தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெறும்....!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை....!!
இனிய திசைகள் இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்....!!!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், இனிய திசைகள் இதழுக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினார். அதன் முழு விவரம் வருமாறு:
17 மாநிலங்களில் இ.யூ.முஸ்லிம் லீக் கிளைகள் :
இந்தியத் தேர்தல் ஆணையம், அசாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை அறிவித்துள்ளது. இந்தியாவின் 17 மாநிலங்களில் தனது கிளைகளைக் கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட முடிவெடுத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். .
இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில், கேரள மாநிலத்தில்தான் இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம் மிகவும் வலிமையுடன் திகழ்கிறது. எனவே, இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள், 'கேரள மாடலை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இ.யூ.முஸ்லிம் லீகின் 'கேரள மாடலானது, சமூக ஒற்றுமையையும், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஜனநாயக அமைப்பில் கண்ணியத்தையும், ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலான அனைத்து நிர்வாக நிலைகளிலும் பங்கேற்பையும் உறுதி செய்கிறது. எனவே, இந்த 'கேரள மாடல்' பெரிதும் பாராட்டப்படுவதோடு, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரியாகவும் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது.
கேரளாவில் வெற்றி வாய்ப்பு :
வரவிருக்கும் இந்தச் சட்டமன்றத் தேர்தல்களில், ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இ.யூ.முஸ்லிம் லீகின் கேரள மாநிலக் குழு, 28 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் இத்தேர்தல்களில் UDF கூட்டணி நிச்சயமாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, அமோகப் பெரும்பான்மையைப் பெறும் என்றும், இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அனைவரும் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெறுவார்கள் என்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பெண்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர். எங்கள் மதிப்பிற்குரிய தலைவர் 'இமாமுல் ஹிந்த்' சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கும், எங்கள் துடிப்பான அகில இந்தியப் பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி அவர்களுக்கும், தேசியப் பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப் எம்.பி., அவர்களுக்கும், தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., அவர்களுக்கும், மற்றும் கேரள மாநிலத்தின் பிற தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், IUML வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெற்று, கேரளச் சட்டமன்ற வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைக்க வேண்டும் என்று வாழ்த்திப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாட்டில் 210 தொகுதிகளில் வெற்றி :
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்' 5 சட்டமன்றத் தொகுதிகளை இ.யூ.முஸ்லிம் லீக் கோரியது. இத்தேர்தலில், தமிழ்நாட்டின் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்' இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது; இவற்றுள் 4 கட்சிகள் முஸ்லிம் அமைப்புகளாகும். இ.யூ.முஸ்லிம் லீகுடன் சேர்த்து, இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற முஸ்லிம் அமைப்புகளையும் திருப்திப்படுத்தும் வகையில் திமுக தலைமை முடிவெடுக்க வேண்டியுள்ளது. எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்தி அடைய வேண்டியுள்ளது. மற்ற அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் தி.மு.க-வின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடும் நிலையில், இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் மட்டும் தங்கள் கட்சியின் தனித்துவமான சின்னமான 'ஏணி' சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பின் விளைவாக, தி.மு.க தலைமையிலான கூட்டணி நிச்சயமாக 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். மேலும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அமைப்பாகத் தனது வரலாற்றுப் பாத்திரத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், இ.யூ.முஸ்லிம் லீக் தமிழகச் சட்டமன்றத்திற்குள் மீண்டும் அடியெடுத்து வைக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஸ்ஜித்துகளைச் சார்ந்த 'மொஹல்லா ஜமாத்துகள்' இயங்கி வருகின்றன. இவற்றுள் மிகச் சிலவற்றைத் தவிர, மற்ற அனைத்து மொஹல்லா ஜமாத்துகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் தான் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் அமைப்பாகத் திகழ்கிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து மொஹல்லா ஜமாத்துகளையும் சார்ந்த முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவ அரசியல் அமைப்பாகத் திகழ்வது இ.யூ.முஸ்லிம் லீக்தான். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருசிலர், காங்கிரஸ், திமுக, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்ட 'தமிழக வெற்றிக் கழகம்' போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கலாம். நடிகர் விஜயின் கட்சியான த.வெ.க.விலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கலாம். இருப்பினும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும், தங்கள் சமூகத்தின் தனிப்பெரும் பிரதிநிதியாக இ.யூ.முஸ்லிம் லீகிற்க்கே முன்னுரிமை அளித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை நடத்திய திமுக, இஸ்லாமிய சமுதாயத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எனவே, முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து நின்று போட்டியிட இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை முடிவு செய்துள்ளது. அங்கும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். எனவே ஏணி சின்னம் மேற்கு வங்கச் சட்டமன்றத்திற்குள் நுழையும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார். அவரது எண்ணம் மற்றும் விருப்பத்தின்படி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் நல்லாட்சி அமைய வேண்டும் என நாமும் பிரார்த்தனை செய்து துஆவுடன் வாழ்த்துக்கூறி விடைப்பெற்றோம்.
===============================



