" தமிழக சட்டமன்றத் தேர்தலும், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடும் "
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், தற்போதைய குளிர்காலத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கம் அல்லது இறுதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஆளும் திமுக, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி, தொடர்ந்து இயக்கத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கும்பகோணத்தில் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடைபெற்றது. இயக்கத்தின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வெற்றி மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து முஸ்லிம் லீகர்கள் மட்டுமல்லாமல், மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், மார்க்க அறிஞர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆயிரக்கணக்கில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மஹல்லா ஜமாஅத் மாநாட்டின் சிறப்பு :
ஒரு அரசியல் இயக்கம் மாநில மாநாட்டை எப்படி கண்ணியமாக, பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்பதற்கு சான்றாக, கும்பகோணம் மஹல்லா ஜமாஅத் மாநாட்டினை இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம் மிகச் சிறப்பாக நடத்தி, அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது என்றே கூற வேண்டும். மாநாட்டின் தொடக்கத்தில் இந்திய நாட்டின் பெருமையை மிகச் சிறந்த முறையில் எடுத்துக்கூறும், "ஸாரே ஜஹான்ஸே அச்சா இந்துஸ்தான் ஹமாரா' பாடல் உர்தூ மொழியில் மட்டுமல்லாமல், செம்மொழியான தமிழிலும், அத்தாயி மதரஸா மாணவ மாணவியர் பாடியது அனைவரது நெஞ்சங்களையும் கவர்ந்தது. பின்னர், திருச்சி முஸ்லிம் லீக் மகளிரணியினர் நடத்திய சிலம்பக் கலை நிகழ்ச்சி, வீர விளையாட்டுகளுக்கு இஸ்லாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது என்பதை மாநாட்டிற்கு வந்து குவிந்த மக்கள் மத்தியில் அழகான முறையில் எடுத்துக்காட்டியது.
இப்படி இந்திய நாட்டின் பெருமையையும், வீர விளையாட்டுடனும் தொடங்கப்பட்ட மாநாட்டில், நடைபெற்ற அழகிய இசை நிகழ்ச்சியில் இயக்கப் பாடகர்கள், இ.யூ.முஸ்லிம் லீகின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில் கீதங்களை பாடி மக்கள் நெஞ்சங்களை கவர்ந்தனர். தொடர்ந்து நடைபெற்ற நூல் வெளியீடு நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் எழுதி தொகுத்த 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' உள்ளிட்ட மூன்று நூல்களை மேனாள் நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி அவர்கள் வெளியிட்டது மாநாட்டின் சிறப்பு என்றே கூறலாம்.
விருதுகள் வழங்கி கவுரவிப்பு :
மாநாட்டின் மிகமிக முக்கிய அம்சமாக முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் விருதுகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 மஹல்லா நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. சன்மார்க்க சமூக பணிகளாற்பவர்களுக்கான மார்க்க மாமேதைகள் விருதுகள் 7 மார்க்க அறிஞர்களுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் வழங்கி அவர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு கண்ணியம் செய்து கவுரவித்தது. பல்லாண்டு காலம் தாய்ச்சபை இ.யூ.முஸ்லிம் லீகில் உழைத்து வரும் ஊழியர் திலகங்களுக்கான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருதுகள், 39 பேருக்கு வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.
மஹல்லா ஜமாஅத் பிரகத்தை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் காயல் மகபூப் வாகிக்க, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாவி வாழ்த்துரை வழங்கி, மஹல்லா ஜமாஅத்துகளுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் உள்ள நல்ல தொடர்புகள், உறவுகள் குறித்து மிகச் சிறந்த முறையில் எடுத்துக் கூறினார். இந்த உறவுகள் இனிவரும் காலங்களில் நல்ல முறையில் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்ற தீர்மானம் :
பின்னர் மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் அனைத்தும் சமூக நலன் சார்ந்த தீர்மானங்களாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த தீர்மானங்களாகவும் இருந்தன. குறிப்பாக, திருக்கோவில்களின் நகரம் என்று உலகப் புகழ்பெற்ற கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய தனி மாவட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே உருவாக்க வேண்டும். அதற்கான நிர்வாகப் பணிக்ளை எளிமைப்படுத்த வேண்டும். மேலும், கும்பகோணத்தில் இந்தாண்டு நடைபெறயுள்ள மகாமக திருவிழாவிற்கான உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை அரசு இப்போதே திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் ஒன்று, தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக இருக்கும் வகையில் அமைந்து இருந்தது.
அத்துடன், அனைத்துச் சமூக மக்களிடம் எப்படி ஒற்றுமையாக, நல்லிணக்கத்துடன் இஸ்லாமிய சமுதாயம் வாழ விரும்புகிறது என்பதை சகோதரச் சமுதாய மக்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் இருந்தது. இதனால், இந்த முக்கிய தீர்மானம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பாராட்டைப் பெற்றது. தமிழ்நாடு, இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்கள் கூட, இந்த அருமையான தீர்மானத்தைப் பாராட்டி, செய்திகளை வெளியிட்டன. பல எழுத்தாளர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஆக்கங்களை வரைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருசில பத்திரிகைகள் தங்களது தலையங்கம் மூலம் இ.யூ.முஸ்லிம் லீகின் தீர்மானத்தை பாராட்டி வரவேற்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவுப் பேருரை :
மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டின் நோக்கம், தமிழகத்தில் மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் எப்படி வலுவான கட்டமைப்புகளுடன் இருந்து வருகின்றன? திமுக தலைமையிலான கூட்டணிக்கு மாநிலம் முழுவதும் உள்ள மஹல்லா ஜமாஅத் எப்படி ஆதரவு வழங்கி வருகின்றன என்பதை மிகச் சுருக்கமான எடுத்துரைத்தார்.
இறுதியாக, நிறைவுப் பேருரை ஆற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்லாமிய சமுதாயத்திற்கும், திமுகவிற்கும் உள்ள நீண்ட நெடிய உறவுகள் குறித்து பெருமையாக புகழ்ந்து பேசினார். மேலும், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று கூறியதை உண்மை என்று மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் ஆமோதித்தனர். அத்துடன், உலமாக்களுக்கான ஓய்விதியம் உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டு, தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை மட்டுமல்லாமல், அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தார்.
தேர்தல் நேரத்தில் சரியான முடிவு :
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இ.யூ.முஸ்லிம்லீக் சார்பில் நடத்தப்பட்ட இந்த மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு, ஒரு சரியான அரசியல் நடவடிக்கை என திமுக தலைமை நன்கு உணர்ந்து பாராட்டியுள்ளது. மாநாட்டில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முஸ்லிம் சமுதாயம், குறிப்பாக இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் வார்டு வார்டாக சென்று திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் மூலம், இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமைந்ததற்கு சான்றாக இருந்தது என்று கூறலாம்.
அந்த வகையில் மாநாட்டை நடத்த முடிவு செய்து அதை மிகச் சிறப்பான முறையில் நடத்தி முடித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைவர்களை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவரும், திருநபி குலவழித் தோன்றல் செய்யது சாதிக்அலி சிஹாப் தங்ஙள், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இ.யூ.முஸ்லிம் லீக் எப்படி வலுவாக இருக்கிறது என்பதற்கு மஹல்லா ஜமாஅத் மாநாடு எடுத்துக்காட்டாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். அத்துடன், இரண்டு மாநிலங்களிலும் முஸ்லிமகள் அமைதியாக வாழ இ.யூ.முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்கத்துடன் பணிகளை ஆற்றி வருவதையும் அவர் மிகச் சிறந்தமுறையில் எடுத்துக்கூறினார். இதுபோன்ற அமைப்பு வடமாநிலங்களிலும் உருவாக வேண்டும் என்றும் அதன்மூலம் அங்கும் சமூக நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்றும் தங்ஙள் விருப்பம் தெரிவித்தார்.
ஆக, மொத்தத்தில், கும்பகோணம் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு ஒரு வெற்றி மாநாடாக மட்டும் அமையவில்லை. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், சகோதரச் சமுதாய மக்களும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு விடை கூறும், விளக்கம் அளிக்கும் மாநாடாக அமைந்தது என்றே பாராட்ட வேண்டும்.
=====================================












No comments:
Post a Comment