" திருக்குர்ஆனுடன் ஈராக்கிய கையெழுத்துக் கலைஞரின் பயணம் "
ஏக இறைவனின் திருவாக்கான திருக்குர்ஆனுடன் எப்போதும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது உலகில் வாழும் இஸ்லாமியர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. அரபி மொழியில் உள்ள குர்ஆனை அழகிய முறையில் வாசித்து அதன் இனிமையான சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அதன் காரணமாக அரபி மொழி தெரியாவிட்டாலும், பிறர் குர்ஆனை வாசிக்கும்போது, அதைக் கேட்டு அதன் அற்புதமான மொழி அழகில் மயங்குகிறார்கள்.
அத்துடன், திருக்குர்ஆன் வல்லுநர்களின் அழகிய மொழிகளை கேட்கவும், அதன்படி, வாழ்க்கையில் நடக்கவும் முஸ்லிம்கள் விரும்புகிறார்கள். அப்படி நடக்கவும் செய்கிறார்கள். மேலும், திருக்குர்ஆன் மீது உள்ள காதல் காரணமாக அதனை எப்படி மிகச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் சிலர் யோசனை செய்கிறார்கள். திருக்குர்ஆனை உலக மக்கள் மத்தியில் எப்படி கொண்டுச் சென்று சேர்க்க வேண்டும்? என்றும், அதற்கு தங்களிடம் உள்ள திறமைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்றும் அடிக்கடி யோசித்த அதற்கான முயற்சிகளில் சிலர் இறங்குகிறார்கள். இந்த முயற்சியில் ஏக இறைவனின் கருணையால் அவர்கள் வெற்றியும் அடைகிறார்கள்.
இஸ்லாமிய கையெழுத்துக் கலை :
இஸ்லாமிய கையெழுத்துக் கலை, முஸ்லிம் உலகில் மிகவும் மதிப்புமிக்க கலை மரபுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கலை வடிவம் இஸ்லாத்தின் புனித நூலைப் பாதுகாக்கவும் அழகுபடுத்தவும் உதவியது. பின்னர் மஸ்ஜித்துகள், அரண்மனைகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை அலங்கரிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
துருக்கியில், ஒட்டோமான் பேரரசு காலத்தில் இந்தக் கலை செழித்து வளர்ந்தது. அப்போது இந்தக் கலைக்கு அரசால் ஆதரவளிக்கப்பட்டதுடன், கையெழுத்துக் கலைஞர்கள் தனித்துவமான பாணிகளை உருவாக்கினர். இன்று, துருக்கிய மொழியில் "ஹத்" என்று அழைக்கப்படும் இந்தக் கலைக்கு இஸ்தான்புல் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.
கலை நிபுணர் உமித் கோஸ்குன்சு, உருவங்களைச் சித்தரிப்பதில் இஸ்லாமிய மரபில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, கையெழுத்துக் கலை கலை வெளிப்பாட்டின் ஒரு முக்கிய வடிவமாக மாறியது என்று கூறுகிறார். அவர் "ஹத்" என்பதை ஒரு வகையான வழிபாடு என்று விவரிக்கிறார். "ஹத் கலை என்பது வெறும் கையெழுத்துக் கலை மட்டுமல்ல, அது கடவுளை வழிபடுவதற்கும், அவருக்கு நெருக்கமாகச் செல்வதற்குமான ஒரு வழியாகக் கருதப்படுகிறது," என்று கோஸ்குன்சு கூறினார்.
ஈராக்கிய கையெழுத்துக் கலைஞரின் பயணம் :
இப்படி தான் ஈராக்கிய கையெழுத்துக் கலைஞர் அலி ஜமான், திருக்குர்ஆனுடன் ஒரு அழகிய பயணம் செய்ய எண்ணம் கொண்டு அந்த பயணத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்தார். ஆறு ஆண்டுகள் அயராத உழைப்பிற்குப் பிறகு புனித குர்ஆனின் ஒரு அசாதாரண கையெழுத்துப் பிரதியை அவர் நிறைவு செய்துள்ளார். இது அவரது ஆழ்ந்த தனிப்பட்ட கலைப் பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
இஸ்தான்புல்லில் உள்ள ஒரு மஸ்ஜித்தில் தனது படைப்பிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த 54 வயதான அந்த கலைஞர், இந்த கையெழுத்துப் பிரதியை முடித்தது தனக்கு பெருமையையும் நன்றியுணர்வையும் அளித்ததாகக் கூறினார்.
ஆனந்த கண்ணீர் :
திருக்குர்ஆனுடனான தனது அரியப் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அலி ஜமான், "இந்த குர்ஆனைப் பற்றி நான் நினைக்கும்போதெல்லாம், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதை நிறைவு செய்வதற்குத் தேவையான வாழ்வையும் வலிமையையும் ஏக இறைவன் எனக்கு அளித்தார். அதுவே எனக்குப் பெருமை அளிக்கிறது," என்று அவர் பெருமையுடன் ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.
ஜமான், ஈராக்கின் வடக்கு அரை தன்னாட்சி பெற்ற குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா மாகாணத்தில் உள்ள ரன்யா என்ற ஊரில் பிறந்தவர். தனது குர்ஆன் திட்டத்தைத் தொடரவும், தனது கலையை மெருகேற்றவும் அவர் 2017-ல் தனது குடும்பத்துடன் இஸ்தான்புல்லுக்குக் குடிபெயர்ந்தார். ஏனெனில், தனது சொந்த நாட்டை விட துருக்கியில் கையெழுத்துக் கலைக்கு அதிக மதிப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
====================
"ஈராக்கிய கையெழுத்துக் கலைஞர் அலி ஜமான், தனது தலைசிறந்த படைப்பான, கையால் எழுதப்பட்ட பிரம்மாண்டமான குர்ஆன் கையெழுத்துப் பிரதியை பெருமையுடன் பார்க்கிறார். இதை முடிக்க அவருக்கு ஆறு ஆண்டுகள் உழைப்பும் பக்தியும் தேவைப்பட்டன. முழுமையாக முடிக்கப்பட்ட இந்த படைப்பு, இருபுறமும் எழுதப்பட்ட 302 சுருள்களைக் கொண்டுள்ளது"
====================
ஈராக்கில் முதன்முதலில் கையெழுத்துக் கலையைப் பார்த்தபோது, சுமார் 12 வயதில் தனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டதாக ஜமான் கூறுகிறார். "கையெழுத்துக் கலை எனக்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதில் என் ஆன்மாவைக் கண்டறிய முடியும் என்று நான் உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.
கையெழுத்துப் பிரதியின் ஒவ்வொரு தாளும் முழுவதுமாக கையால் எழுதப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள மிஹ்ரிமா சுல்தான் மஸ்ஜித்தில் தனக்காக ஒதுக்கப்பட்ட ஒரு சிறிய அறையில், ஆறு ஆண்டுகள் காலம் விடியற்காலை முதல் மாலை வரை தான் உழைத்ததாக ஜமான் கூறுகிறார்.
பிரமாண்டமான கையெழுத்துப் பிரதி :
ஈராக்கிய கையெழுத்துக் கலைஞர் அலி ஜமான் உருவாக்கியுள்ள இந்தக் கையெழுத்துப் பிரதி அளவு மற்றும் நோக்கத்தில் பிரம்மாண்டமானது. இது 302 இருபுறமும் எழுதப்பட்ட சுருள்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் சுமார் நான்கு மீட்டர் (13 அடி) நீளமும் 1 புள்ளி 5 மீட்டர் அகலமும் கொண்டது. தடித்த தோல் காகிதத்தைப் போன்ற இந்தத் தாள்கள், முட்டை, சோள மாவு மற்றும் படிகாரம் போன்ற பாரம்பரியப் பொருட்களைப் பயன்படுத்தி சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன.
இந்தக் கையெழுத்துப் பிரதி உலகின் மிகப்பெரியது என்று கூறப்பட்டாலும், அதற்கு அதிகாரப்பூர்வமாக அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. கின்னஸ் உலக சாதனைகளின்படி, மிகப்பெரிய அச்சிடப்பட்ட குர்ஆன், சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள புனித குர்ஆன் அருங்காட்சியகத்தால் மார்ச் 2025-ல் உருவாக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் தனது தந்தை பணியாற்றியபோது, அவர் நீண்ட நாட்கள் வீட்டிற்கு வராமல் இருந்ததை ஜமானின் மகன் நினைவுகூர்கிறார். "நாங்கள் அவருக்கு உணவு கொண்டு செல்லும்போதோ அல்லது அவர் இரவில் தூங்க வீட்டிற்கு வரும்போதோ மட்டுமே அவரைப் பார்ப்போம்," என்று ரேகர் ஜமான் கூறினார்.
இந்தக் கையெழுத்துப் பிரதி, அவர் அதை உருவாக்கிய மஸ்ஜித்திலேயே, சுருள்களாக அடுக்கப்பட்டு, தூசி மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும் ஒரு வாங்குபவரிடம் அது செல்ல வேண்டும் என்பதே அவரது இறுதி ஆசை. மேலும், "இந்தக் குர்ஆன் ஒரு நாட்டில், ஒரு அருங்காட்சியகத்திலோ அல்லது கையெழுத்துக் கலைக்குச் சிறப்பு வாய்ந்த ஒரு இடத்திலோ வைக்கப்பட்டு, அது பாராட்டப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஈராக்கிய கையெழுத்துக் கலைஞர் அலி ஜமான் கூறுகிறார்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






No comments:
Post a Comment