Friday, February 27, 2026

இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்தளவுக்கு வெறுப்பு உங்களுக்கு ?

 இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்தளவுக்கு வெறுப்பு உங்களுக்கு ?

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

உலகிலேயே மிகவும் அழகான ஒரு நாடு என்று அழைக்கப்படும் இந்திய நாடு, அதன் மதச்சார்பின்மை கொள்கை காரணமாக, உலக மக்களிடையே மிகவும் மதிக்கப்படும் நாடாக இருந்து வருகிறது. 140 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புள்ளிவிவரப்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் இந்தியாவில் உள்ளன. அந்த சமுகங்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகைகள்  அனைத்தும் வெவ்வேறாக இருந்து வருகின்றன. 

எனினும் இந்திய மக்கள் அனைவரும் நாட்டை நேசிக்கும் மக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். மொழி, கலாச்சாரம், நம்பிக்கைகள் வேறுபாட்டால், நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு தங்களது பங்களிப்பை அவர்கள் வழங்கி வருகிறார்கள். இப்படி அழகான மிகபெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியாவில், தற்போது ஒரு புதிய பிரச்சினை உருவாகியுள்ளது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே பண்பாடு என்று கூறி, ஒருசிலர் பிரச்சினையை உருவாக்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு குழப்பதை ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் மீது மிகப்பெரிள அளவுக்கு வெறுப்பை பரப்பி வருகிறார்கள். 

பாஜக ஆட்சியில் அதிகரிக்கும் வெறுப்பு :


மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், வெறுப்பு போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள், வெறுப்பு பிரச்சாரம் தடுத்து நிறுத்தப்படவில்லை. முஸ்லிம்களை தாக்கும் பாசிச சிந்தனை கொண்டவர்கள், நாட்டில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டே இருக்கிறார்கள். 

அண்மையில் உத்தரகாண்டில், கோவிலுக்கு அருகில் உள்ள காலியான இடத்தில் தொழுகை நடத்தியதற்காக முதியவர் ஒருவர் தாக்கப்பட்டார். முதியவர் ஒருவர் தொழுகை நடத்தும் போது, அவரைத் தாக்கி, வார்த்தைகளால் திட்டி, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லும்படி கட்டாயப்படுத்திய வீடியோ, வெளியாகி பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 24, 2026 அன்று உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் தொகுதியின் ஜகத்பூர் கிராமத்தில் நடைபெற்றது.  பாதிக்கப்பட்ட ஷாஹித், ரேஷாம் பாரியில் வசிக்கிறார். பாதிக்கப்பட்ட ஷாஹித், அதரியா கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு காலியான நிலத்தில் ஜுஹர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, ​​கோயில் நிர்வாகத்துடன் தொடர்புடைய அரவிந்த் சர்மாவால் தாக்கப்பட்டார். 

"ஒரு பிராமணரின் நிலத்தில் தொழுகை நடத்த உங்களுக்கு எவ்வளவு தைரியம்?" என்று கேட்டு அந்த நபர் முஸ்லிம் முதியவரை தாக்கியுள்ளார்.  முஸ்லிம் பெரியவர், ரமளான் நேரம் என்பதால், பள்ளிவாசல் அந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்ததால், அட்டாரியா கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள காலியான வயலான அட்டாரியா மேளா மைதானத்தில் தொழுகை நடத்தி வந்தார். மேலும் அவர் தனது தொழுகைக்குப் பிறகு மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டியிருந்தது.  ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட அரவிந்தின் முன்னாள் மனைவி சரிதா சக்சேனா என்ற பெண், சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம் நபர் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார்.  சர்மா ஒரு கொலைக் குற்றவாளி என்றும், தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

பாஜக முன்னாள் எம்.பி.யின் வெறுப்பு செயல் :

இதேபோன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் போர்வை விநியோகம் செய்த பாஜக முன்னாள் எம்.பி., சுக்பீர் சிங் ஜானாபுரியா,போர்வை வாங்கியவர்களின்  பெயரைக் கேட்டு முஸ்லிம்கள் என்று தெரிந்ததும் கொடுத்த போர்வைகளை பிடுங்கி வாங்கிய சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் போங்க் சவாய் மாதோபூர் தொகுதி பாஜக முன்னாள் எம்.பி சுக்பீர் சிங் ஜானாபுரியா அண்மையில் ஏழை எளிய மக்களுக்கு போர்வைகளை விநியோகம் செய்தார். அப்பொழுது போர்வை வாங்க வரிசையில் நின்ற பெண்களிடம் அவரது உதவியாளர்கள் பெயர் விபரங்களை கேட்டனர். சுஹரா ஜோராக்கான், ராஷியா, சுபைதா என முஸ்லிம் பெயர்களை பெண்கள் கூறியதை கேட்ட முன்னாள் எம்.பி உடனடியாக அவர்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை திரும்ப பெறுமாறு உத்தரவிட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும், பிரதமர் மோடியை அவமதிக்கும் முஸ்லிம்களுக்கு போர்வை பெற தகுதி இல்லை தனது செயலுக்கு அந்த பாஜக முன்னாள் எம்.பி நியாயம் கற்பித்தார்.மேலும் இது அரசு திட்டம் அல்ல என்றும் தனது சொந்த செயலில் செய்யும் உதவி என்பதால் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தான் மட்டுமே  தீர்மானிப்பேன் என்றும் அவர் ஆவேசமாக கூறினார். மணி நேர கணக்கில் வரிசையில் நின்ற முதியவர்களை மதத்தின் பெயரால் அவமானப்படுத்திய பாஜக முன்னாள் எம்.பிக்கு எதிராக அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுக்கு வெட்கமாக இல்லையா?என்று கேள்வி எழுப்பினர். மேலும் முன்னாள் எம்.பி.யின் இந்த பாராபட்சமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போர்வையை பெற்ற இந்து சமூகத்தை சேர்ந்த சிலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை அவரிடமே திரும்ப ஒப்படைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில், முஸ்லிம்களின் மீதான வெறுப்பு போக்கு தற்போது வேகம் எடுத்துள்ளது என்றே கூறலாம். உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் உள்ள 200 ஆண்டுகளுக்கும் மேலான பள்ளிவாசலில் தொழுகை நடத்த தற்போது நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் மஸ்ஜித்தை மூடி சீல் வைத்துவிட்டது. இதனால், லக்னோ பல்கலைக்கழகத்தில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் மஸ்ஜித்திற்கு வெளியே தொழுகை நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி தொழுகை நடத்திய முஸ்லிம் மாணவர்களுக்கு ஆதரவாக இந்து மாணவர்கள் பாதுகாப்பு அரண் போன்று நின்று பாதுகாப்பு வழங்கிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுமட்டுமல்லாமல், முஸ்லிம் முதியவர்களை அடித்து தாக்குவதும், ரயிலில் பயணம் செய்யும் முஸ்லிம் பயணிகளின் மத்தியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கங்களை எழுப்பி அவர்களை சிறுமைப்பட வைப்பது., பள்ளி மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் வந்தே மாதரம் என்ற பாடலை முஸ்லிம் மாணவிகளின் மத்தியில் பாடி, வெறுப்பு ஏற்படுத்துவது‘ போன்ற போக்குகள் தற்போது வட மாநிலங்களில் வழக்கமாக மாறிவிட்டன. 

வேடிக்கை பார்க்கும் மோடி அரசு :

இப்படி பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் சம்பவங்கள், வெறுப்பு வன்முறைகள் ஆகியவற்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கண்டும் காணாமல் அமைதியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வெறுப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. 

நாட்டின் வளர்ச்சியில் உண்மையாக அக்கறை கொண்டு செயல்படும் இந்திய முஸ்லிம்கள் மீது ஏன் இந்தளவுக்கு வெறுப்பு பாசிச அமைப்புகளுக்கு இருக்கிறது என்ற கேள்வி எழுந்தால், நாட்டில் முஸ்லிம்கள் அமைதியாக வாழக் கூடாது என்ற நோக்கமே அவர்களிடம் இருக்கிறது என்பது உறுதியாக தெரிய வருகிறது. மதசார்பற்ற ஒரு நாட்டில், மதசார்பின்மையை உறுதியாக அரசியலமைப்பு சட்டம் எடுத்து கூறியபோதும், அதற்கு மாறாக பாசிச அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பை விதைத்து அறுவடை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன்மூலம், உலக அளவில் இந்திய நாட்டிற்கு மிகப்பெரிய அளவுக்கு அவப்பெயர் வந்துக் கொண்டு இருக்கிறது என்பதை அவர்கள் ஏனோ மறுந்துவிட்டார்கள். ஆட்சியாளர்களும் கொஞ்சமும் கவலைக் கொள்ளாமல், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாகும். அமைதியான, அழகான கலாச்சாரம் கொண்ட இந்திய நாடு, தற்போது நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால் தனது அழகை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. 

===========================

No comments: