Wednesday, March 11, 2015

அரை லூஸ்களின் கூடாரம்...!

அரை லூஸ்களின் கூடாரம்...!


நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னைக்கு வந்த அந்த நண்பரைச் சந்தித்தேன்.

காட்பாடியில் இருந்து வந்திருந்தார்.

தம்முடைய பணிகளை முடித்துக் கொண்டு என்னை செல்பேசியில் அழைத்தார்.

இருவரும் மதிய உணவை ஒன்றாக சாப்பிட்டோம்.

பெரியமேட்டில் உள்ள பிரியாணிக்கு புகழ் பெற்ற அந்த ஓட்டலில் நீண்ட நேரம் பேசிக் கொண்டே சுவையான பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம்.

பேச்சின் இடையே முகநூலில் நீங்கள் இணையவில்லையா என நண்பரிடம் கேட்டேன்.
நண்பர் சிரித்துக் கொண்டே இப்படி சொன்னார்.

அது அரை லூஸ்களின் கூடாரம்.
அதனால் தமக்கு ஆர்வம் இல்லை என்றார்.

என்னது அரை லூஸ்களின் கூடாரமா என நண்பரின் முகத்தை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.

ஆமாம் தலைவா (என்னை நண்பர் அப்படி அழைப்பதுதான் வழக்கம்) ஒரு நாள் அலுவலகத்தில் மற்றொரு நண்பர் முகநூலில் மூழ்கி இருந்த போது நானும் கூட அமர்ந்து என்னதான் இருக்கிறது என ஆவலுடன் கவனித்தேன்.

ஒரு சிலர் நல்ல கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.

பலர் நான் இப்போது ரயிலில் பயணம் செய்கிறேன்.

நான் இப்போது கமலா திரையரங்கில் அனேகன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இப்போது தயிர் சாதம் சாப்பிடுகிறேன்.

நான் இப்போது வாக்கிங் போய் கொண்டிருக்கிறேன்.

என்ற பாணியில் பதிவு செய்திருந்தார்கள்.

சிலர் பார்க்க தகுதி இல்லாத படங்களை போட்டு இருந்தார்கள்.

சிலர் சினிமா நடிகர் நடிகை படங்களை போட்டு ஜே என்று எழுதி இருந்தார்கள்.

இதற்கு ஒரு கூட்டம் லைக் வேறு போட்டு இருந்தது.

முகநூலில் நல்ல கருத்துக்களை பதிவு செய்யாமல் அதை சிலர் பாழ்ப்படுத்தி வருகிறார்கள்.

அதனால் தமக்கு அதில் ஆர்வம் இல்லை என்றார் நண்பர்.

நண்பரின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றியது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Friday, March 6, 2015

புருஷனுக்கு மரியாதை..?

புருஷனுக்கு மரியாதை..?

திருவல்லிக்கேணி பெரிய தெரு சந்திப்பில் நண்பர் எஸ்.ஆர்.கே. வருகைக்காக காத்திருந்த போது என் அருகில் இருந்த பெண் ஒருவர் எதிர் முனையில் இருந்த தன்னுடைய கணவரை என்னங்க...என்னங்க..என கத்தி கத்தி அழைத்து கொண்டே இருந்தார்.

ஆனால் அந்த நபரோ கவனித்தப்பாடு தெரியவில்லை. பொறுமை இழந்த அந்த பெண் முண்டம் திரும்பி பார்க்குதா பார் என திட்ட ஆரம்பித்தார்.

பின்னர் எதிரில் சென்ற மற்றொரு நபர் மூலம் தனது கணவரை அழைத்த அந்த பெண் அவர் திரும்பி பார்த்ததும் கன்னா பின்னா என திட்ட ஆரம்பித்தார்.

நான் ஆடி போயிட்டேன்.

கணவனே கண் கண்ட தெய்வம் என மதிக்கும்; மரியாதை கொடுக்கும் நம்ப தமிழகத்தில் தற்கால பெண்கள் தங்களது புருஷனுக்கு கொடுக்கும் மரியாதை இதுதான்.

மதங்களை கடந்து மனிதம்...!

மதங்களை கடந்து மனிதம்...!

நீண்ட நாட்களுக்குப் பிறகு மாம்பலத்தில் இருக்கும் எஸ்.ஆர்.கே. (செந்தில் ராஜ்குமார் - சன் டிவி) வீட்டிற்கு சென்றேன்.

அவரது துணைவியார் அன்புடன் வரவேற்றார். 

நலம் விசாரித்தார்.

டிபன்..தேனீர் அளித்து விருந்தோம்பல் செய்து தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தினார்.

விடை பெற்று திரும்பும் நேரம் என்னங்க பொங்கலுக்கு ஊருக்கு போனபோது சாருக்காக தொப்பி வாங்கினோமே எங்கே வெச்சிங்க என எஸ்.ஆர்.கே.விடம் அவரது துணைவியார் கேட்க ஆமாம் மறந்தே போச்சில்லே என எஸ்.ஆர்.கே. தன்னையே கோபித்துக் கொண்டார்.

பிறகு இருவரும் தேடி சிறிது நேரத்திற்குள் அழகான இரண்டு வெள்ளை நிற தொப்பியை என்னிடம் வழங்கினார்கள்.



ஒரு நிமிடம் நான் ஆடி போனேன்.

கோட்பாடு கொள்கை ரீதியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அன்பு வெளிப்படுத்துவதில் தமிழர்கள் மனிதர்களாக இன்னும் மனித நேயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியானது.

எஸ்.ஆர்.கே. தம்பதியினருக்கு என் நன்றி. வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

எச்சரிக்கை...!

எச்சரிக்கை...!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சுனாமி அலையில் பிஜேபிக்கு மரண அடி.

இப்படிதான் மக்களும் செய்தி ஊடகங்களும் கருத்தை வெளியிட்டு வருகின்றன.

உண்மையில் கெஜ்ரிவால் அலை எதுவும் டெல்லியில் வீசவில்லை.

பிரதமர் மோடிக்கு எதிராக வீசிய மிக பயங்கரமான சுனாமி அலையின் பலன் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது.

இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொய்யான வாக்குறுதிகளை வீசி பேசி பேசியே மக்களை ஏமாற்றலாம் என நினைக்கும் மோடி போன்ற விளம்பர பிரியர்களுக்கு மக்கள் கொடுத்த எச்சரிக்கை மணிதான் டெல்லி தேர்தல் முடிவுகள்.

=======================

கொண்டாட்டம்....!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை நாடே கொண்டாடுவது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்ககளில் வரும் கருத்துகள் செய்திகள் மூலம் நன்றாக அறிய முடிகிறது.

பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பிரதமர் மோடி கோட் சூட் அணிந்தால் மக்கள் கோபத்தை காண்பிக்காமல் என்ன செய்வார்கள் ?

மோடி ஜி உங்களுக்கு எட்டே மாத காலத்திற்குள் மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள்.

டெல்லி தேர்தல் மோடி அரசின் செயல்பாடுகளுக்கான வாக்கெடுப்பு இல்லை என்ற சப்பை காரணங்களை கூறமால் இனி சுய விளம்பரத்திற்காக அதிகம் பேசாமல் நாட்டு மக்களுக்கு உண்மையாகவே நல்லதை செய்ய ஆர்வம் செலுத்துங்கள்.

சர்வாதிகார போக்கை கைவிடாது பேசி பேசியே மக்களை வெறுப்பேத்தினால் டெல்லி மக்களை போன்று நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உங்களுக்கு பாடம் கற்பிக்க சிறிதும் தயங்க மாட்டார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

சூடான பார்ட்டி....!

சூடான பார்ட்டி....!

இஸ்லாமியர்கள் மத்தியில் அண்மை காலமாக பொறுமை குணம் குறைந்து வருவது காண முடிகிறது.

என்னையும் சேர்த்துதான். (ஊடகத்துறையில் இருப்பதால் என்னவோ கொஞ்சம் வேகமாக செயல்பட்டு பொறுமை இழக்கிறேன்)

சமூக வலைத்தளம் தொலைக்காட்சி என பலவற்றில் நடக்கும் விவாதங்களை உன்னிப்பாக கவனித்தால் இது உண்மை என தெரிகிறது.

பொறுமை குணத்தை மிக உயர்வாக போதிக்கும் மார்க்கத்தில் இருந்து வந்த மக்கள் ஏன் இப்படி பொறுமையை இழந்து ஒற்றுமையை சீர்குலைத்து தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள் என புரியவில்லை.

அதனால்தான் என்னவோ தமிழகத்தில் இ.யூ.மு.லீ. த.மா.மு.லீ. த.மு.மு.க. ம.ம.க. இந்திய தேசிய லீக் த.மா.தே.லீக். தேசிய லீக். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இந்திய தவ்ஹீத் ஜமாஅத். ஜமாஅத் இ இஸ்லாமி. வெல்ஃபர் பார்ட்டி என 60க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் தோன்றி தாங்கள்தான் உண்மையான முஸ்லிம் அமைப்புகள் என கூறிக் கொள்கின்றன.

நாள்தோறும் இன்னும் பல அமைப்புகள் தோன்றி கொண்டே இருக்கின்றன.

ஆனால் பொறுமை ஒற்றுமை ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்ற நல்ல பண்புகள் இஸ்லாமிய அமைப்புகளிடம் காண்பது அரிதாக இருக்கிறது.

முஸ்லிம் மக்களுக்கு தாங்கள்தான் உண்மையாக உழைப்பதாக இந்த அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. பிற இஸ்லாமிய அமைப்புகளை தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றன.

அதனால்தான் என்னமோ
எல்லோருமே சூடான பார்ட்டியாக இருக்கிறார்கள்.

வேண்டுமானால் பாருங்கள் இந்த கருத்தை பதிவு செய்த என்னை அர்த்தமற்ற மொழிகளால் வசைப்பாட பலர் லைன் கட்டி நிற்க போகிறார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

சரவணன் - மீனாட்சி...!


சரவணன் - மீனாட்சி...!

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்களில் சகோதரர் சங்கரபாண்டியனும் ஒருவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவர் செய்த மனித நேய உதவிகள் மறக்க முடியாதவை.

சரி விஷயத்திற்கு வருகிறேன். 

கலைத்துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர் சங்கரபாண்டியன் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போது தனது இலட்சியத்தை அடைந்துள்ளார்.



ஆம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற சரவணன் - மீனாட்சி தொடரில் அவரும் நடிக்கிறார். 


சாரி வாழ்கிறார்.

இந்த தகவலை அவர் செல்பேசி மூலம் எனக்கு தெரிவித்தபோது மனம் மகிழ்ச்சி அடைந்தது. அப்போதே அவரை வாழ்த்தினேன்.

பின்னர் அவரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

கலைத்துறையில் சங்கரபாண்டியன் உச்சத்தை தொட்டு சாதனை புரிய வேண்டும்....வாழ்த்துக்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்


தொப்பி....!

தொப்பி....!



இந்து மதத்தைச் சேர்ந்த சகோதரர் எஸ்.ஆர்.கே. (செந்தில் ராஜ்குமார் சன் தொலைக்காட்சி) அன்பைப் பொழிந்து மகிழ்ச்சியுடன் அளித்த வெள்ளை நிற தொப்பியை அணிந்து கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

கொள்கை கோட்பாடுகளில் நாம் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையான அன்பு மனித நேயம் மகிழ்ச்சி ஆகியவற்றை செலுத்துவதில் பரிமாற்றிக் கொள்வதில் நிஜ மனிதர்களாக இருந்து வருகிறோம்.

நம்மை போன்றவர்கள் நாட்டில் நிறைய பேர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.