வரலாற்றுச் சிறப்புமிக்க சஹாரன்பூர் மஸ்ஜித் பாஜக அரசால் இடிப்பு
ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி கடும் கண்டனம்
சஹாரன்பூர், செப்.07- உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து மத சமூகங்களுக்கும் அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகள் சமமாக வழங்கப்படுகின்றனவா என்றும அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் மேலாதிக்கம், சட்டத்தின் ஆட்சி, மத சுதந்திரம், குடிமக்களின் சமத்துவம் மற்றும் அரசின் நடுநிலைத்தன்மை ஆகியவை குறித்து இந்த நடவடிக்கை தீவிர கவலைகளை எழுப்புவதாக மௌலானா மதானி வேதனை தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித் இடிப்பு :
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்து இருந்து வந்தது. இந்த மஸ்ஜித்தை உத்தரப் பிரதேச பாஜக அரசு இடித்து தள்ளியுள்ளது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள், இந்துமத தோழர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
===================
"இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சமமானது. அரசியலமைப்பு குடிமக்களை முதல் தர மற்றும் இரண்டாம் தர குடிமக்களாகப் பிரிப்பதில்லை"
===================
இந்நிலையில், ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதியை நிலைநாட்டும் கருவிகளாக அல்லாமல், பழிவாங்குதல், பாரபட்சம் மற்றும் வெறுப்புணர்வு ஆகியவற்றின் கருவிகளாக புல்டோசர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ஒரு மஸ்ஜித்துயடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசு நிலங்கள், சாலைகள் அல்லது பொது இடங்களில் பல தசாப்தங்களாக அமைந்துள்ள பிற சமூகங்களின் மத வழிபாட்டுத் தலங்கள் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோத ஆக்கிரமிப்பு அல்லது நிலத்தை ஆக்கிரமித்ததே நடவடிக்கை எடுப்பதற்கான அளவுகோல் என்றால், அதே அளவுகோல் ஒவ்வொரு மதத்திற்கும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வரலாற்று ஆவணங்கள் :
அந்த மஸ்ஜித் வக்பு வாரியத்தில் பதிவு எண் 451-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதையும், பழைய நில ஆவணங்களில் யாகூப் கான் மற்றும் வாஹித் கான் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பே அந்த மஸ்ஜித் அங்கு இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில், 1911-ஆம் ஆண்டு காலத்து ஆவணங்கள், நகராட்சிப் பதிவுகள் மற்றும் வருவாய்த்துறைப் பதிவுகள் ஆகியவற்றை மசூதி நிர்வாகக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. இடிக்கப்படுவதற்கு முன்பு இந்த வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்கள் போதுமான அளவு பரிசீலிக்கப்பட்டனவா என்று மதானி கேள்வி எழுப்பினார். மேலும், 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தையும், பயன்பாட்டின் அடிப்படையிலான வக்பு தொடர்பான புதிய வக்பு சட்டத்தின் விதிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சமமானது என்பதை வலியுறுத்தியுள்ள மதானி, அரசியலமைப்பு குடிமக்களை முதல் தர மற்றும் இரண்டாம் தர குடிமக்களாகப் பிரிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். முஸ்லிம்கள் எந்தச் சிறப்புச் சலுகையையும் கோரவில்லை. சமமான நீதியை மட்டுமே கேட்கிறோம் என்று கூறிய அவர், ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலத்திற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தின் பாதுகாப்பும் அமலாக்கமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment