வரலாற்றுச் சிறப்புமிக்க சஹாரன்பூர் மஸ்ஜித் இடிப்பு:
ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு நேரில் ஆய்வு
சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை உச்சநீதிமன்றத்தை நாட முடிவு
சஹாரன்பூர், செப்.09.- உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இருந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலானா பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்தை பாஜக அரசு இடித்து தள்ளியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜமியத் உலமா இ ஹிந்த அமைப்பு, இடிக்கப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டது.
சஹாரன்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த மஸ்ஜித் இடிக்கப்பட்டது குறித்த தகவல்களைச் சேகரிக்கவும், அதற்கான சட்ட ரீதியான வாய்ப்புகளை விவாதிக்கவும் 'ஜமியத் உலமா-இ-ஹிந்த்' அமைப்பின் குழுவினர் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 8சஹாரன்பூருக்கு வருகை தந்தனர்.
ஜமியத் குழு நேரில் ஆய்வு :
ஜமியத் அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளர் மௌலானா ஹகிமுதீன் காஸ்மி தலைமையிலான குழு, நிலவரத்தை அறிந்துகொள்ளவும் சட்ட ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடவும், மஸ்ஜித் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு சமூக, அரசியல் பிரமுகர்களைச் சந்தித்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத், மறைந்த யாகூப் கானின் பேரன் ஃபிரோஸ் கான், ஷா ஹாரூன் கான் மற்றும் பல வழக்கறிஞர்களை இந்தக் குழு சந்தித்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மௌலானா ஹகிமுதீன் காஸ்மி, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே இரவிலேயே மஸ்ஜித் இடிக்கப்பட்டது. என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளவும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் நாங்கள் சஹாரன்பூருக்கு வந்துள்ளோம் என்றுகூறினார்.
நீதிமன்றத்தை அணுக முடிவு :
ஜமியத் அமைப்பு சட்டப் போராட்டத்தை வலுவாக முன்னெடுக்கும் என்றும், உள்ளூர் மக்கள் உயர் நீதிமன்றத்தை அணுக விரும்பினால் அவர்களுக்குத் துணையாக நிற்கும் என்றும் அவர் கூறினார். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று கூறிய அவர், வழக்கறிஞர்கள் அடங்கிய குழு ஒன்று இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சட்ட அம்சங்களையும் ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தார். நீதிமன்றத்தை அணுகுவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும், என்று அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து அனைத்து சட்ட நிலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான் தெரிவித்தார்.
===================
"வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு, பல்வேறு இந்து அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது"
===================
"இது வெறும் நிலம் தொடர்பான தகராறு மட்டுமல்ல; இது மஸ்ஜித்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான போராட்டம்," என்று அவர் கூறினார். நடவடிக்கை எடுப்பதற்கு அடிப்படையாக அமைந்த அந்த உத்தரவு மசூதியை இடிப்பதற்குப் பணிக்கவில்லை என்றும், அது ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பானது என்றும் ரஹ்மான் குறிப்பிட்டார். மஸ்ஜித் தரப்பு வழக்கறிஞர் நௌஷாத் அகமது, டெல்லியிலிருந்து வந்திருந்த குழுவினருக்கு இவ்வழக்கு தொடர்பான பல்வேறு சட்ட அம்சங்கள் குறித்து விளக்கமளித்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இதனிடையே, வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு, பல்வேறு இந்து அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment