Saturday, August 22, 2026

பேரீச்சை மரக் கழிவுகளுக்கு புதிய வாழ்க்கை....!

 

"பேரீச்சை மரக் கழிவுகளுக்கு புதிய வாழ்க்கை"

 - சவூதி அரேபியா அரிய முயற்சி -

சுவையான பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு மகிழும் மக்கள், பேரீச்சை மரங்கள் மனித வாழ்க்கிற்கு எந்தளவுக்கு பயன்களை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை மறந்து விடுகிறது. ஏக இறைவன் தனது ஒவ்வொரு படைப்பிலும் அற்புதங்களை மறைத்து வைத்துள்ளான். அந்த வகையில் பேரீச்சை மரங்களிலும் ஏராளமான அற்புதங்கள் குவிந்து கிடக்கின்றன.  சவூதி அரேபியாவில் சுமார் 37 மில்லியன் பேரீச்சை மரங்கள் உள்ளன. பேரீச்சை அறுவடை செய்யப்பட்ட பிறகு எஞ்சியிருப்பவற்றில் மதிப்பைக் கண்டறிவதில் அதிகளவில் கவனம் செலுத்தும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேரீச்சைக் கழிவுகள் மூலம், தளபாடங்கள், அதாவது வீட்டிற்கு தேவைப்படும் மேசை, கதிரை, கட்டில் மற்றும் அலமாரிகள்  முதல் மக்கும் பிளாஸ்டிக்குகள் வரையிலான பொருட்களாக தயாரிக்கப்படுகின்றன. மேலும், ஆராய்ச்சியாளர்கள் பரந்த அளவிலான தொழில்துறை பயன்பாடுகளை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி எண்ணெய் மற்றும் எரிவாயு செயல்பாடுகளின் போது துளையிடும் திரவ இழப்புகளைத் தடுக்க உதவும் வகையில், பேரீச்சைக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு 'லாஸ்ட்-சர்குலேஷன்' பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சவூதி அரேபியாவின் பேரீச்சை மரங்கள் அவற்றின் பழத்தைத் தாண்டி பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளன என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

பேரீச்சை ஓலைகள் ஆய்வு :

வீசப்பட்ட பேரீச்சை ஓலைகள் ஆராயப்பட்டு வரும் ஒரு பகுதியாகும். பேரீச்சை ஓலைகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, சிறு துண்டுகளாக்கப்பட்ட பிறகு, பலகைகளைத் தயாரிப்பதற்காக குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு ஆதரவாக நினைவுப் பொருட்களைத் தயாரிக்க இந்தப் பலகைகள் பயன்படுத்தப்பட்டன. அதன்பிறகு, சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களைக் குறிவைத்து தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கப்பட்டுள்ளது.  மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட மரச்சாமான்களைத் தயாரிக்கவும் இந்த மூலப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

==================

" பேரீச்சைக் கழிவுகள் மூலம் வீட்டிற்கு தேவைப்படும் மேசை, கட்டில் அலமாரிகள்  முதல் மக்கும் பிளாஸ்டிக்குகள் வரையிலான பொருட்களாக தயாரிக்கப்படுகின்றன. பேரீச்சை ஓலைகள், தட்டுகள், நாற்காலிகள் உள்ளிட்ட மரச்சாமான்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது"

==================

பேரீச்சை ஓலைகளைப் பொடியாக அரைத்த பிறகு, அவற்றைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரி நெகிழியாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. உணவு உண்ணும் பாத்திரங்கள் போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களையும், தண்ணீர் பாட்டில்கள் போன்ற அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களையும் உற்பத்தி செய்வதையும் சவூதி அரசு இலக்காகக் கொண்டுள்ளது.  பேரீச்சை மரத்தின் மற்ற பாகங்களுக்கான பயன்பாடுகளை மேலும் ஆராய்ச்சி மூலம் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சவூதி சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய பனை மற்றும் பேரீச்சை மையம் போன்ற அரசாங்கத் துறையின் ஆதரவுடனும், தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் அரசாங்க ஆதரவுடனும், பேரீச்சை மரத்திலிருந்து கூடுதல் தயாரிப்புகளை உருவாக்கி, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கழிவிலிருந்து உயிரி நெகிழிகள் வரை :

பேரீச்சை மரக் கழிவுகள் உட்பட விவசாயக் கழிவுகளை, வழக்கமான நெகிழிகளுக்கு மாற்றாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை சவூதி நிறுவனம் ஒன்று ஆராய்ந்து வருகிறது. சவூதி அரேபியா ஆண்டுதோறும் சுமார் 3 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.இது மிக அதிக அளவாகும். மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் மண் மற்றும் பெருங்கடல்களை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பெரும் தீங்கினை விளைவிக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில்,  வழக்கமான பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக அமையக்கூடிய, இயற்கையில் மட்கக்கூடிய ஒரு பொருளை உருவாக்குவது குறித்து ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேரீச்சை மரக் கழிவுகள் உள்ளிட்ட விவசாயக் கழிவுகளை, மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் உருண்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த உருண்டைகளை, கரண்டிகள், குப்பைப் பைகள் மற்றும் செடித் தொட்டிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களுக்கும், 3டி அச்சிடுதலுக்கான இழையாகவும் பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் துகள்களை விட்டுச் செல்வதற்குப் பதிலாக, இறுதியில் முழுமையாக உயிரிச்சிதைவு அடையும் வகையில் இந்த மூலப்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  எனவே, அதைத் தெருவிலோ அல்லது கடலிலோ விட்டால், அவை இறுதியில் முழுமையாக சிதைந்துவிடும். அவை மைக்ரோபிளாஸ்டிக்காக மாறாது.

பொருளாதார வாய்ப்புகள் :

கழிவுகளைக் குறைப்பதைத் தாண்டி, இந்தத் தொழில்நுட்பத்தை பரவலாகப் பயன்படுத்துவது சவூதி அரேபியாவின் விவசாய மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு இடையே புதிய தொடர்புகளை உருவாக்கக்கூடும். ஜித்தா சந்தையின் ஒரு பகுதிக்கு இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், சுமார் 21 ஆயிரம் டன் பாரம்பரிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இதை அமைத்து, ஏறக்குறைய 44 ஆயிரம்  டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைத் தவிர்க்க முடியும்.

விவசாயக் கழிவுகள் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டும் ஒரு வழியாகவும் அமையலாம். அத்துடன் கழிவு சேகரிப்பு, போக்குவரத்து மற்றும் பதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் இது உருவாக்கக்கூடும். விவசாயப் பண்ணைகள் அல்லது விவசாயத் துறையில் கழிவுகள் உருவாகும்போது, ​​அவற்றை மதிப்புமிக்க தயாரிப்புகளாக மாற்றுவதற்காக, இது போன்ற பயோ-பிளாஸ்டிக் (உயிரியல் சிதைவுறும் பிளாஸ்டிக்) தொழில் நிறுவனங்களுக்கு விற்க முடியும்.  மேலும்  புதிய தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் உருவாவதால், பயோ-பிளாஸ்டிக் அல்லது பொதுவாக வட்டப் பொருளாதாரம் சார்ந்த இப்புதிய துறையின் மூலம் நாட்டிற்குப் புதிய வருவாய் கிடைக்கும்.

உற்பத்தியை விரிவுபடுத்துதல் :

பரவலான பயன்பாட்டிற்குச் செலவு ஒரு முக்கிய சவாலாக உள்ளது. ஐரோப்பா அல்லது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளை விட, உள்நாட்டில் தயாரிக்கப்படும் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகள் விலை குறைவாக இருக்கக்கூடும். ஏனெனில், இதில் சர்வதேச போக்குவரத்துச் செலவுகள் தவிர்க்கப்படுகின்றன. அத்துடன் கழிவுகள் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், பாரம்பரிய பிளாஸ்டிக்குகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. உயிரி-நெகிழிகள் என்பது ஆழ்ந்த தொழில்நுட்பம் சார்ந்த ஒரு துறையாகும். எனவே, அத்தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்து முழுமைப்படுத்தக் காலம் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: