"சர்வதேச புக்கர் பரிசு பட்டியலில் இடம்பிடித்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் பானு முஷ்தாக்கின் ஹார்ட் லாம்ப் நூல்"
இந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள். நாள்தோறும் பல சவால்களை எதிர்கொள்ளும் பெண்களில், ஒருசில பெண்கள் சாதனைகளையும் செய்து வருகிறார்கள். இலக்கியம், சமூகம் என பல்வேறு துறைகளில் அவர்கள் நல்ல பங்களிப்பை வழங்கி, தங்களால் முடிந்த அளவுக்கு சேவை செய்து வருகிறார்கள். கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்தில் தற்போது பெண்கள் மத்தியில் கல்வி குறித்த நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் சாதித்து வருகிறார்கள். அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் சிவில் சர்வீஸ் போன்ற உயர் பதவிகளிலும் அவர்களின் ஆர்வம் தற்போது சென்றுக் கொண்டு இருக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்து அவர்கள் சாதித்து வருகிறார்கள். அதற்கு பல உதாரணங்கள், எடுத்துக்காட்டுகள் தற்போது நம்முன் இருந்து வருகின்றன. இதன்மூலம் முஸ்லிம் பெண்களின் திறமை மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.
பானு முஷ்தாக் சாதனை:
அத்தகைய வரிசையில் ஒருவர் தான் பானு முஷ்தாக் ஆவார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். மிகச் சிறந்த எழுத்தாளரான பானு முஷ்தாக்கின் சிறுகதைத் தொகுப்பான ஹார்ட் லாம்ப், மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசு 2025க்கான நீண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த நூலை தீபா பாஸ்தி என்பவர் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இந்தத் தொகுப்பு லண்டனில் அங்கீகாரத்தைப் பெற்றது, இது கன்னட இலக்கியத்திற்கான குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.
பானு முஷ்தாக்கின் ஹார்ட் லாம்பில் உள்ள கதைகள் தென்னிந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன . பெரும்பாலும் நமது சமூகத்தில் புறம்பானவை, மேலும் “சாதி, வர்க்கம் மற்றும் மதத்தின் தவறுகளின் கோடுகளைத் துண்டிக்கின்றன” என்று சர்வதேச புக்கர் பரிசுக் குழு புத்தகத்தை நீண்ட பட்டியலில் சேர்க்கும்போது கூறியுள்ளது.
1990 மற்றும் 2023க்கு இடையில் கன்னடத்தில் எழுதப்பட்டு தீபா பாஸ்தி மொழிபெயர்த்த 12 சிறுகதைகளை உள்ளடக்கிய பானு முஷ்தாக்கின் ஹார்ட் லாம்ப், கடந்த 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சர்வதேச புக்கர் பரிசுக்காக நீண்ட பட்டியலில் இடம்பெற்றது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுக்காக நீண்ட பட்டியலில் இடம்பெற்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 11 நாவல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த 13 புத்தகங்களில் ஆறு புத்தகங்கள் ஏப்ரல் மாதத்தில் பட்டியலிடப்பட்டு மே மாதத்தில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
வாழ்க்கையை சித்தரிக்கும் நூல்:
ஹார்ட் லாம்ப் நூல், "சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகங்களில் உள்ள பெண்களில் நிலை குறித்து அழகாக எடுத்துக் கூறுகிறது" என்று பரிசின் நடுவர்கள் தெரிவித்துள்ளனர். முஷ்தாக்கின் கதைகள் "அதிகாரத்திற்கு உண்மையைப் பேசுகின்றன. அத்துடன் சாதி, வர்க்கம் மற்றும் மத ரீதியான தவறுகளை வெட்டி, உள்ளே உள்ள அழுகலை அம்பலப்படுத்துகின்றன. ஊழல், ஒடுக்குமுறை, அநீதி, வன்முறை ஆகியவற்றை எடுத்து சிறப்பாக சித்தரிக்கின்றன" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த நூல் புத்தகம் வாசிப்பின் உண்மையான, மிகுந்த இன்பங்களுக்கு நம்மைத் திரும்பக் கொண்டுவருகிறது என்றும், திடமான கதைசொல்லல், மறக்க முடியாத கதாபாத்திரங்கள், துடிப்பான உரையாடல், மேற்பரப்பில் கொதிக்கும் பதட்டங்கள் மற்றும் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு ஆச்சரியத்தைக் கொண்டு வந்து வாசிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்துகிறது என்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 தலைப்புகளில், குடும்பம் மற்றும் சமூக இயக்கவியலின் நுணுக்கங்களைப் படம்பிடிக்கும் "நகைச்சுவையான, துடிப்பான, பேச்சுவழக்கு, நெகிழ்ச்சியூட்டும் மற்றும் உற்சாகப்படுத்தும்" கதை பாணிக்காக முஷ்தாக்கின் படைப்பு தனித்து நின்றது. புக்கர் பரிசுக்கு ஒரு கன்னட படைப்பு நீண்ட பட்டியலில் இருப்பது இதுவே முதல் முறையாகும். பரிசுத் தொகை ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் இடையில் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும்.
தென்னிந்தியாவின் முஸ்லிம் சமூகங்களுக்குள் அமைக்கப்பட்ட 12 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு, முதலில் 1990 மற்றும் 2023 க்கு இடையில் வெளியிடப்பட்டது. விளிம்புநிலை தனிநபர்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டும் உணர்ச்சி ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதைசொல்லலுக்காக ஹார்ட் லேம்பை நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.
ஹார்ட் லேம்பின் வெளியீட்டாளரான பென்குயின் இந்தியா, பானு முஷ்தாக்கின் புத்தகம் பரிசுப் பட்டியலில் இடம்பிடித்தது "கன்னட மொழியில் இலக்கியத்திற்கு ஒரு மிகப்பெரிய மரியாதை" என்று பானு முஷ்தாக் கூறியதை மேற்கோள் காட்டியது. இதேபோன்று, மொழிபெயர்ப்பாளர் பாஸ்தியும், "இந்த அங்கீகாரம் தனிப்பட்டது மட்டுமல்ல, கன்னட இலக்கியத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க தருணம்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆணாதிக்க அழுத்தங்களின் கீழ் வாழ்க்கையை கட்டியெழுப்பும் தென்னிந்திய பெண்களின் அன்றாட அனுபவங்கள், புகழ்பெற்ற நடுவர் மன்றத்துடன் எதிரொலித்துள்ளன, மேலும் விரைவில் உலகளாவிய வாசகர்களை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பானு முஷ்தாக்கின் கதைகளின் உலகளாவிய தன்மைக்கும் மொழிபெயர்ப்பின் ஆற்றலுக்கும் ஒரு சான்றாகும். பானு முஷ்தாக் கர்நாடக சாகித்ய அகாடமி மற்றும் டானா சிந்தாமணி அத்திமாப்பே விருதுகளை வென்றுள்ளார. மேலும் பாஸ்தி கடந்த ஆண்டு பென் (PEN) மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றவர்.
சித்தராமையா பாராட்டு:
"ஹார்ட் லாம்ப் புக்கர் பரிசு பட்டியல் இடம்பெற்று இருப்பது கன்னடம் மற்றும் கன்னட கலாச்சாரத்திற்கு கிடைத்த ஒரு மரியாதை என்றும், இந்த அங்கீகாரம் கன்னட கதைசொல்லலை உலகளாவிய அளவில் பாராட்டுவதற்கு வழி வகுக்கும்" என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், "கன்னட இலக்கியத்திற்கு ஒரு பெருமையான தருணம். பானு முஷ்தாக்கின் கன்னட சிறுகதைத் தொகுப்பு சர்வதேச புக்கர் பரிசு நீண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளது நமது மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான உண்மையான மரியாதை. இந்த அங்கீகாரம் கன்னட கதைசொல்லலை உலகளாவிய பாராட்டுக்கு வழி வகுக்கும். பானு முஷ்தாக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதிக்க தயக்கம் வேண்டாம்:
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைக் கொண்டு வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம் என்பதற்கு எழுத்தாளர் பானு முஷ்தாக் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம், நல்ல பண்பாடு ஆகியவற்றின் மூலம் முஸ்லிம் பெண்கள் நிறைய சாதிக்க முடியும். எனவே சாதிக்க ஒருபோதும் பெண்கள் தயங்கக் கூடாது. வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்டுத்திக் கொண்டு, சிறப்பான முறையில் பணியாற்றினால், ஏக இறைவன் நிச்சயம் நல்ல ஒரு வழி காட்டுவான். அதன்மூலம் வீட்டிற்கும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெண்கள் நிச்சயம் சேவை செய்ய முடியும். சாதனைகளை நிகழ்த்த முடியும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment