" திருச்சியில் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறியுள்ள ரமளான் சஹர் உணவு வினியோகம் "
புனித ரமளான் மாத நோன்பு தொடங்கியது முதல், திருச்சியின் உணவு சூழல் முற்றிலும் மாறி அமைதியான, கூட்டு கவனிப்பு தாளத்தில் தற்போது நிலைபெற்றுள்ளது. நகரம் முழுவதும், அதிகமான உணவகங்கள் இப்போது சிறப்பு இப்தார் உணவுகள் மற்றும் விடியற்காலையில் சஹர் உணவு மெனுக்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் சில உணவகங்கள் வழக்கமான நோன்பைக் கடைப்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சந்தா அடிப்படையிலான உணவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஒரு சில உணவகங்கள், அதிகாலையில் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கு டேக்அவே மட்டும் சஹர் உணவுகளை வழங்குகின்றன. இத்தகைய அழகான சூழல், மாற்றம் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக திருச்சி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அதிகரித்துவரும் சஹர் உணவு தேவைகள் :
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த முகமது மிஸ்பா, சஹர் உணவு தேவைகள் ஒரு காலத்தில் அரிதாகவே இருந்ததை நினைவு கூர்ந்து இப்படி கூறுகிறார். “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காலையில் மிகக் குறைந்த அளவு மட்டுமே சஹர் உணவு தேவைகள் இருந்தன. இப்தார் மெனுக்கள் கூட மிதமானவை. ஆனால் தற்போது சஹர் உணவை தேர்வு செய்பவர்களின் நீண்ட பட்டியல் உள்ளது” என்று அவர் கூறினார். மத்திய கிழக்கு உணவு வகைகளான ஷவர்மா தட்டுகள், கிரில்டு கபாப்கள் மற்றும் மண்டி சாதம் போன்றவை ஹைதராபாத் மக்களின் விருப்பமான தம் பிரியாணி மற்றும் ஹலீம் போன்ற உணவுகளுடன் வசதியாக பரிமாறப்படுவது வழக்கம். நெய் சாதம் போன்ற உள்ளூர் உணவுகளும், குறிப்பாக குடும்பங்கள் மத்தியில், விரும்பி உண்ணப்படுகின்றன.
உள்ளூர் உணவு விடுதி வணிகத்தில் செல்வாக்கு மிக்க சுரேஷ்குமாரும், ரமளான் மெனுக்கள் இனி ஒரு சில உணவகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். சரியான உணவு வகைகளுடன் கூடிய இப்தார் மெனுக்களைத் திட்டமிடும் உணவகங்களில் தெளிவான அதிகரிப்பு உள்ளது. இதனால், இனி உணவருந்துவது மட்டுமல்ல, பல குடும்பங்கள் உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் விரும்புகின்றன. மேலும் 150 ரூபாய் முதல் இப்தார் பஃபே உள்ளது” என்று சுரேஷ்குமார் கூறியுள்ளார். மலிவு மற்றும் அணுகல் காரணமாக, ரமளான் சீசனில் தெரு உணவு கலாச்சாரமும் வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரமளான் உணவுகளுக்கான ஒரு வலுவான சந்தை :
பாலக்கரை மற்றும் சங்கிலியாண்டபுரம் போன்ற சுற்றுப்புறங்களில் இந்தப் போக்கு குறிப்பாகக் காணப்படுகிறது. அங்கு அரபு மொழி செல்வாக்கு மிக்க சிற்றுண்டிகள், வறுத்த கோழி, கிரில்டு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை விற்கும் தற்காலிக கடைகள் மற்றும் உணவு வண்டிகள் நிலையான மாலை கூட்டத்தை ஈர்க்கின்றன. இப்தாருக்கு சற்று முன்பு மக்கள் கூட்டம் அதிகமாகி, குறுகிய தெருக்கள் முறைசாரா உணவு வழித்தடங்களாக மாறிவிட்டதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கே.எம்.எஸ். ஹக்கிம் பிரியாணியின் நிறுவனர் முகமது ஹக்கிம், ரமளான் உணவுகளுக்கு திருச்சி ஒரு வலுவான சந்தையாக உருவெடுத்துள்ளது என்றார். “குனாஃபா, பக்லாவா மற்றும் பாஸ்பூசா போன்ற அரபு இனிப்பு வகைகளுக்கு இப்போது திருச்சி மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. மொறுமொறுப்பான கோழி உணவுகள் மற்றும் அரபு தெரு உணவுகள் நன்றாக விற்பனையாகின்றன. மேலும் பிரியாணி தொடர்ந்து ஒரு நிலையானதாகவே உள்ளது" என்று முகமது ஹக்கிம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
=====================
"சஹர் உணவு சமையல் செய்வதற்கு இடம் கொடுத்த காதரின் பக்கத்து வீட்டுக்காரரான ராஜேஸ்வரி, இந்த முடிவு இயல்பாகவே வந்தது என்கிறார். அவர்கள் உணவுக்காக ஏங்கும் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் அந்த முயற்சியை ஆதரிக்க விரும்பினோம். இதேபோன்று, மற்ற அண்டை வீட்டாரும் ரமளான் சஹர் உணவு சமையலுக்கு உதவுகிறார்கள்"
=====================
ஹைதராபாத் பாணி கோழி மற்றும் மட்டன் ஹலீம் இந்த ரமளான் பருவத்தில் குறிப்பாக வலுவான தேவையைக் காண்கிறது. “ நாள் முழுவதும் நோன்பு வைத்து பிறகு மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதிக எண்ணெய் மற்றும் மொறுமொறுப்பான உணவு சிறந்ததாக இருக்காது. மேலும் ஆரோக்கியமான விருப்பங்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் உணவகங்ளகக்கு ஆலோசனை தருகிறார். இப்தார் மெனுக்கள் பொதுவாக 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை இருக்கும். அடிப்படை உணவு விருப்பங்கள், பஃபே ஸ்ப்ரெட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பெட்டிகளை உள்ளடக்கியது. நகரத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் விலை உயர்ந்த விருப்பங்களும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அரபு ஆசிரியரின் அருமையான பணி :
வணிக சலசலப்புகளிலிருந்து விலகி, காஜாமலையில் விடியற்காலையில் அமைதியான தாராள மனப்பான்மை வெளிப்படுகிறது. ஜே.கே.நகரைச் சேர்ந்த மைதீன் அப்துல் காதர் என்ற அரபு ஆசிரியர், விவசாயம், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினமும் இலவச சஹர் உணவைத் தயாரிக்கிறார். இந்த புனித பணியில் அவரது இந்து அண்டை வீட்டார் அவருக்கு இடம் மற்றும் பிற உதவிகளை வழங்க உதவுகிறார்கள்.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் தொடங்கிய இந்த முயற்சி, ஏழாவது ஆண்டில் தடையின்றி உள்ளது. மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவுகள், இரவு முழுவதும் சமைக்கப்பட்டு, விடியற்காலையில் பேக் செய்யப்பட்டு, அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விநியோகிக்கப்படுகின்றன. இது முழுக்க முழுக்க நலம் விரும்பிகளின் நன்கொடைகள் மூலம் நிதியளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், நெய் சாதம், காய்கறி பிரியாணி, தக்காளி சாதம், சாதாரண பிரியாணி மற்றும் பருப்பு சாதம் உள்ளிட்ட ஆறு எளிய மெனுக்களில் ஒன்று தயாரிக்கப்பட்டு, துணை உணவுகளுடன் பரிமாறப்படுகிறது.
இந்து அண்டை வீட்டாரின் ஆதரவு :
“பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பல மாணவர்கள் சஹரைத் தவிர்த்து, இப்தார் மட்டுமே சாப்பிடுகிறார்கள்,” என்று கூறியுள்ள ஆசிரியர் மைதீன் அப்துல் காதர், இந்த அருமையான யோசனையை தனது தாயார் எம். பாத்திமா வழங்கியதாக அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். “தொற்றுநோய் காலத்தில் தொடங்கிய இந்த சேவை, தற்போது ஆண்டுதோறும் ஒரு நடைமுறையாகிவிட்டது” என்று அவர் மேலும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சமையல் செய்வதற்கு இடம் கொடுத்த காதரின் பக்கத்து வீட்டுக்காரரான ராஜேஸ்வரி, இந்த முடிவு இயல்பாகவே வந்தது என்றார். "அவர்கள் உணவுக்காக ஏங்கும் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் அந்த முயற்சியை ஆதரிக்க விரும்பினோம்" என்று அவர் கூறி மகிழ்ச்சி அடைகிறார். இதேபோன்று, மற்ற அண்டை வீட்டாரும் ரமளான் சஹர் உணவு சமையலுக்கு உதவுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் மதநல்லிண்க்கம் :
திருச்சியில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற ஒரு நல்ல சூழல் இருந்து வருகிறது. நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு இந்து, கிறிஸ்துவ சகோதரர்கள் உதவி செய்வது, உணவு கிடைக்க ஏற்பாடு செய்வது, இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியில் கலந்துகொள்வது, சகோதரத்துவம், அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்ற கருத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறார்கள். வடமாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மேலோங்கியுள்ள இந்த சூழ்நிலையில், தமிழகம் எப்போதும் அமைதியான மாநிலமாக, மதநல்லிணக்கம் கொண்ட மாநிலமாக விளங்கி வருகிறது. இது உண்மையில் தமிழ்நாடு என்ற அருமையான மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும்.
குறிப்பு : தி இன்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வந்த 'Ramzan sahur in Tiruchy a blend of food and communal harmony" என்று கட்டுரையை அடிப்படையாக வைத்து இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment