Friday, May 15, 2015

கருணை காட்டு..!

சித்தராமையா கருணை காட்டு..!

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுத்தபோது அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை மனு அளிக்கப்படவில்லை.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பகள் வெறியாட்டம் நடத்தியபோது இந்த போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்த மனம் வரவில்லை.

பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தபோது நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள். எனவே இதுபோன்ற போராட்டங்கள் தேவையில்லை என கர்நாடக தலைவர்களிடம் நேரில் கோரிக்கை விடப்படவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் கூட பிரச்சினையை தீர்க்க நேரில் மனு அளிக்கப்படவில்லை.

கர்நாடக அரசுக்கு எதிராக கன்னட அமைப்புகளுக்கு எதிராக அறிக்கைகள் தமிழகத்தில் போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே செயல்பாடுகள் இருந்தன.

ஆனால் ஜெயலலிதா வழக்கு விவகாரத்தில் மட்டும் அவசர அவசரமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து பாமக தலைவர் ஜி.கே.மணி மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனுவை அளிக்க சென்ற ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினரை மரியாதைக்கு கூட உட்கார சொல்லாமல் நிற்க வைத்தே மனுவை வாங்கியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.

எப்படிப்பட்ட அவமானம் ஏற்பட்டாலும் சரி ஜெயலலிதாவை ஒழித்து கட்ட வேண்டும்.

அவர் மீது வழக்கு போடு என்று கர்நாடகவிற்கு கோரிக்கை விட வேண்டும் என்ற நிலை தமிழக எதிர்க்கட்சிகளிடம் இருந்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் ஓரே காரணம்.

ஜெயலலிதாவின் விடுதலையால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எதையும் சாதிக்க முடியாது என்ற பயம்தான்.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக சந்திக்க துணிவு இல்லாதவர்கள் அவரை எப்படியும் சிறையில் அடைக்க துடியாய் துடிக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் ஊழல்.

இந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்பட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் தானா சொல்லுங்கள்.

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Wednesday, May 13, 2015

கெஞ்சல்....!

கர்நாடக அரசே ஜெ. மீது வழக்கு போடு...!

தமிழக எதிர்க்கட்சிகள் கெஞ்சல்....!!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 11ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பின் மூலம் கோமா நிலையில் இருந்த அதிமுக மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுந்து அரசியலில் கம்பீரமாக நடைபோட தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா சிறைக்கு செல்வது உறுதி.

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை.

மீண்டும் நாங்கள்தான் ஆட்சியை பிடிக்க போகிறோம் என நினைத்து மகிழ்ச்சியில் திளைத்து இருந்த திமுக தலைமைக்கு ஜெ.வின் விடுதலை மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.



இதேபோல் ஜெ. இல்லாமல் தேர்தலை சந்தித்தால் தொகுதிகளை நன்கு அறுவடை செய்யலாம்.

அதன்மூலம் திமுகவை பணிய வைத்து பேரம் பேசி ஆட்சியில் இடம் பிடிக்கலாம் என கற்பனை செய்த காங்கிரஸ் தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் ஜெ.வின் விடுதலையால் ஆடி போய் உள்ளனர்.



ஜெ. விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

பல அதிரடி திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

கடந்த சில மாதங்களாக நின்று போன திட்டங்களை மளமளவென நிறைவேற்ற இருக்கிறார்.

குறிப்பாக தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து நல்ல அறிவிப்பை ஜெ. வெளியிட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெ.வின் இந்த அறிவிப்புகளால் அவருக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கு மேலும் அதிகரித்துவிடும்.



வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடும்.

இப்படி நினைத்து தமிழக எதிர்க்கட்சிகள் வேதனை அடைந்து பொறாமையால் துடிக்கின்றன.

குறிப்பாக திமுக தலைமை மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பார்க்க துடியாய் துடிக்கிறது.

எனவேதான் ஜெ. வழக்கில் அதிக அக்கறை செலுத்துகிறது.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் என கர்நாடக அரசிடம் கெஞ்சும் பாணியில் கோரிக்கை விடுக்கிறது.

நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதி கூறுகிறது.
இதேபோல் பிற கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால் காவிரியில் எங்களுக்கு தண்ணீர் வேண்டாம்.

