Tuesday, February 3, 2026

இந்திய அரசியல் நிர்ணயச் சபையில் இடம்பெற்ற இ.யூ.முஸ்லிம் லீக்....!

அரசியலமைப்புச் சட்டத்திற்காக உருவாக்கப்பட்ட அவையில்  இடம்பெற்ற இயக்கம்  இ.யூ.முஸ்லிம் லீக்....! 

நாட்டின் விடுதலையில் பங்கெடுத்த இயக்கம் குறித்து  மாவோயிஸ்ட் அமைப்புடன் இணைத்து பேசும் பிரதமர் மோடிக்கு கண்டனம்....!!

மாநிலங்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி. வழக்கிறஞர் ஹாரீஸ் பீரான் முழக்கம்....!!!

டெல்லி, பிப்.04- இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடி, அரசியமைப்புச் சட்டம் உருவாக்க ஏற்படுத்தப்பட்ட அவையில் இடம்பெற்ற முஸ்லிம் லீக் இயக்கத்தை மாவோயிஸ்ட்  இயக்கத்துடன் இணைத்து பேசும் பிரதமர் மோடிக்கு இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி. ஹாரீஸ் பீரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் வழக்கறிஞர் ஹாரீஸ் பீரான் 03.02.2026 செவ்வாய்கிழமையன்று கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு:

பிரதமருக்கு கண்டனம் :

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு அளிக்க அவைத் தலைவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு நான் ஒரு முக்கிய விஷயத்தை கொண்டு வருகிறேன். 

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் குறித்து அடிக்கடி விமர்சனம் செய்யும்போது, மாவோஸ்யிட் முஸ்லிம் லீக் காங்கிரஸ் என்று குறிப்பிடுகிறார். பிரதமர் காங்கிரசை விமர்சனம் செய்யும்போது முஸ்லிம் லீகை இணைத்து ஏன் இப்படி பேசுகிறார் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதுபோன்று பேச பிரதமர் அவர்களுக்கு யார் சொல்லி தந்தார்கள். அவருக்கு சரியாக வரலாறு தெரியவில்லை. அல்லது பிரதமருக்கு யாரும்  வரலாற்றை முறையாக சொல்லித் தரவில்லை.  கற்றுத் தரவில்லை என்றே தோன்றுகிறது.

விடுதலையில் பங்கேற்ற இயக்கம் :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அந்த சிறப்பான இயக்கத்தில் இருந்து தான், நான்  இந்த அவையின் பிரதிநிதியாக  வந்திருக்கிறன்.இந்த இயக்கம் ஒரு வரலாற்று ரீதியான புகழ்பெற்ற இயக்கமாகும். அத்துடன், நாட்டின் விடுதலைக்காக போராடிய இயக்கமாகும்.  விடுதலைப் போரில் பங்கெடுத்த இயக்கம். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அவையில் இடம்பெற்ற இயக்கம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

கேரளாவில் வலிமையான இயக்கம் :


இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம், கேரள மாநிலத்தில் கூட்டணி அரசு அமைக்க சிறந்த முறையில் கட்டமைப்புகளுக்கான பணிகளை ஆற்றிய  இயக்கமாகும். அத்துடன், மிக முக்கியமான வலுமான அரசியல் இயக்கமாகவும், சக்தியாகவும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பணியாற்றி வருவதால், கேரளாவில் ஆட்சியிலும் பங்கெடுக்கிறது. 

இதன் காரணமாக சிறுபான்மையின மக்களுக்கு நல்ல கல்வி வழங்கப்படுகிறது. அத்துடன்  மாநிலத்தில் உள்ள அனைத்து அடித்தள சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் தரமான கல்வி அளிக்கப்படுகிறது. 

ஒன்றியத்தில் முஸ்லிம் அமைசசர் இல்லை :

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்,  சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கூட அமைச்சரமாக இடம்பெறாமல் இருப்பது நாட்டிற்கு மிகப்பெரிய அவமானமாகும்.  சிறுபான்மையின மக்கள் குறித்து அடிக்கடி பேசும் அவர்கள் , முஸ்லிம் அமைச்சர் விரைவில் இடம்பெறுவார் என பேசுகிறார்கள். தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், தற்போதைய அமைச்சரவையில் ஒரு அமைச்சரை கூட அவர்கள் நியமிக்கவில்லை. இதுதான் பாஜகவின் உண்மையான முகம். 

இவ்வாறு வழக்கறிஞர் ஹாரீஸ் பீரான் பேசினார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: