Friday, February 6, 2026

புன்யாத் தேசிய பிரச்சாரம்....!

முஸ்லிம் இளைஞர் லீகை வலுப்படுத்தும் நோக்கில்  "ஒன்றிணைப்போம், வலுப்படுத்துவோம்" என்ற புன்யாத் தேசிய பிரச்சாரம்....!

டெல்லி காயிதே மில்லத் மையத்தில் இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. தொடங்கி வைத்தார்..!

புதுடெல்லி, பிப்.07-"ஒன்றிணைப்போம், வலுப்படுத்துவோம்" என்ற முழக்கத்தின் கீழ் முஸ்லிம் இளைஞர் லீக் தேசியக் குழுவின் அமைப்பு வலுவூட்டும்  'புன்யாத்'  என்ற பிரச்சாரத்தை டெல்லியில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீகின் காயிதே மில்லத் மையத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று,  இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ. டி. முஹம்மது பஷீர் எம்.பி. தொடங்கி வைத்தார். 

முஸ்லிம் இளைஞர் லீகை வலுப்படுத்த இலக்கு :

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும்  முஸ்லிம் இளைஞர் லீகை வலுப்படுத்த பல்வேற பணிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்றிணைப்போம், வலுப்படுத்துவோம் என்ற முழக்கத்தின் கீழ் புன்யாத் தேசிய பிரச்சாரம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தை டெல்லியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மையத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. முஸ்லிம் இளைஞர் லீக் தேசியத் தலைவர் வழக்கறிஞர் சர்பராஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., கலந்துகொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். 

இ.டி.முஹம்மது பஷீர் உரை :

புன்யாத் பிரச்சாரதை தொடங்கி வைத்து உரையாற்றிய இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி, நாட்டின் முக்கிய மையங்களில் இளைஞர் லீக்கின் அமைப்பு கட்டமைப்பு வலுப்பெற்று வருவதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.  மாநில அளவில் இருந்து கிளை நிலை வரை செயல்பாடுகளை விரிவுபடுத்தி நெறிப்படுத்தும் 'புன்யாத்' பிரச்சாரம் பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார். நாட்டின் பாசிச அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியான எதிர்ப்பிற்கு இளைஞர் லீக் தலைமை தாங்க வேண்டும் என்று இ. டி. முஹம்மது பஷீர் எம்.பி. அழைப்பு விடுத்தார். 

அதிகாரப்பூர் இணைய தளம் தொடக்கம் :

மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முஸ்லிம் இளைஞர் லீக் தேசியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டது.

புன்யாத்  பிரச்சாரத்தின் முக்கிய இலக்குகள்: 

முஸ்லிம் இளைஞர் லீக் தொடங்கியுள்ள புன்யாத் பிரச்சாரத்தின் முக்கிய இலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் இளைஞர் லீக் மாநில அலகுகளை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  பின்தங்கிய சமூகங்கள் வசிக்கும் வட இந்தியாவின் நூறு மாவட்டங்களில் மாவட்டக் குழுக்களை அமைப்பது, அனைத்து முக்கிய நகரங்களிலும் மாநகராட்சிக் குழுக்களை உருவாக்குவது, இ.யூ.முஸ்லிம் லீகிற்கு தேர்தல் வாய்ப்புகள் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியான குழுக்களை அமைப்பது,  மற்றும் வட இந்தியாவில் 5 ஆயிரம் கிளைக் குழுக்களை நிறுவுவது உள்ளிட்ட முக்கிய இலக்குகள்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் முஸ்லிம் சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய, தலித் சமூகங்கள் கும்பல் படுகொலைகள், புல்டோசர் ஆட்சி மற்றும் கொடூரமான சட்டங்கள் மூலம் பிரதான நீரோட்டத்தில் இருந்து வெளியே தள்ளப்படும் நேரத்தில், ஜனநாயக ரீதியான எதிர்ப்பு மூலம் ஒரு மரியாதைக்குரிய இருப்பைப் பெறுவதற்குத் தேவையான ஆற்றலை உருவாக்குவதே முஸ்லிம் இளைஞர் லீக்கின் 'புன்யாத்' பிரச்சாரத்தின் நோக்கமாகும். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற ஷான்-இ-மில்லத் மாநாட்டில் வகுக்கப்பட்ட செயல் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒரு பகுதியாக முஸ்லிம் இளைஞர் லீக் தேசியக் குழு 'புன்யாத்' பிரச்சாரத்தை செயல்படுத்தி வருகிறது.

பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சாரம், முஸ்லிம் இளைஞர் லீக் தினமான ஜூலை 30-ஆம் தேதி, 5 ஆயிரம் கிளைக் குழுக்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் மாநாட்டுடன் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 விழாவில் பங்கேற்றோர் விவரம் :

முஸ்லிம் இளைஞர் லீக் பொதுச் செயலாளர் டி. பி. அஷ்ரப் அலி வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் சி. கே. ஷாகிர் நன்றியுரை வழங்கினார். அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஷிபு மீரான் 'புன்யாத்' பிரச்சாரம் குறித்து  விளக்கி பேசினார். 

இ.யூ.முஸ்லிம் லீக் மூத்த துணைத் தலைவர் எம்.பி. அப்துஸ்ஸமத் சமதானி, பொருளாளர் பி. வி. அப்துல் வஹாப் எம்.பி., செயலாளர் வழக்கறிஞர் ஹரிஸ் பீரான் எம்.பி., துணைச் செயலாளர் ஆசிப் அன்சாரி, டெல்லி மாநிலத் தலைவர் மௌலானா நிசார் அகமது, பொதுச் செயலாளர் இம்ரான் இஜாஸ், ஹரியானா மாநிலத் தலைவர் அஷாருதீன் சவுத்ரி, பேராசிரியர் பஷீர் அஹ்மத் மீரட், இளைஞர் லீக் தேசியத் துணைத் தலைவர் சஜ்ஜாத் ஹுசைன் அக்தர் பிஹார், செயலாளர் சஜித் நடுவண்ணூர், மேற்கு வங்க மாநிலத் தலைவர். தலைவர் முகமது சஜ்ஜாத், டெல்லி மாநில இளைஞர் லீக் தலைவர் ஷாஷாத் அப்பாசி, ஹரியானா மாநில இளைஞர் லீக் தலைவர் வழக்கறிஞர் மன்சூர் அகமது, செயலாளர் வழக்கறிஞர் எம்எஸ்எஃப் தேசிய பொருளாளர் சலீம் உசேன், அதீப் கான், கேஎம்சிசி டெல்லி செயலாளர் கே.கே.முகமது ஹலீம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: