கேரளாவில் பிரதமர் ஸ்ரீ திட்டம் அமல்படுத்தும் விவகாரம்
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் நிலவும் மாறுபட்ட கருத்துகளால் அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசித்தப் பிறகே முடிவு எடுக்கப்படும்
கேரள கல்வி அமைச்சர் சம்சுதீன் தகவல்
பாலக்காடு, செப்.13-பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து முடிவெடுக்க கேரளாவிற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இத்திட்டம் குறித்து ஐக்கிய ஜனநாயக முன்னணிக்குள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் முழுமையாக ஆலோசித்தபிறகு, முடிவு எடுக்கப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த கேரள கல்வி அமைச்சர் சும்சுதீன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் குறித்து முடிவெடுக்குமாறு ஒன்றிய கல்வித்துறை செயலாளர் கேரள தலைமைச் செயலாளருக்குக் எழுதியக் கடிதம் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள அரசால் பெறப்பட்டது. தொடர்புடைய பிற திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக, இத்திட்டம் குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதித்தபிறகே முடிவு எடுக்கப்படும் என்று கேரள கல்வி அமைச்சர் சம்சுதீன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஸ்ரீ திட்டம் குறித்த தகவல் :
பிஎம் ஸ்ரீ திட்டம் என்பது பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசால் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று தொடங்கப்பட்டது. இப்பள்ளிகள் தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் வழிகாட்டுதல்களை முழுமையாகச் செயல்படுத்தும் மாதிரிப் பள்ளிகளாக விளங்கும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ள மும்மொழிக் கொள்கையை இத்திட்டம் கட்டாயமாக்குகிறது. இது இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் என தமிழகம் போன்ற மாநிலங்கள் எதிர்க்கின்றன. பள்ளிகளின் பாடத்திட்டம் மற்றும் நிர்வாகத்தில் ஒன்றிய அரசின் தலையீடு அதிகரிப்பதோடு, மாநிலங்களின் கல்வித் தன்னாளுமை பறிபோகும் என்ற அச்சம் நிலவுகிறது. மாநில அரசுகள் கணிசமான நிதி பங்களிப்பைச் செய்தாலும், பள்ளிகளுக்கு பி.எம்.ஸ்ரீ என்று மத்திய அரசின் பெயர் சூட்டப்படுவதில் உடன்பாடு இல்லை. இத்திட்டத்தில் கையெழுத்திடாவிட்டால் இதர கல்வித் திட்டங்களுக்கான ஒன்றிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பது மாநிலங்களை நிதிநெருக்கடியில் தள்ளுகிறது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கல்வி வழியாகப் புகுத்தும் முயற்சி என இத்திட்டத்தைக் சில மாநிலங்கள் கருதுகின்றன.
கேரள கல்வி அமைச்சர் விளக்கம் :
இந்நிலையில், பாலக்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில கல்வி அமைச்சர் சம்சுதீன், ஒன்றிய அரசின் கடிதம் விளக்கம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தங்கள் தரப்பு தயக்கங்கள் இன்னும் நீடிப்பதாக அவர் கூறினார். மேலும், முதலமைச்சர் வி.டி. சதீசன் மற்றும் பிற ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சம்சுதீன் தெரிவித்தார். என்னால் தனிப்பட்ட முறையில் எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது. முதலமைச்சரும் ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைமையும் இணைந்து முடிவெடுப்பார்கள். முதலமைச்சரே அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று சம்சுதீன் கூறினார். இந்த விவகாரத்தில் வெவ்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தை ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்க்கிறது. தேர்தலுக்கு முன்பே நாங்கள் இதைத் தெரிவித்தோம். தற்போதும் எங்களுக்கு இதில் எதிர்மறையான கருத்துகளே உள்ளன என்று சம்சுதீன் கூறினார்.
இத்திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழு இன்னும் கூடாத நிலையில், மாநில அரசுக்கு ஒன்றிய அரசிடமிருந்து வந்துள்ள இரண்டாவது கடிதம் இதுவாகும். சம்சுதீன், பி.சி. விஷ்ணுநாத், எம். லிஜு மற்றும் ரோஜி எம். ஜான் ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவிடம் இருந்து அரசு அறிக்கை கோரியுள்ளது.
முந்தைய அரசின் முடிவு :
முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இருப்பினும்,பின்னர் எழுந்த விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் மற்றும் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிதி ஆகியவற்றைக் காரணம் காட்டி, இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப்போவதாக அரசு அறிவித்தது. இருப்பினும், கூட்டணிக்குள்ளேயே, குறிப்பாக, இ.யூ.முஸ்லிம் லீகிடமிருந்து இதற்கு எதிர்ப்பு எழுந்தது. கல்வித்துறையில் சங் பரிவார் அமைப்பின் கொள்கை நிகழ்ச்சி நிரலை இத்திட்டம் ஊக்குவிக்கக்கூடும் என்று லீக் கவலை தெரிவித்தது.
முனவ்வர் அலி ஷியாப் தங்ஙள் தகவல் :
இதனிடையே, பிரதமர் ஸ்ரீ திட்டம் குறித்து கருத்து கூறியுள்ள கேரள மாநில முஸ்லிம் யூத் லீக் தலைவர் முனவ்வர் அலி ஷியாப் தங்ஙள், இந்த விவகாரம் குறித்து இ.யூ.முஸ்லிம் லீகின் தலைவர்களுடன் ஆலோசித்ததாகவும், திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாடு அனைவரிடமும் உள்ளதாகவும் கூறினார். இந்த விவகாரத்தில் கேரள அரசு எடுக்கும் முடிவைத் தொடர்ந்து தங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் கூறிய தங்ஙள், அரசு தரப்பில் விவாதம் நடைபெற்று வருவதாகவும், எனவே, கட்சிக்குள் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment