200-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை 18.08.2026 அன்று வெளியிட்டது. இதன்மூலம் இப்பகுதியில் யூதக் குடியேற்றங்களை அமைப்பது மேற்குக் கரையை இரண்டாகப் பிளவுபடுத்தி, நிலத்தொடர்ச்சி கொண்ட ஒரு பாலஸ்தீன அரசை உருவாக்குவதை சாத்தியமற்றதாக்கிவிடும். மேலும், இது மேற்குக் கரையை கிழக்கு ஜெருசலேமிலிருந்து பிரித்துவிடும். கிழக்கு ஜெருசலேமைத் தங்கள் தலைநகராக பாலஸ்தீனியர்கள் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் : 

இந்நிலையில், சவூதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், இ1 குடியேற்றத் திட்டத்தை முற்றிலும் நிராகரிப்பதாகவும் அதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.  இத்திட்டம் குடியேற்ற விரிவாக்கம் மற்றும் நிலத்தைக் கையகப்படுத்துதலை ஊக்குவிக்கும் ஒரு ஆபத்தான தீவிரமடைதலைக் குறிக்கிறது. இது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியின், குறிப்பாக மேற்குக் கரைக்கும் கிழக்கு ஜெருசலேமுக்கும் இடையிலான நிலத்தொடர்ச்சியைச் சிதைக்கும் என்று இஸ்லாமிய நாடுகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

பாலஸ்தீன அரசுக்கு அச்சுறுத்தல் :

மேலும், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, 1967-ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் அமையவிருக்கும் சுதந்திரமான, நிலத்தொடர்ச்சி கொண்ட மற்றும் செயல்படக்கூடிய பாலஸ்தீன அரசின் சாத்தியக்கூறுகளுக்கு இஸ்ரேலின் திட்டம் அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  12 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலத்தில் 3 ஆயிரத்து 400 வீடுகளைக் கட்டுவது உள்ளிட்ட இ1 பகுதிக்கான ஒட்டுமொத்தத் திட்டங்களுக்கு இஸ்ரேல் கடந்த ஆண்டே ஒப்புதல் அளித்திருந்தது.

======================

"இஸ்ரேல் மேற்கொள்ளும் பிற சட்டவிரோதக் குடியேற்றக் கொள்கை,பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் மீது குடியேறிகள் நடத்தும் வன்முறைக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம். சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவும் நிதியும் வழங்குபவர்கள் மீது சர்வதேசத் தடைகளை விதிக்க வேண்டும் என்று  வலியுறுத்தல்"

====================== 

நிலத்தொடர்ச்சி கொண்ட பாலஸ்தீன அரசுக்கு இவை இருத்தலியல் அச்சுறுத்தலை, அரசின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அப்போது கூறியிருந்தார். 

மனித உரிமை அமைப்புகள் கண்டனம் :

இஸ்ரேல் ஆயிரத்து 234 வீடுகளுக்கான ஒப்பந்தப்புள்ளி இந்த வாரம் வெளியிடப்பட்டதை ஐரோப்பிய நாடுகள், பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் இஸ்ரேலிய மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ளன. காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் விரிவான அமைதித் திட்டத்திற்கு, இந்தத் திட்டம் நேரடி சவாலாக அமைந்துள்ளது என்று அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டறிக்கை தெரிவித்துள்ளது. 

நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும் மேற்கு கரை பகுதியை இணைத்துக்கொள்வதைத் தடுப்பதில் அதிபர் ட்ரம்ப் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும் இது சவால் செய்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  அந்தப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் பிற சட்டவிரோதக் குடியேற்றக் கொள்கைகளையும், பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் மீது குடியேறிகள் நடத்தும் வன்முறைகளையும் அந்த அறிக்கை கடுமையாகக் கண்டித்துள்ளது.  சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவும் நிதியும் வழங்குபவர்கள் மீது சர்வதேசத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: