Friday, February 6, 2026

புனித ரமளானுக்காக ஏற்பாடுகள்....!

 "  புனித ரமளானுக்காக சவூதி அரேபியாவில் சிறப்பு ஏற்பாடுகள் "

இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத மாதம் ஒன்று உண்டு என்றால், அது நிச்சயமாக புனித ரமளான் என்றே கூறவேண்டும். ஏக இறைவனின் கட்டளையை ஏற்று ரமளான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன், ஏக இறைவனின் திருவாக்கான திருக்குர்ஆனை முழுவதும் படிப்பது, கேட்பது, புரிந்துகொண்டு அதன்படி நடப்பது என பல்வேறு வணக்க வழிபாடுகளில் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் ஈடுபட்டு, அதன்மூலம் தங்களது உள்ளத்தை தூய்மை அடையச் செய்து ஆனந்தம் கொள்கிறார்கள். இதனால் ரமளான் மாதத்தை வரவேற்க முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் எப்போதும் தயாராக இருந்து வருகிறார்கள். 

அந்த வகையில், இந்தாண்டிற்கான 2026, ரமளான் மாதம் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வரும் 18ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 19ஆம் தேதி நோன்பு தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உலக நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் ரமளானை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

 சவூதி அரேபியாவில் சிறப்பு ஏற்பாடுகள் :

உலக முஸ்லிம்கள் மிகவும் புனித நகரங்களாக மதிக்கும், மக்கா, மதீனா நகரங்கள் உள்ள சவூதி அரேபியாவிற்கு, ரமளான் மாத காலத்தில் புனித உம்ரா பயணம் மேற்கொள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வருவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ரமளான் நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு மிகச் சிறந்த முறையில் சேவையை வழங்க சவூதி அரசு திட்டமிட்டு, சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

ரமளான் மாதத்தில் வழிபாட்டாளர்களுக்காக மதீனா பேருந்துகள் இணைப்புப் போக்குவரத்து சேவையை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மதீனா பிராந்திய மேம்பாட்டு ஆணையம், வரவிருக்கும் புனித ரமளான் மாதத்தில், வழிபாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மஸ்ஜித் (அல்-மஸ்ஜித் அந்-நபவி) மற்றும் குபா மஸ்ஜிதுக்குச் சென்று வர வசதியாக, பல்வேறு நிலையங்களில் இணைப்புப் பேருந்து சேவையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

                                                ====================

"மதீனா பேருந்துகள் திட்டத்தால் தொழுகையாளிகள், பார்வையாளர்கள் மற்றும் யாத்ரீகர்கள் மிகவும் பயன் அடைவார்கள். இந்த சேவையில் மதீனாவின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய பிரத்யேக வழித்தடங்கள் அடங்கும்.  மேலும், பேருந்து இயக்கத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" 

                                            ====================

இந்தச் சேவையானது, வழிபாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதையும், புனித மாதத்தில் வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள நெரிசலைக் குறைப்பதையும், அனைவருக்கும் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

மதீனா பேருந்துகள் திட்டம் :

ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டு ரமழானுக்காக மதீனாவில் இணைப்புப் பேருந்து சேவையின் விவரங்கள் குறித்த தகவல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  "மதீனா பேருந்துகள்" திட்டத்தால் தொழுகையாளிகள், பார்வையாளர்கள் மற்றும் யாத்ரீகர்கள் மிகவும் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சேவையில் மதீனாவின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய பிரத்யேக வழித்தடங்கள் அடங்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிங் ஃபஹ நிலையம், ஹரமைன் அதிவேக ரயில் நிலையம், ஷாதா நிலையம், அல்-காலிதியா மாவட்டம், சயீத் அல்-ஷுஹாதா பகுதி, அல்-சலாம் கல்லூரி, விளையாட்டு அரங்கம், பூங்கா உள்ளிட்ட பகுதிகளின் வழியாக பேருந்து சேவை இயக்கப்படும்.  

இதனால் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தங்களது பயணத்தை  உறுதி செய்யலாம். பேருந்துகள் பல முக்கியநிலையங்கள் வழியாக செல்வதால் யாத்ரீகர்ளுக்கு நல்ல பயண அனுபவம் கிடைக்கும்.  கூடுதலாக, அல்-அலியா மாவட்டத்திலிருந்து குபா மஸ்ஜித் த வரை நீட்டிக்கப்படும் ஒரு பிரத்யேக பாதை நிறுவப்பட்டுள்ளது. இது முக்கிய மத அடையாளங்களை இணைக்கிறது. அத்துடன்  வழிபாட்டாளர்களுக்கு மஸ்ஜித்தைப்  பார்வையிட உதவுகிறது.

போக்குவரத்தின் முக்கியத்துவம் :

மதீனாவிற்கு சவூதி ராஜ்ஜியத்திற்குள்ளும், வெளிநாட்டிலிருந்தும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவதால், புனித ரமளான் மாதத்தில் இணைப்புப் பேருந்து போக்குவரத்து சேவை மிக முக்கியமானது ஒன்றாகும். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மஸ்ஜித்தைச் (அல்-மஸ்ஜித் அந்-நபவி) சுற்றியுள்ள மையப் பகுதிக்கு செல்லும் சாலைகளில் ஏற்படக்கூடிய கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த திட்டம் நேரடியாக பங்களிக்கிறது. அதிக திறன் கொண்ட பேருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், நகர மையத்திற்குள் நுழையும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதனால் கார்பன் வெளியேற்றம் குறைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது. அத்துடன் பார்க்கிங் தேடுவதில் பார்வையாளர்களின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது.

யாத்ரீகர்களின் அனுபவத்தை மேம்படுத்துதல் :

சவூதி அரேபியாவின் தொலைநோக்கு திட்டம் 2030 மற்றும் யாத்ரீகர்கள் சேவைத் திட்டத்தின் இலக்குகளுடன் இணைந்து, பார்வையாளர்கள் மற்றும் யாத்ரீகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. மதீனாவில் உள்ள அதிகாரிகள் பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் மிகவும் நம்பகமான போக்குவரத்து சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளனர். முந்தைய பருவங்களில் கூட்ட நெரிசலை நிர்வகிப்பதிலும், பாதசாரிகள் மற்றும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும் இணைப்பு பேருந்து அமைப்பு மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மதப் பருவங்களுக்கான செயல்பாட்டுத் திட்டங்களின் ஒரு மூலக்கல்லாக அமைகிறது.

இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் பேருந்துகளில் பாதுகாப்பு மற்றும் வசதியின் மிக உயர்ந்த தரங்களை செயல்படுத்துவதில் மதீனா அதிகாரசபை தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது. அதேநேரத்தில் காத்திருப்பு நேரங்களைக் குறைக்க துல்லியமான அட்டவணைகளை வழங்குகிறது. தொழுகையாளிகள், வழிபாட்டாளர்கள் தங்கள் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தவும், அவர்களின் சடங்குகளை எளிதாகவும் மன அமைதியுடனும் செய்ய இந்த இணைப்பு பேருந்து சேவை அனுமதிக்கிறது என்றே கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: