Wednesday, September 9, 2026

வர்த்தகத் தடை - முஸ்லிம் நாடுகள் வரவேற்பு ....!

 இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு பிரிட்டன் விதித்த வர்த்தகத் தடை

சவூதி அரேபியா உள்ளிட்ட  முஸ்லிம் நாடுகள் வரவேற்பு 

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில்  குடியேற்ற நடவடிக்கைகளை இஸ்ரேல் கைவிட வலியுறுத்தல்

ரியாத், செப்.10- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கும் பிரிட்டனின் முடிவை சவூதி அரேபியா,  ஏழு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் வரவேற்றுள்ளன.  இதைப் பின்பற்றி சர்வதேச சமூகமும், குடியேற்ற விரிவாக்கத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இஸ்ரேலிய குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை விதிப்பது மற்றும் அவற்றின் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் குறிவைத்து பொருளாதாரத் தடைகள் விதிப்பது உள்ளிட்ட, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மீதான தனது கொள்கையில் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றை பிரிட்டன் அறிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்ற விரிவாக்கம் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை குறித்த அதிகரித்து வரும் சர்வதேச கவலைகளுக்கு மத்தியில், குடியேற்றப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதாகக் கூறிய பிரான்ஸ் மற்றும் கனடாவுடன் ஒருங்கிணைந்து இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டன. பிரிட்டன், பிரான்ஸ், கனடா, டென்மார்க், ஸ்பெயின், பின்லாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் ஆகிய 11 பிற நாடுகளுடன் இணைந்து ஒரு தனி கூட்டறிக்கையையும் வெளியிட்டது.

முஸ்லிம் நாடுகள் கூட்டு அறிக்கை :

இந்நிலையில், பிரிட்டனின் இந்த நடவடிக்கையை வரவேற்று சவூதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பிரிட்டனின் நடவடிக்கை, சர்வதேச சட்டத்திற்கு இணங்க மற்ற நாடுகளையும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டும் என்று நம்புவதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளையும் தனிநபர்களையும் சர்வதேச சமூகம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

 சவூதி தலைமையிலான அறிக்கை பிரிட்டனின் உறுதிப்பாட்டை வரவேற்றதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்வதற்கு ஆதரவளிக்கும் அல்லது பங்களிக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர திடமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளது. 

மீண்டும் அழைப்பு :

ஆக்கிரமிக்கப்பட்டப் பகுதிகளில் புவியியல் மற்றும் மக்கள்தொகை தன்மையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.  காசா, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்பதை இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் வலியுறுத்தினர். மேலும், அங்குள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தை முழுமையாகவும் உடனடியாகவும் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்தச் செயலாக்கம் மனிதாபிமான நிலைமைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும், புனரமைப்பு மற்றும் மீட்புக்கு வழிவகுக்க வேண்டும். மேலும் நீடித்த அமைதிக்கான அடித்தளங்களை அமைக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

இதனிடையே, பிரிட்டனின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்ததுடன், 12 பிரிட்டன் நாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: