Saturday, January 31, 2026

கிங் அப்துல்அஜிஸ் அரண்மனையில் அரிய கலைப்பொருட்கள் கண்காட்சி ...!


" கிங் அப்துல்அஜிஸ் அரண்மனையில் நடைபெறும்

அரிய கலைப்பொருட்கள் கண்காட்சி " 

- பார்வையாளர்கள் கண்டு வியப்பு -

அரிய பாரம்பரிய, கலாச்சார மற்றும் வரலாற்றுப் பொக்கிஷங்கள் கொண்ட சவூதி அரேபியா, உலக மக்களின் கவனத்தை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, உலகில் வாழும் இஸ்லாமியர்களின் சொர்க்கப் பூமியாக இந்த நாடு விளங்கி வருகிறது. புனித நகரங்களான மக்கா, மதீனா நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம், விருப்பம், இலட்சியம் முஸ்லிம்களின் மத்தியில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

அதன் காரணமாக, தங்களது வாழ்நாளில் உழைத்து சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமித்து, அதைக் கொண்டு, மக்கா, மதீனா நகரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சென்று தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஹஜ், உம்ரா புனித பயணங்கள் மேற்கொண்டு, ஏக இறைவனின் அருளைப் பொறுகிறார்கள்.

இப்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க சவூதி அரேபிய நாடு, பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றிலும் சிறந்துவிளங்கும் நாடாக இருந்து வருகிறது. இந்த பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அந்நாட்டில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல், உலக மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அரிய கலைப்பொருட்களின் கண்காட்சி அங்கு அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது.  

கிங் அப்துல்அஜிஸ் அரண்மனையில் கண்காட்சி :

அந்த வகையில், தர்ப் ஜுபைதா குளிர்காலப் பருவத்தின் ஒரு பகுதியாக, இமாம் துர்கி பின் அப்துல்லா அரச இயற்கை வனவிலங்கு காப்பக மேம்பாட்டு ஆணையத்தால் அரிய கலைப்பொருட்களின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கண்காட்சி அரண்மனை செயல்பாட்டு நிகழ்வுகளின் வரிசையில், லைனா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் அரண்மனையில் நடைபெறுகிறது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள், அரேபிய தீபகற்பத்தின் மனித வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களின் செழுமையான அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன.

அரிய வரலாற்றுப் பொருட்கள் :

கிங் அப்துல்அஜிஸ் அரண்மனையில் நடைபெறும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கலைப்பொருட்கள் அனைத்தும், பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் வெவ்வேறு வாழ்க்கை முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை ஆவணப்படுத்தும் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த அரிய வரலாற்றுப் பொருட்களைக் கொண்டுள்ளன.

மிகவும் குறிப்பிடத்தக்க பொருட்களில் ஒன்று, இயற்கை மரத்தால் செய்யப்பட்ட மற்றும் கையால் நெய்யப்பட்ட தோல் பட்டையுடன் பொருத்தப்பட்ட ஒரு பாரம்பரிய துப்பாக்கி ஆகும். இது வரலாற்று ரீதியாக வேட்டையாடுவதற்கும் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்பட்டது.

பாரம்பரிய கைவினைத்திறன் :

இந்தக் கலைப்பொருட்கள் அனைத்தும் பாரம்பரிய கைவினைத்திறனின் துல்லியத்தையும், வலிமை மற்றும் குதிரையேற்றத்துடன் தொடர்புடைய அதன் சமூக அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது.

====================

"கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள், பல நூற்றாண்டுகளாக சவூதி அரேபியாவின் வெவ்வேறு வாழ்க்கை முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை ஆவணப்படுத்தும் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த அரிய வரலாற்றுப் பொருட்களைக் கொண்டுள்ளன"

====================

பார்வையாளர் வருகையை ஒழுங்குபடுத்துவதையும், பாதுகாப்பான மற்றும் ஈர்க்கக்கூடிய சூழலில் வரலாற்றுத் தளங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த சுற்றுலாத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.  

கிங் அப்துல்அஜிஸ் அரண்மனையில் நடைபெறும் இந்த கண்காட்சியை, பிப்ரவரி 15 ஆம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சவூதி அரேபியர்கள் மட்டுமல்லாம், வளைகுடா மற்றும் ஆசிய நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் அரிய கலைப்பொருட்கள் கண்காட்சியை காண வரவேண்டும் என்றும் அதன்மூலம், வரலாற்றுத் தளங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இமாம் துர்கி பின் அப்துல்லா அரச இயற்கை வனவிலங்கு காப்பக மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: