மீண்டும் சூடுபிடித்த பொது சிவில் சட்டம் குறித்த விவாதம்
உண்மை நிலை என்ன ?
2029-ஆம் ஆண்டிற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் அனைத்து 21 மாநிலங்களிலும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஏற்கனவே ஜனவரி 2025 முதல் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அஸ்ஸாம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் பொதுசிவில் சட்டம் தொடர்பான மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பொதுசிவில் சட்டம் குறித்த விவாதங்கள் மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளன. இந்த விவாதங்கள் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழில், "வாட் இஸ் தி யுனிபாஃம் சிவில் கோட் டிபேட்?" (What is the Uniform Civil Code debate?) என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.ரங்கராஜன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். பொதுசிவில் சட்டம் குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், மணிச்சுடர் நாளிதழ் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், தமிழாக்கம் செய்துள்ள அந்த கட்டுரையின் சுருக்கம் இதே உங்கள் பார்வைக்கு:
சட்டங்கள் குறித்த ஒரு பார்வை :
தற்போதைய தனியார் சட்டங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன? பொது சிவில் சட்டம் குறித்து அரசியலமைப்பு என்ன கூறுகிறது? பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவான வாதங்கள் யாவை? எதிரான வாதங்கள் யாவை? பொதுசிவில் சட்டம் எவ்வாறு பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்ய முடியும்? என்ன மாற்று வழி முன்மொழியப்பட்டுள்ளது? ஆகியவற்றை நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
அரசியலமைப்பின் பிரிவு 44, மதம், சாதி அல்லது பழங்குடி இனம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான மதச்சார்பற்ற தனியார் சட்டங்களை வழங்கும் பொதுசிவில் சட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் குற்றவியல் சட்டங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமை தொடர்பான தனியார் சட்டங்கள் பல்வேறு மதச் சமூகங்களிடையே வேறுபட்டுள்ளன.
இந்துக்கள் 'இந்து திருமணச் சட்டம் (1955)' மற்றும் 'இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956)' ஆகியவற்றைப் பின்பற்றுகின்றனர். பழங்குடியினர் அரசியலமைப்பு விதிவிலக்குகளின் கீழ் தங்கள் வழக்கமான குடும்பச் சட்டங்களைப் பின்பற்றலாம். சமணம், பௌத்தம் மற்றும் சீக்கிய மதத்தினர் இந்து சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றனர். அதேசமயம், சீக்கிய திருமணங்கள் 'ஆனந்த் திருமணச் சட்டம் (2012)'-ன் கீழும் நடைபெறுகின்றன. கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகளுக்குத் தனித்துவமான தனியார் சட்டங்கள் உள்ளன. முஸ்லிம்கள் 'முஸ்லிம் தனியார் சட்ட (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டம் (1937)'-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
பொதுசிவில் சட்டம் குறித்த கருத்துவேறுபாடுகள் :
பொதுசிவில் சட்டத்தை அரசியலமைப்பில் கொண்டு வருவதில் தலைவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின. தற்போதும் நிலவி வருகின்றன. அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் உண்மையான மதச்சார்பின்மையை ஊக்குவிக்கிறது என்றும், தனியார் சட்ட விவகாரங்களில் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குவதன் மூலம் பாலின நீதியை உறுதி செய்கிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், பொதுசிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது அரசியலமைப்பு வழங்கியுள்ள மத அடிப்படையிலான உரிமைகளை பறிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் பகுதி மூன்றில் வழங்கப்பட்ட மத அடிப்படையிலான பாதுகாப்பு பறிக்கப்படும் என்ற அச்சம் எழுந்ததால், இறுதியில், பொது சிவில் சட்டம் தொடர்பான விதிமுறை, நீதிமன்றத்தால் அமல்படுத்த முடியாத பகுதியான அதாவது அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் அடங்கிய பகுதி நான்கில் சேர்க்கப்பட்டது
அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் உண்மையான மதச்சார்பின்மையை ஊக்குவிக்கும் என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக வாதங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுசிவில் சட்டத்தால், அடிப்படை உரிமைகளுடன், குறிப்பாக மத நடைமுறைகள் மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் பிரிவு 25 மற்றும் 29 ஆகியவற்றுடன் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு இணங்க, பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்வதையே சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. சிறுபான்மையினரிடமிருந்து, குறிப்பாக முஸ்லிம்களிடமிருந்து எதிர்ப்பு உள்ளது.
நான்கு மாநிலங்கள் விலக்கு :
பொதுசிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு நான்கு மாநிலங்கள் விலக்கு அளித்துள்ளன. அதற்கு முக்கிய காரணம் பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதே ஆகும். அத்துடன், பழங்குடியின பெண்களுக்கு கூடுதல் உரிமைகளை வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை பொதுசிவில் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் அதேநேரத்தில், அனைத்து சமூக பிரிவினருக்கும் குறிப்பாக சிறுபான்மையின மதப் பிரிவினருக்கும் பொதுசிவில் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு சொல்லப்படும் ஒரு முக்கிய அம்சம், பெண்களுக்கு திருமணம், விவகாரத்து மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஒரே மாதிரியான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதாகும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25-இன் கீழ் உள்ள மத உரிமை, அரசியலமைப்பு ஒழுக்கநெறி மற்றும் சமத்துவம் உள்ளிட்ட பிற அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டது. 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A தொடர்பான வழக்கில் பிரிவு 29-ன் கீழ் சாதியவாதம் மற்றும் பாலினப் பாகுபாடு போன்ற நடைமுறைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, தனியார் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் பெண்களின் சமத்துவத்தையும் அரசியலமைப்பு சார்ந்த அறநெறியின் முக்கிய அம்சத்தையும் நிலைநிறுத்துவதால், அவை பிரிவு 25 மற்றும் 29-ஐ மீறுவதாகக் கருதப்படக்கூடாது.
ஒன்றிய சட்ட ஆணையம் கருத்து :
இருப்பினும், சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களிடையே பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளது. அரசியலமைப்புச் சபையில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார். ஆனால் அது விருப்பத்தின் பேரிலேயே தொடரலாம் என்றும் பரிந்துரைத்தார். பொதுசிவில் சட்டத்தை பின்பற்ற விரும்பும் குறிப்பிட்ட பிரிவினருக்காக, நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து அதை அமல்படுத்தலாம் என்றும் அம்பேத்கர் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதேநேரத்தில் தற்போதைய சூழ்நிலையில் பொதுசிவில் சட்டம் நாட்டிற்கு தேவையில்லை என்று ஒன்றிய சட்ட ஆணையம் தனது குடும்பச் சட்ட சீர்திருத்தம் குறித்த தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குறிப்பு 2018-ல் கருத்து தெரிவித்து இருந்தது. அதற்குப் பதிலாக, தனியார் சட்டங்களில் உள்ள பாகுபாடு காட்டும் விதிகளைச் சீர்திருத்த வேண்டும் என்றும் ஒன்றிய சட்ட ஆணையம் வாதிட்டது. சமூகங்களுக்கு இடையேயான சமத்துவத்தை விட, சமூகங்களுக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமத்துவத்தை அடைவதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பாலின நீதியை உறுதிசெய்யும் வகையில், திருமணம், விவாகரத்து, குழந்தைப் பராமரிப்பு உரிமை, தத்தெடுப்பு, ஜீவனாம்சம், வாரிசுரிமை மற்றும் மரபுரிமைச் சொத்து தொடர்பான பல்வேறு தனியார் சட்டங்களில் தேவைப்படும் சட்ட சீர்திருத்தங்களை அந்த அறிக்கை பரிந்துரைத்தது. எனவே, தனியார் சட்டங்களில் சீர்திருத்தங்களைச் சட்டமாக்கும்போதும் செயல்படுத்தும்போதும் ஒன்றிய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 19.09.2026
- தமிழில் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment