Thursday, February 5, 2026

தொழுகை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி....!

தனியார் நிலத்தில் அனுமதியின்றி தொழுகை, பிரார்த்தனை நடத்த

அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி....!

கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு.....!! 

புதுடெல்லி, பிப்.06- தனியார் நிலத்தில் அனுமதியின் பிரார்த்தனை, தொழுகை ஆகியவற்றை நடத்தலாம் என்று  அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, பல்வேறு கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளன.

தொழுகை நடத்தியவர்கள் கைது :

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகளில், தனியார் நிலத்தில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம், உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மொராதாபாத்தில் ஒரு தனியார் வளாகத்தில் தொழுகை நடத்தியதற்காக 11 முஸ்லிம் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது. 

உயர்நீதிமன்றத்தில் வழக்கு :

இத்தகைய சூழ்நிலையில், உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கையை கண்டித்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அன்று, மரநாதா ஃபுல் காஸ்பெல் மினிஸ்ட்ரீஸ் மற்றும் இம்மானுவேல் கிரேஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆகியோரால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

 சட்டப்படி அனுமதிக்கப்பட்டது  :

தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தனியார் வளாகங்களுக்குள் பிரார்த்தனைகளை நடத்துவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், பிரார்த்தனைகள் நடத்துவதற்கு  முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தது.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன் மற்றும் நீதிபதி சித்தார்த் நந்தன் ஆகியோர் அடங்கிய ஒரு டிவிஷன் பெஞ்ச், "தனியார் சொத்தில் ஒரு மதப் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்த அனுமதி பெறத் தேவையில்லை" என்று தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவு பிப்ரவரி 2 அன்று பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.

கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு :

முன்கூட்டியே காவல்துறையின் அனுமதி பெறாமல், தனியார் நிலத்தில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இரு அமைப்புகளும் இந்தத் தீர்ப்பை வரவேற்று, இதை "சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு ஒளி" என்றும், "தன்னிச்சையான காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு எச்சரிக்கை" என்றும் வர்ணித்துள்ளன.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பிரபல கிறிஸ்தவ மற்றும் மனித உரிமை ஆர்வலரும், அகில இந்திய கிறிஸ்தவ கவுன்சில் தலைவருமான ஜான் தயாள், "உங்கள் வீட்டிற்குள் நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், எப்படி ஆடை அணிகிறீர்கள் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம். இதற்கு ஏன் எந்த அனுமதியும் தேவைப்பட வேண்டும்? இந்த அடிப்படை சுதந்திரத்தை மீட்டெடுக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது என்பதே, ஒரு நாடாக நாம் எந்த நிலைக்கு வந்துள்ளோம் என்பதைப் பற்றி நிறைய கூறுகிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார். 

ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு வரவேற்பு :

தீர்ப்பை வரவேற்றுள்ள ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மஹ்மூத் மதானி,  இது அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரத்திற்கான உரிமையை "தெளிவாகவும் உறுதியாகவும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று விவரித்துள்ளார். 

புனித ரமளான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், இந்தத் தீர்ப்பின் உணர்வை மதித்து நடக்குமாறு மாநில அரசின் நிர்வாகத்தை மதானி கேட்டுக்கொண்டுள்ளார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: