700 ஆண்டுகள் பழமையான இப்னு பதூதாவின் கையெழுத்துப் பிரதி
அபுதாபி புத்தகக் கண்காட்சியில் சுமார் 1 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்பனை
அபுதாபியில் நடைபெற்ற 35வது சர்வதேக புத்தகக் கண்காட்சி இந்த முறை பல வியப்பூட்டும் செய்திகளை உலகின் முன் வைத்துள்ளது. அந்த வகையில், ஹிஜாஸ் மற்றும் வளைகுடாப் பகுதிகள் வழியாக இப்னு பதூதா மேற்கொண்ட பயணங்களின் புகழ்பெற்ற குறிப்புகளைக் கொண்ட ஒரு கையெழுத்துப் பிரதி, 35-வது அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சுமார் 1 மில்லியன் திர்ஹம்களுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரத்தற்கு விற்பனையாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த அரிய வகை புத்தக விற்பனையாளரான பீட்டர் ஹாரிங்டன் என்பவரால் கண்காட்சிக்குக் கொண்டுவரப்பட்ட இந்த கையெழுத்துப் பிரதி, 'ரிஹ்லா' எனப்படும் 14-ம் நூற்றாண்டின் பயணக் குறிப்புகளின் ஒரு பகுதியாகும். இடைக்கால உலகில் ஒரு தனிநபர் மேற்கொண்ட பயணங்களின் மிக விரிவான மற்றும் முக்கியப் பதிவாக இது கருதப்படுகிறது.
இப்னு பதூதாவின் பயணங்கள் :
இப்னு பதூதாவின் 1325 முதல் 1333 வரையிலான பயணங்களை இந்தக் கையெழுத்துப் பிரதி விவரிக்கிறது. டான்ஜியரில் தொடங்கி கெய்ரோ, டமாஸ்கஸ், மதீனா, மக்கா, ஈராக், பாரசீகம், செங்கடல், கிழக்கு ஆப்பிரிக்கா, வளைகுடாப் பகுதி, அனடோலியா மற்றும் மத்திய ஆசியா வரையிலான அவரது பயணங்கள் இதில் அடங்கும். தற்போதைய ஈரானில் உள்ள நைசாபூர் பற்றிய குறிப்புகளுடன் இது நிறைவடைகிறது. இது எச்.ஏ.ஆர்.கிப் அவர்களின் நான்கு தொகுதிகள் கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் இரண்டு தொகுதிகள் மற்றும் மூன்றாவது தொகுதியின் ஆரம்பப் பகுதிக்கு இணையானதாகும்.
=================
"இப்னு பதூதாவின் 1325 முதல் 1333 வரையிலான பயணங்களை இந்தக் கையெழுத்துப் பிரதி விவரிக்கிறது. டான்ஜியரில் தொடங்கி கெய்ரோ, டமாஸ்கஸ், மதீனா, மக்கா, ஈராக், பாரசீகம், செங்கடல், கிழக்கு ஆப்பிரிக்கா, வளைகுடாப் பகுதி, அனடோலியா மற்றும் மத்திய ஆசியா வரையிலான அவரது பயணங்கள் இதில் அடங்கும்"
இதன் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று ஹஜ் பயணம் குறித்த நேரடிப் பதிவாகும். நாசிர் குஸ்ராவ் மற்றும் இப்னு ஜுபைர் ஆகியோரின் பதிவுகளுக்கு அடுத்தபடியாக, இடைக்காலத்தில் எழுதப்பட்ட ஹஜ் பயணம் குறித்த மூன்று முக்கிய நேரடிப் பதிவுகளில் இதுவும் ஒன்றாகும். 1300-ல் 'நியூ ஹார்முஸ்' நகரின் எழுச்சிக்குப் பிறகு தெற்கு வளைகுடாப் பகுதி குறித்த முதல் விவரிப்பையும் இப்னு பதூதா வழங்குகியுள்ளர். இதில் ஓமனில் உள்ள கல்ஹத் மற்றும் நிஸ்வா, தற்போதைய ஷார்ஜாவில் உள்ள கல்பா மற்றும் கோர் ஃபக்கான் ஆகிய இடங்களுக்குச் சென்றது மற்றும் பஹ்ரைன் மற்றும் கதிஃப் கடற்கரைப் பகுதிகளில் முத்து குளித்தல் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள ஏழு பிரதிகள் :
உலகளவில் 'ரிஹ்லா' நூலின் முழுமையான அல்லது முழுமையற்ற ஏழு பிரதிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக அறியப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை முழுமையற்ற அல்லது சுருக்கப்பட்ட வடிவத்தில் உள்ளன. இப்னு பதூதாவின் எழுத்தரான இப்னு ஜுஸை எழுதிய, முழுமையற்ற கையெழுத்துப் பிரதிதான் காலத்தால் முந்தையது. இது ஹிஜ்ரி 757 (கி.பி. 1356-57) தேதியிடப்பட்டது மற்றும் பிரான்சின் தேசிய நூலகத்தில் (Bibliothèque Nationale de France) பாதுகாக்கப்படுகிறது. மற்றொரு பிரதி கேம்பிரிட்ஜில் உள்ளது. 250 x 190 மிமீ அளவுள்ள இந்த குறிப்பிட்ட குவார்டோ கையெழுத்துப் பிரதி, மக்ரிபி எழுத்துருவில் அடுக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்டு, கருப்பு-பழுப்பு நிற கன்றுத்தோலால், மறைவான வேலைப்பாடுகளுடன் கூடிய பலகை வடிவமைப்பு மற்றும் தங்க முத்திரையிடப்பட்ட மலர் வடிவங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகப் புத்தகக் கண்காட்சி :
பீட்டர் ஹாரிங்டனின் அரிய மற்றும் முக்கியமான புத்தகங்கள் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் தொடர்ந்து விற்பனைக்கு வருகின்றன. லண்டனைத் தளமாகக் கொண்ட இந்த விற்பனையாளர் 2016 முதல் அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியிலும் பங்கேற்றுள்ளார். இதற்கு முன்னர், 20 புள்ளி 8 மில்லியன் திர்ஹாம் மதிப்புள்ள ஷேக்ஸ்பியரின் முதல் ஃபோலியோ, 9 புள்ளி 2 மில்லியன் திர்ஹாம் மதிப்புள்ள ஆய்வாளர் ரிச்சர்ட் பர்ட்டனின் படைப்புகளின் ரோத்ஸ்சைல்ட் சேகரம் மற்றும் 4 லட்சத்து 64 ஆயிரத்து 550 திர்ஹாம் விலையுள்ள இப்னு சினாவின் மருத்துவ நியதியின் கையெழுத்துப் பிரதி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளார்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment