இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் :
விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டு இந்தியாவின் சுதந்திரம் பறிபோய் உள்ளது
இ.யூ.முஸ்லிம்
லீகின் சுதந்திர விவசாயிகள் சங்கம் கடும் விமர்சனம்
திருவனந்தபுரம், பிப்.06-இந்தியா அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்திய விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டு, நாட்டின் சுதந்திரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சரண் அடைந்துள்ளது என்று இ.யூ.முஸ்லிம் லீகின் சுதந்திர விவசாயிகள் சங்கத்தின் தேசியத் தலைவர் குருக்கோலி மொய்தீன் எம்.எல்.ஏ. விமர்சனம் செய்துள்ளார்.
கூட்டாக அறிக்கை :
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தது. இதன்மூலம்இந்தியா பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து இ.யூ.முஸ்லிம் லீகின் முக்கிய அமைப்பான சுதந்திர விவசாயிகள் சங்கம் கடும் விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் குருக்கோலி மொய்தீன் எம்.எல்.ஏ., மற்றும் பொதுச் செயலாளர் முஹம்மது குட்டி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஒப்பந்தம் தொடர்பாக அவர்கள் விரிவாக ஆய்வு செய்து ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் நலன் பாதிப்பு :
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்கள் மட்டுமல்லாமல், நமது மாபெரும் தேசத்தின் சுதந்திரமே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சரணடைக்கப்படுகிறது என்று சுதந்திர விவசாயிகள் சங்கத்தின் தேசியத் தலைவர் குருக்கோலி மொய்தீன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும், அதன் முழு உரையையும் மறைத்து, அவற்றை வெளியிடத் தயங்குவதன் மூலம் யாருடைய நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளை விட வேறு ஒருவருக்கு இந்தியப் பிரதமர் முன்னுரிமை அளிக்கிறார் என்பது தெளிவாகிறது என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
வரி இல்லாத இறக்குமதிகள் :
வரி இல்லாத இறக்குமதிகள் மூலம், இந்தியா அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான சந்தையாக மாற உள்ளது என்றும் இது இந்திய விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை அழிப்பது மட்டுமல்லாமல், விவசாய சமூகத்தையும் முழுமையாகப் பேரழிவிற்கு உள்ளாக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தியாவின் விவசாய மற்றும் பால்வளத் துறைகள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகள், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்க்கக்கூடிய அற்பமான விஷயங்களா? என்றும் இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியா எதை வாங்க வேண்டும்? எங்கிருந்து பொருட்களைப் பெற வேண்டும்? எப்படி எண்ணெய் இறக்குமதி
செய்ய வேண்டும்? என்பது குறித்த முடிவுகளை அமெரிக்க டிரம்ப் எடுத்தால், அது இந்திய தேசத்தின் இறையாண்மை மற்றும்
சுதந்திரத்தைப் புதைப்பதற்குச் சமம் என்றும் சுதந்திர விவசாயிகள்
சங்கத்தின் தலைவர் குருக்கோலி மொய்தீன் எம்.எல்.ஏ., மற்றும் பொதுச் செயலாளர் முஹம்மது குட்டி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
=======================

No comments:
Post a Comment