மேகதாதுவில் நீ அணைக் கட்டிக்கோ ஆனால் ஜெ. மீது மட்டும் வழக்கு போடு.
உச்சநீதிமன்றத்தில் ஜெ.வுக்கு எதிராக மேல்முறையீடு செய் என சொல்லும் அளவுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் இறங்கி உள்ளதாகவே கூறலாம்.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஜெ. விடுதலை ஆகி இருக்கலாம்.

அதற்கு ஜெ. பொறுப்பு இல்லை. இந்திய சட்ட நடைமுறைகள் காரணம்.

தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவரது நேர்மையை விமர்சனம் செய்துள்ளனர்.

ஜெ.வுக்கு எதிராக அவர் தீர்ப்பு வழங்கி இருந்தால் குமாரசாமியை போன்ற நீதிமான் உலகத்திலேயே இல்லை என பாராட்டி இருப்பார்கள்.

உண்மையில் ஊழலுக்கு எதிராக நீங்கள் போராட நினைத்தால் நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும் என நினைத்தால் அதை உங்களில் இருந்து தொடங்க வேண்டும்.

மனசாட்சிதான் உயர்ந்த நீதிமன்றம் என கூறும் நீங்கள் ஊழல் விவகாரத்தில் உங்கள் மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்.

கடைசியாக.

ஜெ. வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் தமிழக தலைவர்களிடம் ஊழல் குறித்து சாதாரண நடுத்தர படிப்பறிவு இல்லாத கேட்கும் இதுபோன்ற
கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

அதன் பிறகுதான் ஜெயலலிதாவின் ஊழல்கள் குறித்து புலம்ப வேண்டும்.

இப்படிதான் சாதாரண பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழக மக்கள் கருத்துக்களை பரிமாற்றி கொள்கிறார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Tuesday, May 12, 2015

உருக்கமான வேண்டுகோள்...!

ஜெயலலிதாவுக்கு ஓர் (உருக்கமான) வேண்டுகோள்...!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உங்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதி வென்று நீங்கள் விடுதலை ஆகியுள்ளீர்கள்.

கர்நாடக உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி தர்மத்தை நிலை நாட்டியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல சோதனைகளை இறைவனின் அருளால் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளீர்கள்.

உங்களுடைய அரசியல் வாழ்வில் நீங்கள் சந்தித்த சோதனைகளைப் போன்று மற்ற அரசியல் தலைவர்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள்தான் எத்தனை.

இந்த வழக்குகள் அனைத்தையும் துணிச்சலுடன் எதிர் கொண்டு சட்டப்படி தாங்கள் நிரபராதி என்பதை குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்து சாதனை புரிந்துள்ளீர்கள்.

அதற்காக எமது பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்க்கையில் இன்று (11.05.2015) மிக முக்கிய நாள்.

மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்களிடம் ஓர் வேண்டுகோள்.

தமிழக அரசின் மது கொள்கையால் இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

பள்ளி சிறுவர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீதிகளில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

நாள்தோறும் இந்த காட்சிகளை தமிழகம் கண்டு வருகிறது.

மதுவின் கொடுமையால் குடும்ப பெண்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

பல குடும்பங்கள் வறுமையில் தள்ளாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் காரணம் வீதிக்கு வீதி திறக்கப்பட்டு இருக்கும் டாஸ்மாக் மது கடைகள்தான்.

தமிழகத்தில் இருந்து மது என்ற அரக்கனை அகற்ற உங்களால் மட்டுமே முடியும்.

அந்த துணிச்சல் உங்களிடம் மட்டுமே உள்ளது.

பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ள நீங்கள் விரைவில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறீர்கள்.

இந்த நல்ல நேரத்தில் தமிழக பெண்களின் கண்ணீர் துடைக்க இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை காப்பாற்ற பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சராக பதவி ஏற்றதும் முதல் ஆணையாக பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அறிவிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் செய்தால் ஒட்டுமொத்த தமிழகமே உங்கள் பின்னால் நிற்கும்.
உங்கள் அரசியல் விரோதிகள் காணாமல் போவார்கள்.

தமிழகம் காலா காலத்திற்கு உங்களை போற்றும்.

உங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

அம்மா அவர்களே தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்.

உங்கள் அரசியல் விரோதிகளை அடியோடு வீழ்த்தும் நோக்கிலாவது இதை செய்யுங்கள்.

அதன்மூலம் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடியுங்கள்.

வரலாற்று சாதனை புரிந்து உங்கள் வாழ்க்கையில் புதிய வரலாறு படையுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

ஒரு தீர்ப்பு...! பல விமர்சனங்கள்...!!

ஒரு தீர்ப்பு...! பல விமர்சனங்கள்...!!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று (11.05.2015) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள அதிமுகவினர் நீதி வென்றது என கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் நீதி இல்லை நிதி வென்று விட்டதாக சிலர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

சட்டம் ஒரு இருட்டறை. அறிஞர் அண்ணா அன்றே சொன்னார் என சிலர் கூறியுள்ளனர்.

அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது நீதி வென்று விட்டதாக கருத்து தெரிவித்த சிலர் இப்போது ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் நீதி இல்லை நிதி வென்று விட்டதாக கூறுகிறார்கள்.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக சந்திக்க துணிவு இல்லாதவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் அவர் விடுதலை ஆவதை சிறிதும் விரும்பவில்லை.

தற்போது ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டதால் தங்களுடைய அரசியல் கனவுகள் தவிடு பொடியாக போனதால் தீர்ப்பு குறித்து தாறுமாறாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பு மூன்று மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதாக ஒருவர் பதிவு செய்துள்ளார்.

நீதிபதி குமாரசாமிக்கு பெட்டிகள் பல சென்று விட்டதாக ஒருவர் பதிவு செய்துள்ளார்.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் அதற்கு மகிழ்ச்சியுடன் ஒரு விளக்கம்.
பாதகமாக வந்தால் நீதி செத்து விட்டது. நிதி வென்று விட்டது என அழுகை குரல் எழுப்புவது.

இது எந்த வகையில் நியாயம் ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Friday, May 8, 2015

சமுதாயம் உருபடுமா....?

சமுதாயம் உருபடுமா....?


உலக அளவில் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு கயவர் கூட்டம் முழு வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு உலக முஸ்லிம் சமுதாயம் எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சில நேரங்களில் வன்முறைகளும் வெடித்து பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன.

காரணம். உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்துவதை எந்த முஸ்லிமும் தாங்கிக் கொள்ள விரும்பாததே ஆகும்.

ஆனால் இந்தியாவில் அதுவும் நம்ம தமிழகத்தில் அண்மை காலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மையமாக வைத்து முஸ்லிம் மக்களிடையே குறிப்பாக சில இஸ்லாமிய அமைப்புகள் இடையே வாத போர் தொடங்கி தற்போது வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் வரை வளர்ந்துள்ளது.

நபியின் போதனைகள் அனைத்தும் உண்மையாகவே நாங்கள்தான் கடைப்பிடித்து வருகிறோம் என ஒரு அமைப்பு கூற மற்றொரு அமைப்போ நபியை இழிவுப்படுத்துவதில் உங்கள் அமைப்பு முதலிடத்தில் உள்ளது என குற்றஞ்சாட்டி சென்னையில் அண்மையில் போராட்டம் நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் நீங்கள் என்ன உங்கள் பலத்தை காண்பிப்பது. நாங்கள் காட்டுகிறோம் பார் எங்கள் பலத்தை என மார் தட்டி போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளது முதலாவது முஸ்லிம் அமைப்பு.

தமிழகத்தில் தற்போது இஸ்லாமியர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம்.

அதற்கு தீர்வு காண முஸ்லிம் அமைப்புகள் இடையே ஒற்றுமை இல்லை.

மார்க்க விஷயங்ககளில் சமுதாயம் பிரிந்து கிடக்கிறது.

சாதாரண முஸ்லிம் மக்கள் எந்த அமைப்பின் சொற்களை கேட்டு நடப்பது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

மாற்று மத தோழர்களோ என்ன இஸ்லாமியர்கள் தங்களுக்குள் இப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள்.

முஸ்லிம் விரோதிகளோ மனதில் சந்தோஷம் அடைகிறார்கள்.

இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து சண்டையிடுவதை உடனே நிறுத்த வேண்டும்.

இல்லையெனில் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயம் உருப்பட வாய்ப்பே இல்லை.

முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை அரசும் கேட்காது.

பிற கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவு கரம் நீட்ட முன்வராது.

ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் இஸ்லாத்தின் நிலை முஸ்லிம்கள் இடையே நிலவும் பிளவு குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

எனவே முஸ்லிம் சமுதாயமே இனியாவது விழித்துக் கொண்டு ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பிடித்துக் கொள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

வாழ்த்து சொல்வதற்கு மார்க்கத்தில் தடையா...?

வாழ்த்து சொல்வதற்கு மார்க்கத்தில் தடையா...?


முகநூல் நண்பர் ஒருவருக்கு அவரது பிறந்த நாளில் வாழ்த்துக்கள் தெரிவித்து நற்செய்தி அனுப்பி இருந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் இஸ்லாத்தில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. இனி வாழ்த்துச் செய்திகளை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்ற பாணியில் அந்த சகோதரர் கருத்தை பதிவு செய்திருந்தார்.

நான் அதிர்ச்சி அடைந்தேன்.

தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரை.

இதுவும் வாழ்த்து கூறும் வழக்கத்தின் ஒரு அங்கம் என கூறலாம்.

ஆனால் பிறந்த நாள் வாழ்த்து கூறக்கூடாது என சகோதரர் கூறுகிறார்.

அப்போ வீட்டில் புது வரவாக குழந்தை பிறக்கும் போது சம்பந்தப்பட்ட தம்பதியினருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்த்து கூறக் கூடாதா ?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பேரில் நடத்தப்படும் கும்மாளம் குத்தாட்டம் ஆகிய செயல்கள்தான் கூடாது என்பது மார்க்க அறிஞர்களின் அறிவுரை.

ஒருவர் தனது பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது மார்க்கம் தடை செய்வதாக எனக்கு தெரியவில்லை.

வாழ்த்து கூறுவதற்கு தடை என வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நபர்களால்தான் தமிழகத்தில் இஸ்லாம் குறித்து முஸ்லீம்களுக்கும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் குழப்பங்கள் தவறான புரிந்துணர்வு அதிகரித்து வருகிறது.

உண்மையிலே பிறந்த நாள் வாழ்த்து கூற இஸ்லாத்தில் அனுமதி இல்லையா ?

விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கடைசியாக ஒரு செய்தி.

என்னுடைய வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அந்த நபரை என் முகநூல் நண்பர்கள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கி விட்டேன்.

இதுபோன்ற குழப்பவாதிகளின் நட்பு நமக்கு எதற்கு ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

நிலைக்குலைய வைத்த தொடர் மரணங்கள்...!

நிலைக்குலைய வைத்த தொடர் மரணங்கள்...!


வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் மரணத்தை சுவைக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி.

எனவே நாம் அனைவரும் மரணத்தை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் என்னுடைய குடும்பத்தில் கடந்த 16 மாதங்களில் 5 பேர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது என்னை மிகவும் நிலைக்குலைய வைத்து விட்டது.

மூத்த சகோதரி ஒருவர் மூத்த சகோதரர்கள் இரண்டு பேர் மூத்த சகோதரியின் கணவர் இளைய சகோதரியின் கணவர் என மொத்தம் ஐந்து பேர் கடந்த 16 மாதங்களில் அடுத்தடுத்து மரணத்தை சுவைத்து இந்த உலகத்தை விட்டு பிரிந்தது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த துயரங்களில் இருந்து மீள நாங்கள் முயற்சி செய்தாலும் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் இழப்பு அடிக்கடி கண் முன் வந்து சென்று எங்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

மன மற்றும் பொருள் ரீதியாக காலஞ்சென்ற என்னுடைய சொந்தங்கள் எனக்கு செய்த தியாகங்கள் மதிப்பிட முடியாதவை.

எனவே இவர்களின் மரணம் என்னை மனதளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

எனினும் இந்த துயரமான நேரங்களில் என் நண்பர்கள் ஊடக சொந்தங்கள் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி எனக்கு துணையாக நின்றது என்னால் மறக்க முடியாது.

இதன்மூலம் என்னுடைய சோகங்கள் மெல்ல மெல்ல கரைந்து வருகின்றன.

துயரமான நேரங்களில் எனக்கு ஆறுதல் கூறி துணை நின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் இறைவனிடம் ஓர் பிரார்த்தனை.

எங்கள் குடும்பத்தில் இனி சில ஆண்டுகளுக்கு மரணங்களை தள்ளி போட வேண்டும் என்பதுதான் அது.

என்னுடைய துஆவில் (பிரார்த்தனையில்) நீங்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.