ஒரு முஸ்லிம் வணிகரைப் பாதுகாக்க தீபக் குமார், முஹம்மது தீபக் ஆனபோது....!
- உலக அளவில் கவனத்தை ஈர்த்த ஓர் உண்மை சம்பவம் -
இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் மீது பஜ்ரங்தள் உள்ளிட்,ட இந்துத்துவ அமைப்புகள் எந்தளவுக்கு வெறுப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பதை நாடு நன்கு அறிந்த ஒன்றாகும். வட மாநிலங்களில் அடிக்கடி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முஸ்லிம் வணிகர்கள் தாக்கப்படுவது, மிரட்டல் விடுக்கப்படுவது போன்ற சம்பங்களுக்கு வடமாநிலங்களில் குறைவு இருப்பதில்லை. இதனால், பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ முடியாத ஒரு அவல சூழ்நிலை இருந்து வருகிறது. இருந்தபோதும், அங்கு வாழும் முஸ்லிம்கள், சகோதரச் சமுதாய இந்து மக்களிடம் எப்போதும் அன்பு செலுத்தி, அமைதியாக வாழ விரும்புகிறார்கள். அப்படி தான் வாழ்ந்து வருகிறார்கள்.
77வது குடியரசு தினத்தன்று நடைபெற்று சம்பவம் :
இத்தகைய சூழ்நிலையில், இந்தியா தனது 77வது குடியரசு தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த ஜனவரி 26, 2026 அன்று, உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடைபெற்றது. உத்தரகாண்டின் கோட்வாரில் உள்ள பாபா ஸ்கூல் கார்மென்ட்ஸ் என்ற ஆடைக்கடையின் பெயருக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. "பாபா" என்ற வார்த்தை இந்து மத பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்றும், குறிப்பாக அந்த நகரத்தில் உள்ள சித்தபலி பாபா ஹனுமான் கோயிலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதால், ஒரு முஸ்லிம் கடைக்காரர் அந்தப் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
ஆனால், கடை உரிமையாளர் வக்கீல் அகமது, தனது கடை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், இதற்கு முன்பு யாரும் அந்தப் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும் கூறினார். "பாபா" என்ற வார்த்தை எல்லா மதங்களிலும் பயன்படுத்தப்படுகிறது என்றும், அது இந்து மதத்திற்கு மட்டுமே பிரத்தியேகமானது அல்ல என்றும் அவர் வாதிட்டார். இதனால் அந்த கடைப் பகுதியில் ஒருவித பதற்றம் உருவானது.
முஹம்மது தீபக் தலையீடு :
இந்த வாக்குவாதத்தின் போது அங்கு இருந்து தீபக் குமார் என்ற இளைஞர் தலையிட்டு, பஜ்ரங் தளம் மற்றும் பிற குழுக்களின் உறுப்பினர்களுடன் பேசினார். பாபா என்ற பெயரில் உங்களுக்கு என்னை பிரச்சினை என்று அவர் கேள்வி எழுப்பினார். இதனால், வாக்குவாதம் முற்றி பதற்றம் அதிகரித்தபோது, அவரது அடையாளம் குறித்து பஜ்ரங்தள் அமைப்பினர் கேள்வி எழுப்பியபோது, அவர் தன்னை முகமது தீபக் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
=======================
"ஒரு முஸ்லிம் கடைக்காரரைப் பாதுகாக்க தீபக் குமார், முஹம்மது தீபக் ஆனபோது. அந்த சம்பவம் தேசிய மற்றும் உலக கவனத்தை ஈர்த்தது. வெறுப்பைப் பரப்புவதால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வழிபடவும், வாழவும், தங்கள் மதத்தைப் பின்பற்றவும் உரிமை உண்டு என்பதை உணர்த்தியது"
=======================
ஒரு முஸ்லிம் வணிகரின் சிறிய கடைக்கு வெளியே ஏற்பட்ட ஒரு தகராறில் தொடங்கி, அந்த நகரத்தின் எல்லைகளையும் கடந்து பரவிய ஒரு பெயருடன் முடிந்தது. முகமது தீபக் என்ற பெயர் சமூக ஊடகங்களில் பரவலாகப் பிரபலமாகி வருகிறது. பயனர்கள் அது தொடர்பான ரீல்கள், பதிவுகள் மற்றும் விவாதங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நபர் யார், முஸ்லிம் மற்றும் இந்து அடையாளங்களின் கலவையான அவரது பெயர் ஏன் இவ்வளவு கவனத்தை ஈர்த்துள்ளது என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.
பெயருக்குப் பின்னால் உள்ள மனிதர் :
முகமது தீபக் என்பவர் உண்மையில் தொழில்ரீதியாக ஒரு உடற்பயிற்சியாளரான தீபக் குமார் ஆவார். . தனது மனிதநேய செயல் குறித்து கருத்து கூறியுள்ள முகமது தீபக், "நான் ஒரு சாதாரண மனிதன். நான் இந்துவும் அல்ல. முஸ்லிமும் அல்ல. சீக்கியனும் அல்ல,.கிறிஸ்தவனும் அல்ல. ஒரு மனிதன் அவ்வளவு தான்" என்று தெரிவித்துள்ளார்.
பஜ்ரங் தளத்தின் பல உறுப்பினர்கள் கடைக்காரரிடம் கேள்வி எழுப்பி, பெயர்களைக் கேட்டபோது, முகமது தீபக் என்ற பெயர் தன்னிச்சையாகத் தன் மனதில் தோன்றியதாக தீபக் குமார் கூறினார். தான் ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் என்றும், இந்த நாட்டில் யாரும் குறிவைக்கப்படாமல் வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் தான் தெரிவிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். மனிதநேயமே மிகச்சிறந்த மதம் என்றும் ஏனென்றால் மரணத்திற்குப் பிறகு ஒருவரின் செயல்கள் மட்டுமே முக்கியம் என்றும் அவர் மேலும் கூறினார்.
வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது :
ஜனவரி 26-ஆம் தேதி முதல் தனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாக தீபக் குமார் கூறியுள்ளார். அவருக்குத் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளும் செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் பல ஆதரவானவை. அதேநேரத்தில், இந்தச் சம்பவம் அவரது வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.
தீபக் ஒரு எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். அவரது தந்தை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அவருக்குத் திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மேலும் அவரது தாயார் இன்றும் கோட்வாரில் ஒரு தேநீர் கடை நடத்தி வருகிறார். தீபக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக உடற்பயிற்சித் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் கோட்வாரில் உள்ள பத்ரிநாத் சாலைக்கு அருகில் ஒரு உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவரது உடற்பயிற்சிக் கூடம் மூடப்பட்டுள்ளது. மேலும் தற்போது வீட்டுச் செலவுகள் அவரது தாயாரின் தேநீர் கடையின் வருமானத்தின் மூலம் சமாளிக்கப்பட்டு வருகின்றன.
வெறுப்பிற்குப் பதிலாக அன்பு :
இந்த இடையூறுகள் இருந்தபோதிலும், தனக்குக் கிடைத்த அன்பைக் கண்டு தான் நெகிழ்ந்துவிட்டதாக தீபக் குமார் தெரிவுத்துள்ளார். பல்வேறு வகைகளில் இடையூறுகள் இருந்தபோதிலும், தனக்குக் கிடைத்த அன்பைக் கண்டு தான் நெகிழ்ந்துவிட்டதாக தீபக் குமார் கூறியுள்ளார். மேலும், வெறுப்பிற்குப் பதிலாகப் புரிதலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீபக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெறுப்பைப் பரப்புவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வழிபடவும், வாழவும், தங்கள் மதத்தைப் பின்பற்றவும் உரிமை உண்டு என்றும் தீபக் குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், "மக்கள் தவறான பாதையை அல்ல, சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று முஹம்மது தீபக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு முஸ்லிம் வணிகருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தீபக் குமாரின் அழகிய செயலுக்கு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இதுபோன்ற முஹம்மது தீபக் இளைஞர்கள் உருவாக வேண்டும் என்றும், அதன்மூலம் நாட்டில் அன்பு பரவி, அமைதி பிறக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இந்து இளைஞர் ஒருவரின் அழகிய செயல் மூலம், முஹம்மது தீபக் என்ற தீபக் குமாரை உலக அளவில் மக்களின் கவனத்தை கவர்ந்து இருக்கிறது என்றால், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மதநல்லிண்க்கத்துடன் செயல்பட்டால், நாடு எப்படி அமைதியாக வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்








No comments:
Post a Comment