Saturday, November 16, 2013

" ஹலோ சார்...... ஒரு நிமிடம்......! "

=================================


குளிர் காலத்தின் ஒரு மாலை நேரம் அது....

நான் தங்கியிருக்கும் திருவல்லிக்கேணிக்கு அருகிலேயே மெரினா கடற்கரை இருந்ததால், வழக்கம் போன்று கடற்கரைக்கு சென்று கண்ணகி சிலையில் அருகே இருந்த பகுதியில் அமர்ந்து இருந்தேன்.

குளிர் மற்றும் மழைக்காலம் என்பதால், கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருக்கவில்லை.

தனிமை...எனக்கு இனிமையை தந்தது.

என்னுள் சிந்தனைகள் உதயமாகி, சிறகடித்து பறந்து கொண்டிருந்தன.

அப்போது திடீரென, ஹலோ சார்.... ஒரு நிமிடம்.... என ஓர் குரல் கேட்டது...

திரும்பி பார்த்தேன்... யாரும் இல்லை....


எதோ பிரம்மையாக இருக்கும் என நினைத்து கொண்டு,  மீண்டும் வழக்கம் போன்று சிந்தனையில் ஆழ்ந்தேன்...

சிறிது நேரத்திற்கு பிறகு, மீண்டும் அதே குரல்...ஹலோ சார்.... ஒரு நிமிடம் என்றது...

மீண்டும் அக்கம் பக்கம் பார்த்தேன்... யாருமே இல்லை....

என்ன இது என குழப்பத்தில் ஆழ்ந்தபோது, ஹலோ நான்தான் உங்கள் இதயம் பேசுகிறேன்...

கொஞ்சம் என்னுடன் பேசுங்கள்...


நான் சொல்லும் சேதிகளை கொஞ்சம் உள்வாங்கி பதில் சொல்லுங்கள் என்றது அந்த குரல்...

சரி என்னப்பா சொல்லப்போகிறே என்றேன்....

உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சம் கவனித்து பார்க்கிறீர்களா...என்று கூறிய அந்த குரல், பின்னர் விரிவாக பேச ஆரம்பித்தது...


பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர சூறாவளி வீசி கனழை பெய்து ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டபர்கள் பலியாகி விட்டார்கள்...

பல லட்சம் பேர் வீடு, வாசல்களை இழந்து அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்...

இதுபோன்று, நம் நாட்டிலும் அடிக்கடி பல சம்பங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன...


ஹைதராபாத்தை நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து திடீரென வழியிலேயே தீ பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது....

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்...

மற்றொரு சம்பவமும் கர்நாடகா மாநிலத்தில் நடந்து, பேருந்தில் பயணம் செய்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்...


என்றது அந்த குரல்...

சரி....இப்போ இந்த சம்பவங்களுக்கும் என்னை அழைத்ததற்கும் என்ன  காரணம் என
என் இதய நண்பனிடம் கேட்டேன்....

தொடர்பு இருக்கிறது நண்பரே....

உலகத்தில் மனிதன் என்னமாய் ஆட்டம் போடுகின்றான்...கொஞ்சம் கவனித்து பாரு..

தன் ஆன்மாவிற்கு துரோகம் செய்து தனக்கு தானே செய்துக் கொள்ளும் அநியாயம் ஒருபுறம் இருந்தாலும், மனசாட்சிக்கு சிறிதும் அஞ்சாமல், கவலைப்படாமல், மற்றவர்களுக்கு மனிதன் செய்யும் அநீதிகள் எவ்வளவு நடந்து கொண்டிருக்கின்றன...


பணத்திற்காகவும், சொத்திற்காகவும் நடக்கும் அநியாயங்கள்தான் எத்தனை...

நாளிதழ்களை திறந்தால், அதுகுறித்த செய்திகள்தான் அதிகம் வந்துக் கொண்டிருக்கின்றன....

உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களை அழ வைக்கும் அளவுக்கு நம்மில் நிறைய பேர் நடந்துக் கொள்கிறார்கள்....

அற்ப உலக வாழ்விற்காக, சிறிது நாள் சுகம் அனுபவிப்பதற்காக மனிதர்கள் செய்யும் அட்டகாசங்கள்தான் எத்தனை...

பெற்ற தாய் தந்தையை, அண்ணன் தம்பிகளை, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விட்டு உல்லாச வாழ்க்கை வாழும் கூட்டம் நம்மில் அதிகரித்துள்ளது...

கல்வியில் ஆர்வம் உள்ள உறவினர்களுக்கு நிதியுதவி செய்ய மனம் இல்லை சிலருக்கு... ஆனால், கிரிக்கெட் போட்டியை காண பல ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள்...


நோய் தாக்கி அவதிப்படும் சொந்தங்களுக்கு உதவி செய்வதில்லை... ஆனால், நட்சத்திர ஹோட்டல்களில் டின்னர் சாப்பிட பல ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள் சிலர்...

அதைவிட கொடுமை, நோயாளி உறவினரை பார்க்க செல்வதுகூட கவுரவக் குறைவு என்று சிலர் நினைக்கிறார்கள்....

சொகுசு கார்களில் பயணம் செய்ய மனம் விரும்புகிறது சிலருக்கு, ஆனால், சொந்தங்களின் நலன்களில் அக்கறை செலுத்த அவர்களுக்கு ஆர்வம் இல்லை...

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...

ஆனால், இயற்கை அடிக்கடி மனிதனை எச்சரிக்கிறது....பல நிகழ்வுகளை நடத்திக் காட்டி...

சுனாமி, சூறாவளி,,,பூகம்பம்.... பயங்கர விபத்து....கடும் நோய்..... என பல ரூபங்களில் ஆயிரக்கணக்கானோர், ஏன் லட்சக்கணக்கானோர் உலகில் இறந்து கொண்டேதான் இருக்கிறார்கள்...


ஆனால், மனிதன் இன்னும் மாறாமல் தன் போக்கிலேயே சென்றுக் கொண்டிருக்கிறான்...

ஏதோ நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும் என்று நினைக்கிறான்...

ஆனால், எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதை, உலகில் அடிக்கடி நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றான்...

அதனால்தான், உலகில் பிரச்சினைகள் நாள்தோறும் தலைவிரித்து ஆடுகின்றன....

மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான்...

ஆட்சிக்காகவும், அதிகாரத்திற்காகவும் ஒரு கூட்டம் அலைமோதும் போது, மற்றொரு கூட்டம் உலக இன்பங்களுக்காக சட்டவரம்புகளை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது...

இது நியாயமா.... கொஞ்சம் யோசித்து பதில் சொல்லு என்றது என் இதயம்....

நான் கொஞ்சம் யோசித்து கொண்டிருந்தபோதே, என்னிடம் பேசிய அந்த குரல் திடீரென காணாமல் போனது....

மெரினாவில் நிலவிய அமைதியான, சூழலில், மீண்டும் ஆழமான சிந்தனையில் சிறிது நேரம் சென்றது என் மனம்....

நீண்ட நேரத்திற்கு பிறகு.....திருவல்லிக்கேணியில் இருந்த என் அறைக்கு திரும்பினேன்...

இரவு வெகுநேரம் வரை எனக்கு ஏனோ உறக்கம் வரவில்லை.....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=========================

Sunday, November 10, 2013

சொன்னார்கள்........!




தேர்தல் கருத்துக் கணிப்பு விவகாரத்தில் பிஜேபி இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டில், தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பிஜேபி, தற்போது திடீரென தனது நிலையை மாற்றிவிட்டது ஏன் ?

                                                                          - மத்திய அமைச்சர் கபில்சிபல்


நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

                                                       - பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி


நாட்டில் சாதாரண மக்களுக்கு உரிய நீதி கிடைப்பது இன்னும் கனவாகவே உள்ளது. நீதித்துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், பெரும்பாலான மக்கள் நீதித்துறையின் மீது இன்னும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

                                                   - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம்


ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு, தற்போது அரசியல் ஆதாயத்துக்காக மாநில சுயாட்சி குறித்து திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார்.

                                                                                  - முதலமைச்சர் ஜெயலலிதா


தேர்தல் பிரச்சார மேடைகளில் தம்முடையை கருத்துக்களையும், சிந்தனைகளையும் மட்டுமே பேசும் நரேந்திர மோடி, நாட்டிலுள்ள பிரச்சினைகள்  குறித்து எதுவும்  பேசுவதில்லை.

                                                                              - மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்



இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்திய எல்லைப்பகுதியில் சீனா அத்துமீறிய ஆக்கிரமிப்பு செய்தது.

                                                                 - குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி



தமிழர்கள் மீதான தொடர் அடக்கு முறையே, பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்லாததற்கு முக்கிய காரணம்.
                                                                      - மத்திய அமைச்சர் நாராயணசாமி


செஸ் விளையாட்டுப் போட்டிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் விளையாட்டு கலையை வளர்க்க மிகுந்த அக்கறையோடு பல்வேறு பணிகளை திமுக ஆட்சியில் நிறைவேற்றினோம்.

                                                                            - திமுக தலைவர் கருணாநிதி


மதசார்பற்ற கொள்கை குறித்து தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டாள்களாக மாற்ற பிஜேபி முயற்சி செய்து வருகிறது.

                                                                                  - பிரதமர் மன்மோகன் சிங்


தொகுப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

Saturday, November 9, 2013

" சிதறிக் கிடக்கும் தமிழக இஸ்லாமிய அமைப்புகள்.....!!"



"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து நிற்காதீர்கள்."

மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும் அறிவுரை இது...

ஆனால், இந்த அறிவுரையை இஸ்லாமிய சமுதாயம் பின்பற்றுகிறதா...கடைப்பிடிக்கிறதா..

குறிப்பாக, தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் இடையே ஒற்றுமை இருக்கிறதா என்ற கேள்விக்கு, பதில் இல்லை என்றே வருகிறது...

தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளின் எண்ணிக்கைதான் எவ்வளவு...

நாட்டிலேயே அதிக இஸ்லாமிய அமைப்புகள் உள்ள மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது எனலாம்...

தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் குறித்து ஆராய்ந்தால் அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது...

மாநிலத்தில் ஏகப்பட்ட இஸ்லாமிய கட்சிகள்...மேலும் அடிக்கடி புதிது புதிதாக முளைக்கும் புதிய அமைப்புகள்....


75 ஆண்டுகள் பராம்பரியம் உள்ள கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக்...


தற்போது அந்த கட்சிக்கு பலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள்...

அது பல துண்டுகளாக பிரிந்து கிடக்கிறது...

நாங்கள்தான் உண்மையான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்...

இதேபோன்று, இந்திய தேசிய லீக் கட்சி,  பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது...



தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,



பின்னர் மனித நேய மக்கள் கட்சி,

அதில் இருந்து சிலர் பிரிந்து புதிய கட்சி என தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து சிலர் பிரிந்து


இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்மாநில முஸ்லிம் லீக்...

இப்படி பல்வேறு பெயர்களில் 60க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன...

எல்லோரும் நாங்கள்தான் இஸ்லாமியர்களின் நலன்களுக்காக, உரிமைகளுக்காக உண்மையாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்...

போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என சொல்கிறார்கள்...


எங்கள் அமைப்புதான், சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உண்மையாக சேவை செய்யும் அமைப்பு என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளின் வாதம்...

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒரு அமைப்பு போராட்டம் நடத்தினால், மற்றொரு அமைப்பு, நீங்கள் நடத்தும் போராட்டத்தைவிட நாங்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்திக் காட்டுகிறோம் என முழக்கமிடுகிறார்கள்...

நாங்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையே குலுங்கியது என பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் பலர் பேட்டி கொடுக்கிறார்கள்...



இப்படி, பல்வேறு போராட்டங்களை தனித்தனியாகவே நடத்தி, தங்களது பலத்தை ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளும் வெளிப்படுத்தி வருகின்றன...

மது கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களும் தனித்தனியாகதான் நடக்கின்றன...

ஒரே பகுதியில் வசித்தாலும், மதுக்கடையை அகற்ற ஒருவர் நடத்தும் போராட்டத்தில் மற்றொருவர் பங்கேற்பதில்லை...

அதனை கவுரவக் குறைவு என கருதுகிறார்கள்...


பொது பிரச்சினையில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க ஏனோ இஸ்லாமிய அமைப்புகள் இடையே மனம் இல்லை...

இதற்கு முக்கிய காரணம் ஈகோ பிரச்சினைதான்...

ஒருசில விஷங்களில் ஒன்றுபட்டாலும், அதிலும் கூட ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டும் போக்கே அதிகம் இருந்து வருகிறது...

ஒரு இஸ்லாமிய கட்சி, திமுகவின் சிறுபான்மை பிரிவு அமைப்பாக செயல்படுகிறது என்றால், மற்றொரு இஸ்லாமிய கட்சி, அதிமுகவின் சிறுபான்மை பிரிவு அமைப்பாக செயல்படுகிறது.

அரசியலில் மட்டும் இந்த நிலை என்று இல்லை...

அழைப்பு பணி செய்வதிலும் இதே நிலைதான் இருந்து வருகிறது...

நாங்கள்தான் உண்மையாகவே, அழைப்பு பணியை செய்து வருகிறோம்...


இஸ்லாம் குறித்து சகோதர சமுதாய மக்களிடம் எங்கள் அமைப்புதான் சரியான தகவல்களை தெரிவிக்கிறது என ஒரு அமைப்பு கூறினால், இல்லை இல்லை, நாங்கள்தான் உண்மையாக உழைத்து வருகிறோம் என்கிறது மற்றொரு இஸ்லாமிய அமைப்பு...

தேர்தல் நேரங்களில் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அலையும் இஸ்லாமிய கட்சிகளின் எண்ணிக்கைதான் எத்தனை...

கூட்டணி முடிவாகிவிட்டதும், அந்த கூட்டணி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்ட மேடைகளை நாம் கூர்ந்து கவனித்து பார்த்ததால், அதில்  எத்தனை இஸ்லாமிய கட்சிகளின் கொடிகள் பறக்கின்றன என்பதை கவனிக்கலாம்...

ஏன் இந்த நிலை....

இஸ்லாமிய அமைப்புகள் ஒற்றுமையாக செயல்படாமல் இருப்பதற்கு யார் காரணம்...

இப்படி சிதறிக் கிடக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டு எந்த கட்சிதான் அச்சம் கொள்ளும்...

இஸ்லாமிய அமைப்புகள் இடையே ஒற்றுமை இல்லாததால், தேர்தல் காலங்களில், சிறிய ரொட்டி துண்டை வீசுவதைப்  போன்று ஒரு சீட் மட்டும் கொடுத்துவிட்டு, சிறுபான்மை மக்களுக்கு மிகப் பெரிய அளவுக்கு நீதி செய்துவிட்டதாக முக்கிய கட்சிகள் கூறி விடுகின்றன...

சரி,

தமிழகத்தில் இருக்கும் பல்வேறு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் குறித்து மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இடையே நல்ல கருத்து இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம்..

அந்தந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களது அமைப்புகளை புகழ்ந்து பேசிக் கொள்ளலாம்...

ஆனால், முஸ்லிம்களிடையே ஒருவித வெறுப்புணர்வு இருப்பதை, இந்த அமைப்புகள் ஏனோ இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை....

ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவதை நிறுத்திவிட்டு, சமுதாயத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, செயல்பட இனியாவது இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும்...

உரிமைகளை பெற,

உரிமைகளை மீட்க


ஒற்றுமை முக்கியம் என்பதை இஸ்லாமிய அமைப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும்...

அப்போதுதான், ஆளும் வர்க்கம் இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்...

வளர்ந்து வரும் இளம் இஸ்லாமிய சமுதாயம் நல்ல வழியை நோக்கி செல்ல, இஸ்லாமிய அமைப்புகள்தான் வழி காட்ட வேண்டும்....

இல்லையென்றால், எதிர்காலத்தில் இஸ்லாமிய இளைஞர்களுக்கு, அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டிய நிலை ஏற்படும்...

கடைசியாக,


மீண்டும் ஒருமுறை இஸ்லாத்தின் அறிவுரையை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைத்து இஸ்லாமியர்களும் தங்களது உள்ளத்தில் அழமாக பதிவு செய்ய முயற்சி செய்வோம்......

"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து நிற்காதீர்கள்."

இந்த அழகிய அறிவுரையை மனதில் உள்வாங்கி, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கடைப்பிடித்து அனைவரும் நல்ல வெற்றியை சுவைப்போம்....

என்ன.....சரிதானே....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=======================

Wednesday, November 6, 2013

பாலியல் கொடுமைகள்.....!

"அதிகரித்து வரும் பாலியல் 

கொடுமைகள்.....! தீர்வுதான் என்ன ? "



ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்....ஆசிரியர் கைது....

ஓடும் பேருந்தில் பெண்களிடம் குறும்பு....வாலிபருக்கு தர்ம அடி....

காரில் கடத்திச் சென்று இளம் பெண் கற்பழிப்பு....நான்கு பேர் கைது.....

இப்படி, பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள் எதுவும் இல்லாமல் இன்றைய நாளிதழ்களை நாம் தற்போது படிக்க முடியாது..

தொலைக்காட்சி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்த செய்திகள் தினந்தோறும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன...


டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகள்.....கோப முழக்கங்கள்....எழுந்தன.


அந்த சம்பவத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் முக்கிய நகரங்களில் பெண்கள், சமூக அமைப்பு சேர்ந்தவர்கள் என பலர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, பெண்களுக்கு எதிராக நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கூட, பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என குரல் எழுப்பினர்...


இப்படி, ஒட்டு மொத்த சமுதாயமும், பெண்களுக்கு ஆதரவாக திரண்டபோதும், பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் நின்று விட்டதா என்றால் இல்லவே இல்லை எனலாம்...

செய்தி ஊடகங்களில் இப்போதுகூட நாள்தோறும் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த தகவல்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன...

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னதான் வழி...?

கடுமையான சட்டங்கள் மட்டும் மக்களின் மனங்களை மாற்றி விடுமா....


நாட்டில் தற்போது மது ஆறாக ஓடுகிறது...

மதுவை அருந்திவிட்டு, பெண்களை கொடுமைப்படுத்துவோர் அதிகரித்து வருகின்றனர்...

இது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு...உண்மைதான்...ஆய்வும் அது உண்மை என ஒப்புக் கொள்கிறது...

திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாசப் படங்கள், கதைகள் இவையெல்லாம் முக்கிய காரணம் என்பது மற்றவர்களின் புகார்...

நம் நாட்டில் சுதந்திரம் அதிகம்...சட்டங்களை யாரும் மதிப்பதில்லை...

பல நாடுகளில் சட்டங்களை மக்கள் மதிக்கிறார்கள்...அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், இந்தியாவை போன்று அதன் எண்ணிக்கை குறைவு என்பது சிலரின் வாதம்...


பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை அரபு நாடுகளில் உள்ளது போன்று கடுமையாக தண்டிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, ஒரு சமூக ஆர்வலர் வலியுறுத்தினார்...

இதனால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியுமா....

பெண்ணை போதை பொருளாக மட்டும் பார்க்கும் சமூகம் எப்படி திருந்தும்...

பெண்ணை, தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, தோழியாக, பார்க்க பலருக்கு இன்னும் மனம் இல்லை....

அதுதான் பிரச்சினை....

மதங்கள், மார்க்கங்கள், பெண்களை கண்ணியப்படுத்துகின்றன....


ஆனால், நீதி நூல்களை படிக்கும் பலர், அவற்றை ஏனோ, தங்களது வாழ்வில் கடைப்பிடிப்பதில்லை...

படித்து, அத்தோடு விட்டுவிடுகின்றனர்....

இதனால், மதங்கள், மார்க்கங்களால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது என்பது தெளிவாகிறது...

நமது செயல்கள் ஒவ்வொன்றிற்கும் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற நினைப்பு நம் ஒவ்வொருவரின் மனதில் ஆழமாக பதிய வேண்டும்...

எப்படி, ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு ஆடிட் செய்யப்படுகிறதோ, அதுபோன்று, நம்முடைய வாழ்வும், ஆடிட் செய்யப்படும் என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் செய்த நல்ல செயல்கள், பண்புகள், தீமைகள், ஆகியவற்றிற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் உறுதியாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்....

அப்போதுதான், நாம் உண்மை மனிதர்களாக வாழ முடியும்...

இதன்மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்...


எல்லாவற்றிற்கும் மேலாக, மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்...

பெண்களை மதிக்க, நேசிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்...

தன் தாய், தன் மகள், தன் சகோதரி, தன் மனைவி, தன் தோழி கற்பழிக்கப்பட்டால், எப்படி ஒருவன் துடிதுடித்து போவானோ, அப்படி, வேறு பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் கதறி அழ வேண்டும்.. துடிக்க வேண்டும்...




இப்படிப்பட்ட மனநிலை மனித மனங்களில் ஏற்பட்டால் ஒழிய பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மட்டுமல்ல, அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரவே செய்யும்....

இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க....

இனியும் நாம் பெண்களை மதிக்க கற்றுக் கொள்வோம்....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===================================

Sunday, November 3, 2013

" காலத்தின் மீது சத்தியமாக ! "


புது டெல்லியில் பணிபுரிந்த காலம் அது.....

டெல்லியில் புகழ் பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில், மற்றொரு பிரபல இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

ஆம்... ஐ.ஓ.எஸ். (I.O.S.) என்று அழைக்கப்படும் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில், கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

அந்த நிறுவனத்தின் சேர்மன் (தலைவர்) டாக்டர் மன்சூர் ஆலம், பொருளாதாரத்துறையில் ஆய்வுகள் பல மேற்கொண்டு, முனைவர் பட்டங்களை குவித்தவர்...

இஸ்லாமிய பொருளாதாரம் குறித்து பன்னாட்டு அளவில் நடைபெறும் கருத்தரங்கங்களில் பங்கேற்று, இஸ்லாமிய வங்கி முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதை, இஸ்லாமிய அடிப்படையில் விளக்கம் அளிப்பவர்...

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் மன்சூர் ஆலமுக்கு நல்ல மதிப்பு உண்டு...

சரி விஷயத்திற்கு வருகிறேன்...

ஐ.ஓ.எஸ். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையை சீராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  வாரத்தின் முதல்நாள், திருக்குர்ஆனின் அத்தியாயங்களில் இருந்து சில வசனங்கள் ஓதி, அதற்கு விளக்கம் அளிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.


ஐ.ஓ.எஸ். நிறுவனத்தில் உள்ள கருத்தரங்க அறையில், ஊழியர்கள் அனைவரும் கூடியதும், சேர்மன் மன்சூர் ஆலம், திருக்குர்ஆனை ஓதி, எளிய உர்தூவில் விளக்கம் அளிப்பார்.

அதை கேட்கும்போது, உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி பிறக்கும்....சிந்தனைகள் சீராகும்...

இப்படிதான் ஒருநாள், திருக்குர்ஆனின் 103வது அத்தியாயமான அல் அஸ்ர் அத்தியாயத்தின் மூன்று வசனங்கள் ஓதி, அதற்கு உர்தூ மொழியில் மிக எளிமையாக விளக்கம் அளித்தார் மன்சூர் ஆலம்....

"அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்."

என கூறிவிட்டு,

" காலத்தின் மீது சத்தியமாக !
  மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.
 ஆனால்,
 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும்,
 நற்செயல்கள் புரிந்து கொண்டும்,
 மேலும்,
 ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்,
 பொறுமையை கடைப்பிடிக்குமாறு
 அறிவுரை கூறிக் கொண்டும்
 இருந்தார்களோ அவர்களைத் தவிர ! "

என்று அல் அஸ்ர் அத்தியாயத்தை அரபி மொழியில் வாசித்து, அதற்கு உர்தூவில் விளக்கம் அளிக்க தொடங்கினார் மன்சூர் ஆலம்...

நண்பர்களே, இந்த அத்தியாயம் மனிதனின் மனங்களில் சுருக்கமாக, ஆழமாக பதிக்கும் வகையில் அமைந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம்...

சுருக்கமான வார்த்தைகளில் அதிக கருத்துகள் இந்த அத்தியாயத்தில் உண்டு...

வெற்றி, அழிவுக்கு செல்லும் பாதை எது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது...

அதாவது,


மனிதன் முதலில் இறைநம்பிக்கை கொள்ள வேண்டும்...

உலகை படைத்து பரிபாலித்து வரும் ஓர் இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும்...

இறைநம்பிக்கை வைப்பது மட்டுமல்ல, நற்செயல்கள் புரிந்து வரவேண்டும்...

அது சின்ன சின்ன செயல்களாக இருந்தாலும் சரி... மகிழ்ச்சியுடன் அவற்றை செய்ய வேண்டும்...

அத்தோடு, ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்...

நாம் மட்டும் நல்லவர்களாக வாழ்ந்தால் போதும் என நினைக்கக் கூடாது....

மற்றவர்களும், அதாவது, நமது உறவினர்கள், சொந்தங்கள், அண்டை வீட்டார்கள், ஊர் மக்கள், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்கள், உலகில் வாழும் மக்கள் என அனைத்து தரப்பினரும், நல்லவர்களாக, வல்லவர்கள், அமைதியாக வாழ வேண்டும்...

அதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்...

அடுத்து, பொறுமையை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்...


முதலில்  பொறுமை என்ற உயர்ந்த குணத்தை நம்மிடையே வளர்த்து கொண்டால்தான் மற்றவர்களிடம் அதுகுறித்து சொல்ல முடியும்...

எனவே, எந்த நேரத்திலும் பொறுமையை நாம் கையாள வேண்டும்...

அதற்காக நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்...

முதலில் இறைநம்பிக்கை,
அடுத்து நற்செயல்கள் புரிந்து வருவது,
பிறகு மற்றவர்களிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது,
இறுதியாக பொறுமையை கடைப்பிடிப்பது....

மேற்குறிப்பிட்ட இந்த பண்புகள் ஒரு மனிதனிடம் இருந்து விட்டால் பிறகு  மனிதர்களிடையே எங்கே வெடிக்கும் கலவரம்...வன்முறை...

உலகம்  அமைதி பூங்காவனமாக மாறிவிடும் அல்லவா....

இறைநம்பிக்கை இல்லாமல், நற்செயல்கள் புரியாமல், சத்தியத்தை எடுத்துரைக்காமல், பொறுமையை கடைப்பிடிக்காமல் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சிறிது கற்பனை செய்து பாருங்கள்...


நிச்சயம் அது, நரக வாழ்க்கையாகவே இருக்கும்...

உலக வாழ்க்கையில் மட்டுமல்ல, மறுமை வாழ்க்கையிலும் நிம்மதி கிடைக்காது...

எனவே, தோழர்களே, அல் அஸ்ர் அத்தியாயத்தின் மூன்று வசனங்களை நன்கு படித்து அதனை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் ஒளிரச் செய்யுங்கள்....

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனை கடைப்பிக்க முயற்சி செய்யுங்கள்...

பிறகு, வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்...

நிச்சயம், மனதில் அமைதி பிறந்து என்னென்றும் நிலைத்து இருக்கும்...

போட்டி, பொறாமை நிறைந்த உலகத்தில், மனம் தடுமாறினாலும், பின்னர் தனது இயல்பு நிலைக்கு வந்துவிடும்...

பிறரை நேசிக்க தூண்டும்...

உதவிக்கரம் நீட்ட ஆசை பிறக்கும்....


எந்த துன்பம் ஏற்பட்டாலும், இறைவன் மீது கொள்ளும் உறுதியான நம்பிக்கையால் அவற்றை தாங்கிக் கொள்ளும் வலிமை உள்ளத்திற்கு கிடைக்கும்....

எந்த நேரத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பதால், துன்பங்களை கண்டு மனம் கலங்காது....

அனைவரையும் நேசிப்பதால், பொறாமை, புறம் பேசுதல் போன்ற குணங்கள் நம்மை விட்டு அகலும்...

இவையெல்லாம்தான், இந்த அல் அஸ்ர் அத்தியாயம் நமக்கு சொல்லித்தருகிறது...

எனவே, மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்....

" காலத்தின் மீது சத்தியமாக !
  மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.
 ஆனால்,
 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும்,
 நற்செயல்கள் புரிந்து கொண்டும்,
 மேலும்,
 ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்,
 பொறுமையை கடைப்பிடிக்குமாறு
 அறிவுரை கூறிக் கொண்டும்
 இருந்தார்களோ அவர்களைத் தவிர ! "



இந்த அத்தியாயத்தை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளுங்கள்...

வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்...

வெற்றியாளர்களாக மாறுங்கள்...

இறைவன், குறிப்பிடும்படி நஷ்டத்தில் இருக்காதீர்கள்.....என்றார் டாக்டர் மன்சூர் ஆலம்....

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடோடி விட்டன. அவரது வார்த்தைகள் இன்னும் என்னுடைய காதில் ரிங்காரம் செய்துக்  கொண்டிருக்கின்றன....

ஒவ்வொரு நாளும் பலமுறை அல் அஸ்ர் அத்தியாசத்தை ஓதி, அதன் மொழியாக்கத்தை மனதில் நான் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறேன்....

அதன்மூலம், உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது....



வாழ்வில் அமைதி கிடைக்கிறது...

பிறரை நேசிக்க தூண்டுகிறது...

உள்ளம் தடுமாறும்போது, இறைநம்பிக்கை, அதனை தடுக்கிறது..

நீங்களும் இந்த அத்தியாயத்தின் கருத்தை உள்வாங்கி, உங்கள் வாழ்விலும் அமைதியை தேட வேண்டும் என்பது எனது விருப்பம்.....

இறைவன் விரும்பினால் எல்லாமே நன்றாக நடக்கும்....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==============================

Saturday, November 2, 2013

" ஊடக பண்பாளர்கள்........! "

ஊடகத்துறையில் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும், நபர்கள் நிறைய பேர் இருந்து வருவதாக ஏற்கனவே எழுதியிருந்தேன்.

உண்மை உழைப்பாளர்களின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல், பல ரூபங்களில் இறங்கி வேலை செய்பவர்கள் இங்கு அதிகம் உண்டு...

அலுவலகத்திற்கு வருவதே, மற்றவர்களின் பணிகள் குறித்து உளவு வேலை பார்த்து, அதை தலைமைச் செய்தி ஆசிரியரின் காதில் போடுவதை கலையாக கொண்டு செயல்படுபவர்கள் ஊடகத்துறையில் அதிகம்...

அதன்மூலம், சொற்ப லாபம் சிலருக்கு கிடைக்கிறது.... மேலும், வேலை செய்யாமலேயே ஊதியம் பெறவும் செய்கிறார்கள்....

இப்படி, ஊடகத்துறையின் புனிதத்தை சிலர் கெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பல நல்ல உள்ளம் கொண்ட பண்பாளர்களும் ஊடகத்துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள்...

பல ஜாம்பவான்கள் ஊடகத்துறையை நேசிக்கிறார்கள்...அதன்மூலம், அமைதியாக பணிபுரிந்து வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்....பிடித்தார்கள்...

ஊடகத்துறையில் சாதனை படைத்த ஜாம்பவான்கள் ஏராளம் இருக்க, நான் சந்தித்த
எளிய பண்பாளர்கள், வெளிச்சத்திற்கு வராத நல்லவர்கள், ஒருசிலரை பற்றி இங்கு குறிப்பிடுகிறன்....

என்னை போன்று, ஊடகத்துறையில் இருக்கும் பலரும், இவர்களை போன்ற நல்ல பண்பாளர்களை தங்களது வாழ்க்கையில், அனுபவத்தில் சந்தித்து இருக்கலாம்...

நான் சந்தித்த பல நல்ல பண்பாளர்களில் ஒருசிலர் இதோ.....

சம்பந்தன் முரளி (கலைஞர் தொலைக்காட்சி)

 
ஹரிகிருஷ்ணன் (பாலிமர் தொலைக்காட்சி)


இளம்பரிதி (தந்தி தொலைக்காட்சி)


சிவக்குமார் (சன் நியூஸ் தொலைக்காட்சி)



சங்கரலிங்கம் (புதுயுகம் தொலைக்காட்சி)



சிராஜுல் ஹசன் (சமரசம் இதழ்)



செந்தில் ராஜ்குமார் சிவலிங்கம் (பத்திரிகையாளர்)



ஜெயக்குமார் (ராஜ் தொலைக்காட்சி)


மசூத் அகமது (பத்திரிகையாளர்)

விஜய் தேவ் (தினமலர் நாளிதழ்)

மேலே நான் குறிப்பிட்ட இவர்கள், மற்றவர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைபவர்கள்....

போட்டி, பொறாமை நிறைந்த ஊடகத்துறையில், எங்கே நமது நண்பர் வளர்ச்சி அடைந்து விடுவரோ என்று சிறிதும் மனதில் நினைக்காதவர்கள்....

திறமையை அறிந்து ஊக்குவிப்பவர்கள்....

பல நேரங்களில் எனக்கு ஆறுதல் கூறுபவர்கள்...

நிறைய எழுது தூண்டுபவர்கள்....

வீழ்ச்சியை சந்திக்கும்போது, ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டுபவர்கள்.

இந்த பண்பாளர்களின் பண்புகள், குணங்கள், அவர்களின் சமூக அக்கறை ஆகியவை குறித்து தனித்தனியாக நிறைய எழுதலாம்..

ஆனால், அதனை சிறிதும் இவர்கள் விரும்பாததால், சுருக்கமாக மட்டுமே அவர்களைப் பற்றி சில வார்த்தைகள் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன். நல்ல பண்பாளர்கள் என்று....

இவர்கள் மட்டுமல்ல, உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தாலும், தங்களுடைய சூழல் காரணமாக  அதனை செய்ய முடியாத நிலையில் இருக்கும் நிறைய நண்பர்களை நான் ஊடகத்துறையில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்...

இவர்கள் மற்றவர்களின் வளர்ச்சியை நேசிப்பவர்கள்....பொறாமை கொள்ளாதவர்கள்...

குறிப்பாக,

மைக்கல் ஜார்ஜ் (சன் தொலைக்காட்சி)

ஸ்ரீதர் (சன் நியூஸ் தொலைக்காட்சி)

சுரேஷ்குமார் (சன் தொலைக்காட்சி)

மணிமாறன் (கலைஞர் தொலைக்காட்சி)

ரங்கபாஷ்யம் (பத்திரிகையாளர்)

சங்கரபாண்டியன் (கலைஞர் தொலைக்காட்சி)

பிரம்மா (தந்தி தொலைக்காட்சி)

மாரியப்பன் (மக்கள் தொலைக்காட்சி)

ஆனந்த்குமார் (மக்கள் தொலைக்காட்சி)

கார்த்திகேயன் ( ஜி செய்தி தொலைக்காட்சி)

மேலே நான் பட்டியலிட்டது ஒருசிலரை மட்டுமே....

நிறைய ஜாம்பவான்களையும் சந்தித்து இருக்கிறேன்....அவர்களை பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை...

எளிமையானவர்கள் மட்டும் இங்கு இடம் பெற்றிருக்கிறார்கள்...

இப்படிப்பட்டவர்களின் பட்டியல் நீளுகிறது. அது மிகப் பெரியது....

இந்த பண்பாளர்கள் பல ஊடகங்களில் அமைதியாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்...

இவர்களின் பணிகள் இன்னும் வெளிச்சத்திற்கு வராமலேயே இருக்கிறது....

சில அரை வேக்காடுகள், ஒருசில ஊடகங்களில் புகுந்து அட்டகாசம் செய்துக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த சம்பளம் வாங்கினாலும், மன திருப்தியுடன்
இவர்கள் பணிபுரிந்து கொண்டிருப்பது, பல நேரங்களில் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்...



இதுபோன்ற பண்பாளர்கள் இருப்பதால்தான், ஊடகத்துறையின் புனிதம் இன்னும் காப்பாற்றப்பட்டு வருகிறது...

சமூகத்தில் ஊடகத்துறை குறித்து நல்ல எண்ணம் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், இதுபோன்ற நல்ல பண்பாளர்கள் ஊடகத்துறையில் வலம் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது...

இவர்களை போன்ற நல்ல பண்பாளர்கள், நிச்சயம் ஊடகத்துறையை தூக்கி நிறுத்துவார்கள்...

உண்மைதானே நண்பர்களே....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
========================